Friday, August 2, 2013

ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு பூமிக்கு அடியிலிருந்து சிவலிங்கம் கண்டெடுப்பு

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே மருதூர் கிராமத்தில் பூமிக்கு அடியிலிருந்து விலை மதிப்பில்லாத சிவலிங்கம் மற்றும் பூஜை பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாய முதலியார், 77. மளிகை கடை வைத்துள்ள இவர், தனது வீட்டின் பின்புறம் செப்டி டேங்க் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். நேற்று மாலை 4 மணியளவில், அதற்காக பள்ளம் தோண்டும் பணியில் சிலர் ஈடுபடுத்தப்பட்டனர்.
தரை மட்டத்திலிருந்து 6 அடிக்கு கீழே பள்ளம் தோண்டும் போது, பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் உள்ளது தெரியவந்தது. தகவலறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் குணசேகரன் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
நேற்று மாலை 6 மணியளவில், பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கு பள்ளம் தோண்டும் பணி துவங்கியது. இரவு 7.30 மணி வரை நடந்த இப்பணியின் போது, பூஜைக்கு தேவையான மணி, பூஜைபாத்திரங்கள், சிவலிங்கம், யானை சிற்பம் மற்றும் கலை நயம் மிக்க உலோக பொருட்கள் பலவும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியிலிருந்து சேகரிக்கப்பட்ட, மேற்கண்ட உலோகங்கள் அனைத்தும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவையா? அல்லது வேறு வகை உலோகத்தால் வடிவமைக்கப்பட்டதா? என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. பூமியிலிருந்து கிடைத்துள்ள சிவலிங்கம் விலை மதிப்பில்லாத மரகத லிங்கமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
மருதூர் கிராமத்தைச் சேர்ந்த நமச்சிவாய முதலியார் வீட்டு தோட்டத்திலுள்ள, பூமிக்கடியிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மருதூரில் கிடைத்துள்ள விலை மதிப்பில்லாத, உலோக பொருட்களின் தரம் பற்றி, இன்று ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment