Monday, September 23, 2013

MAHENDRA SINGH DHONI CREATES A BUZZ WITH HIS MOHAWK New Hair Style


Ranchi: India and Chennai Super Kings (CSK) captain Mahendra Singh Dhonimade his first T20 appearance in front of his home crowd here on Sunday in style, sporting a mohawk in CSK's opening match of the 2013 Champions League Twenty20.
Dhoni, known for his love for the motorbikes and guns, has changed his hairstyle often since making his India debut in henna-coloured hair in 2004 that caught the then Pakistan president Parvez Musharraf's fancy on the tour of Pakistan.
Every time Dhoni - who besides being India's most successful captain is known for his explosive batting - changes his hairdo, it has created a wave. In 2007, after India won the Twenty20 World Cup, Dhoni cropped his hair short like the under-training military men.
And after India won the 2011 World Cup, Dhoni surprised everyone by going bald. Seeing the mohawk on Dhoni's head on Sunday, microblogging website Twitter was abuzz with tweets from the captain's fans.

Sunday, September 22, 2013

iPhone 5 C features in tamil...

 
ஐபோன் மீது உலகெங்கும் பயங்கர ஈர்ப்பு உண்டு. ஐபோன் அழகும், அதன் இயங்குதளத்தின் இயல்பும், அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையும் அதன் மேல் பைத்தியத்தையே ஏற்படுத்திவிடும். ஆப்பிள் தொடர்ந்து இந்த ரசனையான அனுபவத்தை அதன் ஒவ்வொரு போன் மாடலிலும் மெருகேற்றிக் கொண்டே வந்தது.
 
ஆனால், இந்த எழிலுக்கும் திறமைக்கும் நவீன தொழில்நுட்பத்துக்கும் ஒரு விலை உண்டு. ஆப்பிள் ஐபோன்கள் எல்லாம் விலை விஷயத்தில் கொஞ்சம் அதிகம்தான். அதுவும் இந்தியாவுக்குள் ஐபோன்கள், அமெரிக்க விலையைவிட இருபது சதவிகிதம் அதிகமாகவே விற்கப்படுகின்றன.  ஐபோன்களுக்கு உலகெங்கும் இருக்கும் மிகப்பெரிய போட்டியாளர் ஆண்டிராய்ட் வகை போன்கள்தான். அதுவும் சாம்சங் கேலக்ஸி போன்கள் சந்தையை வெகுவேகமாகக் கைப்பற்றிக்கொண்டு வருகின்றன.இந்நிலையில், ஆப்பிள் இந்தியா, சீனா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளுக்கு ஏற்ப விலைகுறைவான போன்களை அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஐபோன் 5 சி என்ற அந்த மாடலைப் பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல மீடியாவில் கசிந்து கொண்டே இருந்தது.கடைசியாக சென்ற வாரம் ஐபோன் 5 சி மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டது. இதில் சி என்பது கலர் என்றே சொல்லலாம். நீலம், இளம் பச்சை, பிங்க், மஞ்சள், வெண்மை ஆகிய நிறங்களில் ஐபோன் 5 சி கிடைக்கும். மற்றபடி இந்த மாடலில் ஐபோன் 5இல் இருந்த அதே பிராசசரே இருக்கிறது. பேட்டரி பத்து மணிநேரம் வரை தாங்கும் என்று ஆப்பிள் அறிவித்திருக்கிறது. இந்தப் போன் மாடல் கெட்டியான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு இருப்பது தான் இதில் ஒரே புதுமை!உண்மையில், ஐபோன் 5 சி புதிய அனுபவத்தைத் தரும், வித்தியாசமாக இருக்கும், பெரிய முன்னேற்றமாக இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், அதெல்லாம் இல்லாமல் வெகு சாதாரணமாக, இதற்கு முந்தைய மாடலில் இருந்து பெரிய வளர்ச்சி ஏதுமில்லாமல் 5 சி இருப்பது அனைவரையும் கொஞ்சம் ஏமாற்றத்துக்குள்ளாக்கி இருக்கிறது.ஒரே ஒரு விஷயம், விலை. அமெரிக்காவில், 16 ஜிபி ஐபோன் 5 சி, 99 டாலர். 32 ஜிபி 199 டாலர்.மொபைல் ஆபரேட்டர்களின் காண்ட்ராக்டோடு இருந்ததால்தான் இந்த விலை. இல்லையெனில் இதன் உண்மை விலை 549 டாலர்கள். அதாவது, அமெரிக்காவில், தொலைதொடர்பு நிறுவனங்கள், ஐபோனின் விலையில் பெரும்பங்கை ஆப்பிளுக்குச் செலுத்தி, அதன் சந்தை விலையைக் குறைக்கும். அதற்கு மாற்றாக, ஐபோன் வாடிக்கையாளர்கள், அந்தக் குறிப்பிட்ட ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கையே பயன்படுத்த வேண்டும். இப்படித்தான் ஐபோன் 5 சி மாடலுக்கு இரண்டு வருட காண்ட்ராக்டோடு விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
 
அமெரிக்காவில் வேண்டுமானால், இந்த விலை குறைவாக இருக்கலாம். ஆனால், இந்தியாவிலோ சீனாவிலோ இது குறைந்த விலை இல்லை. இந்தியாவுக்கு வரும்போது, ஐபோன் 5 சியின் விலை ரூ. 40,000 ஆக இருக்கும். இதில் பாதி விலையில் சூப்பரான போன்கள் சந்தையில் கிடைக்கும்போது, இவ்வளவு விலை கொடுத்து யார் வாங்குவார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.சீனாவிலோ, ஐபோன் 5 சியின் விலை கிட்டத் தட்ட 730 டாலர்கள். அங்கே இது மிக மிக அதிக விலை. அப்படியானால், ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய மதிப்பைக் குறைத்துக் கொண்டு சந்தையை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றே அர்த்தமாகிறது.ஆனால், ஆப்பிள் எப்போதும் தன்னுடைய தொழில்நுட்பத்தாலும் எழில்நிறை தயாரிப்பினாலுமே சந்தையில் கோலோச்சுகிறது. இம்முறையும் இந்த 5 சி மாடல், அதன் பல்வேறு வண்ணங்களுக்காகவே பயங்கர டிமாண்டைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வண்ணம் என்பது ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட். அதில் பின்தங்கியிருந்த ஆப்பிள், 5 சி மாடல் மூலம், புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தும்.ஆப்பிள் எது செய்தாலும் அது தலைப்புச் செய்தி தான். மக்களின் மனநிலையைப் புரிந்து வைத்துள்ள நிறுவனம் அது. இம்முறையும் அதன் திட்டம் சோடை போகாது. 
 

Why Max Fixing ????

 
‘40 லட்சத்துக்காக ஏன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டும்? ஒரு டெஸ்ட் தொடரில் அந்தப் பணத்தைச் சம்பாதித்துவிடலாம். மூன்று டெஸ்ட் மேட்சுகளில், 20 விக்கெட்டுகள் எடுத்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும். ஒரு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக பந்து வீசினால் பத்து மடங்கு பணம் கிடைத்திருக்குமே! ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அதைவிடவும் ஒரு முட்டாள்தனம் இல்லை’ என்று சமீபத்தில் ஸ்ரீசாந்தின் சூதாட்ட வழக்கு தொடர்பாக மிகவும் மனம் வருந்திப் பேசினார் கௌரவ் கங்குலி.
 
அசாருதீன், ஹான்ஸி குரோனியேவுக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டபோது, இனிமேல் கிரிக்கெட்டில் ஃபிக்ஸிங்கே இருக்காது என்கிற நம்பிக்கை வந்தது. சமீபத்தில், 3 பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டுச் சிறைத்தண்டனை பெற்றபோதும்கூட, ஃபிக்ஸிங் என்கிற நச்சுக்கிருமி முற்றிலும் ஒழிந்துவிடும், இனி வீரர்கள் தவறு செய்யப் பயப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்டனையை எவ்வளவு கடுமையாக்கினாலும் ஃபிக்ஸிங்கை ஒழிக்க முடியாதோ என்கிற கேள்வி ஸ்ரீசாந்த்தின் வாழ்நாள் தடைக்குப் பின் தோன்றுகிறது. கிரிக்கெட்டிலிருந்து மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அபாயங்களை ஒழிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதுதான் நாளுக்கு நாள் கிடைக்கும் சான்றுகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.ஐ.பி.எல். போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக (பணம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க ஒப்புதல் அளித்ததற்காக), ஐ.பி.எல்.-லின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடையும் அமீத் சிங்குக்கு 5 ஆண்டுகள் மற்றும் சித்தார்த் திரிவேதிக்கு ஒரு ஆண்டும் தடை விதித்துள்ளது, பி.சி.சி.ஐ. பி.சி.சி.ஐ.-யின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் ரவி சவானி தலைமையிலான ஒரு நபர் குழு முன் வைத்த முடிவுகளைக் கொண்டு இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
 
மனோஜ் பிரபாகர் கொடுத்த ஒரு தகவலிலிருந்து இந்தியாவின் மேட்ச் ஃபிக்ஸிங் அத்தியாயம் தொடங்குகிறது.1997ல், இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர், 1994ல் பாகிஸ்தானுக்கு எதிராக மோசமாக விளையாடுவதற்காக சக வீரர் ஒருவர் தமக்கு 25 லட்சம் ரூபாய் தந்ததாக ஒரு பத்திரிகையில் தெரிவித்திருந்தார். பிறகு, அந்த வீரரின் பெயர், கபில் தேவ் என்று அறிவித்தபோது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள்.  அடுத்த பேரதிர்ச்சியைக் கொடுத்தவர் ஹான்ஸி குரோனியே. இந்திய சூதாட்டக்காரர்களிடம் தொடர்பு கொண்டதாக ஹான்ஸி குரோனியேமீது வழக்குப் பதிவு செய்தது தில்லி காவல்துறை. உண்மையைக் கண்டறிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், கிங்ஸ் கமிஷனை நியமித்தது. அப்போது, ‘1996 கான்பூர் டெஸ்ட் நடந்த சமயத்தில், இந்திய அணியின் கேப்டன் முஹமது அசாருதீன், முகேஷ் குப்தா என்கிற சூதாட்டக்காரரை அறிமுகம் செய்து வைத்தார். சூதாட்டத்துக்காக சில மேட்சுகளில் மோசமாக ஆடினேன், என் அணியிலுள்ள சில வீரர்களையும் மோசமாக ஆட நிர்ப்பந்தித்தேன்’ என்று வாக்குமூலம் அளித்து கிரிக்கெட் உலகையே கிடுகிடுக்கவைத்தார் குரோனியே. பிறகு, 2002ல், விமானத்தில் செல்லும்போது, விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார். 
 
இந்தியாவில் மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கு, சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.  

கே. மாதவன் தலைமையில் நடந்த விசாரணையின் முடிவில், அசாருதீன், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், அஜய் சர்மா ஆகிய வீரர்கள், சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருந்து 3 ஒருநாள் ஆட்டங்களை மேட்ச் ஃபிக்ஸிங் செய்தார்கள் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதைத் தொடர்ந்து அசாருதீனுக்கும் அஜய் சர்மாவுக்கும் ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது. ‘அசாருதீன் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன’ என்று பி.சி.சி.ஐ.யின் நடவடிக்கைகளுக்கு விளக்கம் கொடுத்தார் அப்போதைய பி.சி.சி.ஐ. தலைவரான ஏ.சி. முத்தையா. அஜய் ஜடேஜாவுக்கும் மனோஜ் பிரபாகருக்கும் 5 ஆண்டுகாலத் தடை கிடைத்தது. பாகிஸ்தானிலும் ஃபிக்ஸிங் புயல் கடுமையான விளைவுகளை (அப்போதே) ஏற்படுத்தியது. சலிம் மாலிக்குக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது.
 
ஆனால், நீதிமன்றத்தின் முன்பு எல்லாப் பரபரப்புகளும் ஓய்ந்துபோயின. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் ஜெயித்து மக்களவை உறுப்பினர் ஆனார் அசாருதீன். பிறகு, சென்ற வருடம், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அசாருதீன் மீதான ஆயுட்காலத் தடைக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்கிற காரணம் சொல்லி, தடையை நீக்கி உத்தரவிட்டது. ஜடேஜாவும் தில்லி உயர் நீதிமன்றத்தால் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு, தில்லி, ராஜஸ்தான் ரஞ்சி அணிகளின் கேப்டனாகவும் சில காலம் ஆடினார். இன்றைக்கும் அவர் ஒரு கிரிக்கெட் நிபுணராக மதிக்கப்படுகிறார்.  

இவர்களைத் தொடர்ந்து, ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்காலத் தடையும் வருங்காலத்தில் ஒன்றுமில்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. 
 
‘ஸ்ரீசாந்துக்கும் சூதாட்டத் தரகருக்கும் இடையே உள்ளதாகக் கூறப்பட்ட தொடர்புக்கு வலுவான ஆதாரம் இல்லை என்று கூறித்தான் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. எனவே இந்தத் தடை நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு வழக்கு தொடர்பாக, நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும், என்று தெரிவிக்கிறார் ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் ரிபெக்கா ஜான்.  ‘யாருடைய ஆதரவும் இல்லாமல்தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்துள்ளேன். இந்தப் பிரச்னைக்குப் பிறகாவது ஆதரவு கிடைக்குமா என்று எதிர்பார்த்தேன்; ஆனால் கிடைக்கவில்லை,’ என்று ஸ்ரீசாந்த் பேசும்போது பாவமாகத்தான் இருக்கிறது. மிகச் சிறந்த ஒரு திறமையை பணத்தாசை தின்றதா அல்லது சூழ்ச்சியால் அது வஞ்சிக்கப்பட்டதா என்கிற சந்தேகங்களுக்கு நீதிமன்றம்தான் விடை சொல்ல வேண்டும். அப்படியே கறைபடியாதவராக ஸ்ரீசாந்த் அறிவிக்கப்பட்டாலும் அவரால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கமுடியுமா என்பது சந்தேகம்தான். இனி அவருக்கு வெள்ளித்திரை, சின்னத் திரை, வியாபாரம் போன்றவைதான் கைகொடுக்கப் போகின்றன. ஆரம்பம் முதலே கிரிக்கெட் தவிர இதர பிரச்னைகளுக்காக மட்டுமே அதிகமாகப் பேசப்பட்டு வந்த ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை, அதேபோலொரு கிரிக்கெட் அல்லாத ஒரு பிரச்னைக்காக முடிந்ததை எண்ணி வேதனைப்படவே முடிகிறது. இன்னமும் இதுபோன்ற எத்தனை எத்தனை திறமைகள் பேராசையால் வீணாகப் போகின்றனவோ!
 

Cartoon of the month


Monday, September 16, 2013

லூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்... Nokia lumia price slash

மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியதனால், அதன் முதல் முயற்சி, விண்டோஸ் ஸ்மார்ட் போன் மூலம், மொபைல் போன் சந்தையில், தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பதிலேயே அமையும். அந்த வகையில், 2014 ஆம் ஆண்டில், தற்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு சந்தைக்கு வந்து கொண்டிருக்கும், லூமியா போன்களின் விலை, இந்தியா உட்பட, பல நாடுகளில் விலை குறைக்கப்படலாம் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 
87 கோடி பேர் மொபைல் பயனாளர்களாக உள்ள இந்தியாவில், 8.7 கோடி பேர் மட்டுமே, ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனையை உயர்த்தி, அதில் பெரும்பான்மையான பங்கினைக் கொள்ள, மைக்ரோசாப்ட் விலை குறைப்பு முயற்சியை எடுக்கலாம். விலை குறைப்பு ரூ.2,000 முதல் ரூ.2,800 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் களான, கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற நிறுவனங்கள், ஸ்மார்ட் போன் விலையில் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டியதிருக்கும். கொரியாவின் சாம்சங் நிறுவனமும், இதில் சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் தொடக்கவிலை ரூ.5,000, இந்திய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன் விலை ரூ. 3,500 மற்றும் நோக்கியாவின் விலை ரூ. 9,000 ஆக உள்ளது. எனவே, நோக்கியா சாதனங்களின் விலை, வேண்டும் என்றே குறைக்கப்படுகையில், மற்ற நிறுவனங்கள் பெரிய போட்டியைச் சந்திக்க வேண்டும்.
நோக்கியாவின் லூமியா போன்கள் தற்போது 12 மாடல்களில், பல்வேறு நிலைகளில் வெளியாகி விற்பனையாகின்றன. அதிக விலையாக ரூ.33,000 என்ற விலையில் ஒரு மாடல் விற்பனையாகிறது. இத்தகைய ஸ்மார்ட் போன்கள், உலகின் மற்ற நாடுகளில் அதிகம் விற்பனையான போது, இந்தியாவில், இந்த விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் விற்பனை அவ்வளவாக எடுபடவில்லை. இதனால் தான், மொத்த மொபைல் விற்பனையில் தான் கொண்டிருந்த முதல் இடத்தை, நோக்கியா 2013 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில், சாம்சங் நிறுவனத்திற்கு தர வேண்டியதாகிவிட்டது. மொத்த போன் சந்தையில், 70% விற்பனை மேற்கொண்டு இருந்த நோக்கியா, 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 27% என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியாவில், பயனாளர்களிடையே அதிகம் விரும்பப்பட்ட இரண்டு சிம் இயக்க மொபைல் போன்கள் குறித்து, நோக்கியா கண்டு கொள்ளாததும் ஒரு காரணமாகும். 
மைக்ரோசாப்ட், ஸ்மார்ட் போன் விற்பனையில் மட்டுமே தன் முழு முயற்சிகளை எடுக்கும் எனத் தெரிகிறது. சில குறிப்பிட்ட வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் மொபைல் போன்களின் விற்பனைச் சந்தையிலிருந்து, மைக்ரோசாப்ட் விலகி இருக்க எண்ணலாம். பீச்சர் போன் என அழைக்கப்படும் இந்த சிறப்பு வசதிகள் கொண்ட போன் சந்தையில் தான், நோக்கியா நல்ல இடத்தைக்கொண்டுள்ளது. ஆனால், ஸ்மார்ட் போன் பயன்பாடு வளர்ந்து வருவதால், மைக்ரோசாப்ட் அதில் தன் ஈடுபாட்டினைக் காட்டாது என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
அதிவேகமாக வளரும், ஆனால் இன்னும் அதிகம் கவனிக்கப்படாத ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தை, தொடர்ந்து சூடு பிடிக்கும் என சில கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஆய்வு நடத்திய மெக்கின்ஸே அமைப்பு, இனி அடுத்து வரும் 20 கோடி இணையப் பயனாளர்கள், தங்களின் இணையத் தொடர்புக்கு, ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துவார்கள் என்று அறிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் இலத்தீன் நாடுகளிலும் இதே நிலை உருவாகி வருவதாக, மெக்கின்ஸே குறிப்பிட்டுள்ளது. சென்னையில் உள்ள நோக்கியாவின் தொழிற்சாலையில், ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Click Here

Canvas Doodle 2


இந்தியமொபைல் போன் தயாரிப்பாளரான, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் தன் தயாரிப்புகளிலேயே, மிகப்பெரிய அளவிலான மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. கேன்வாஸ் டூடில் 2 (Canvas Doodle 2 ) என அழைக்கப்படும் இந்த போன் தான், இந்நிறுவனத்திலிருந்து அதிக விலையிடப்பட்டு வந்திருக்கும் போன் ஆகும். இதில் 5.7 அங்குல திரை தரப்பட்டுள்ளது. சாம்சங் காலக்ஸி நோட் 3 போனிலும் இதே அளவில் திரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Snapdeal வர்த்தக இணைய தளத்தில், தற்போதைக்கு இந்த போன் விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூ.19,900. இதற்கான விளம்பரத்தில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பேஸ்புக் தளத்தில், உங்கள் கற்பனை இதைக் காட்டிலும் பெரியதாக இருக்குமா? என்று கேட்டிருந்தது.
இதன் திரை டிஸ்பிளே ரெசல்யூசன் 1280 x 720 என உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராச்சர், இந்த போனில் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 1 ஜிபி ஆகவும்,ஸ்டோரேஜ் மெமரி 12 ஜிபிஆகவும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதனை இயக்குகிறது. 12 எம்.பி. திறன் கொண்ட, டூயல் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த கேமரா செயல்படுகிறது. 2ஜி, 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்கின்றன. இதன் 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 8 மணி நேரம் பேச மின்சக்தியினை அளிக்கிறது. 
இந்த ஆண்டில், 30 ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக, மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. இதன் கேன்வாஸ் எச்.டி.மற்றும் கேன்வாஸ் 4 ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது.

Saturday, September 14, 2013

சிரியா (Syria)


சிரியா’ என்ற நாட்டைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால், சில நாட்களுக்கு முன் ரசாயனக் குண்டு தாக்குதலில் 600 குழந்தைகள் உள்பட சுமார் 1,429 பேர் கொலை செய்யப்பட்ட காட்சிகள்தான் உலகின் கவனத்தை சிரியா மீது திருப்பியது!
 
இப்படி ஒரு 'சம்பவத்துக்காக’ காத்திருந்த அமெரிக்கா, 'இதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. சிரியா மீது போர் தொடுப் பது நிச்சயம்’ என்று வெளிப்படையாக அறிவித்து, அதற்கான ஆயத்தங்களையும் தொடங்கி விட்டது. மறுபுறம், 'சிரியா மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்கிறது ரஷ்யா. சிரியாவை முன்வைத்து மூன்றாம் உலகப்போருக்கான அறிகுறிகள் தென்படும் வேளையில், அந்த நாட்டை இன்னோர் ஆஃப்கானிஸ்தானாக மாற்றுவதே அமெரிக்காவின் எண்ணமாக இருக்கிறது. எண்ணெய் வளம் மிக்க சிரியா, பற்றி எரிவதன் காரணம்தான் என்ன?
 
மத்தியக் கிழக்கு நாடுகள் சூழ அமைந்திருக்கும் சிரியா, ஒரு மேற்காசிய நாடு. இதன் அதிபர் பஷர்-அல்-ஆசாத். 1971-ம் ஆண்டு முதல் இப்போது வரை இவரது குடும்பத்தினர்தான் அதிபர் பதவியை அலங்கரித்துவருகின்றனர். ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இவரது குடும்பத்தினர், இன்றுவரை அதைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில், பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலுக்குத் தோள்கொடுத்து அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்க, சிரியாவோ, 'இஸ்ரேல், எங்கள் எதிரி’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதேபோல அறிவித்த ஈரான் நாட்டுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இதனால் அரபுலகின் மற்ற நாடுகளில் இருந்து சிரியா தனித்து நிற்கிறது.


இது ஒருபுறம் இருக்க, உள்நாட்டில் அதிபர் ஆசாத்தின் 42 ஆண்டுகால ஆட்சி, சர்வாதி காரமாக மாறிவிட்டதால் மக்களிடையே வெறுப்பு உணர்வு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில்தான் 2011, ஜூலை மாதத்தில் 'சிரிய சுதந்திரப் படை’ என்ற குழு உருவானது. இவர்கள் அரசை எதிர்த்து ஆயுத வழியில் போராடினார்கள். சவுதி அரேபியா, கத்தார், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவும் இந்தச் சுதந்திரப் படைக்கு ஆயுத மற்றும் நிதி உதவி அளித்தனர். சிரியாவில் போராடுவது முழுக்க முழுக்க மக்கள் இல்லை. அவர்களைவிட அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவால் பயிற்று விக்கப்பட்ட ஆயுததாரிகளும் மத தீவிரவாத இயக்கங்களுமே ஊடுருவியுள்ளன. இந்தப் போராட்டக்காரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஜோர்டானில் ஒரு முகாமையே அமைத்துள்ளது அமெரிக்கா. இந்த பலத்தின் காரணமாகவே கடந்த மூன்றே ஆண்டுகளில் சிரியாவின் பல பகுதிகளை புரட்சிப்படை கைப்பற்றியது.

தனது செல்வாக்கு எல்லை மிக வேகமாகச் சுருங்கிவருவதைக் கண்ட அதிபர் ஆசாத், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டார். 'ரசாயன ஆயுதங்களால் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதலில், மொத்தம் 1,429 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 600 பேர் குழந்தைகள்’ என்கிறது அமெரிக்கா. இது தொடர்பாக வெளியிடப்பட்ட காட்சிகள், மனதைப் பதை பதைக்க வைக்கின்றன. ஆனால் அதிபர் ஆசாத், 'நாங்கள் அப்படி ஒரு ரசாயன தாக்குதலை நடத்தவே இல்லை’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். இதைத் தொடர்ந்தே சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான வேலைகளை அமெரிக்கா தொடங்கிவிட்டது. ஃப்ரான்ஸ் இதற்கு ஆதரவாக உள்ளது. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நேரடியாகக் களம் இறங்கியுள்ளது. இதனாலேயே இன்னோர் உலகப்போருக்கான அபாயம் தென்படுகிறது.


சிரியாவில் புரட்சிப்படை மட்டுமே கலகத்தில் ஈடுபடவில்லை. அங்கு 'ஜபாத் அல் நுஸ்ரா’ என்ற இஸ்லாமிய மத தீவிரவாத அமைப்பும் அரசுக்கு எதிரான தாக்குதலில் முக்கியமான பங்காற்றுகிறது. அல்கொய்தா பாணியிலான இந்த அமைப்புக்கு, அமெரிக்கா ஆசி உண்டு என்பது ஒரு முக்கியமான செய்தி.

சரி, அமெரிக்கா ஏன் சிரிய அரசை வீழ்த்த நினைக்கிறது? ஏனெனில், மத்தியக் கிழக்கில் தனது விசுவாசியாக இருக்கும் இஸ்ரேலுக்கு சிரியா எதிரி. அத்துடன் அமெரிக்காவின் நீண்டநாள் எதிரியான ஈரானுடன், சிரியா நட்பாக இருக்கிறது. இந்த இரண்டு பேரையும் ஒழித்துக்கட்டுவதன் மூலம் மத்தியக் கிழக்கை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். முதலில் சிரியாவில் இருக்கும் சர்வாதிகாரத் தலைமையை அகற்றி, அங்கு ஒரு பொம்மை அரசைக் கொண்டுவந்துவிட்டால் அது நடந்துவிடும். அதன்பிறகு ஈரான் தனித்துவிடப்படும்; அதை வீழ்த்துவதும் எளிது. இதுவே அமெரிக்காவின் திட்டம் என்பது, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து. அமெரிக்காவில் இந்தத் திட்டத்துக்கு சிரியாவின் சர்வாதிகாரத் தலைமையும், அதன் மனிதாபிமானமற்றத் தாக்குதல்களும் ஓர் அடிப்படையை உருவாக்கித் தருகின்றன.

சிரியாவை முன்வைத்து உலகின் பல நாடுகளில் இருந்து உதிர்க்கப்படும் சவடால்களும் எச்சரிக்கைகளும், எஞ்சியிருக்கும் சிரிய மக்களை உயிரோடு கொன்றுகொண்டிருக்கின்றன! 

அயோடின் - ஜி.கே. வெங்கடேஷ் மன்னார். M.G. Venkatesh Mannar, O.C.

Photo of Venkatesh Mannar
M.G. Venkatesh Mannar


அயோடின் என்பது ஒரு முக்கிய நுண் உயிர்ச்சத்து. குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு அதுவும் மூளை வளர்ச்சிக்கு உதவும் நுண் உயிர்ச்சத்து. 80களில் இந்த ஊட்டச்சத்தின் குறைபாட்டினால் உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது உணரப்பட்டது. இன்று அயோடின் உயிர்ச்சத்தின் அவசியத்தைப் புரியவைத்து அதை உலகின் பலநாடுகளில் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்தவர்களில் முக்கியமானவர் ஜி.கே. வெங்கடேஷ் மன்னார்.

இன்று உலகெங்கும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டிருக்கும் ‘அயோடைஸ்டு சால்ட்’ என்ற உயிர்ச்சத்து சேர்க்கப்பட்ட உப்பை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மிக மலிவான, தினமும் உணவில் பயன்படுத்தப்படும் உப்பில் இந்த நுண் உயிர்ச்சத்தை சேர்ப்பதின் மூலம் எளிதாக, விரைவாக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மிகக் கடினமான அந்தத் தயாரிப்பு முறைகளை தம் ஆராய்ச்சிகள் மூலம் எளிதாக்கினார் வெங்கடேஷ். இன்று இந்த வகை உப்பை பயன்படுத்துவதன்மூலம் உலகம் முழுவதும் 2000 கோடி குழந்தைகள் நுண் உயிர்ச்சத்துக் குறைபாட்டின் விளைவுகளில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.  

ஜி.கே. வெங்கடேஷ் மன்னார் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் இஞ்ஜினீயரிங் படித்த பின் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தவர். 1970களில் இந்தியா திரும்பி, தம்முடைய குடும்பத் தொழிலான உப்பு உற்பத்தியை நவீனமாக்கி டேபிள் சால்ட் தயாரிப்பு முறையை மலிவு விலையில் அறிமுகப்படுத்தினார். அந்தத் தயாரிப்பு முறையைப் பல உப்பு தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்ற உதவினார். 70களின் இறுதியில் உப்பை எப்படி உயிர்ச்சத்துள்ள பொருளாக்கி அதை எளிதில் எல்லோருக்கும் கிடைக்கச் செய்வது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஐக்கிய நாட்டுச் சபையின் ஓர் அங்கமான யுனிசெஃப் (UNICEF) உலகின் சில நிறுவனங்களுடன் இணைந்து இதைச் செய்ய முயற்சிப்பதை அறிந்து அவர்களுடன் இணைந்து தம் முயற்சியைத் தொடர்ந்தார். சில ஆண்டுகளிலேயே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் பல சர்வதேச நிறுவனங்களின் ஆலோசகரானார். 1993ல் யுனிசெஃப்பின் குழு தலைவர்களில் ஒருவராகி நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உப்பில் நுண்ணுயிர்ச் சத்து சேர்க்கப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அரசு அதிகாரிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்தார். இதன் விளைவாகத்தான் இன்று பல நாடுகளில் உப்பு தயாரிப்பு முறைகளில் அயோடின் சேர்ப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. 

கனடா நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் கனடா’ என்ற விருது இந்த ஆண்டு ஊட்டச்சத்துக் குறைபாடுகளை ஒழிக்கச் செய்யும் சிறந்த பணிக்காக ஜி.கே.வெங்கடேஷுக்கு வழங்கப்படுகிறது. 

உப்பை நுண் உயிர்ச்சத்துடன் உலகெங்கும் வழங்க வழி செய்த இந்த மனிதரை உப்பு உள்ளவரை உலகம் மறக்காது!

Wednesday, September 11, 2013

விளக்கு வைக்கும் நேரத்தில் (சாயங்காலத்தில்) தூங்கக் கூடாது என்பது ஏன்?

பகலும் இரவும் ஒன்றுசேரும் நேரத்துக்கு சந்த்யா காலம் (சேரும் நேரம்) எனப் பெயர். இரவு முடிந்து பகல் ஆரம்பமாகும் அதிகாலை நேரம் மற்றும் பகல் முடிந்து இரவு ஆரம்பமாகும் சாயங்கால நேரம் என்பதாக ஒரு நாளில் இரண்டு முறை சந்த்யா காலம் சம்பவிக்கிறது.

இந்த வேளையில், சூரிய மண்டலத்தில் இருக்கும் காயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளின் கூட்டு ஸ்வரூபமான சந்த்யா என்னும் தேவி (ஆகாசத்தில்) காட்சி தருகிறாள். அந்த சமயத்தில், இந்த தேவியை உபாசிக்க (வழிபட) வேண்டும். 

சூரிய ஒளியில் வழிபடும் இது - அருவ வழிபாடுமில்லை; உருவ வழிபாடுமில்லை. இதற்கு வடமொழியில் ‘சந்த்யோபாஸனை’ எனப் பெயர். ஆண், பெண் என (ஜாதிமத பேதமின்றி) அனைவரும் இந்த உபாசனையைச் செய்து பலனடையலாம். ஆகவே தான், வேதம் கற்ற அந்தணர்கள் இந்த காலங்களில் சந்த்யாவந்தனம் என்னும் கர்மாவைச் செய்து சூரியனுக்கு அர்க்யம் தந்து, காயத்ரீ மந்திரத்தை ஜபம் செய்கிறார்கள். 

மற்றவர்களும் இந்தக் காலத்தில் சூரியனை நோக்கி பிரார்த்தனை செய்து இரு கைகளிலும் சுத்தமான ஜலம் எடுத்து சூரியனை நோக்கி அர்க்யம் விட வேண்டும். இதனால் சந்த்யா தேவியின் அருள் கிட்டும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், மனச்சாந்தி முதலானவை கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

இவ்விதம் வழிபடாவிட்டாலும் பரவாயில்லை. அந்த தெய்வத்தை அவமதிக்கும் செயலையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதாவது சந்த்யா காலங்களில் - சாப்பிடுதல், காபி, டீ போன்ற பானம் அருந்துதல், படுக்கையில் படுத்துக் கொண்டிருத்தல், புதிய பாடம் கற்றுக் கொள்ளுதல், தூங்குதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இந்த வேளையில் காட்சிதரும் தெய்வத்தை வழிபடாமல் தூங்கிக் கொண்டிருந்தால், அந்த தெய்வத்தை நாம் அவமதித்ததாக ஆகும். தெய்வ அவமதிப்பு, நம்மிடமுள்ள செல்வத்தை அபகரித்துவிடும்.

சூர்யோதயே ச அச்தமயே ச ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம்
‘சூரிய உதயம், சூரிய அஸ்தமன காலங்களில் தூங்குபவர் யாராக இருந்தாலும், ஏன்! தேவேந்திரனாக இருந்தாலும் கூட, அந்த நபரை விட்டு (செல்வத்தைத் தரும்) மகாலட்சுமி விலகிச் சென்றுவிடுவாள்’
என்கிறது சாஸ்திரம். நோயுற்றவர்கள் எனில், படுக்கையில் சாய்வான முறையில் அமர்ந்து கொள்ளலாம்.

அரசியலுக்கு வருவீங்களாண்ணா?

சினிமாவைப் பார்த்து சினம் கொள்வது 'தியாகபூமி’ காலத்துப் பழசு.

கல்கி கதை-வசனத்தில் உருவான 'தியாகபூமி’ வெளிவந்தபோது எதிர்ப்பு இல்லை. ஐந்து ஆண்டுகள் கழித்து (1944-ல்) மீண்டும் திரையிடப்பட்டபோது அன்றைய சென்னைக் காவல் துறை ஆணையர் 'படத்தை வெளியிடக் கூடாது’ என்று தடுத்தார். படத்தில் காங்கிரஸ் தொண்டர்களைக் காட்டுகிறார்கள்! என்று காரணம் சொன்னார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி, தனக்கு எதிரான படம் என்று 'தியாகபூமி’யை எதிர்த்தது. காட்சிகள் மாறி... காங்கிரஸ் அரசாங்கமே வந்த பின்னால், திராவிடர் இயக்கச் சார்ப்புத் திரைப்படங்கள் இதேபோன்ற சிக்கலைச் சந்தித்தன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்... அதே அஸ்திரத்தை அனைத்துக் கதாநாயகர்கள் மீதும் ஏவின.

அன்று 'தியாகபூமி’ படத்தைத் தடை செய்து விட்டார்கள் என்று தெரிந்ததும், இயக்குநர் கே.சுப்ரமணியம், 'கெயிட்டி’ தியேட்டருக்கு வந்தார். தியேட்டர் கதவுகளைத் திறந்துவிட்டார். 'எல்லோரும் இலவசமாகப் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனதாகச் செய்திகள் உண்டு. கே.சுப்ரமணியம் செய்தது மாதிரி இயக்குநர் விஜய்யோ, தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயினோ செய்ய முடியாது. மக்களுக் காக படத்தில் பாடுபடும் நடிகர் விஜயே இதற்குச் சம்மதிக்க மாட்டார். இது கோடிக்கணக்கான பணமும் அரசியல் அபிலாஷைகளும் கலந்த வர்த்தகம். இது ஜெயலலிதாவுக்கும் தெரியும் என்பதுதான் 'தலைவா’ தலைவலிக்குக் காரணம்!


இன்று, 'ஒரு படைப்பாளியாகப் பரிதவிக்கிறேன்’ என்று புலம்பும் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில்தான், 'காவலன்’ படத்துக்குச் சிக்கல் வந்து விஜய் புலம்ப ஆரம்பித்தார். அது, ஜெயலலிதாவை நோக்கி விஜயை நகர்த்திச் சென்றது. படம் ரிலீஸா னால் போதும் என்று நினைக்காமல், கருணாநிதி ஆட்சிக்கு எதிரான அஸ்திரங்களை அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடுத்தார். மகனை, ஊர் ஊராகப் பிரசாரத்துக்குக் கொண்டுபோய், இன்னொரு எம்.ஜி.ஆர். ஆக்க நினைத்தார். தன்னால் வளர்க்கப்பட்ட விஜயகாந்த், ஒரு கட்சித் தலைவராகும்போது, தனக்குப் பிறந்த மகன் தலைவனாக மாட்டானா என்று எஸ்.ஏ.சி. துடித்தார். ஆட்சி மாறியது. அம்மா வந்தார். இந்த வெற்றியில் பங்குபோட வந்தவர்களை ஒவ்வொருவராக வெட்டிவிட்டார். விஜயகாந்தும் விஜய்யும் அரசியல் கற்றுக்கொண்ட இடம் அதுதான். ராஜீவ் படுகொலையின் அனுதாப அலையில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகுகூட 'இதற்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று மதுரையில் வைத்துச் சொன்னவர் ஜெயலலிதா என்பதை விஜயகாந்த், விஜய் இருவருமே உணரவில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் தன்னுடைய தோளுக்கு மேல் குரோட்டன்கள் வளருவதை விரும்பாத தோட்டக்காரர்கள்.

'விஸ்வரூபம்’ படத்துக்கு வந்த எதிர்ப்பு வேறு; 'தலைவா’வுக்கு வந்த எதிர்ப்பு வேறு. 'விஸ்வரூபம்’ குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது என்று சொல்லி, அந்தச் சமூகத்தினர் 'குறிப்பிட்ட காட்சிகள், வசனங்களை நீக்கியே ஆக வேண்டும்’ என்று நின்றார்கள். தன்னுடைய சாதுர்யத்தின் மூலமாக கமல் இதனை வென்றார். ஆனால், 'தலைவா’ படத்தின் காட்சிகளில் அப்படி எந்தச் சிக்கலும் இல்லை.

'நம்ம ஊர் அரசியல்ல சேர எல்லாத் தகுதியும் உனக்கு இருக்கு’ - என்று சந்தானம் சொல்வதும்... 'தலைவன்கிறது நாம தேடிப் போற விஷயம் இல்லை. நம்மைத் தேடி வர்ற விஷயம். உன்னை அவங்களுக்குத் தலைவன் ஆகக் கூப்பிடுறாங்க’ - என்று ஒய்.ஜி.மகேந்திரா சொல்வதும்... மட்டும்தான் 'தலைவா’ படத்தின் அரசியல் வசனங்கள். இந்த வசனங்களை உச்சரிக்கும் இருவருமே காமெடியன்கள்.

நீதான் அடுத்த முதலமைச்சர். உனக்குத்தான் ஆளத் தகுதி இருக்கு. உன்னால்தான் இந்த ஆட்சியே அமைந்தது. இன்றைக்கு இருப்பவங்களுக்கு ஆளவே தெரியலே’ என்பது மாதிரியான சீரியஸான விமர்சனங்களோ, திமிர் பிடித்தப் பெண்ணை ரஜினி விமர்சித்ததை, ஜெயலலிதாவுக்குச் சொன்னதாக மாற்றி உள்நோக்கம் கற்பித்ததுபோலவோ இந்தப் படத்தில் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட காட்சிகள் வைப்பதற்கான துணிச்சல் விஜய்யிடம் இல்லை என்பதே உண்மை. நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஒன்றைக்கூட தடையை மீறி நடத்த முன்வராத 'தலைவா’வில் வேறு அரசியல் இல்லை.

'தலைவா ரிலீஸ் ஆகும் எல்லாத் தியேட்டர்களுக்கும் என்னுடைய ரசிகர்கள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். குண்டுகளை அவர்கள் தாக்கித் தகர்ப்பார்கள்’ என்று விஜய் அறிவித்திருந்தால், அதுதான் அரசியலாகி இருக்கும். அவர் தலைவராக முதல் அடி எடுத்துவைத்திருக்கக்கூடும்!

இப்போதைய பிரச்னை, விஜயின் அரசியல் தகுதி பற்றி அல்ல; இந்தத் தடைகளுக்குப் பின்னால் இருக்கும் தமிழக போலீஸின் தகுதியின்மை பற்றி!
'படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு வைப்போம்’ என்று சொன்ன அமைப்பு எது, அமைப்பாளர்கள் யார், அவர்கள் இதற்கு முன்னால் இத்தகையக் காரியங்களைச் செய்துள்ளார்களா, அவர்கள் எங்கே இயங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை இது வரை (ஆகஸ்ட் 19) தமிழகக் காவல் துறை கண்டுபிடிக்கவில்லை. 'வெடிகுண்டு மிரட்டல் வந்தது’ என்பதற்காக, தியேட்டர்காரர்கள் பயப்படலாம்; காவல் துறையுமா பயப்படுவது?

தமிழ்நாட்டில் உள்ள 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும் சக்தி உள்ள அமைப்பாக அது இருக்குமானால், இந்தியாவிலேயே அதுதான் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாக இருக்க முடியும். வெளி நாட்டைத் தளமாகக்கொண்டு செயல்படும் அமைப்புகள்கூட மும்பை மற்றும் கோவையில் வேறு வேறு சம்பவங்களாகத்தான் வன்முறையில் ஈடுபட்டன. இந்த அமைப்புக்கு தமிழ்நாட்டின் அத்தனை நகரங்களிலும் வெடிகுண்டு வைக்கும் பலம் இருக்கிறதென்றால், அந்தக் கடிதத்தைப் பார்த்து நடிகர் விஜயைவிட தமிழ்நாடு போலீஸுக்குத் தான் அதிக பயம் வந்திருக்க வேண்டும். அப்படி மிரட்டல் விடுத்தவர்களோடு தொடர்புடையதாக சந்தேகப்படும் எவரையும் இதுவரை விசாரணைக்குக்கூட போலீஸ் அழைத்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஓர் அநாமத்து கடிதத்துக்காக ஒரு படத்தை வெளியிட முடியாது என்றால், இதே போன்ற மிரட்டல் பள்ளிக்கூடங்களுக்கும் கோயில்களுக்கும் வந்தால் மொத்தமாகப் பூட்டிவிடுவார்களா என்ன? வெடிகுண்டு மிரட்டல் காரணமாகப் பயப்படும் திரையரங்க உரிமையாளர்களை அழைத்துப் பேசி தைரியம் கொடுத்திருக்க வேண்டியது, தமிழ்நாடு காவல் துறையின் கடமை. ஆனால், இவர்கள் பயந்து பம்மியதுதான் அரசியல் சந்தேகங்களை அதிகமாகக் கிளப்பியது.முந்தைய தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்தது. அதற்குக் காரணமானவர்கள் இன்றுவரை கைதாகவில்லை. அதன் விசாரணை அதிகாரி இப்போது எங்கே, என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பதே தெரியவில்லை.மதுரைக்கு ஸ்டாலின் வந்து இறங்கிய ஒரு நாள், அவர் மீது யாரோ கத்தி வீசிச் சென்றதாகச் சொல்லப்பட்டது. அதன் பிறகுதான் ஸ்டாலினுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. அந்தக் கத்திக்காரன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வரிசையில் போலீஸ், பதக்கங்களில் ஒன்றாக இந்தத் 'தலைவா’ மிரட்டலையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.

சட்டசபைக்கும் வராமல், மக்களுக்கான எந்தப் போராட்டமும் நடத்தாமல்... 'தான் உண்டு; பழைய பாட்டு உண்டு’ என்று இருந்த விஜயகாந்த் மீது, தினமும் ஒரு வழக்குப் போட்டு ஊர் ஊராகப் போகவைத்து... அவரது தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டி வருவதைப்போல, இப்போது விஜய்க்கும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது. 'தலைவா’ பிரச்னைக்குப் பிறகு, இனி அவர் தைரியமாக அரசியல் பேசலாம்; சவால் விடலாம்; சண்டைக்கு இழுக்கலாம். 'அவருக்கு இவ்வளவு டார்ச்சர் செய்தால், கட்சி ஆரம்பிக்காமல் என்ன செய்வார்?’ என்று அவரை பிடிக்காதவர்கள்கூட காரணம் கற்பிப்பார்கள். படப்பிடிப்பு தொடங்கும்போது இல்லாத லாஜிக், ரிலீஸ் ஆகும்போது விஜய்க்குக் கிடைத்துவிட்டது.

'வாங்கண்ணா... வணக்கங்கண்ணா...

வரப்போறீங்களாண்ணா?’

ப.திருமாவேலன்

மெகா பிக்சல் - ஸ்மார்ட்போன் - Mega pixel Smart Phones



சிக்காகோ சன் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் இருபத்தெட்டு முழுநேர போட்டோகிராஃபர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இனி முழுநேர போட்டோகிராஃபர்களுக்குத் தேவையில்லை, ஐபோன் போட்டோகிராஃபர்களே போதும், அவர்கள் போட்டோக்களோடு வீடியோக்களும் எடுத்துத் தருவார்கள் என்று முடிவுசெய்துவிட்டது அந்நிறுவனம். ஸ்மார்ட்போன்களும் ஐபோன்களும் வந்தபின்னர் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்று. ஸ்மார்ட்போன் கேமராக்களின் அபாரத் தெளிவு, துல்லியம், ஒளி...என்று ஏராளமான காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன்களுக்கு முன்னால், கேமராவின் திறனைக் கூட்டுவதில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதன்முதலில், 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாம்சங் நிறுவனம் போனோடு சேர்ந்த கேமராவை அறிமுகப்படுத்தியது. 0.35 மெகாபிக்சல் தரம் கொண்ட அந்த கேமரா போனில், போன் தனியாகவும் கேமரா தனியாகவும் இருந்தது. ஆனால் இரண்டு ஒரே பெட்டியில் அடக்கப்பட்டிருந்தது, அவ்வளவுதான். ஆனால், 2002 நவம்பரில் அமெரிக்காவில் கேமரா போன் ஜுரம் ஆரம்பித்தது. சான்யோ எஸ்சிபி - 5300 என்ற மாடல் போன் அந்தக் காலத்திலேயே நானூறு டாலர் விலை கொண்டது. 0.3 மெகாபிக்சல்தான் அதன் கேமரா தரம். 2003 கடைசிக்குள் கேமரா போன் ஜுரம் அதிகமாக, உலகமெங்கும் கிட்டத்தட்ட எட்டு கோடி கேமரா போன்கள் விற்றுத்தீர்ந்தன.

அதன்பிறகு ஒவ்வொரு பெரிய நிறுவனமும் தங்கள் செல்போனில் கேமராவின் பிக்சல் அளவை உயர்த்திக்கொண்டே வந்தன. முதலில் மூன்று மெகாபிக்சல், அப்புறம் வந்த ஐந்து மெகாபிக்சல் கேமராக்கள் ஆச்சர்யத்தோடு பார்க்கப்பட்டன. நோக்கியா என்95 தான் இந்த வரிசையில் பெரிய கேமராவோடு வந்தது. அதன் பிறகு சட்டென ஸ்மார்ட்போன் அலை அடிக்க ஆரம்பித்தது. 2008ல் சாம்சங் ஐ8510 முதல் எட்டு மெகா பிக்சல் கேமராவோடு வர, அதே நிறுவனம் 2009ல் 12 மெகா பிக்சல் கொண்ட போனை வெளியிட்டது. 2010ல் சோனி எரிக்ஸன் 16 மெகா பிக்சலோடு கூடிய எஸ்006 போனை வெளியிட்டு அசத்தியது. ஸ்மார்ட் போன்கள் படையெடுப்பால், இந்தக் கேமரா போன் மோகம் கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது.

இது நடுவே ஹெச்.டி.சி.யும் எல்.ஜி. நிறுவனமும் 3டி போட்டோக்கள் எடுக்கும் கேமரா போன்களை 2011ல் வெளியிட்டன. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் போகவே, அமைதியாக 3டி கேமரா போன்கள் காணாமல் போயின. இதற்குள் ஐபோன்களில் இருக்கும் கேமராக்களின் மீது காதல் ஏற்பட்டுவிட்டது. சமீபத்தில் ஹெச்.டி.சி. நான்கு மெகாபிக்சல் கேமராவே போதும் என்று பேச ஆரம்பித்திருக்கிறது.ஆனால், நோக்கியாவோ இந்தப் போட்டியை விடுவதாக இல்லை. சோனி எஸ்பெரியா இசட் இன்னொரு பக்கம் 13 மெகா பிக்சல் கேமராவோடு வெளிவந்துவிட்டது. சாம்சங், 16 மெகாபிக்சல் கேமரா போனோடு வர, போட்டியை விடுமா நோக்கியா? நோக்கியா லூமியா 1020 என்ற அதன் சமீபத்திய மாடல், 41 மெகாபிக்சல் கேமராவோடு வந்திருக்கிறது. இது ஐபோன் 5 மாடல் எடுக்கும் போட்டோவோடு இன்னும் துல்லியமானது என்று சத்தியம் செய்கிறார்கள்.கேமரா போன்கள் வெறுமனே போட்டோ எடுப்பதற்கு மட்டும்தான் என்று நினைத்துவிட வேண்டாம். அதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் தான் ஆச்சர்யப்படுத்துகின்றன. பல ஸ்மார்ட் போன்களுக்கான கேமரா அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கடைகளில் பொருள்கள் வாங்கும்போது, பார்கோடுகளைப் படிக்க கேமரா போன் அப்ளிகேஷன் வந்திருக்கிறது. படங்களை எடுத்து அதை அப்படியே படித்து ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்க்கும் அப்ளிகேஷன்களும் வந்துவிட்டன. வங்கித் துறையில் கேமரா போன்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு சூப்பர். உங்கள் காசோலையை போன் கேமராவில் ஒளிப்படம் எடுத்து அதை அப்படியே வங்கிக்கணக்கில் சேர்க்க முடியுமாம். இதன் இன்னொரு தொடர்ச்சிதான், கட்டணங்களுக்கான பில்களைச் செலுத்துவதிலும் ஏற்பட்டிருக்கிறது.நீங்கள் செலுத்த வேண்டிய பில்லை அப்படியே போட்டோ பிடித்து, அதன் தகவல்களை உள்வாங்கிக் கொண்டு, நேரடியாக வங்கியில் இருந்து அதற்கு உண்டான தொகை உரிய நிறுவனத்துக்குக் கட்டிவிட முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் நேரே ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போய்தான் பில்லைக் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லாமல் போய்விட்டது. மொபைல் போன் கேமரா வளர்ச்சி இன்னும் தொடரும்.

இந்திய ரூபாய் மதிப்பு... சரிய வைத்த சக்திகள்!

கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.90 வரை குறைந்து, மத்திய அரசாங்கத்திற்கு மிகப் பெரும் கலக்கத்தை உருவாக்கியது. இன்னும் சில நாட்களில் ரூபாய் மதிப்பு 70-ஆக குறையும் என எல்லோரும் நடுங்கிய வேளையில், ரூபாய் மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருப்பது சற்று நிம்மதி அளிக்கும் லேட்டஸ்ட் தகவல்.இந்திய ரூபாய் மதிப்பு மட்டுமல்ல, உலக அளவில் பல நாடுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாணய மதிப்பு நடப்பாண்டில் 23 சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் 20.7 சதவிகிதம் வீழ்ச்சியுடன் இந்தியா உள்ளது. பிரேசில் 17.6 சதவிகிதம் குறைந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், சீனா மட்டும் 2 சதவிகிதம் முன்னேற்றத்துடன் ஏறுமுகத்தில் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.

இந்திய ரூபாய் மதிப்பு ஏன் இந்த அளவுக்கு சரிந்தது? அதற்கு என்னதான் காரணம்?

''ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததற்கு பல காரணங்கள். அதில் முக்கியமானது, அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதால், இந்தியாவில் முதலீடாகி இருந்த அமெரிக்க டாலர் மீண்டும் சொந்த நாட்டுக்கே சென்றது. இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயர்ந்தது.

 

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.24,000 கோடி!) முதலீடு இந்தியாவைவிட்டு வெளியேறி இருக்கிறது. இதிலும் குறிப்பாக, கடந்த புதன், வியாழக்கிழமைகளில் மட்டும் 400 மில்லியன் டாலர் (ரூ.2,400 கோடி) வெளியேறி இருக்கிறது. ரூபாயின் மதிப்பு சரிவினால் இந்திய பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.தங்கம், கச்சா எண்ணெய் போன்றவை அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததன் காரணமாகவும் டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகமாக இருப்பதினால் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 நாடுகளுடன் இந்தியாவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இதில் முதல் பத்து இடத்தில் சீனா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன.

ரூபாய் மதிப்பு குறைந்து வருவதற்கு நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்புதான் முக்கிய காரணம். இந்த பற்றாக்குறை அதிகரிக்க, அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதே என்று நினைத்த மத்திய அரசு, தங்கம் இறக்குமதி செய்ய பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, தங்க இறக்குமதி வரியை நடப்பு ஆண்டில் 2-லிருந்து 10 சதவிகிதமாக அதிகரித்தது. தங்க நாணய விற்பனைக்கும் தடை விதித்தது. அப்படியும் தங்க விற்பனைக் குறையவில்லை.  

 இந்த வருடம் 18 மின் திட்டங்களைத் தொடங்க ரூ.83,772 கோடி அனுமதி அளித்து மத்திய முதலீட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 1,83,000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மத்திய முதலீட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. நாட்டின் 9 உள்கட்டமைப்புத் திட்டங்களும் இதில் அடங்கும். இந்த 9 திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.92,514 கோடியாகும் என்று கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி செய்தியாளர்களிடம் சொன்னார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். புதிய முதலீடுகள் வருவதன் மூலம் இனி ரூபாய் மதிப்பு வலுவடை யும்.

மேலும், இந்திய பொருளாதாரத்தை சரிசெய்ய, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப் பின் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த மத்திய அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை நோக்கிப் போவதால் வேறு வழியின்றி அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. சமையல் கேஸ் விலையையும் இனி மாதந்தோறும் சிலிண்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இனி வெளிமார்க்கெட்டில் டாலர் வாங்கத் தேவையில்லை என்று சொல்லி இருக்கிறது மத்திய அரசாங்கம். குறிப்பிட்ட சில அரசு வங்கிகள் மூலம் டாலர் வாங்குவதால்  சந்தையில் டாலருக்கான தேவை அதிகரிப்பதை தடுக்க  முயற்சித்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

தவிர, மக்களிடம் இருக்கும் தங்கத்தை மீண்டும் வங்கிகளே வாங்க முடிவு செய்திருப்பதால் இனி தங்கம் இறக்குமதி ஆவது குறையும் என எதிர்பார்க்கலாம். மேலும், எம்.சி.எக்ஸ். கமாடிட்டி சந்தையில் தங்கத்திற்கான மார்ஜின் 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனாலும் தங்கம் அதிக அளவில் டிரேட் ஆவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



''கடந்த வாரம் ரூபாயின் மதிப்பு 68.90 ஆக சரிந்தாலும், இனி அந்த அளவுக்கு குறைவது கடினம். மத்திய அரசு ரூபாயின் மதிப்பை உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தங்கம், ஆயில் இறக்குமதி தவிர எலெக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதியும் அதிகமாக இருப்பதால், அந்த இறக்குமதியைக் குறைக்க, எலெக்ட்ரானிக் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளது.

ரூபாயின் மதிப்பு 66-க்கு மேல் இருக்கும் நிலையில், அடுத்த சப்போர்ட் லெவல் 61 ரூபாய்.  ரெசிஸ்டன்ஸ் லெவல் 68 ரூபாய்''

தங்கம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனையான தங்கம், இன்று மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்தது ஒருபக்கம் இருந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுவருவதால் நம் நாட்டில் தங்கத்தின் விலை இப்படி தாறுமாறாக உயர்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று 10 கிராம் தங்கம் 34,500 ரூபாய்க்கு புதிய உச்சத்தைத் தொட்டது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதியன்று 32,975 ரூபாய்க்கு வர்த்தகமானதே இதுவரையில் தங்கம் கண்ட உச்சபட்ச விலையாக இருந்தது. இப்போது அந்த விலையைத் தாண்டிச் சென்றுவிட்டதைப் பார்த்து குடும்பத் தலைவிகள் கவலையில் மூழ்கி இருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1,350 டாலர் என்கிற அளவிலேயே வர்த்தகமானது. அமெரிக்கப் பொருளாதாரம் சீர்பட ஆரம்பித்த தால் தங்கத்திற்கான மவுசு கொஞ்சம் குறைய ஆரம்பித்தது.

இப்போது சர்வதேச நிலைமை கொஞ்சம் மாறியதால் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கிறது.

 

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அமெரிக்கா, சிரியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதால் பாதுகாப்பு முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் முதலீட்டாளர்கள்.மேலும், இந்தியாவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 68.75 ரூபாய்க்கு ஆகஸ்ட் 28-ம் தேதி சரிந்தது. இவை அனைத்தும் தற்போது தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு காரணங்களாகும்.தங்கத்தின் விலை உயர்விற்கு காரணமான அதே காரணங்கள்தான் வெள்ளியின் விலைக்கும் காரணமாக அமையும். 10 கிராம் வெள்ளி 60,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது. சர்வதேச சிக்கல்களும், ரூபாயின் மதிப்பும் வில்லன்களாக  மாறி தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை ஏற்றிவிட்டது என்று சொல்வதே சரி!

சினிமாவுக்கு ஏன் வரிவிலக்கு?


தமிழ் சினிமாக்காரர்களுக்கு எந்த ஒரு விஷயம் குறித்தும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், அதை தைரியமாக வெளியில் சொல்வதற்குத் தயங்குகிறார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்ட் ‘தலைவா’ பட விவகாரம். ‘தலைவா’ படத்தின் காட்சிகளில் 400க்கும் அதிகமான ஆங்கில, ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன; ஹீரோ, சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறார்; படத்துக்கு சென்சார் போர்டும் யூ சர்டிஃபிகேட் கொடுத்திருந்தாலும், ‘அதிக அளவில் வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன,’ என்று காரணம் சொல்லி, படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க அரசு மறுத்துவிட்டது. இதற்கு முன்னால், உதயநிதி ஸ்டாலினின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படமும், அவர் தயாரித்த ‘ஏழாம் அறிவு’ படமும் வரி விலக்கு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதை மறக்க முடியாது. இத்தகைய சூழலில், ஒரு படத்துக்கு வரிவிலக்கு பெற்றே தீர வேண்டும் என்று கட்டாயமா என்ன? வரி விலக்கு பெறாமல் ரிலீஸ் செய்ய முடியாதா என்ன? வரிவிலக்கு பெறுவதால் யாருக்கு லாபம்? வரிவிலக்கு பெறுவதற்கான விதிமுறைகளைப் பின்பற்றுவதில் அரசியல் நுழைவது ஏன்? போன்ற கேள்விகள் ஒரு பக்கமும், சினிமாக்களுக்கு எதற்காக வரிவிலக்கு அளிக்க வேண்டும்? கேளிக்கை வரி மூலமாகக் கிடைக்கும் வருவாயை அரசாங்கம் எதற்காக இழக்க வேண்டும்? என்றும் கேள்விகள் எழுகின்றன. அவை அனைத்தையும் குறித்த கலக்கலான அலசல் இது: 

1980களில் தமிழ்நாடு முழுவதிலுமாக 2400 சினிமா தியேட்டர்கள் இருந்தன. அவற்றில் சுமார் 20 லட்சம் இருக்கைகள் இருந்தன. ஆனால் இன்று தியேட்டர்களின் எண்ணிக்கை எண்ணூறாகச் சரிந்து விட்டது. ஒரு தியேட்டரின் சராசரி இருக்கைகள் எண்ணிக்கையும் 400 ஆகிவிட்டது. அதாவது மொத்த இருக்கைகள் எண்ணிக்கை சுமார் மூணு லட்சத்து 20 ஆயிரம்தான். பெரிய ஹீரோக்களின், புதுப்பட ரிலீசை ஒட்டிய ஒரு சிலநாட்களில் மட்டுமே தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகின்றன.  பொதுவாக, நகர்ப்புறங்களில் சில தியேட்டர்களில் மட்டுமே சராசரியாக 50 முதல் 65 சதவிகிதம்வரை எல்லா நாட்களிலும் இருக்கைகள் நிறைகின்றன. மற்றபடி, தமிழ்நாட்டில் தியேட்டர்களில் சராசரியாக 25 சதவிகித இருக்கைகளே நிரம்புகின்றன என்று புள்ளி விவரங்கள் சோக கீதம் இசைக்கின்றன. போதாக்குறைக்கு தமிழ் சினிமாவை, திருட்டு வி.சி.டி. என்ற பிரம்ம ராட்சசன் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறான். எனவே, படம் ரிலீசாகி, எவ்வளவு சீக்கிரமாக அதிகபட்ச வசூலைப் பார்க்கலாம் என்று யோசிக்கும் சினிமாக்காரர்களின் நோக்கத்தையும் குறை சொல்ல முடியாது. எனவே, குறுகிய காலத்தில் அதிகபட்ச வசூலுக்கு அரசாங்கம் கொடுக்கும் வரிவிலக்கு கைகொடுக்கிறது என்பதால் சினிமாக்காரர்கள் வரி விலக்குக்காக அரசாங்கத்தின் வாசலைத் தட்டி விட்டுக் காத்திருக்க வேண்டி உள்ளது.தியேட்டர்களில் 10 சதவிகித இருக்கைகளுக்கு டிக்கெட் கட்டணம் பத்து ரூபாய்தான் எனவும், மீதி 90% இருக்கைகளுக்கு, உணவகம் கொண்ட தியேட்டர் வளாகங்களில் 120 ரூபாய் என்றும், மற்ற தியேட்டர்களில் அதிக பட்சக் கட்டணம் 95 ரூபாய் என்றும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணத்தில் அரசாங்கம் விதிக்கும் 30% கேளிக்கை வரியும் அடங்கும். படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்போது, இந்த டிக்கெட் கட்டணம் அப்படியே முழுசாக தியேட்டர்காரர், வினியோகஸ்தர் என முழுசாக சினிமாக்காரர்களுக்கே போய்ச் சேரும். இல்லையெனில், வரி போக, மீதிதான் அவர்கள் கைக்குக் கிடைக்கும். அதனால்தான், வரிவிலக்கு என்பது கணிசமான உபரி வருமானம் என்று அதை எப்படியும் பெற்றுவிட சினிமா உலகத்தினர் நினைக்கிறார்கள். கடந்த ஆட்சியின்போது தமிழில் சினிமாவுக்குப் பெயர் வைத்தால், வரி விலக்கு என்று கலைஞர் அறிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஜெயலலிதா, அதை மாற்றி, புதிய விதிமுறைகளை அறிவித்தார்.

அந்தக் காலத்தில் தேசப்பற்று ஊட்டும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு எடுக்கப்பட்ட சமூகப் படங்களுக்கு அரசாங்கம் கேளிக்கை வரியிலிருந்து விதிவிலக்கு அளித்து அதன்மூலம் அதிக அளவில் மக்கள் வந்து அந்தப் படங்களைப் பார்த்துப் பயன் பெற்றார்கள். ஆனால், இன்று வருகிற படங்களில் வியாபாரம்தானே நோக்கமாக இருக்கிறது? சமூகத்துக்கு நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லும் படங்களை எத்தனை பேர் எடுக்கிறார்கள்? அப்படி இருக்கும்போது, அரசாங்கம் எதற்காக சினிமாக்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான்  கேள்வி.

உயிர் காக்கும் மருந்துகள், உணவுப் பொருட்கள், இதர அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட முழுமையாக இங்கே வரி விலக்கு கிடையாது. அப்படி இருக்கும்போது, கோடிக்கணக்கான முதலீடு செய்து, லாப நோக்கத்தோடு எடுக்கப்படும் சினிமாக்களுக்கு எதற்கு வரி விலக்கு? பெட்ரோல் விலை உயரும்போது, அதன் பாதிப்பு மக்களைப் பாதிக்காமல் இருக்க, விற்பனை வரியைக் குறையுங்கள் என்ற ஆலோசனை, அரசாங்கத்தின் காதில் விழவில்லை; ஆனால், சினிமாவுக்கு வரிவிலக்கு கொடுத்து, அதன் மூலமாக ஆண்டு தோறும் கோடிக்கணக்கான வரிவசூலை அரசாங்கம் இழந்து கொண்டிருக்கிறது. இது நியாயமா? தி.மு.க. ஆனாலும் சரி, அ.தி.மு.க. ஆனாலும் சரி, சினிமாக்காரர்கள் என்றால் ரொம்பவே கரிசனம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு எதற்காக சிறப்புச் சலுகை காட்ட வேண்டும்? இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சினிமா தியேட்டர்களில் கேளிக்கை வரியின் மூலமாகக் கிடைக்கும் தொகை, முழுவதுமாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான் போய்ச் சேர வேண்டும். அரசாங்கத்தின் வரிவிலக்குக் கொள்கை காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசு ஈடு செய்வதும் இல்லை. எனவே, தமிழக அரசாங்கம் உடனடியாக இந்த வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்.

Last Test for sachin???

திடீரென்று நவம்பரில், மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான இரண்டு டெஸ்டுகள் ஏற்பாடாகி இருக்கின்றன. இதன்மூலம் தன் சொந்த மண்ணில், மும்பையில், 200வது டெஸ்டை ஆடவிருக்கிறார் சச்சின். இதோடு சச்சின் ஓய்வு பெற்றுவிடுவார் என்று யூகங்கள் பறக்கின்றன. அடுத்த ஒரு வருடத்துக்கு இந்திய அணி வெளிநாடுகளில் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதால், அதற்கு முன்பே சச்சின் ஓய்வு பெற்று விடுவதற்கு இது நல்ல தருணம். (வெளிநாடுகளில் ஆடும் போது பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்ற தோனி விரும்புவதில்லை.) 
 
சச்சினின் இறுதி டெஸ்டுகளை ஏன் சென்னையில் நடத்தக்கூடாது? சச்சினின் டெஸ்ட் வாழ்க்கையில் எப்படி மும்பை மிக முக்கியமான மைதானமோ, அதுபோல சென்னைச் சேப்பாக்கமும் அவர் மிகவும் விரும்பும் ஒரு மைதானம். சேப்பாக்கத்தில்தான் அதிக செஞ்சுரிகளை மட்டுமல்லாமல் மறக்கமுடியாத ஆட்டங்களையும் சச்சின் ஆடியிருக்கிறார். இந்தப் பெருமை வேறெந்த மைதானத்துக்கும் கிடையாது. தமக்கு மிகவும் பிடித்தது, சேப்பாக்கம்தான் என்று பல பேட்டிகளில் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். சச்சின் சென்னையில் ஆடிய 10 டெஸ்ட் மேட்சுகளில் 5 செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். அதுவும் முதல் நான்கு டெஸ்டுகளிலும், சச்சின்தான் மேன் ஆஃப் தி மேட்ச். அதனால் சச்சினின் கடைசி இரண்டு டெஸ்டுகள் சென்னை, மும்பையில் நடப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். என். ஸ்ரீனிவாசன், ஆவன செய்வீர்களா?

Saturday, September 7, 2013

Vanakkam Chennai Official Trailer Compressed


மதகஜ ராஜா படம் ரிலீசாவதில் சிக்கல்


தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மோதலால் மதகஜ ராஜா படம் நாளை ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷால் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் நடித்துள்ளனர். சுந்தர். சி இயக்கியுள்ளார். இதனை ஜெமினி பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரித்தது. படப்பிடிப்பு கடந்த ஜனவரியிலேயே முடிந்து விட்டது.

பொங்கல், தமிழ்புத் தாண்டு என எதிர்பார்த்தும் படம் ரிலீசாகவில்லை. நிதி நெருக்கடியால் தள்ளிப் போவதாக கூறப்பட்டது. இறுதியாக நாளை (6–ந்தேதி) ரிலீசாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நடந்தது.
இதற்கிடையே மதகஜ ராஜா படத்தை பெரும் தொகைக்கு விலைபேசி விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் வெளியிட வாங்கி விட்டார். நாளை வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான ஜெமினிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ரிலீஸ் செய்யக் கூடாது என்று விநியோகஸ்தர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாக்கியை செட்டில் செய்யாமல் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று கூறுகிறார்களாம். விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பு தரப்பினருக்கும் இரு தினங்களாக பேச்சு வார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. இன்றும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடக்கிறது.
குஷ்பு தனது டுவிட்டரில் மதகஜராஜா படம் ஒரு நாள் தாமதமாக நாளை மறுநாள் (7–ந்தேதி) ரிலீசாகும் என குறிப்பிட்டு உள்ளார். விஷாலுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பியுள்ளார்.
செப்.7-ம் தேதி பிரபல தயாரிப்பாளர் இராம.நாராயணன் இயக்கத்தில் உருவான ‘ஆர்யா- சூர்யா’ என்ற படமும் ரிலீஸ் ஆகிறது.

varutha padatha valibar sangam secrets



சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இப்படத்தில் இவருடன் சூரி, சத்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, அழகான கிராமத்துல நடக்கிற காமெடியான கதை இது. நான் போஸ் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட தலைவராக நடிக்கிறேன். இந்த சங்கத்தின் செயலாளராக சூரி நடித்திருக்கிறார்.
அந்த ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் நாங்கதான் முன்னால நிப்போம். பேனர், கொடின்னு ஏரியா முழுக்க எங்க ராஜ்யம்தான் கொடிகட்டி பறக்கும். இது பிடிக்காமல், எங்களுக்கு எதிராக முறுக்கிட்டு நிற்கிறார் சிவனாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜ். அதன்பிறகு எங்கள் இரண்டு அணிக்கும் நடக்கிற ஜாலியான மோதல்கள்தான் படத்தோட கதை.
சத்யராஜ் சாரை பார்த்ததும் முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவரோ ரொம்பவும் சகஜமாக பழகினார். ஒரு சீன்ல அவரை கலாய்க்கலாம்னு ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா’ என்று அவர் ஸ்டைல்ல சொன்னேன். அவர் ரொம்பவும் ரசிச்சார்.
ரொம்பவும் தெனாவட்டாக, கெத்தாக திரியுற என்னோட கதாபாத்திரமும், எனக்கு எதிராக இருக்கிற சத்யராஜ் சார் கதாபாத்திரமும் ரொம்பவும் பேசப்படும். இந்த படம் யாரையும் வருத்தப்பட வைக்காது. இடைவெளியே இல்லாம சிரிக்க வைக்கும் என்றார்