Monday, May 26, 2014

Cloud Technology..

 
என் நண்பன் ஒருவன் தம் கணினியில் இருந்த பத்து வருட பேக்கப்பும் (காப்புநகல்) வைரஸ் பிரச்னையால் அம்பேல் ஆகிவிட்டது என்று அழுது புலம்பினான். மூன்று மாதத்துக்கு மேல் பிரயத்தனப் பட்டு லோலோவென்று அலைந்து தம் கணினியிலிருந்த டாக்குமென்டுகளை மீட்டெடுத்தான். அதற்காக ஆயிரக்கணக்கில் தண்டச்செலவு. இந்த மாதிரியான சூழ்நிலையை நம்மில் பலர் எதிர்கொண்டிருப்போம்.
 
தொழில்நுட்ப உலகில் கிளவுட் எனப்படும் ‘மேகம்’ என்ற தொழில்நுட்பம் பற்றி கேள்விப்பட்ட துண்டா? சாமானிய மொழியில் இப்படிச் சொல்லலாம். உங்கள் வீட்டுக் கணினியில், ஐபேடில் உங்கள் குடும்ப ஃபோட்டோக்கள், வீடியோ, பிற டாக்குமெண்டுகள், இப்படி பல ஜீபி பேக்கப் வைத்திருப்பீர்கள். வைரஸ், திருட்டு இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் இந்த பேக்கப்புகள் தொலைந்துவிட்டால் என்ன ஆகும்? சிடி பேக்கப், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் என்று சில விஷயங்கள் உள்ளபோதிலும், இந்தப் பிரச்னைக்கான தீர்வுகளில் முக்கியமானது ‘கிளவுட்’ தொழில்நுட்பம்.
 
விண்டோஸ் 8-ல் இந்தச் சிறப்பம்சம் ஓ.எஸ்ஸுடன் (onedrive) கூடவே தரப்படுகிறது. இது தவிர, (www.dropbox.com) மாதிரியான இணையதளங்களும் கிளவுட் சேமிப்புக்கிடங்கைத் தருகின்றன. வெப்சைட்டுகளுக்கு வருடத்துக்குப் பராமரிப்புத் தொகை வழங்குவதுபோல், இந்த ட்ராப்பாக்ஸுக்கும் வழங்க வேண்டும். நமது கணினி, ஐபேடுகளில் இருக்கும் முக்கிய ஆவணங்கள் அவ்வளவு பத்திரம் கிடையாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் இந்த மேக சேமிப்புக்கிடங்கில் பதிவேற்றி வைத்தால் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் வழங்கியில் (செர்வர்) பத்திரமாக இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் (செல்பேசி, ஐபேட்) அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
சரி, நிறுவனங்களுக்கும் இதே பிரச்னை இருக்குமல்லவா? ஒரு நிறுவனத்தில் மென்பொருள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், இன்னபிற முக்கிய டேட்டாக்கள் எல்லாவற்றையும் அந்த நிறுவன வழங்கியிலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதாக இருக்காது. அதற்கான சிறந்த தீர்வாக இந்த மேகத் தொழில்நுட்பம் இருக்கும் என்றும் கூறுகின்றனர். மைக்ரோசாப்ட், அமேசான், ஐ.பி.எம். போன்ற முன்னணி நிறுவனங்கள் கிளவுட்டில் வேகமாக முன்னேறி பல விஷயங்களை அறிமுகம் செய்தவாறு உள்ளன.  

இந்த மேகத்தொழில்நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு, ஆரக்கிள் மாதிரி நிறுவனங்கள் ஒருபடி மேலே போய் சேமிப்புக் கிடங்கைத் தாண்டி, மென்பொருட்களை எப்படி மேகத்தில் பராமரிக்கலாம் என்று ஆராய்ந்து சில யுக்திகளை வழங்கிய வண்ணம் உள்ளன. இனி வருங்காலம் மேகத்தோடுதான் பயணிக் கும்!!!
 
இன்னொரு விஷயம், இந்த மேகத்தொழில்நுட்பம் நன்றாகச் சூடுபிடிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட பாதிப்பேருக்கு மேல் வேலை கிடையாது. ஆமாம், சர்வர் பராமரிப்பு, மென்பொருள் பராமரிப்பு இவையனைத்தும் மேகத்துக்கு சென்றுவிடும்.
 
அது சரி, இந்த மேகத்தைப் பராமரிக்கும் நிறுவனத்திலிருக்கும் சர்வரில் ஏதாவது வைரஸ் பிரச்னை, இல்லை அந்த நிறுவன கட்டடத்தில் தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? இந்த நிறுவனங்கள் நல்ல கட்டமைப்பு வசதிகளுடன்தான் இருக்கும். எளிதில் எந்தப் பிரச்னையும் வராது. அதையும் மீறி வந்தால் என்ன செய்வது என்று குதர்க்கமாகக் கேட்கிறீர்களா? ‘பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற வைத்தியருக்கு.....’

how to care teeth easy way

'நாம் உண்ணும் உணவை நன்கு மென்று உண்பதற்காகப் பற்கள் உதவுகின்றன. கடினமான பல்லில் பாதிப்பு ஏற்பட்டு பல்லின் உறுதியைப் பாதிப்பதை சொத்தைப்பல் என்கிறோம். உலக அளவில், மிக அதிக அளவில் ஏற்படும் உடல் நலக்குறைபாடாக பல் சொத்தை விளங்குகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதைச் சரிப்படுத்தாவிட்டால் பாதிப்பு வேர் வரை இறங்கி, மற்ற பற்களையும் பாதித்துவிடும்.

பல் சொத்தை பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருந்தாலும், இந்தக் காரணத்தினால்தான் பல்லில் சொத்தை ஏற்படுகிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள், சொத்தைப் பல்லை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். வலி எடுக்க ஆரம் பித்தால்தான் டாக்டரிடம் செல்கின் றனர். சிலரோ, சொத்தைப் பல் என்றதும், பிடுங்கிவிடச் சொல் கின்றனர். பல் சொத்தை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

சொத்தை வரக் காரணங்கள்: 

பாக்டீரியாவும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுமே பல் சொத்தை ஏற்பட முக்கியக் காரணங்கள்.

 மரபு வழியாகவும், உமிழ்நீர் அடர்த்தியாக இருந்தாலும் பல் சொத்தை வர வாய்ப்பு அதிகம்.

  கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகாலத்தில் பல்லில் நோய்த் தொற்று இருந்து, அது தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு வரலாம்.  

  குழந்தைகள் இரவில், ஃபீடிங் பாட்டிலில் பால் குடித்தபடியே தூங்குவதன் மூலம், பற்களில் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும்.  

  சரியாக பல் துலக்காததாலும் சொத்தை வரலாம்.

  உணவுப் பழக்கங்கள்... ஜங்க் ஃபுட்ஸ், சாப்பிடும் உணவுகள் பெரும்பாலும், ஒட்டும் தன்மையுள்ள பசை உணவாகவே இருக்கிறது. பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டால் அது பற்களின் இடையே மாட்டிக்கொள்ளுமே தவிர, ஒட்டாது.

 அதையே சமைத்துச் சாப்பிடும்போது, பற்களில் ஒட்டுகிறது. இந்த உணவுத் துகள்கள் அதிகம் சேர்ந்து பற்களைப் பாதிக்கின்றன.

அறிகுறிகள்: 

  கருப்பான கோடு போல் இருக்கும்.

  தொட்டால் அந்த இடம் மிருதுவாக இருக்கும்.  சிலருக்கு 'படக்’ என்று உள்ளே போகும் அளவுக்கு குழியும் வந்திருக்கலாம்.

  பல் குழியாகி ஆழமாகப்போவதைப் பொருத்து பாதிப்புகள் தெரியவரும்.

 காய்ச்சல், தொண்டையில் வலி, காது, தலை, கழுத்து போன்ற இடங்களில் வலி இருக்கும்.  

 சிகிச்சைகள்: பற்குழி வேர் வரை அரித்து வலியை ஏற்படுத்தும்போதுதான் கிராம்பு வைப்பது போன்ற கை வைத்தியங்களைக் கடைப்பிடிக்கிறோம். இதை அப்படியே கவனிக்காமல்விட்டால், வேர் வரை பாதிப்பை ஏற்படுத்தி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

   எக்ஸ்-ரே மூலம் பல் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, மேல் வரை மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தால், ஆன்டிசெப்டிக் லேயர் கொடுத்து அதுக்கு மேல் ஃபில்லிங் செய்யப்படும்.  

 வீக்கம், சீழ் இருந்து, வேர் வரை போய் இருந்தால் 'ரூட் கெனால்’ மூலம் பல்லின் வேர்ப் பகுதி சுத்தம் செய்யப்படும். பல்லின் வேர்ப் பகுதி இல்லாததால் அந்த பல்லுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். ஒரு கட்டத்தில் பல் பொடிப்பொடியாக உடைந்துவிடவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அந்தப் பல்லின் மேல் பகுதியில மெட்டல் கேப் போட்டுவிடலாம். இதனால் பல்லின் உறுதித்தன்மை பாதுகாக்கப்படும்.

 பிடுங்கினால் பிரச்னையா? 

சிலர் சொத்தை வந்தால் பிடுங்கிவிடுகின்றனர். சரி எடுத்துவிட்டோமே, என்று மாற்றுப் பல் கட்டுவதுமில்லை. இதனால் பக்கத்தில் உள்ள பற்களும் பாதிப்புக்கு உள்ளாகும். பல் எடுத்த இடத்தில் இடைவெளி ஏற்பட்டு முக அழகைக் கெடுத்துவிடும். வார்த்தைகள் குளறும். நாக்கை அடிக்கடி கடிக்க நேரிடும்.

பாதுகாப்பான பற்களுக்கு... 

 தினமும் இரண்டு முறை பல் தேய்க்கவேண்டும்.

 குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன் ஈறுப் பகுதியை தண்ணீரில் கழுவி, நன்றாக துணியால் துடைத்துவிடவேண்டும்.  

 சாக்லேட் மற்றும் எந்த உணவைச் சாப்பிட்டாலும், உடனே, நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.  

 சாதாரண டூத் பேஸ்ட் பட்டாணி அளவே போதுமானது.  

 'ஜிக்ஜாக்’ முறையில் பல் தேய்ப்பது ஒழுங்கைத் தருவதுடன் ஆரோக்கியமாக இருக்கும்.  

 குழந்தைகளுக்கு பற்கள் வலுவாக இருக்க, ஃப்ளூரைடு வார்னிஷ் தடவ வேண்டும்.

 8 வயது வரை குழந்தைகள் சரியான முறையில் பல் தேய்ப்பதற்கு பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்.

 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

 பச்சைக் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கிழங்கு வகைகள், அரிசி சாதம் சாப்பிடலாம்.  

 ஐஸ்க்ரீம், கேக், குக்கீஸ், சாக்லேட்ஸ் தவிர்ப்பது நல்லது.

 சாப்பிட்ட பிறகு சுகர் ஃப்ரீ சுயிங்கம் மெல்லலாம். இதனால், உமிழ்நீர் நன்கு சுரந்து, பற்கள் சமச்சீர் தன்மைக்கு வந்துவிடும்.  பல்லில் சொத்தை வராமலும் தடுக்கும்.

Prime MInister Modi

இந்திய தேர்தல் வரலாற்றில், ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப்பின், தனிப் பெரும்பான்மையோடு ஜெயித்து ஆட்சி அமைக்கும் பெருமையைப் பெற உள்ளது பாரதிய ஜனதா கட்சி.
 
1984-ல் ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி கண்டது. அதன்பிறகு இப்போது பாரதிய ஜனதா கட்சிதான் 272 இடங்களுக்கு மேல் வெற்றி வாகை சூடும் நிலையில் உள்ளது. வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொண்டபோதுகூட இப்படி ஒரு வெற்றியை அந்தக் கட்சி கண்டதில்லை.

இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம், நரேந்திர மோடி என்பதைச் சொல்லவேண்டியதே இல்லை. மோடியின் இந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது, இந்தியா முழுக்க உள்ள சாதாரண மனிதனின் ஒரே ஒரு எதிர்பார்ப்புதான்.

'காங்கிரஸின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் ஊழல், பொருளாதார வளர்ச்சியின்மை, விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை எனப் பல பிரச்னைகள். மேலும், தொழில் வளர்ச்சி பெரிய சரிவில் சிக்கியது. இனி, மோடி இதை மாற்றட்டும்’ என்கிற எதிர்பார்ப்பில்தான் பெருவாரியான மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

'குஜராத் மாடல்’ என்கிற உதாரணத்தை உருவாக்கி, அதை இந்தியா முழுவதுக்கும் உரைகல்லாக மாற்றிக் காட்டிய மோடி, இனி இந்தியா முழுக்க சிறப்பானதொரு வளர்ச்சி காண வைப்பதன் மூலம் 'இந்தியா மாடல்’ என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும். இந்த 'இந்தியா மாடல்’, சீனா மாடல்’ என்கிற கருத்தையே தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா ஒரு வல்லரசாக மாற முடியும்.

 

இதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது ஊழலற்ற அரசாங்கம். மக்கள் நலனில் அக்கறைகாட்டும் அரசாங்கம் அமைந்துவிட்டாலே போதும், தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துவிடும்.

இதுநாள்வரை நாட்டின் வளர்ச்சியில் கடைப்பிடித்து வந்த கட்டுப்பெட்டித்தனமான நடைமுறைகளை பாரதூரமாக மாற்றுவதன் மூலமே இதையெல்லாம் மோடி செய்துகாட்ட முடியும். 

மக்கள் தங்களது அபிலாஷையை தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள். மக்களின் இந்த அபிலாஷைகளை இனி மோடி எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் முக்கியமான விஷயம்.

அடுத்துவரும் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே மோடியின் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் இருக்கிறது!

El Nino... ‘யெல் நினோ’ - கடலில் கிளம்பும் பூதம்

பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவின் யாங்ஸே நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 1,500 பேர் மாண்டனர். இதற்குக் காரணம் அப்போது கடற்பரப்பில் ஏற்பட்ட ‘யெல் நினோ’தான். இப்போது பசிபிக் பெருங்கடலில் வெப்ப அளவு கன்னாபின்னா என்று அதிகமாகி வெப்பமடைந்த தண்ணீர்ப் பரப்பு கிழக்கு நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறதாம். இது முந்தைய பல பத்தாண்டுகளில் இல்லாத அளவில் எல்லோரும் கவலைப்படுகிற மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்கிறார் ஆஸ்திரேலியாவின் பருவநிலை அறிவியலாளர் ஒருவர். 
பசிபிக் கடல் பரப்பில் இப்படி வெப்பநிலை உருவாவதைத்தான் ‘யெல் நினோ’ என்கிறார்கள். இதன் விளைவாக உலக உருண்டையின் வெவ்வேறு பகுதிகளில் ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கும் இன்னொரு பக்கம் கடும் வறட்சியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக உணவுப் பொருள் உற்பத்தி பாதிப்படைகிறது.இன்னும் கொசுக்களால் உண்டாகும் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்களும் விரைவாகப் பரவுகிற அபாயம் உண்டு. இந்தியா, வெனிசுலா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் மலேரியா நோய்ச் சுழற்சி ஏற்படுவதற்கு ‘யெல் நினோ’ பாதிப்பே காரணம் என்பதை இப்போது கண்டறிந்திருக்கிறார்கள். ‘யெல் நினோ’ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு ‘சிறுவன்’ என்று பொருள் கொள்ளலாம். பொதுவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பரப்பில் கிறிஸ்துமஸ் காலத்தையொட்டி இது ஏற்படுவதால் இதைக் ‘குழந்தை இயேசு’ என்று அடையாளப்படுத்தினார்கள். பசிபிக் கடற்கரைக்கு அப்பால் குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் வெப்பமடைவதுதான் ‘யெல் நினோ’. இதேபோல் அளவுக்கு அதிகமாகக் கடல் பரப்பு குளிர்ச்சியடைவதும் உண்டு. இதை ‘லா நினா’ என்பார்கள். இதற்கு ‘சிறுமி’ என்று பொருள். முற்காலத்தில் இதை ‘யெல் வீஜோ’ (கிழவன்) என்று வழங்கியிருக்கிறார்கள். கீழைப் பசிபிக் பெருங்கடலின் நீர்ப் பரப்பில் இப்படி ஏற்படுகிற வெப்ப அளவு மாறுபாடுகளை ‘யென்ஸோ’ என்ற ஒரே சொல்லால் குறிப்பிடுகிறார்கள். (யெல் நினோ சதர்ன் ஆஸிலேஷன்). இந்த மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை இன்னும் முழுமையாக ஆராய்ந்து சொல்ல முடியவில்லை. பொதுவாக, வேளாண்மை, மீன்பிடித் தொழில்களை மட்டுமே சார்ந்துள்ள வளர்ந்துவரும் நாடுகள், குறிப்பாக பசிபிக் பெருங்கடல் பரப்பை ஒட்டியிருக்கும் நாடுகள் இந்த விளைவுகளால் பெரிதும் பாதிப்படைகின்றன.
இந்த விளைவு ஒழுங்கற்ற கால இடைவெளியில் ஏற்படுகின்றன. இரண்டு முதல் ஏழு ஆண்டுகள்.  சராசரியாக ஐந்து ஆண்டுகள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கடல் பரப்பு வெப்ப நீட்டிப்பு ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை இருக்கலாம். அதற்கு மேலும் கால அளவு நீண்டால் இதை ‘யெல் நினோ எபிஸோட்’ என்கிறார்கள்.
இந்த ‘பூதம் கிளம்பிவிட்டது’ என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்துகொள்வது?  

* இந்தியப் பெருங்கடல், இந்தோனேஷியக் கடல் பகுதி, ஆஸ்திரேலியக் கடல்பகுதிகளில் மேல் மட்ட அழுத்தம் அதிகமாகும்.
* பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதியிலுள்ள தாஹித்தி போன்ற பகுதிகளில் மேற்பரப்பின் காற்றழுத்த அளவு வீழ்ச்சியடையும்.
* தென் பசிபிக் பகுதியின் டிரேட் விண்டின் வேகம் பலவீனமடையும் அல்லது கிழக்கு நோக்கித் திரும்பும்.
* பெருவுக்கு அருகில் காற்றின் வெப்ப அளவு கூடுதலாகி வடக்குப் பெரு பாலைவனப் பகுதிகளில் மழை கொட்டும்.  

* மேற்குப் பசிபிக், இந்தியப் பெருங்கடல் பரப்பிலிருந்து கிழக்குப் பசிபிக் வரை வெப்பநீர் பரவும். இதனால் மேலைப் பசிபிக் பகுதியில் கடும் வறட்சியும், சாதாரணமாக வறண்ட \ பகுதியாக உள்ள கீழைப் பசிபிக் பகுதியில் பெருமழையும் பொழியும்.
1972 யெல் நினோ விளைவின்போது கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழில் பெரும் அளவுக்குப் பாதிப்படைந்ததாம். 1982 -83 விளைவின் போது சில குறிப்பிட்ட மீன் இனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. சிலவகை மீன் இனங்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
2008 மார்ச்சில் ஏற்பட்ட ‘லா நினா’ விளைவின்போது மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது.கடந்த பல பத்தாண்டுகளாக ‘யெல் நினோ’ விளைவுகள் கூடுதலாகியுள்ளன என்றும், ‘லா நினா’ விளைவுகள் குறைந்துள்ளன என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்) என்று நம்பப்படுகிறது.வரலாற்றைப் புரட்டிப் போட்டதிலும் இந்த முகமறியாத ‘யெல் நினோ’வின் பங்கு இருக்கிறது. 1789 - 1793 விளைவுகளால் ஐரோப்பாவில் வேளாண் விளைபொருள் உற்பத்தி பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு, ‘பிரெஞ்சுப் புரட்சி’யே உருவாகக் காரணமானதாம். 1876-77 ‘யெல் நினோ’ விளைவால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வட சீனாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஒருகோடியே முப்பது லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.உலகிலேயே பாம் ஆயில் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தோனேஷியா. 2014 ஜூன் வாக்கில் ‘யெல் நினோ’ விளைவு தொடங்கிவிட்டால் இதில் கடும் பாதிப்பு உண்டாகுமாம்.
‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து...’ என்று ஆண்டாள் பாடிய காலம் போயே போய்விட்டது. தாறுமாறான பருவநிலைகள் உருவாவதற்கு மனிதர்களின் சுயநலமே காரணமாக அமைந்து விட்டிருக்கிறது. முக்கியமாக வனவளத்தைப் பறிகொடுத்துவிட்டுக் ‘கான்கிரீட் காடு’களைத் தினமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ‘யெல் நினோ’, அது இது என்று எதன் மீதாவது பழிபோடவா நமக்குத் தெரியாது?

Thursday, May 15, 2014

plan tour budget பட்ஜெட் டூர்

எந்த ஊருக்கு சுற்றுலா செல்லலாம்? எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்? பஸ்ஸா, காரா, ரயிலா? எவ்வளவு செலவாகும்? ஹோட்டலில் தங்க கட்டணம் எவ்வளவு? வீட்டுக்கு வீடு இப்படித்தான் இப்போது பேசிக்கொண்டிருப்பீர்கள். இதோ உங்களுக்கு உதவுவதற்காகவே... இங்கே இடம்பிடிக்கிறது 'பட்ஜெட் டூர்... உங்களுக்கேத்த ஊர்!'

 


முக்கிய குறிப்பு: இந்த இடங்கள் அனைத்தும் சென்னையிலிருந்து கணக்கிடப்பட்டு, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் போக நினைக்கும் ஊர், உங்களுடைய இடத்திலிருந்து எத்தனை கிலோமீட்டர் என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப போக்குவரத்து கட்டணத்தை யூகித்துக்கொள்ளுங்கள். கார்களைப் பொறுத்தவரை, முக்கிய நகர் வரை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வழி பயணத்துக்கானது. அங்கு நீங்கள் பார்க்க விரும்பும் இடங்களைப் பொறுத்து, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். திரும்பவும் காரில் வருவது என்றால், கட்டணம் கூடும்.

விமான கட்டணங்கள், ரிசர்வ் செய்யும் தேதியைப் பொறுத்து மாறுதல்களுக்குட்பட்டவை.

Thimingalam திமிங்கிலம்

 
யானையைப் பார்த்தால் நமக்கு வியப்பாக இருக்கிறது. நிலத்தில் வாழும் விலங்குகளில் யானை தான் மிகப்பெரியது. ஆனால் உலகின் மிகப்பெரிய விலங்கு கடல்களில் வாழும் நீலத் திமிங்கிலமே. சற்றே நீல நிறத்துடன் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர். நீலத் திமிங்கிலம் குறைந்தது 30 மீட்டர் நீளம் கொண்டது. எடையோ சுமார் 120 டன். அதாவது 20 யானைகளின் எடைக்குச் சமம். 
 
கிரில் எனப்படும் மிகச்சிறிய கடல் வாழ் உயிரினத்தைத்தான் அது உண்டு வாழ்கிறது. கிரில்கள் இறால் போன்றவை. கிரில் நான்கு செ.மீ. நீளம் கொண்டது.

கிரில்கள் கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். ஒரு கூட்டத்தில் பல ஆயிரம் கிரில்கள் இருக்கும். நீலத் திமிங்கிலம் தனது வாயைத் திறந்தபடி கிரில் கூட்டத்தின் வழியே செல்லும்போது பல ஆயிரம் கிரில்கள் திமிங்கிலத்தின் வாக்குள் சிக்கும். நீலத் திமிங்கிலம் ஒரு நாளில் நான்கு முதல் ஏழு டன் கிரில்களை விழுகுகிறது.
 
திமிங்கிலத்தின் வாக்குள் விசேஷ அமைப்புகள் உள்ளன. நிறைய கிரில்கள் உள்ளே சிக்கியதும் திமிங்கிலம் வாயை மூடிக்கொள்ளும். அதன் தொண்டைக்குள் ‘கதவுகள்’ போன்ற திறப்புகள் விரியும். வயிறும் விரிவடையும். திமிங்கிலத்தின் மேல் தாடையில் சீப்புகள் போன்ற அமைப்புகள் உள்ளன. திமிங்கிலம் தனது நாக்கை உயர்த்தும்போது சீப்புகள் போன்ற அமைப்புகள் வழியே கடல் நீர் வெளியே சென்று விடும். உள்ளே சிக்கிய கிரில்களைத் திமிங்கிலம் விழுங்கி விடும்.வடிவில் பிரம்மாண்டமானது என்பதால் நீலத் திமிங்கிலம் விஷயத்தில் எல்லாமே பெரிதாக இருக்கிறது. அதன் நாக்கு எடை நான்கு டன். அதன் நாக்கின் மீது 12 பேர் வரிசையாக நிற்கலாம். அதன் இருதயமோ கார் அளவு இருக்கும்.திமிங்கிலத்தின் குட்டியானது பிறக்கும் போதே மூன்று டன் எடை கொண்டதாக உள்ளது. நீளமோ 25 அடி. திமிங்கிலங்களில் ஸ்பெர்ம் திமிங்கிலம், ஹம்ப்பேக் திமிங்கிலம், மிங்கி திமிங்கிலம், பெலுகா திமிங்கிலம், ஆர்க்கா திமிங்கிலம் உட்பட பலவகைத் திமிங்கிலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் உணவும் வெவ்வேறு விதமாக உள்ளது. திமிங்கிலங்கள் அனைத்துமே குட்டிப் போட்டுப் பால் கொடுப்பவை.
 
திமிங்கிலங்களில் இன்னொரு விசேஷம் இவை மீன்களைப் போல நீருக்குள் சுவாசிப்பவை அல்ல. நம்மைப் போல காற்றை சுவாசிப்பவை. நீருக்குள் நடமாடினாலும் இவை ஒவ்வொரு தடவையும் சுவாசிப்பதற்காக நீர் மட்டத்துக்கு வரும். நுரையிலிருந்து காற்றை புஸ் என்று வெளியே விட்டுவிட்டு புதிதாக காற்றை உள்ளிழுத்துக் கொண்டு மறுபடி நீருக்குள் சென்று விடும்.

நம்மால் நீருக்குள் சில கணங்களே தம் கட்டி இருக்க முடியும். திமிங்கிலங்கள் அரை மணி நேரத்துக்கு மேல் தம் கட்டி நிற்கும். அதாவது ஒரு தடவை காற்றை உள்ளே இழுத்துக்கொண்டால் அரை மணி நேரத்துக்கு அதனால் நீருக்குள் நடமாட முடியும். ஸ்பெர்ம் திமிங்கிலம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீருக்குள் இருக்கும் திறன் கொண்டது.

திமிங்கிலங்களிடம் இது விஷயத்தில் இயல்பாக சில விசேஷத் திறன்கள் உள்ளன. நாம் சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 15 சதவிகிதத்தைத்தான் உடல் கிரகித்துக் கொள்கிறது. ஆனால் திமிங்கிலத்தின் நுரையீரலுக்குள் செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 90 சதவிகிதத்தை திமிங்கிலம் ஈர்த்துக் கொள்கிறது. இந்தக் கூடுதல் ஆக்சிஜன் திமிங்கிலத்தின் தசைகளில் அடங்கிய செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 90 சதவிகிதத்தை திமிங்கிலம் ஈர்த்துக் கொள்கிறது. இந்தக் கூடுதல் ஆக்சிஜன் திமிங்கிலத்தின் தசைகளில் அடங்கிய மையோகுளோபின் எனப்படும் விசேஷ புரத செல்களில் சேமித்து வைக்கப்படுகிறது. திமிங்கிலங்களிடம் மற்ற விலங்குகளை விட அதிக அளவில் மையோகுளோபின் உள்ளது. தவிர, திமிங்கிலத்தினால் ஆக்சிஜன் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளவும் முடிகிறது.

திமிங்கிலம் கடலுக்குள் மூழ்கியிருக்கும்போது அதன் இதயத் துடிப்பு வேகம் குறைந்து விடுகிறது. சில உறுப்புகளுக்குக் குறைவான ரத்தமே செல்கிறது. இப்படியான காரணங்களால் திமிங்கிலத்தால் நீருக்குள் அதிக நேரம் இருக்க முடிகிறது.

திமிங்கிலம் நீண்ட நேரம் சுவாசிக்காமல் இருந்து விட்டு நீருக்கு மேலே வரும் கட்டத்தில் வேகமாக மூச்சை வெளிவிடுகிறது. அப்போது கடல் நீரானது நீரூற்று போல நல்ல உயரத்துக்குப் பீச்சிடும். இது 12 மீட்டர் உயரம் வரை இருக்கும். திமிங்கிலம் இருக்கு மிடத்தைக் கண்டுபிடிக்க நவீன வழிகள் இல்லாத அந்த நாட்களில் கடல் நீர் இப்படி உயரே எழும்புவதை வைத்து திமிங்கில வேட்டைக்காரர்கள் அதன் இருப்பிடத்தை அறிந்துகொண்டனர்.

திமிங்கிலம் நீருக்குள் இருக்கும்போது கட்டைக் குரலில் குரல் எழுப்பும். இந்த ஒலி எதிரொலித்துத் திரும்புவதை வைத்து இரை எங்கே உள்ளது என்பதைத் திமிங்கிலம் கண்டுகொள்ளும். தங்கள் இனத்துடன் தொடர்புகொள்ளவும் இந்த ஒலியை அது பயன்படுத்திக் கொள்கிறது. சிலவகைத் திமிங்கிலங்கள் எழுப்பும் ஒலியானது 1600 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.

திமிங்கிலங்கள் உலகின் எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்றன. தென் துருவப் பகுதியில் அண்டார்டிகா அருகே உள்ள திமிங்கிலங்களும் சரி, வட துருவ ஆர்டிக் பகுதியில் காணப்படும் திமிங்கிலங்களும் சரி, குளிர் காலத்தில் வெப்ப மணடல கடல் பகுதிகளுக்கு வருகின்றன. குட்டி பிறந்ததும் பழைய இடத்துக்கே சென்று விடுகின்றன. இப்படி இடம் பெயரும் காலத்தில் திமிங்கிலங்களால் தொடர்ந்து உணவு இன்றி இருக்க முடியும்.

கடந்த காலத்தில் பல்வேறு வகையான திமிங்கிலங்களும் இஷ்டத்துக்கு வேட்டையாடப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து திமிங்கிலங்களைக் காப்பதற்காக அமைக்கப் பட்ட சர்வதேச திமிங்கில கமிஷன் உலகின் கடல்களில் வர்த்தக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடக் கூடாது என்று 1986ம் ஆண்டில் சர்வதேச அளவில் தடையை அமல்படுத்தியது. ஆனால் இவ்விதக் கட்டுப்பாட்டை ஜப்பான், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் எதிர்த்து வருகின்றன. ‘ஆராய்ச்சிக் காரணங்களுக்காக’ திமிங்கிலங்களை வேட்டையாடலாம் என சர்வதேச தடைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தடைச் சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தி மேற்படி நாடுகள் இன்னமும் திமிங்கிலங்களை வேட்டையாடி வருகின்றன. திமிங்கிலங்களைப் பாதுகாப்பதில் பல நாடுகளையும் சேர்ந்த தனியார் அமைப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சோட்டா பீம் & மௌக்ளி in tamil

 
சோட்டா பீம் என்றால் குட்டி பீமன் என்று அர்த்தம். சோட்டா பீம் சாகசங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர், கடந்த 2009ம் வருடம் முதல் போகோ சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. தோலக்பூர் கற்பனையான ஓர் ஊர். அந்த ஊரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பீம். இது நூற்றுக்கு நூறு இந்தியப் பின்னணியில், இந்தியச் சிறுவர், சிறுமியரைக் கவர்வதற்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். இன்று இந்தியாவின் நெம்பர் ஒன் அனிமேஷன் தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சோட்டா பீம் இந்தியாவிலும், உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியக் குழந்தைகளை மட்டுமின்றி பல்வேறு நாட்டுக் குழந்தைகள் மத்தியிலும் கூட பிரபலமாகி இருக்கிறது. மகாபாரதத்தில் வரும் வீர பராக்கிரமசாலியான பீமன்தான் சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு உந்துதலாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கிரிபன் கோல்ட் அனிமேஷன் நிறுவனம் சோட்டா பீம் அனிமேஷன் தொடரைத் தயாரித்து வருகிறது. 
 
இயற்கை அழகு சூழ்ந்த தோலக்பூரைச் சேர்ந்த சோட்டா பீம் பலசாலி மட்டுமில்லை; மிகவும் புத்திசாலியும் கூட. ஊரில் யார் கஷ்டப்பட்டாலும், சோட்டா பீமுக்குப் பொறுக்காது. உடனே அவர்களுடைய பிரச்னையைத் தீர்ப்பதற்குப் புறப்பட்டுவிடுவான். ஊரைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களைக் கூட வீரத்தோடு மோதி விரட்டி அடித்துவிடுவான்.  

பீமின் புத்திசாலித்தனத்தையும் புகழையும் கண்டு பொறாமைப்படும் சிறுவன் காலியா. ஊரில் உள்ள சிறுவர்களில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், தீர்வு காண பீமைத்தான் நாடுவார்கள். சோட்டா பீமுக்கு அவ்வப்போது ஏதாவது பிரச்னைகளைக் கொடுப்பது காலியா மற்றும் நண்பர்களின் வழக்கம். ஆனால், பீம் அவற்றை எல்லாம் சுலபமாகச் சமாளித்து, அவர்கள் முகத்தில் கரி பூசிவிடுவான்.
 
தோலக்பூரின் அரசன் இந்திரவர்மா. சோட்டா பீமை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஊர் மக்கள், சோட்டா பீம் வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜா இந்திர வர்மா, இளவரசியை பீமுக்குக் கல்யாணம் செய்து வைத்து, அரசாட்சியை அவனிடம் ஒப்படைப்பார் என்று ஒரு பேச்சு கூட உண்டு.  

குட்டி பீமுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். லட்டு சாப்பிட்டு விட்டால் போதும் அவனுக்கு அசாத்தியமான பலம் வந்துவிடும். பீமின் நெருங்கிய தோழி ஏழு வயது சுட்கி, பீமுக்குப் பிடித்த லட்டு கொண்டு வந்து கொடுப்பாள். அவ்வப்போது, பீமுக்கு அவள் தருகிற யோசனைகள் மிகவும் உபயோகமாக இருக்கும். பீம் கூடவே இருந்து அவனுக்கு உதவும் இன்னொரு சுட்டிப் பையன் ராஜு. இவர்கள் அணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு ஜாலியான உறுப்பினர் ஜக்கு என்ற குரங்கு.

சோட்டா பீம் பிரபலம் காரணமாக சோட்டா பீம் முத்திரையுடன் கூடிய பல பொருட்கள் விற்பனையாகின்றன.


மௌக்ளி


ருட்யார்ட் கிப்ளிங் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் பிறந்த ஆங்கிலேய எழுத்தாளர். இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அவர் குழந்தைகளைக் கவரும்படியாக உருவாக்கிய ஒரு கதாபாத்திரம்தான் மௌக்ளி. ஜங்கிள் புக் என்ற புத்தகத்தின் மூலம்தான் மௌக்ளி என்ற சுவாரசியமான கற்பனை கதாபாத்திரம் வாசகர்களுக்கு அறிமுகமானது. பத்தொன்பதாம் நூறாண்டின் இறுதியில் அவர் இந்தக் கதைகளை எழுதினார். 

ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, மீண்டும் வேலை செய்ய இந்தியாவுக்கு வந்தவர். அதனால் அவருக்கு இயற்கையாகவே இந்தியாவின் மீதும் அதன் இயற்கை வளங்களின் மீதும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுவே அவரது கற்பனையோடு இணைந்து, கதைகளாக உருப் பெற்றன. 

மௌக்ளி கதாபாத்திரத்தை மத்தியப் பிரதேசத்தின் காடுகளோடு இணைந்த ஒரு பாத்திரமாக உருவாக்கினார். அவர் முதலில் எழுதிய கதைகளில், காட்டுப் பகுதியில் வசிக்கும், அபார வேட்டையாடும் திறன் கொண்ட ஓர் இளைஞனாக அறிமுப்படுத்திவிட்டு, அதன் பிறகு எழுதிய கதைகளில்தான் மௌக்ளியின் பால பருவத்தைப் பற்றிய கதைகளை எழுதினார். பெற்றோர்களைப் பிரிந்து, காட்டில் தனியே விடப்பட்ட குழந்தையான மௌக்ளியை, அன்போடு எடுத்து வளர்க்கின்றன ஓநாய்கள். தாங்கள் வளர்க்கும் மனிதக் குழந்தைக்கு மௌக்ளி என்று பெயர் சூட்டுகின்றன.

காட்டில் வசிக்கும் விலங்குகளின் கால்களில் முள் குத்திவிட்டால், அவை உடனே மௌக்ளியிடம் உதவி கேட்டு வரும். அவன் பொறுமையோடு அந்த முள்ளை எடுப்பான். இதனால் விலங்குகள் அனைத்துக்கும் மௌக்ளி நெருங்கிய நண்பனாகிவிடுவான். காட்டில் வசிக்கும் ஷேர்கான் என்ற புலி மௌக்ளியைச் சாப்பிட நினைத்தாலும், அதனிடமிருந்து ஓநாய்கள் காப்பாற்றுகின்றன. ஒரு கட்டத்தில் நெருப்பைக் கண்டால் புலிக்குப் பயம் என்பதை அறிந்து, அந்த நெருப்பைப் பயன்படுத்தி, புலி தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறான் மௌக்ளி. 

ஜங்கிள் புக் கதைகளுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக, அது திரைப்படமாகவும், ரஷ்யாவில் அனிமேஷன் படங்களாகவும், டிவி தொடர்களாகவும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றன. பி.பி.சி. ரேடியோவில் பிரபல நடிகர்களின் குரல்களில் ஜங்கிள் புக் கதைகள் ஒலிபரப்பாகி, மௌக்ளி இளைஞனர்கள் மத்தியில் பெரும் ஹீரோவாக விளங்கினான். ரஷ்யாவில் மௌக்ளியையும் அவன் நண்பர்களையும் தபால்தலையில் வெளியிட்டு கௌரவித்திருக்கிறார்கள்.

Bajaj Discover 125M Features in tamil

ஜாஜ் டிஸ்கவர் வரிசையில் ஏற்கெனவே  ஏகப்பட்ட மாடல்கள் இருக்கின்றன. பஜாஜ் இந்த வரிசை பைக்குகளில் அவ்வப்போது இன்ஜின், ஸ்டைல், கிராஃபிக்ஸ் என ஏதாவது அப்டேட்களைச் செய்துகொண்டே இருக்கும். 100 சிசி செக்மென்டில் வெளிவந்த டிஸ்கவர் 100M பைக்குக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, 125 செக்மென்ட்டிலும் மைலேஜ் வாடிக்கையாளர்களைக் கவர, டிஸ்கவர் 125M என்ற மாடலைக் கொண்டுவந்துள்ளது பஜாஜ்.



கம்யூட்டர் பைக் வாங்கும் வாடிக்கையாளர்களை, எல்லா செக்மென்ட்டிலும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பதால், மைலேஜ் விஷயத்திலும் தெளிவாக இருக்கிறது பஜாஜ். ஏற்கெனவே, டிஸ்கவர் 125 சிசி மாடலில் ST, T ஆகிய மாடல்கள் இருக்க... இன்ஜினில் சின்ன மாறுதல்கள் செய்து 'M’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது பஜாஜ்.  M என்றால், மைலேஜ் என்று அர்த்தமாம். சரி, கம்யூட்டர் பைக் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யுமா இந்த பைக்?

ஏற்கெனவே விற்பனையில் உள்ள டிஸ்கவர் 125 பைக்குகளுக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. ஆனால், பாடி கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர் வேலைப்பாடுகள் புதுசு. தனித்துவமான 10 ஸ்போக் அலாய் வீல்களும், சைலன்ஸர், இன்ஜின் ஆகியவற்றில் பூசப்பட்டுள்ள கறுப்பு வண்ணமும் மிளிர்கிறது. ஹெட்லைட்டின் மீது கவிந்திருக்கும் வைஸர் கவர்ச்சியாக இருக்கிறது. இதன் மறைவில் உள்ள மீட்டர் கன்ஸோல் பேனல், அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அனலாக் ஸ்பீடோ, ஓடோ மீட்டரும்... பெட்ரோல் மீட்டரும் உள்ளன. நீளமான பேனலில் நியூட்ரல், ஹெட்லைட், இண்டிகேட்டர் சிக்னல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சீட்டில் அமர்ந்தால், உயரமான இடத்தில் அமர்ந்திருப்பதுபோன்று இருக்கிறது. டேங்க், கால்களை அணைத்து வைத்துக்கொள்ள வசதியாக இருக்கிறது. ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஹேண்டில்பார், பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. ஃபுட்ரெஸ்ட் - கால்களை வைக்க வசதியாக இருந்தாலும், கியர்பாக்ஸில் கால் படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால், இன்ஜின் சூடு கால்களைப் பதம்பார்க்கிறது. ஷூ அணிபவர்களுக்குப் பிரச்னை இல்லை. சைடு பேனலில் இருக்கும் 125M லோகோ மட்டுமே வித்தியாசம் எனலாம். மற்றபடி டெயில் லைட், கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர் போன்றவை டிஸ்கவர் மாடல்களில் இருப்பதுதான்.


டிஸ்கவர் 125 மாடல்களில் இருக்கும் அதே 124.6 சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு, DTS-i இன்ஜின்தான் என்றாலும், மைலேஜுக்காக பவரில் சில மாறுதல்கள் செய்திருக்கிறது பஜாஜ். 8,000 ஆர்பிஎம்-ல் 11.3 bhp சக்தியையும் 6,000 ஆர்பிஎம்-ல் 1.10 kgm டார்க்கையும் அளிக்கிறது இந்த இன்ஜின். இது, டிஸ்கவர் 125T மாடலைவிட 1 bhp  சக்தி குறைவு. அதேபோல், 125 ST மாடலைவிட 1.5bhp சக்தி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மைலேஜுக்காக சக்தியை அட்ஜஸ்ட் செய்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. இதன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், மைலேஜுக்காகவே டிஸைன் செய்யப்பட்டுள்ளதைப் போலவே இருக்கிறது. கியர் மாற்றுவது ஸ்மூத்தாக இருந்தாலும், வலுவாக மிதிக்க வேண்டியது அவசியம். டிஸ்கவர் வாகனங்களுக்கு உரித்தான இன்ஜின் சத்ததுடன், ஸ்மூத்தாகவே இயங்குகிறது 125M இன்ஜின்.

உயரமான ஓட்டுதல் பொசிஷனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள டிஸ்கவர் 125M, அன்றாடப் பயன்பாட்டுக்கான வாகனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நகரம், நெடுஞ்சாலை ஆகிய இரண்டிலும் ஓட்டுவதற்கு ஏற்ப இருந்தாலும், நீளமான வீல்பேஸ் காரணமாக சிட்டி டிராஃபிக்கில் வளைத்து நெளித்து ஓட்டுவது சிரமமே. பிரேக், கையாளுமை சிறப்பாக இருந்தாலும், டயர்களில் போதுமான கிரிப் இல்லை. பெயருக்கு ஏற்றபடி, நகருக்குள் லிட்டருக்கு 55.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 57.8 கி.மீ மைலேஜ் அளிக்கிறது டிஸ்கவர் 125M.

100 சிசி செக்மென்ட்டில் இருப்பவர்கள், மைலேஜை சமரசம் செய்துகொள்ளாமல், அடுத்த கட்டத்துக்குச் செல்ல ஏற்ற பைக், டிஸ்கவர் 125M.

Thursday, May 1, 2014

black money recovery is possible?

''நாங்கள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 100 நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கறுப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம். அந்தப் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம்'' என்று சொல்லி யிருக்கிறார் பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங். இந்த அறிவிப்பை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும், இது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது முக்கியமான விஷயம்.
 
வெளிநாடுகளில் கறுப்புப்பணம் பதுக்கிவைத்திருப்போர் பட்டியலில் சீனா மற்றும் மெக்சிகோ நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா எட்டாம் இடத்தில் உள்ளது. பலவகையில் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பெரும்பான்மை கறுப்புப்பணம் வங்கிகளிலும், வரிச் சொர்க்கம் (Tax Heaven)என்று கூறப்படும் நாடுகளிலும் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் பெரும்பான்மை பணம் பின்நாட்களில் வரும் அரசியல் மற்றும் வியாபாரத் தேவையை மனத்தில்கொண்டு தேக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.இத்தகைய கறுப்புப்பணம் அரசியல்வாதிகள் மற்றும் சில பெரும் தொழிலதிபர்களது லஞ்சம் மற்றும் ஊழல் வகையைச் சேர்ந்தது என்பதால் இந்தப் பணத்தை மீட்டுக்கொண்டுவருவோம் என்று யாராவது சொன்னாலே, மக்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
 
இரண்டு சாத்தியங்கள்! 

இந்தப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவது இரண்டுவிதங்களில் சாத்தியம். ஒன்று, கறுப்புப் பணத்தைத் தீவிர அரசாங்க நடவடிக்கை மூலம் பிறநாடுகளுடன் உள்ள ரகசிய ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அதற்கான முயற்சிகளைச் செய்து அதை மீட்பது.



 இதன்படி, அரசாங்கம் மற்ற நாடுகளுக்கிடையே உள்ள இருநாட்டு ஒப்பந்தங்களின்படி, தகவல் பெறும் உரிமையை நிலைநாட்டி போதிய தகவல்களைப் பெற்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கறுப்புப்பணத்தை நமது நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவருவது. இந்தக் குற்றத்துக்குண்டானவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி அதற்கான தண்டனையைப் பெற வைப்பது.
 
இரண்டாவது, கொண்டு சென்றவர் தாமாகவே முன்வந்து இந்தியாவுக்குள் மீண்டும் கொண்டுவர திட்டங்களை அறிவிப்பது. இதன்படி, இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் மூன்றுமுறைக்குக் குறையாமல் 'தாமாக முன்வந்து வரி செலுத்தும்’ திட்டங்களை (Voluntary Disclosure of Income Scheme (VDIS) வருமான வரித்துறை அறிமுகம் செய்தது.
 
டைசியாக 1997-ல் அறிமுகம் செய்த திட்டத்தில் சுமார் 3,50,000 வரிதாரர்கள் சுமார் ரூ.7,800 கோடி கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்து அதற்கான வரியைச் செலுத்தினர். ஆனால், இவை அனைத்தும் உள்நாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர அறிவிக்கப்பட்ட திட்டங்கள். வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தைக் கொண்டுவர இதுவரை எந்த வகையிலும் முயற்சி செய்தபாடில்லை.
 
ஆனால், பல வெளிநாடுகள் இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டுள்ளன. வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களை அறிவித்து வரி மற்றும் அபராதம் செலுத்தி சிறைத் தண்டனையிலிருந்து விடுபடும் திட்டத்தை முதன்முதலில் அறிவித்தது ஜெர்மனிதான். அதன்பின் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல், கிரீஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்து கறுப்புப்பணத்தைத் தமது நாட்டுக்குக் கொண்டுவரும்படி செய்துள்ளன.
 
அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவியேற்றபின் 2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் OVDI (Offshore Voluntary Disclosure Initiative) ñŸÁ‹ OVDP (Offshore Voluntary Disclosure Programme) என்னும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்தப் பொதுமன்னிப்புத் திட்டத்தில்(Amnesty) அமெரிக்கக் குடிமக்கள் சுமார் 33,000 பேர் 5 பில்லியன் டாலர் அளவுக்கு வரி மற்றும் அபராதத்தைச் செலுத்தியுள்ளனர். இந்தத் திட்டத்தை மூன்றாவது முறையாக கடந்த ஆண்டும் அமெரிக்க அரசாங்கம் அறிமுகம் செய்ததைப் பார்க்கும்போது இதன் முக்கியத்துவமும் வெற்றியின் அளவும் புரிகிறது.வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இத்தகைய பொது மன்னிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி அடைந்திருக்கும்நிலையில், இந்தியாவும் இந்த முயற்சி குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட கறுப்புப்பணம் இந்திய மண்ணுக்குள் வர வாய்ப்பாக இருக்கும்.இவர்களைத் தண்டனையிலிருந்து மன்னிப்பது நேர்மையாக வரி செலுத்துவோரை நிச்சயம் ஏளனப் படுத்துவதாக இருக்கும். ஆனால், தண்டிக்கும் விஷயத்தில் நாம் உறுதியாக இருந்தால், கறுப்புப்பணம் நம் நாட்டுக்குள் வராமலே போய்விடும். அந்நிய செலாவணி தொடர்பான சொத்துகள் இந்தியாவுக்குள் வரி மற்றும் அபராதத்தோடு வர வாய்ப்பு இருக்குமானால் அதைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.இந்திய வரிதாரர்கள் வெளிநாட்டில் உள்ள சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருமானம் குறித்து விவரம் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது ஒரு நல்ல முயற்சியே.
 
இனி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நூறு நாட்களில் கறுப்புப்பணம் மீட்டுக் கொண்டு வரப்படும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. என்றாலும், அதற்கான முனைப்பு இருப்பது வரவேற்கத்தக்கது. இது வெறும் தேர்தல் பேச்சாக மட்டும் இல்லாமல், சீரிய முயற்சியின் மூலம் கறுப்புப்பணத்தின் ஒரு பகுதியாவது இந்தியாவுக்கு வரும்பட்சத்தில் மின் உற்பத்தி, கட்டமைப்பு (Infrastructure), சுகாதாரம், கல்வி போன்ற முக்கியத் திட்டங்களுக்கு வெகுவாகப் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!


Monday, April 28, 2014

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

அட்சயதிருதியை அன்று ஒரு கிராம் நகையாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் நம்மவர்கள். அப்படி  நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன 
 
1. ஹால்மார்க் நகைகள்! 

நீங்கள் வாங்கும் நகைகள் ஹால் மார்க் முத்திரை கொண்ட நகைகளா என்று பார்த்து வாங்குவது அவசியம். நம்பர் 1 நகை, தரம் நிறைந்தது என விளம்பரத்தில் சொல்லப்பட்டாலும் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் தான் தரமானவை. அதிலும் ஐந்து முத்திரை (முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண்) உள்ள ஹால்மார்க் நகைகளே தரமானவை. இதை பலரும் கவனிக்காமல் மூன்று முத்திரை கொண்ட ஹால்மார்க் நகைகளை வாங்கிவிடுகின்றனர். மேலும், வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை உண்டு.

2.கல் நகைகள்!
தங்க நகைகளை வாங்கும்போது கல் வைத்த நகைகளை வாங்கு கிறீர்கள் எனில், அவை எத்தனை கிராம் உள்ளன, அதற்கான விலை எவ்வளவு, மொத்த விலையில் கற்கள் போக தங்கத்தின் விலை சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். பிற்காலத்தில் அந்த நகைகளை தந்து புது நகை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ கல் நகைகளுக்கு மதிப்பு குறைத்தே கணக்கிடப்படும். ஆகவே, கல் நகைகளை வாங்கும்போது கவனத்தோடு இருக்கவேண்டியது அவசியம்.

3. டிசைன்! 

சிலர் நகை வாங்கவேண்டும் என்றதுமே நல்ல டிசைனாக இருக்க வேண்டும் என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி டிசைன் நகைகளை வாங்கும்போது அதற்கு சேதாரம் அதிகமாகும், அப்போது அதற்கான சேதாரம் எவ்வளவு, அது நகையின் டிசைனுக்கு தகுந்த சேதாரம்தானா என்று பார்த்து அதற்குபின் வாங்குங்கள். பார்க்க நன்றாக உள்ளது என நீங்கள் வாங்கும் சிறிய அளவிலான நகைகளின் ஆயுள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். மேலும், நீங்கள் ஏதாவது ஒரு நகையை அட்சயதிருதியை அன்று வாங்க வேண்டுமே என்ற காரணத்துக்காக 2 கிராமுக்கு கீழ் நகை வாங்கும்போது தரம் குறைந்த நகைகளை வாங்கும் வாய்ப்பு அதிகம். அதனால், நகை வாங்கும்போது இரண்டு கிராமுக்கு மேல் உள்ள நகையாகப் பார்த்து வாங்குவது நல்லது.


4.தரம்! 
 
நகை வாங்கும்போது சரியான தரத்தில் நகைகளை வாங்குவது முக்கியம். அதோடு ஒவ்வொரு நகை வாங்கும்போதும் அதற்கு என்ன தரக் குறியீடு எனப் பார்த்து வாங்க வேண்டும். தங்கம் என்றால் 916 நகைகள், வைர நகைகள் வாங்கும்போது தரச் சான்றிதழ் பார்த்து வாங்கவேண்டும். குறிப்பாக, வைரம் வாங்கும்போது கட்டாயம் தரச் சான்றிதழை கேட்டு பெற வேண்டும்.

5.சேதாரம்! 

சேதாரம் என்கிற விஷயம் கடைக்கு கடை மாறுபடும். நீங்கள் எந்த நகை வாங்குவதாக இருந்தாலும் சேதாரம் எவ்வளவு என்பதை நன்கு விசாரித்து அறிந்தபிறகே வாங்குங்கள். இதில் குழப்பமான பல கணக்குகள் இருப்பதால், உஷாராக இருப்பது அவசியம்!

அட்சயதிருதியை அன்று தங்க நகை வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்கள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளலாமே!

தங்க நகைச் சீட்டு லாபமா?


தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்கம் வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்ததாகத் தெரியவில்லை. எப்படியாவது அடுத்த வருஷத்துக்குள் இரண்டு வளையல் அல்லது ஒரு செயினையாவது வாங்கிவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள் நம் வீட்டில் உள்ள பெண்கள். ஆனால், தங்கத்தின் விலை இப்போது அதிகமாக இருப்பதால், மொத்தமாக பணம் தந்து வாங்கக்கூடிய நிலையில் பலரும் இல்லை. மக்களின் இந்த  நிலையை சரியாக புரிந்துகொண்ட நகைக் கடைகள் நகைச் சீட்டு போன்ற எளிய திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களை தங்கள் பக்கம் சுண்டி இழுக்கின்றன.
 
இன்றைய நிலையில் சிறிய, பெரிய நகைக் கடைகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா கடைகளும் நகைச் சீட்டுகளை நடத்தி வருகின்றன. இந்த நகைச் சீட்டு திட்டங்களோடு கவர்ச்சிகரமான இலவசங்களையும் அளித்து வருகின்றன.

ரொக்கமாக பணம் தந்து தங்கநகை வாங்க முடியாதவர்களுக்கு இந்த சீட்டு திட்டங்களே பெரும் வரப்பிரசாதமாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் செலுத்துவதன் மூலம் குறைந்தளவு வருமானம் உள்ளவர்களும் இந்த நகைச் சீட்டுத் திட்டங்கள் மூலம் சில பவுன் நகைகளையாவது வாங்க முடிகிறது.  

நகைச் சீட்டு கட்டுவதில் இப்படி பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும், இதில் சேர்ந்து நகை வாங்குவதால் லாபமா அல்லது நஷ்டமா என்கிற கேள்வியை யாரும் கேட்பதே இல்லை.

நகைச் சீட்டில் சேரும்போது என்னென்ன விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.

 
இன்றைக்கு பலவிதமான நகைச் சீட்டுத் திட்டங்களை நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் நம்முடைய பட்ஜெட்டுக்குத் தோதான அளவில் பணத்தைக் கட்டி, ஆண்டு முடிவில் தங்கநகை பெறலாம் என்பது ஒருவகை. இப்படி வாங்கும் நகைக்கு செய்கூலி, சேதாரம் பெரும்பாலும் கிடையாது. சில கடைகளில் 1 சதவிகிதம் வாட் வரியையும் தள்ளுபடி செய்கிறார்கள். சில கடைகளில் நீங்கள் செலுத்தும் ஒரு மாத தவணை தொகைக்கு இணையான மாத தவணை தொகையைப் போனஸாக வழங்குகிறார்கள். செலுத்திய தொகையோடு போனஸ் தொகையும்  சேர்த்து தங்கநகை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்தத் திட்டத்தில் செய்கூலி சேதாரம் உண்டு.
 
சில கடைகளில் குலுக்கல் திட்டமும் வைத்திருக்கிறார்கள். சில கடைகள் கடந்த ஆண்டு திடீரென தங்கம் விலை இறங்கியபோது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தன. மாதாமாதம் கட்டிய தொகைக்கு ஈடான தங்கம், கிராம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சீட்டு முதிர்வின்போது மொத்தம் சேர்ந்துள்ள கிராம் அளவுக்கு தங்க நகையை சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் அல்லது கட்டிய மொத்த தொகைக்கு சேதாரத்துடன் தங்க நகை (முதிர்வு தேதி விலையில்) வாங்கிக்கொள்ளலாம்.

இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் 15 மாத கால அளவில் இருக்கும். அதேபோல, இடையில் பணம் செலுத்துவதை நிறுத்தினால் செலுத்திய தொகையின் மதிப்புக்கு தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். இப்படி வாங்கும் நகைக்கு செய்கூலி சேதாரம் இருக்கும். பணமாக வாங்க முடியாது. சீட்டு முதிர்வு அடையும்போது குறிப்பிட்ட சதவிகிதம் வரைதான் சேதாரத்தில் கழிவு இருக்கும். அதற்குமேல் சேதாரம் உள்ள நகையை வாங்கும்போது, வித்தியாசப்படும் சேதாரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். அதாவது, நீங்கள் 25 சதவிகிதம் சேதாரம் உள்ள நகையைத் தேர்வு செய்து வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், சீட்டில் அதிகபட்சம் 18 சதவிகிதம் சேதாரத்துக்கு பணம் வாங்கமாட்டார்கள். மீதமுள்ள 7 சதவிகித சேதாரத்துக்கு நீங்கள் கட்டாயம் பணம் செலுத்த வேண்டும். நீங்கள் தங்க காயின் அல்லது சேதாரம் குறைந்த நகைகளை வாங்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

 
நகைச் சீட்டு திட்டத்தில் மாதந்தோறும் கட்டும் தொகைக்கு தங்கமாக வரவு வைக்கப்படும் திட்டத்துக்கும் (சேதாரம் கிடையாது என்றால்) வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் செய்வதற்கும் ஒப்பீடு செய்யப்பட்ட அட்டவணை முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சேதாரக் கழிவுடன் கூடிய 15 மாத சீட்டு திட்டத்தில் கடந்த 2012 டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து 2014 பிப்ரவரி 1 மாதம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் தங்க நகைச் சீட்டு.

கட்டியிருக்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், உங்கள் பெயரில் சுமார் 10.32 கிராம் தங்கம் சேர்த்திருக்கும் (மாதம் முதல் தேதி விலைப்படி). முதிர்வின்போது 10.32 கிராமின் மதிப்பு (10.32X2800) 28,896 ரூபாய் ஆகும்.

நீங்கள் நகைச் சீட்டில் மொத்தமாகச் செலுத்திய தொகை 30 ஆயிரம் ஆகும். நீங்கள் சீட்டு முதிர்வின்போது 18 சதவிகிதம் சேதாரம் உள்ள நகை வாங்கினீர்கள் எனில் (28,896X18/100) 5201 ரூபாய் ஆகும். ஆக (28896+ 5201) 34,097 மதிப்புள்ள நகையை 30,000 கட்டி வாங்கியிருப்பீர்கள். ஆக 30 ஆயிரம் ரூபாய்க்கு 4,097 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். அதுவும் அவர்கள் கொடுக்கும் அதிகபட்ச சேதாரக் கழிவில் நகை வாங்கினால்தான் கூடுதல் லாபம் கிடைக்கும். அதே குறைந்த அளவு சேதாரம் உள்ள நகையை வாங்கினால் லாபம் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

அதே பணத்தை மாதம் 2 ஆயிரம் வீதம் ஆர்.டி.யில் போட்டால், 15 மாதங்களுக்குபின் 9 சதவிகித வட்டி என்றால் 31,851 ரூபாய் சேர்ந்திருக்கும். இடையில் எடுத்தால் 4 சதவிகித வட்டியாவது கிடைக்கும். இதுவே, தங்க நகைச் சீட்டில் இடையில் நிறுத்தினால் எந்த சலுகையும் கிடைக்காது. அதாவது, 5 மாதம் சீட்டு கட்டியபிறகு இடையில் நிறுத்தினால் உங்களுக்கு (5X2000) 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கான நகை மட்டுமே கிடைக்கும். இதற்கு சேதாரமும் உண்டு. எனவே நகை கட்டாயம் தேவை என்பவர்களும், மொத்தமாக பணத்தைக் கொடுத்து நகை வாங்க முடியாதவர்களுக்கு நகைச் சேமிப்பு திட்டங்கள் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடையின் பாரம்பரியத்தையும் நம்பகத்தன்மையையும் கணக்கில்கொள்வது அவசியம்.  

Curd தயிர்


 
பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர்தான் மிகவும் சிறந்தது. நம் குடலுக்கு தேவையான எண்ணெய்ப் பசையைத் தந்து வயிற்றுள்ள வாயுவைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தாது.
 
மற்ற மிருகங்களின் பாலிலிருந்து உண்டாகும் தயிர், பொதுவாக ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எருமையின் தயிர் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். எளிதில் செரிக்காது. அதிகம் சாப்பிட சளித் தொல்லை ஏற்படுத்தும். வயிற்றில் செரிக்காமல் கிடந்தால் புளித்துப் போய் ரத்தத்தைக் கெடுத்து விடும்.

புளிப்பு தலை காட்டத் தொடங்கிய நிலையில் தயிரைச் சாப்பிட்டால் பசியைத் தூண்டும். பசி மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆனால், தயிர் மிக அதிகமாகப் புளித்து விட்டால் ரத்தக் கொதிப்பு, பித்தவாயு, வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதல்ல. மேலும் நன்றாகப் புளித்த தயிர் பற்களில் கூச்சம், குரல் கம்முதல், உடல் எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

தயிரை மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு, துணியிலுள்ள உள்ள கெட்டியான பகுதியுடன். சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்துத் தயாரிப்பதற்கு ஸ்ரீகண்ட் என்று பெயர். ருசியான சத்துள்ள உணவு இது. உடல் புஷ்டி, பருமன் தரக்கூடியது. உடலின் உஷ்ண வறட்சியைக் குறைக்கும். அதிகம் சாப்பிட்டால் சளித் தொல்லை ஏற்படலாம். பசும் பாலிலிருந்து கிடைக்கும் தயிரைவிட எருமை தயிரே இதற்கு ஏற்றது.

தயிரைச் சுட வைத்து சூடாகச் சாப்பிடக்கூடாது. இரவில் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிட கூடாது. சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல. மண் சட்டியிலிட்டு தோய்த்துத் தயாரிக்கப்படும் தயிர் மிகவும் சிறந்தது. பாலைக் கடைந்து வெண்ணெய் நீக்கிய பிறகு பாலைக் காய்ச்சி, தயிர் தயாரித்து சாப்பிடுவது பசியின்மையும் வயிற்றுப் போக்கும் உள்ளவர்களுக்கு நல்லது.

தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் உள்ளதைப் பார்த்திருக்கலாம் அந்த தண்ணீர் புளிப்பும், இனிப்பும் துவர்ப்பும் கலந்த ஒரு மிகச் சிறந்த பானம். அந்தத் தண்ணீரை மட்டும் சுமார் கால் கப் முதல் அரை கப் வரை காலை- மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு இவற்றுக்கு ஏற்றது.

பாலில் புரை குத்திய பின் நன்கு உறையாமல், பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும் தயிரை சாப்பிடக் கூடாது. அது வயிற்றில் வேகமாக புளிக்கத் தொடங்கி பசியைக் குறைத்து நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் வாபுண் முதலியவற்றை உண்டாக்கும்.

தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன் வெல்லம் சேர்த்து சாப்பிட நல்ல உடல் புஷ்டியைத் தரும். ஆண்களுக்கு விந்துவை அதிகப்படுத்தி போக சக்தியை உண்டாக்கும். அதிக அளவு சாப்பிட்டால் பசி மந்தமாகிவிடும்.

பகலில் ஓடி ஆடி வேலை செய்வதால் உடலிலுள்ள இறுக்கமான கபம் தளர்ந்து விடும். இரவில் குளிர்ச்சியான தன்மையில், தயிரைச் சாப்பிட்டால் அதன் பிசுபிசுப்புத் தன்மையால் தளர்ந்த கபத்துடன் சேர்த்து நுரையீரலில் இறுகி, சீரணக் குறைவு தோன்றக்கூடும். அதனால் தான் தயிரை இரவில் தவிர்க்க வேண்டும். இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிடும் போது சோகை, காமாலை, சரும நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை உண்டாகக் கூடும். இரவு தயிர் மட்டும் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.

heart bleed New Internet problems

 
இதுதான் கடந்த சில நாட்களாக இணையத்தைப் பயமுறுத்தும் புதிய குறைபாடு, பக். இணையத்தின் பயன்பாடு பெருகிவரும் வேளையில் திடீரென்று ஒரு புது குறைபாடு தெரியவந்திருக்கிறது. அதுவும் மிகவும் பாதுகாப்பு என்று கருதப்பட்ட செக்யூரிட்டி அமைப்பிலேயே இந்த ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
 
நீங்கள் ஆன்லைனில் பொருள்கள் வாங்கினாலோ, இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தினாலோ, மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தினாலோ, உடனடியாக உங்கள் பிரவுசர்களின் ஓரத்தில் பூட்டு போன்ற லோகோ தெரியவரும். அதாவது நீங்கள் பாதுகாப்பான முறையிலேயே இணையச் சேவைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கிறீர்கள், உங்களுக்கும் நீங்கள் தொடர்புகொள்ளும் வங்கிக்கும் இடையே இருக்கும் தொடர்பு மிகவும் பத்திரமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி அது.இத்தகைய பாதுகாப்பை வழங்க, ஓப்பன் எஸ்.எஸ்.எல். என்ற மென்பொருள்தான் பின்னணியில் இயங்கும். பொதுவாக ஓப்பன் எஸ்.எஸ்.எல். இணையத்தின் பல்வேறு பாதுகாப்பான தொடர்புகளுக்கான இணைப்பாக, உறுதிப்படுத்தலாக இருந்து வருகிறது. அதில்தான் இப்போது குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
 
அதனுள் உருவாகியிருக்கும் குறைபாட்டின் பெயர் ‘இதயத்தில் கசியும் ரத்தம்’ - ஹார்ட்ப்ளீட். இதனால் என்னென்ன பாதிப்புகள்? முதலில் நீங்கள் பாதுகாப்பு என்று கருதிய எதுவும் பாதுகாப்பு இல்லை. வங்கியின் பாஸ்வேர்ட், இமெயில் பாஸ்வேர்ட், இன்னபிற இணைய சேவைகளின் பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள் ஆகியவற்றை இணையத் திருடர்கள் சுலபமாகக் கவர்ந்துவிட முடியும். 

இந்தக் குறைபாடு 2012ல் இருந்தே இருப்பதாகவும் இதற்குள் பல்வேறு முக்கிய சேவைகள், வலைத்தளங்கள் ஆகியவற்றில் ரத்தம் கசிந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ப்ரூஸ் ஷீனர் என்ற இணையப் பாதுகாப்பு வல்லுனர் இதைப் ‘பேரழிவு’ என்று சித்திரிக்கிறார். அத்துடன், இதன் பாதிப்பை ஒன்றில் இருந்து பத்துக்குள் மதிப்பிடச் சொன்னால், அதைவிட அதிகம், ‘இதன் பாதிப்பு பதினொன்று’ என்று பீதியைக் கிளப்புகிறார்.உடனே சென்ற வாரம் முழுவதும் ‘உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றுங்கள்’, இணையம் பக்கமே போகாதீர்கள் என்றெல்லாம் ஆயிரம் அட்வைஸ்கள் கொட்டின. உண்மையில், இது பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரமல்ல. கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.கூகுளும் யாஹூவும் இன்னபிற தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தக் குறைபாட்டை ஏற்கெனவே சரிசெய்துவிட்டனவாம். சரிசெய்வது சுலபம்தான் என்கிறார்கள். ஆனால், இன்னும் சரிசெய்யாத பல இணைய சேவைகள் இருக்கின்றன. ஆனால், ஏற்கெனவே இதனால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால் அதைச் சரிசெய்வது எப்படி என்பது தான் இப்போது கேள்வி. உதாரணமாக, இணையத் திருடர்கள் இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தி, ஷாப்பிங் வலைத்தளங்கள், வங்கித் தொடர்புகளில் இருந்து பயனர்களின் பெயர்கள், பாஸ்வேர்ட்டுகளைத் திருடியிருந்தால், அதன் பாதிப்புகள் இனிமேல்தான் தெரியவரும். அல்லது ஏற்கெனவே பல திருட்டுக்களுக்கான காரணங்கள் இனிமேல் விளங்கும். ஹார்ட்ப்ளீட் குறைபாடு ஏற்படுவதற்குக் காரணமானவர் என்று ராபின் செக்கல்மேன் என்பவரைச் சொல்கிறார்கள். இவர், ஓப்பன் எஸ்.எஸ்.எல்.லில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நீக்குபவர். அப்படி அவர் நீங்குவதற்கான புரோகிராமை எழுதும்போது, இந்தக் குறைபாடு, அவர் கண்ணிலும் படாமல் தப்பிவிட்டிருக்கலாம். இதை நான் வேண்டுமென்றே நுழைக்கவில்லை, என்னை அறியாமல் நடந்துவிட்டிருக்கலாம்," என்பதே இவரது வாதம்.
 
இக்குறைபாடு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதால், அமெரிக்க உளவு ஏஜன்சிகள் இதன் பயனை அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல்வேறு உலக அளவிலான நிறுவனங்களின் ரகசியத் தகவல்களை இக்குறைபாட்டின் மூலம், அவர்கள் கவர்ந்திருக்கலாம் என்பதை செக்கல்மேன் மறுக்கவில்லை. மேலும் எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்காவின் அரசு ரகசியங்களை வெளியிட்டார் அல்லவா? அதுவும் இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தியே செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறவர்களும் உண்டு.
 
இதுபோன்ற கான்ஸ்பிரசி தியரிகள் ஒருபக்கம் இருக்கட்டும், பயனர்களான நாம் என்ன செய்ய வேண்டும்?
 
இப்போதைக்கு இணையத்தில் வங்கிச் சேவைகள், பொருள்கள் வாங்குவது ஆகியவற்றைக் கொஞ்சம் ஒத்திப் போடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறார்கள் நிபுணர்கள். அடுத்த சில வாரங்களுக்குள் இணையச் சேவை நிறுவனங்கள் தாங்கள் ஹார்ட்ப்ளீட் குறைபாட்டைக் களைந்து விட்டோம் என்று அறிவிக்கத் தொடங்கும். அப்போது நீங்கள் உங்கள் கடவுச் சொல்லை மாற்றிக்கொள்வது பாதுகாப்பானது.

automatic driver free car


ஏதோ ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் கதை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். தானியங்கி / ஓட்டுனரில்லா கார் - முற்றிலும் நிஜம்!!! என்ன இப்படிப் பாக்கறீங்க? தானியங்கி புகைவண்டி ஜப்பான் போன்ற நாடுகளிலும், எல்லா வெளிநாட்டு விமான நிலையத்திலும் ஓடும்போது தானியங்கி கார் சாத்தியமில்லையா? உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகளின் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் பாதிக்குப் பாதி மனிதரின் (கவனக்குறைவு) பிழையினால்தான் நடக்கிறது. அதற்கு இந்த ஓட்டுனரில்லா கார் நல்ல தீர்வாக அமையும் என்கிறார்கள் ஆட்டோமோட்டிவ் நிபுணர்கள்.

கூகிள் நிறுவனம்தான் இந்த முயற்சியில் வீறு நடைபோட்டு முன்னேறி வருகிறது. டொயோட்டா ப்ரியஸ் என்ற காரை சோதனை ஓட்டமாக இதுவரை சுமார் முந்நூராயிரம் கி.மீ. ஓட்டிச் சாதித்திருக்கிறது. அமெரிக்காவில் இந்தக் கார் இதுவரை எந்த விபத்திலும் மாட்டிக் கொள்ளவில்லை. ஜி.எம்., பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ., வோல்வோ என்ற எல்லா நிறுவனங்களும் தத்தம் ஓட்டுனரில்லா காரைச் சந்தைக்குக் கொண்டுவர முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றன. நீஸான் நிறுவனம் 2020இல் தன் ஓட்டுனரில்லாக் காரைச் சந்தைக்குக் கொண்டு வருவதாக மார்தட்டுகிறது. அமெரிக்காவில் ஒன்றிரண்டு மாகாணங்கள் தானியங்கிக் காருக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டன.

காருக்குள் ஒரு கணினி இருக்கும். காருக்கு வெளியே லேசர் நிலப்படம் இருக்கும். அந்த நிலப்படம் காரைச்சுற்றி 200 அடிவரை சுற்றளவில் இருக்கும் பொருட்களை, சாலையைப் படம்பிடித்து உள்ளிருக்கும் கணினிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இதனால் சாலையின் 3டி பிம்பம் கிடைத்துவிடும். அதே போல், காரின் ஓட்டுனர் கண்ணாடிக்குக் கீழே இருக்கும் காமிரா பாதசாரிகள், சிக்னல் விளக்கு எல்லாவற்றையும் படம்பிடித்து கணினிக்கு அனுப்பும். இதன்மூலம் கார் தன் முன்னே வரும் இடையூறுகளை அறிந்து கொள்ளும். காரின் முகப்பில் மூன்றும், பின்புறம் ஒன்றும் என நான்கு ரேடார் உணரிகள் உள்ளன. இவை தூரத்துப் பொருட்களைக் கண்டுபிடிக்க உதவும்.

தானியங்கிக் கார்களுக்குச் சாலைகளின் கட்டமைப்பு மிகமிக முக்கியம். இல்லையேல் இந்தக் காரை கொண்டுவந்து எந்தப் பயனும் இல்லை. உலகில் ஒரு சில நாடுகளைத் தவிர எல்லா நாடுகளிலும் இது கேள்விக்குறியே. அதே போல், காரில் சென்சார் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் ஒரு குறிப்பிட்ட கார் இந்த விநாடியில் எந்தச் சாலையில் எந்த ஊரில் இருக்கிறது என்று மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இதனால் குறிப்பாக பிரபலங்களின் அந்தரங்கம் பாதிக்கப்படும்!  

அதே போல் 100% தானியங்கி கார் தற்பொழுது சாத்தியம் இல்லை. அதெல்லாம் இன்னும் நூறு வருடம் கூட பிடிக்கலாம். இடைஇடையே, காரை இயக்க வேண்டி வரும். அதனால், கிடைத்தது சாக்கு என்று காரில் ஏறிக் குறட்டை விட்டுத் தூங்கிவிடலாம் என்று பகல்கனவு காணாதீர்கள். ஆனால் பாவம், உலகம் முழுவதும் காரையே நம்பி பிழைப்பு நடத்தும் ஓட்டுனர்கள், கால் டாக்ஸி நிறுவனங்கள், ஏர்போர்ட் வாடகைக் கார்கள் என எல்லா தொழிலும், அதில் ஈடுபட்டுள்ள ஏழை மக்கள் பலரும் இந்த ஓட்டுனரில்லா கார் வந்தால் கஷ்டப்படுவார்கள் என்று ஒரு பக்கம் விமர்சனம் எழுந்தவண்ணம் உள்ளது. 

அண்ணா, எதுக்கும் எங்க இந்தியச் சாலைகளில் ஒரு முறை ரவுண்டு அடிச்சுட்டு அப்புறம் இந்தக் காரை பெருமளவில் தயாரிக்க ஆரம்பிங்க! இரண்டு காரை சுற்றிலும் குறைந்தது பத்து மோட்டார் சைக்கிள், ஆட்டோ இருக்கும். அப்புறம் உங்க ஓட்டுனரில்லா காரில் இருக்கும் உணரிகள் எல்லாம் செய்வதறியாது தடுமாறிவிடும்!!!