Thursday, March 20, 2014

ICC T20 WORLD CUP HIGHLITS

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் பல புதிய நட்சத்திரங்களையும் புதிய அனுபவங்களையும் தரக்கூடியவை. இந்தியாவைப் போல மற்றொரு கிரிக்கெட் தேசமான பங்களாதேஷில் நடக்கும் இந்தப் போட்டியில் வாண வேடிக்கைகளுக்கும் கோலாகலங்களுக்கும் நிச்சயம் பஞ்சமிருக்காது. 
 
சர்வதேச அணிகள் அவ்வளவாக டி20 ஆட்டங்களில் ஆர்வம் காட்டாத நிலையில் டி20 உலகக்கோப்பை மட்டும்தான் அதன் இருப்பை உறுதிப்படுத்தி வருகிறது. மிகவும் சந்தேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட முதல் போட்டியில் பெரிய நட்சத்திரங்கள் பலர் ஆடவில்லை. ஆனாலும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்தப் போட்டி நம்பமுடியாத வெற்றியைப் பெற்றது. தோனி கேப்டனாக கோப்பையை வென்றது, யுவ்ராஜ் அடித்த 6 சிக்ஸர்கள், இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டது என பல அற்புதமான தருணங்கள் கிடைத்தன. அதன்பிறகுதான் கிரிக்கெட் உலகம் டி20யின் அருமையைப் புரிந்துகொண்டது. முக்கியமாக பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். தொடங்க அந்த உலகக்கோப்பை வெற்றி முக்கியக் காரணமாக அமைந்தது. ஐ.பி.எல்.-ஐத் தொடர்ந்து பல டி20 லீக் போட்டிகள் உருவாகின. இதனால் டி20 ஆட்டங்களுக்கு மவுசு ஏற்பட்டன. ஆனால் நேர நெருக்கடியால் சர்வதேச அணிகளால் அதிக டி20 ஆட்டங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் டி20 உலகக் கோப்பைக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கிறது. ஐ.பி.எல்.-க்கு அடுத்து பரபரப்பான ஆட்டங்களை இதில்தான் காணமுடியும்.முதல் டி20 உலகக்கோப்பைப் போட்டியை இந்திய அணி வென்றது. 2009 போட்டியை பாகிஸ்தான் வென்றது. பிறகு 2010ல், இங்கிலாந்து சாம்பியன். (இங்கிலாந்தின் முதல் உலகக்கோப்பை வெற்றி). 2012ல் நடந்த உலகக்கோப்பையை மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது. மார்ச் 16 முதல் பங்களாதேஷ் டி20 உலகக்கோப்பை போட்டித் தொடங்கினாலும் ஆரம்பத்தில் தகுதிச் சுற்றுப் போட்டிகள்தான் நடைபெறும். இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் மார்ச் 21 லிருந்து தான் உலகக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிறது. இந்திய அணி ஆடும் க்ரூப் 2 பிரிவில் பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் அணி, ஆஸ்திரேலியா மற்றும் தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணி என 5 அணிகள் உள்ளன.
 
இந்தப் போட்டிக்காக பங்களாதேஷ் அரசாங்கமும் அதன் கிரிக்கெட் வாரியமும் கிட்டத்தட்ட ரூ. 240 கோடியைச் செலவழித்துள்ளன. மேலும் உலகக்கோப்பைக்காக தாக்கா நகரை நவீனப்படுத்த ரூ.150 கோடிக்கும் மேலாகச் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் தொண்ணூறு சதவிகித மேட்சுகளின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. (குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.39) ஆசியக் கோப்பையிலேயே பார்த்திருக்கலாம், ரசிகர்கள் எவ்வளவு உற்சாகமாக ஆட்டத்தைக் கண்டு ரசித்தார்கள்! கிரிக்கெட்டைக் கொண்டாட்ட வெளியாக மாற்றுவதில் பங்களாதேஷ் ரசிகர்களுக்கு ஈடு இணை இல்லை.  இந்திய அணிக்கு ஒரு பெரிய வெற்றி தேவையாக இருக்கிறது. கடந்த 4 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணிக்குச் சோதனையான காலம். தொட்டதெல்லாம் மண்ணாகிறது. ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குக் கூடத் தகுதி பெறமுடியவில்லை. போட்டி, பங்களாதேஷில் நடப்பதால் இந்திய அணிக்குச் சாதகமான சூழ்நிலை. நல்ல மாற்றங்கள் நிகழலாம். போன முறை இலங்கையில் நடந்த போட்டியில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே இந்திய அணி தோற்றது (அதனாலேயே அரை யிறுதிக்கு செல்லமுடியவில்லை). பாகிஸ்தான் அணி திடீரென்று நல்ல ஃபார்மில் உள்ளது. முக்கியமாக அஃப்ரிடி ரகளை செய்துகொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் வழக்கம்போல பலமாக உள்ளன. நடப்பு சாம்பியன் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மீண்டுமொருமுறை ஆச்சரியப்படுத்துமா என்று எல்லோரும் ஆவலாக உள்ளார்கள். டி20யில் வழக்கமாக நடக்கும் அதிர்ச்சிகளை இந்த முறை நியூசிலாந்தும் இலங்கையும் செய்ய வாய்ப்புள்ளதா என்று பார்க்க வேண்டும். இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் எதிர்பார்ப்பில்லாமல் போட்டிக்குள் நுழைகின்றன. இப்படி இன்னார்தான் ஜெயிப்பார் என்று உறுதியாகச் சொல்லமுடியாத ஒரு போட்டி என்பதால் அதுவே கூடுதல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

Car Maintenance

காசு கொடுத்து வாகனம் வாங்கிவிட்டோம். அதை முறையாகப் பராமரித்தால்தான் நம் கைக் காசு கரையாமல் இருக்கும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்தால், கூடுதலாகச் செலவு வைப்பதுடன், நடு ரோட்டில் நம்மைத் தவிக்க வைத்துவிடும். மேலும், சரிவரப் பராமரிக்கப்படாத வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, உயிருக்கும் பணத்துக்கும் வேட்டுவைக்கும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஆபத்து. வாகனப் பராமரிப்பு என்பது தினசரி அதற்கு நேரம் ஒதுக்கி, படாதபாடுபட்டுச் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. சில விஷயங்களை அன்றாடம் முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே போதும். செலவு மிச்சமாவதுடன், நமது வாகனம் மதிப்புமிக்கதாக இருக்கும்.

 

கார் பராமரிப்பு என்பது குழந்தையை வளர்ப்பதுபோல. பார்த்துப் பார்த்துச் செய்தால்தான் பரவசமாக இருக்கும். அதோடு, காரின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இந்தக் கையேட்டைப் முழுவதுமாகப் படிக்கும்போது, கார் பராமரிப்பின் அவசியத்தை நீங்களே உணர்வீர்கள்.
இன்ஜின் டயர் மைலேஜ் பிரேக்ஸ் சஸ்பென்ஷன் உள்ளே வெளியே
இதயம் சொல்வதைக் கேளுங்கள்! 

கார் பராமரிப்பின் முதல்படி, அது என்ன சொல்கிறது என்று பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பதுதான். கார் எப்படிப் பேசும் என்கிறீர்களா? பின்னால் வரக்கூடிய பல பிரச்னைகளை, கார் ஓடும்போது வரும் சத்தங்களை வைத்தே சொல்லிவிடலாம். காலையில், முதலில் காரை ஆன் செய்துவிட்டு, இன்ஜின் சத்தம் எப்படி இருக்கிறது என்று காது கொடுத்துக் கேளுங்கள். ஆரம்பத்தில் சில விநாடிகளுக்குக் குறிப்பிட்ட ஆர்பிஎம்களில் இருக்கும் இன்ஜின், தானாகவே இன்னும் கீழே இறங்கி ஐடிலிங் ஆர்பிஎம்மில் ஓடும். இப்படியே குறைந்தது 5 நிமிடங்களுக்கு ஐடிலிங்கில் ஓடவிடுங்கள். இப்போது இன்ஜின் சத்தம் தாறுமாறாக இருக்கிறதா எனக் கவனியுங்கள். ஏ.சி.யை இப்போது ஆன் செய்யக் கூடாது.


காலையில் முதன்முதலாக இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது இன்ஜினை 'ரெவ்’ செய்துகொண்டே இருக்க வேண்டும் என நிறைய பேர் நினைக்கிறார்கள். இது தேவை இல்லை. பெட்ரோல் காராக இருந்தாலும் சரி, டீசல் காராக இருந்தாலும் சரி, காலையில் காரை ஸ்டார்ட் செய்யும்போது, குறைந்தது 5 நிமிடங்களுக்காவது ஐடிலிங்கில் ஓடவிடுங்கள். முக்கியமாக, டர்போ சார்ஜர் இருக்கும் கார்களில் இது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இரவு முழுவதும் இன்ஜின் ஓடாமல் இருக்கும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக, இன்ஜினுக்குள் ஆயில் வழிந்து கீழிறங்கி இருக்கும். காரை ஸ்டார்ட் செய்தவுடன்தான் இந்த ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக இன்ஜின் முழுக்கப் பரவ ஆரம்பிக்கும். அதற்கு முன்பு, இன்ஜினை ரெவ் செய்தால், டர்போ சார்ஜர் பேரிங், இன்ஜின் ஹெட் போன்ற இடங்களில் ஆயில் சரியாகப் பரவாமல் இருக்கும். இதனால் ஏற்படும் உராய்வுகளில் அனைத்துமே பாதிக்கப்படும். டர்போ சார்ஜர் நீண்ட நாட்கள் உழைக்காது.

இன்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன், அதற்குச் சாதகமான வெப்ப நிலைக்கு (ஆப்டிமம் டெம்பரேச்சர்) வரும்வரை விரட்டாமல் காரை ஓட்டுங்கள். டர்போ சார்ஜர் இருக்கும் கார்களை ஆஃப் செய்யும்போது, சில நிமிடங்கள் ஐடிலிங்கில் ஓடவிட்டு பின்பு ஆஃப் செய்யுங்கள்.

இன்ஜின் ஆயில் என்பது, நம் உடலில் ஓடும் ரத்தம்போன்றது. இன்ஜினுக்குள் ஏற்படும் உராய்வுகள், வெப்பமடைதல் போன்றவற்றைக் குறைப்பதே இதன் வேலை. உடலின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், எப்படி ஹார்ட் அட்டாக் வருகிறதோ, அதேபோலத்தான் இன்ஜின் ஆயில் சீராகச் செல்லவில்லை என்றால், இன்ஜினுக்கும் 'அட்டாக்’ வந்து சீஸ் ஆகிவிடும்.

ஆனால், கார் வைத்திருக்கும் பெரும்பான்மையினர், இந்த இன்ஜின் ஆயில் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் கார் ஓட்டுவதைத் தவிர, கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம், இன்ஜின் ஆயிலைச் சோதனை செய்வது. உங்கள் கார் மேனுவலில் 'டிப்-ஸ்டிக்’ வைத்து ஆயில் அளவை எப்படிச் சோதிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஆயில் அளவைச் சோதிக்கும்போது, அதன் தரத்தின் மீது ஒரு கண்வைத்து வாருங்கள்.

ஆயிலை மாற்ற வேண்டுமா என்ற குழப்பம் பலருக்கு இப்போது இருக்கிறது. கார் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கி.மீ/சர்வீஸ் இடைவெளிகளில் இன்ஜின் ஆயில் மாற்றினாலே போதும்.

பெரும்பாலும் ஒவ்வொரு 10,000 கி.மீ-க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்றுவது நல்லது. சர்வீஸ் செய்யும்போதே பெரும்பாலான  சர்வீஸ் சென்டர்களில் ஆயிலை டாப்-அப் செய்துவிடுகிறார்கள்.

ஆயில் மாற்றும்போது வரும் இன்னொரு குழப்பம், வழக்கமான மினரல் ஆயிலைப் பயன்படுத்துவதா அல்லது சிந்தெடிக் ஆயிலை மாற்றுவதா என்பது. முதல் 20,000 கிமீ வரை சிந்தெடிக் ஆயில் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பின்பு, உங்கள் காருக்கு ஏற்ற சிந்தெடிக் ஆயிலைத் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். சிந்தெடிக் ஆயில் விலை அதிகம் என்றாலும், அதன் பயன்களும் அதிகம்.

ஸ்பார்க் ப்ளக்குகளை சர்வீஸ் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளிகளில் மாற்றிவிடுங்கள். ஃப்யூல் இன்ஜெக்டர்களை 'அல்ட்ராசானிக் க்ளீனிங்’ மூலம் சுத்தப்படுத்துவது மைலேஜையும் அதிகரிக்கும்.

இன்ஜின் திடீரென்று ஓவர்ஹீட் ஆனால் என்ன செய்வது? இந்தக் குழப்பம் நிறைய பேருக்கு உண்டு. ஓவர்ஹீட் ஆவதை காரின் டெம்பரேச்சர் மீட்டரை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அப்படி ஓவர்ஹீட் ஆனால், முதல் வேலையாக காரை பத்திரமாக சாலையோரம் நிறுத்துங்கள். ஏ.சியை மட்டும் ஆஃப் செய்துவிட்டு, காரின் இக்னீஷனை ஆன் மோடில் வையுங்கள். இதனால், காரின் கூலிங் ஃபேன் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும். கூலிங் ஃபேன் ஓடும் சத்தம் கேட்கவில்லை என்றால், ஒன்று ஃபேனின் ஃப்யூஸ் போயிருக்கும் அல்லது ஃபேன் ரிப்பேர் ஆகியிருக்கும். கூலிங் ஃபேன் இயங்காமல், காரைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் மெதுவாக இயக்கலாம். ஆனால், டிராஃபிக்கில் இயக்கினால், இன்ஜின் மிக வேகமாகச் சூடாகும்.

ஏ.சி.யை ஹீட்டரில் செட் செய்தால், அதற்கான வெப்பத்தை இன்ஜினில் இருந்துதான் உங்கள் கார் எடுத்துக்கொள்ளும். காரின் ஏ.சி-யை ஃப்ரெஷ் ஏர் மோடில் வைத்துவிட்டு, ஏ.சி-யை அதிகபட்ச வெப்பநிலைக்கு செட் செய்யுங்கள். இப்போது ஏ.சி-யை ஆன் செய்யாமல், ப்ளோயரை மட்டும் ஆன் செய்யுங்கள். வென்ட்டுகளில் இருந்து சூடான காற்று வரும் என்பதால், எல்லா ஜன்னல்களையும் கீழிறக்கி விடுங்கள். இதன் மூலம் இன்ஜினின் வெப்பத்தை ஓரளவு குறைக்க முடியும்.

ரேடியேட்டரைச் சோதனை செய்ய வேண்டும் என்றால், காரை நிறுத்திய பின்பு, குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ரேடியேட்டர் கேப்பைத் திறக்காதீர்கள். இந்த நேரத்தில் அருகில் யாராவது மெக்கானிக் இருக்கிறார்களா எனத் தேடிப் பார்க்கலாம். கூலன்ட் டாப்-அப்தான் என்றால், மெக்கானிக் மற்றும் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல கவனமாக டாப்-அப் செய்யலாம். இதெல்லாம் சின்னப் பிரச்னைகள். ரேடியேட்டர் லீக் ஆனால், உடனடியாக காரை சர்வீஸ் சென்டருக்கு டோ செய்ய வேண்டும். பெரிய அளவில் லீக் இல்லாமல் இருந்தால், எம்-சீலை லீக் ஆகும் இடத்தில் ஒட்டிவிட்டு, காரை நிதானமாக சர்வீஸ் சென்டருக்கு ஓட்டிச் செல்லுங்கள்.

இன்ஜின் ஓவர்ஹீட் ஆவதற்கு மேலே கூறப்பட்டுள்ளது போன்ற செல்ஃப் ரிப்பேர்களை செய்ய யோசனையாகவோ, பயமாகவோ இருந்தால், சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படலாம்.

டயர்... உயிர்!

டயர் பராமரிப்பு பற்றிய விழிப்புஉணர்வு, இப்போது அதிகமாகவே இருக்கிறது. வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸிங், டயர் ரொட்டேஷன் போன்ற அம்சங்களை இப்போது பலரும் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கின்றனர். திறமை வாய்ந்த ஒரு டயர் எக்ஸ்பெர்ட்டால், ஒரு காரின் டயரைப் பார்த்தே அந்த காரின் சஸ்பென்ஷன் சிஸ்டம் எப்படி இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்.


மோசமான வீல் அலைன்மென்ட்/பேலன்ஸிங், முதலில் காரின் சஸ்பென்ஷனையும் ஸ்டீயரிங்கையும் பதம் பார்க்கும். ஸ்டீயரிங்கை நேராக வைத்தாலும் கார் தொடர்ந்து நேர்கோட்டில் செல்லாமல், இடது அல்லது வலது பக்கம் இழுத்துக்கொண்டு போனால், அலைன்மென்ட்டில் பிரச்னை என்று அர்த்தம்.

வ்வளவு வேகமாக இழுத்துக்கொண்டு போகிறதோ, அவ்வளவு மோசமாக அலைன்மென்ட் இருக்கிறது என்று பொருள். உங்கள் காரில் இப்படி இருந்தால், மேனுவலில் இருக்கும் டோ, கேம்பர், காஸ்டர் வால்யூக்களுக்கு ஏற்றபடி முதலில் வீல் அலைன்மென்ட் செய்துவிடுங்கள்.

இரண்டாவது, வீல் பேலன்ஸிங். எந்த ஒரு காரின் வீலுமே 100 சதவிகிதம் சரியான பேலன்ஸிங் இருக்காது. வீல் பேலன்ஸிங் செய்த பின்பு, சாலையில் ஓடத் துவங்கிய முதல் விநாடியில் இருந்தே, பேலன்ஸ் மாற ஆரம்பித்துவிடும். அதனால்தான், அடிக்கடி வீல் பேலன்ஸிங் செய்ய வேண்டும். காரின் வீல் பேலன்ஸ் செய்தே ஆக வேண்டும் என்பதற்கான அறிகுறி, சீரான டயர் உராய்தல் இல்லாததும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு டயரில் இருந்து அதிர்வுகள் எழுவதும்தான். இது தொடர்ந்தால், வீல் பேரிங்கை பாதிக்கும். அதனால், அலைன்மென்ட் செய்யும்போதே, வீல் பேலன்ஸிங் செய்து விடுங்கள்.

மூன்றாவது, டயர் ரொட்டேஷன். காரின் 5 டயர்களும் (ஸ்டெப்னி சேர்த்து) சமமான அளவில் தேய்மானம் அடைய வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது. ஃப்ரன்ட் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் 4-வீல் டிரைவ் கார்களுக்கு ஏற்ப ரொட்«டஷன் முறை மாறுபடும்.


காரில் புது டயர்களைப் பொருத்தினால், குறைந்தது 500 கிமீ வரை, காரை மிக வேகமாக ஓட்டாதீர்கள். அப்போதுதான் புதிய டயர்கள் சாலையில் தேய்ந்து செட் ஆகி, நல்ல க்ரிப் கிடைக்கும்.

டயர் பாலீஷ் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதை வைத்து பாலீஷ் செய்தால், பழைய டயர்கள்கூட பளபளவென்று புதிய டயர்கள்போலக் காட்சியளிக்கும். இதை டயரின் ட்ரெட்டுகளில் போடக் கூடாது. டயர் பாலீஷ் போட்டுவிட்டு வெயிலில் காரை நிறுத்தினால், பாலீஷ் உருகி டயரின் ட்ரெட்டுகளுக்குள் சென்றுவிடும்.

உங்கள் டிரைவிங்... உங்கள் மைலேஜ்!

மைலேஜ் அதிகம் கிடைக்கச் சிறந்த வழி, அதற்கு ஏற்றதுபோல நீங்கள் காரோட்டும் விதத்தை மாற்றிக்கொள்வதுதான். பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டரை மென்மையாகக் கையாளும் வகையில் உங்கள் ஓட்டுதல் இருந்தால், மைலேஜ் அதிகரிக்கும்.

மிதமான வேகத்தில் செல்லும்போதுதான், சாலையை முழுவதுமாக அனுமானித்து ஓட்ட முடியும். ஷார்ப்பான வளைவு ஒன்று சாலையில் இருக்கிறது என்றால், அதை நெருங்கும்வரை வேகமாக ஓட்டிவிட்டு, அதிக பிரேக் அழுத்தி காரின் வேகத்தை மொத்தமாகக் குறைத்து ஓட்டுவதற்குப் பதிலாக, சீரான வேகத்துடன் வளைவைக் கடப்பதுதான் சிறந்த முறை.

இதனால், தேவையில்லாமல் எரிபொருள் வீணாவது தடுக்கப்படும். தேவையில்லாமல் கிளட்ச்சை மிதித்துக்கொண்டே ஓட்டுவதைக் குறைத்தாலும் நிறைய எரிபொருள் வீணாவதைத் தடுக்கலாம். கிளட்ச் பிளேட்டும் தேவையில்லாத தேய்மானத்தில் இருந்து தடுக்கப்படும். காரில் இருந்து தேவையற்ற எடையைக் குறைப்பதன் மூலம் மைலேஜ் மட்டுமல்லாமல், காரின் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸும் கூடும்.

காரின் இன்ஜினை நாம் ஆக்ஸிலரேட்டர் மட்டுமில்லாமல், கியர்பாக்ஸ் மூலமும் கையாள்கிறோம். கியர்களை நாம் மாற்றும் விதத்திலும் கச்சிதமாக இருந்தால், நிறைய மைலேஜ் கிடைக்கும்.

வழக்கத்தைவிட கொஞ்சம் கியரை சீக்கிரமாக மாற்றிப் பாருங்கள். மிகவும் குறைந்த ஆர்பிஎம்-லேயே கியரை மாற்றினால், பின்னர் இன்ஜின் திணற ஆரம்பித்துவிடும். அதனால், இன்ஜினை அதிக ஆர்பிஎம்-ல் ரெவ் செய்து பின்னர் மாற்றுவதற்குப் பதிலாக, கொஞ்சம் குறைந்த ஆர்பிஎம்-ல் மாற்றுவதன் மூலம் நிறைய எரிபொருளை மிச்சம் செய்யலாம்.

ஆனால், 2,000 ஆர்பிஎம்-க்குக் கீழ் இருக்கும்போது, அப் ஷிஃப்ட் செய்யக் கூடாது. அதேபோல், அதிக ஆர்பிஎம்-ல் இன்ஜின் இயங்கிக்கொண்டிருக்கும்போது, தெரியாமல்கூட டவுன் ஷிஃப்ட் செய்துவிடாதீர்கள். எடுத்துக்காட்டாக, சிலர் மூன்றாவது கியரில் இருந்து நான்காவது கியருக்கு மாற்றுவதற்குப் பதிலாக, தெரியாமல் இரண்டாவது கியருக்கு மாற்றுவது. இதை 'மணிஷிஃப்ட்’ என்று கிண்டலாக அழைப்பார்கள். இப்படிச் செய்வதால், ஏற்படும் கியர்பாக்ஸ் சேதாரச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், அதை அப்படிச் சொல்கிறார்கள்.  

டயர்கள் எப்போதும் சரியான காற்றழுத்தத்தில் இருந்தால், மைலேஜ் நிறைவாகக் கிடைக்கும் என்பது பொதுவான தகவல். ஆனால், இப்போதைய ட்ரெண்ட் நைட்ரஜன்தான். பலருக்கும் டயர்களில் நைட்ரஜன் நிரப்புவதா அல்லது சாதாரண காற்றையே நிரப்புவதா என்ற குழப்பம் இருக்கிறது.

நைட்ரஜன் நிரப்புவதால், டயர்களில் உள்ள அழுத்தம் விரைவில் குறையாது. மேலும், தொடர்ந்து ஓடும்போது டயரின் வெப்ப அளவு குறைவாகவே இருக்கும். நைட்ரஜனைப் பொறுத்தவரை, சாதாரண காற்றைவிட சற்றே அதிகமான நன்மைகளையே அளிக்கிறது.

நாம் நிரப்பும் சாதாரண காற்றிலேயே 78 சதவிகிதம் நைட்ரஜன்தான் இருக்கிறது. மீதம் இருப்பதில் 20 சதவிகிதம்தான் ஆக்ஸிஜன். டயர்களில் நைட்ரஜன் நிரப்புவதால் கிடைக்கும் நன்மைகளை முழுவதும் அனுபவிக்க, நாம் நிரப்பும் நைட்ரஜன் மிக சுத்தமானதாக இருக்க வேண்டும். செலவு செய்ய முடியும் என்பவர்கள் தாராளமாக நைட்ரஜன் நிரப்பலாம்.

சடர்ன் பிரேக்...
காரின் பிரேக்குகளை ஒவ்வொருமுறையும் சர்வீஸுக்கு விடும்போதும் செக்கப் செய்தாலே போதும்.
ஆனால், நீங்கள் ஓட்டும்போது வழக்கமான பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸில் இருந்து சின்ன மாறுதல் இருந்தால், உடனே சர்வீஸ் சென்டரில் சோதனை செய்துவிடுவது அவசியம். ஹேண்ட் பிரேக் எடுக்காமலேயே காரை ஓட்டினால், காரின் பின்பக்க பிரேக் லைனிங் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

 
அதேபோல், மலைச் சாலையில் கீழே இறங்கும்போது இன்ஜின் பிரேக்கிங்கைப் பயன்படுத்திக்கொள்ளாமல், பிரேக்குகளையே பயன்படுத்தி வந்தால், பிரேக்குகள் ஏகத்துக்கும் சூடாகி அதன் செயல்திறன் குறைந்துவிடும். குறிப்பாக, முன் பிரேக்குகள் இதில் அதிகமாகப் பாதிக்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் காரை எடுக்கும்போது, பிரேக்குகள் சரியாக இருக்கிறதா என்று பிரேக் பிடித்து சோதனை செய்துவிட்டு பயணத்தைத் தொடர்வது நல்லது.

சும்மா அதிருதுல்ல!

காரின் சஸ்பென்ஷனை சிறப்பாகக் கவனித்து பராமரிக்கத் தேவை இல்லை. கார் ஓட்டும்போது சஸ்பென்ஷனில் இருந்து விநோதமான சத்தம் வந்தால், கவனிக்க வேண்டும். மோசமான சாலைகளில், வேகமாக ஓட்டாமல் இருப்பது சஸ்பென்ஷனைப் பாதிக்காமல் இருக்கும்.


கார் ஓட்டும்போது, அதிர்வுகள் எந்தப் பக்கம் இருந்து எழுகிறது என்று கவனியுங்கள். காரின் ஸ்டீயரிங் வீல் அதிர்ந்தால், காரின் முன் பக்கத்தில் பிரச்னை இருக்கலாம். பெரும்பாலும் மோசமான வீல் பேலன்ஸிங்/அலைன்மென்ட்தான் இதற்குக் காரணமாக இருக்கும்.

இருக்கையில் அதிர்வுகள் இருந்தால், காரின் பின்பக்க சஸ்பென்ஷன் அல்லது வீலில் பிரச்னை இருக்கலாம். காரின் மீது, ஒவ்வொரு வீலின் மேல் பகுதியில் அழுத்தி விட்டுப்பாருங்கள். ஒரு தடவை கார் கீழே இறங்கி மேல் ஏறி நிற்கும். அதற்குப் பதிலாக சிறிது அதிகமாகக் குலுங்கினாலும், சஸ்பென்ஷனில் பிரச்னைதான். ராக் அண்டு பினியன் ஸ்டீயரிங் சிஸ்டம் இல்லாத கார்களில், ஒவ்வொரு முறை டயர்கள் ரொட்டேஷன் செய்யப்பட்ட பிறகு, சஸ்பென்ஷனில் க்ரீஸ் வைக்க வேண்டும்.

புதிய அலாய் வீல் பொருத்தினாலோ, காரின் டயரையும் வீலையும் அப்-சைஸ் செய்தாலோ, மிக அகலமான டயர்களைப் பொருத்தினாலோ, சஸ்பென்ஷன் செயல்பாட்டில் மாற்றம் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சஸ்பென்ஷன் அடிவாங்கும் என்றால், எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸ்டைலுக்காக வீல்களிலும் டயர்களிலும் கைவைக்க வேண்டாம். காருக்கு அடியில் அண்டர்சேஸி கோட்டிங்கை ஒவ்வொரு மழைக் காலத்துக்கு முன் செய்வது, முக்கிய பாகங்கள் துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்கும்.

இம்சிக்காத இன்டீரியர்!

காரின் இன்டீரியரில் என்ன பராமரிப்பு வேண்டியிருக்கிறது என சிலர் நினைத்தால், அது முற்றிலும் தவறு. காருக்குள் அமர்ந்து சாப்பிடுவது, பானங்கள் அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தாலே, கார் இன்டீரியர் பராமரிப்பு விஷயத்தில் நீங்கள் பாஸ் மார்க் வாங்கிவிடலாம். இதனால், இருக்கைகளில் படியும் தேவையற்ற, சிரமமான கறைகளைத் தவிர்க்கலாம்.

ஸ்டீயரிங் வீலையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், ஓரளவுக்கு மேல் அழுக்கு படிந்தபின், ஸ்டீயரிங் வீல் வழுக்க ஆரம்பித்துவிடும். இதனால், எதிர்பாராத சமயங்களில், வழுக்கி ஆபத்துக்கு வழி வகுத்துவிடும்.

காரின் இன்டீரியரில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், தூசு. இருக்கைகளிலும் இன்டீரியர் பாகங்களிலும் படிந்திருக்கும் இது, உங்கள் பயணத்தின் மகிழ்ச்சியையே கெடுத்துவிடும். லெதர் சீட்களை எளிதாகச் சுத்தம் செய்துவிடலாம். ஆனால், ஃபேப்ரிக் சீட்களைச் சுத்தம் செய்வது சிரமமான காரியம். தவறாகச் செய்தால், தூசியும் அழுக்கும் இன்னும் ஆழமாக இருக்கையில் படிந்துவிடும். பெரும்பாலும் காரின் இன்டீரியரை நாம் சுத்தம் செய்வதைவிட, கார் டீட்டெயிலிங் சென்டரில் சுத்தம் செய்வது நலம்.

காரின் ஏ.சி-யில் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் ஃபில்ட்டர். சென்னை போன்ற பெருநகரங்களில் ஓடும் கார்களின் ஏ.சி ஃபில்ட்டர், மிக விரைவில் அசுத்தமாகி அடைத்துக்கொள்ளும். இதனால், ஏ.சி-யின் செயல்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இந்த நிலையை அடையும் பலரும், ஏ.சி கேஸ் தீர்ந்து விட்டது என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது ஏ.சி ஃபில்ட்டரைச் சுத்தம் செய்தாலே போதும். கார் ஏ.சி ரிப்பேர் செய்யும் கடைகளில் குறைந்த விலையிலே இதைச் செய்து கொடுப்பார்கள்.

கார் டேஷ்போர்டின் முன் பகுதியில் உள்ள தூசியை பெரும்பாலும் நாமே துடைத்துவிடுவோம். ஆனால், கண்ணாடிக்குக் கீழ் இருக்கும் டீஃப்ராஸ்டர் வென்ட்டை பலரும் மறந்துவிடுவர். திடீரென்று என்றாவது அதைப் பயன்படுத்தும்போது, நீண்ட நாட்களாக அதில் படிந்திருந்த தூசுகள் வெளியேறி காரின் உள்ளே படிந்துவிடுவதோடு, மட்டுமல்லாமல், நம் மூக்கிலும் ஏறி தும்மலை வரவைக்கும். எனவே, டீஃப்ராஸ்டர் வென்ட்டை அடிக்கடி கவனியுங்கள்.

ஃப்ளோர் மேட்டுகளையும் அடிக்கடி துடைத்துவிடுவது அவசியம். நம் காலணியில் உள்ள அழுக்கு அத்தனையும் ஃப்ளோர் மேட்டுகளில்தான் படியும். இதைக் கவனிக்காமல் விட்டால், நாளடைவில் ஃப்ளோர் மேட்டைச் சுத்தம்கூட செய்ய முடியாமல், புதிதாக மாற்றவேண்டியிருக்கும். எனவே, வாரத்துக்கு ஒருமுறை ஃப்ளோர் மேட்டைச் சுத்தம் செய்யுங்கள்.

'க்ளீன்’ போல்டு!

காரின் வெளிப்புறத் தோற்றம் தான் உங்களுடைய அக்கறையை எடுத்துக் காட்டும். காரைச் சுத்தமாக, பளபளவென்று வைத்திருப்பது சமூகத்தினிடையே உங்களுக்கு மதிப்பைப் பெற்றுத்தரும்.

டிரைவர் இல்லாத பட்சத்தில், காரை தினம் தினம் கழுவிக் கொண்டிருப்பது சிரமமான காரியம்தான். வாரம் ஒருமுறை காரை குடும்பத்துடன் இணைந்து கழுவிப் பாருங்கள். இது கேட்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் குடும்பத்துடன் சிறிது நேரம் ஜாலியாக செலவு செய்த மாதிரியும் ஆச்சு! காரை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினருக்குப் புரியவைத்த மாதிரியும் ஆச்சு! தாங்களே கைப்பட கழுவிய கார் என்பதால், குழந்தைகளும் இனி காரில் எந்த அசுத்தத்தையும் செய்ய மாட்டார்கள்.

விண்ட்ஷீல்டு துடைப்பதற்கு ஃபைபர் கிளாத்தையும், நியூஸ் பேப்பரையும் பயன்படுத்துங்கள். பழைய துணியை மறந்தும் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத துகள்களால் விண்ட்ஷீல்டில் ஸ்கிராட்சுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சில கார் உரிமையாளர்கள் கார் கழுவுவதை உடற்பயிற்சி போலச் செய்கிறார்கள். இதுவும் நல்லதுதான். உங்களால் இந்த வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், கவலையே தேவையில்லை. எல்லா ஊர்களிலும் இப்போது கார் டீட்டெயிலிங் சென்டர்கள் வந்துவிட்டன. அங்கு காரை எடுத்துக் கொண்டுபோய் பாலிஷ், வாக்ஸ், ப்ரஷர் வாஷ், இன்டீரியர் க்ளீனிங் என காரை கச்சிதமாகச் சுத்தம் செய்துவிட்டு வாருங்கள். விலை அதிகம்தான். ஆனால், காரை புத்தம் புதிய காரைப்போல் மாற்றி விடுவார்கள்.

World TB Day - march 24

4,000ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களிடம் காணக்கூடிய கிருமி மைக்ரோபாக்டீரியம் டியூபர்கலோசிஸ். எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் முதுகெலும்புத் தொடரை ஆராய்ந்தபோது அதில் டி.பி. கிருமி இருந்திருக்கிறது. பொதுவாக ஆசியர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் டி.பி. கிருமி எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தக் கிருமி நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினம். ஒவ்வோர் ஆண்டும் ஒன்பது மில்லியன் (90 லட்சம்) காச  நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இவர்களில் 30 லட்சம் பேர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் போய்விடுகின்றனர். இந்த 30 லட்சம் பேரைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து, குணப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் உலக காச நோய் தினம் கொண்டாடப்படுகிறது.

'நகம், முடியைத் தவிர எல்லா இடத்திலும் டி.பி. கிருமி தாக்கும். ஆனால், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் அது மற்றவர்களுக்கும் பரவுகிறது. காச நோய்க் கிருமியானது இருமல், தும்மல், சுவாசம், பேசுதல் மூலமாகப் பரவுகிறது. எவ்வளவு விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த நோயாளிக்கும் சமூகத்துக்கும் நல்லது.

அறிகுறிகள்

 இரண்டு வாரத்துக்கு மேல் இருமல், காய்ச்சல்

 சளியுடன் கூடிய இருமல்

 இருமும்போது சளியுடன் ரத்தம் வெளியயேறுதல்

 பசியின்மை

 எடை குறைதல்

 மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 நுரையீரல் காசநோய் உள்ள நோயாளி தும்மும்போதும், இருமும்போதும் கிருமியானது பரவுகிறது. இப்படி பரவும் கிருமி அடுத்தவர் நுரையீரலுக்குச் செல்கிறது. அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நுரையீரலிலேயே தங்கிவிடுகிறது. ஒருவேளை அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அது நோயாக உருவெடுத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 சளி சிறுசிறு நீர்த் திவலைகளாக காற்றில் பரவுகிறது. ஒரு நீர்த் திவலையில் ஆயிரக்கணக்கான கிருமிகள் இருக்கும். திவலையின் அளவு 5 மைக்ரானுக்கு கீழ் இருந்தால், காற்றில் மிதக்கும். நுரையீரல் வரை சென்று வெளியே வந்துவிடும்.

 10 மைக்ரானுக்கு மேல் இருந்தால் மூக்கு, அதற்கு அடுத்துள்ள பகுதியிலேயே தங்கிவிடும். சளியில் வெளிப்பட்டுவிடும்.

 நீர்த் திவலையின் அளவு 5 முதல் 10 மைக்ரானாக இருந்தால், நுரையீரலில் சென்று தங்கிவிடும்.
 'மான்டோ’ பரிசோதனை மூலம் காச நோய் கிருமித் தொற்றைக் கண்டறியலாம். 

பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தால் அவர்களுக்குக் காச நோய் உள்ளது என்று அர்த்தம். இவர்களுக்கு, மேலே சொன்ன அறிகுறி இருந்தால், உடனடியாகச் சிகிச்சை எடுக்க வேண்டும்.

 அறிகுறிகள் ஏதும் இல்லை என்றால், சிகிச்சை தேவை இல்லை. ஏனெனில், சிகிச்சை எடுத்தாலும் மீண்டும் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.

 அப்பா அல்லது அம்மாவுக்குக் காசநோய் இருந்து, 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என்று வந்தால், அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

gadget - samsung galaxy s5

மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங், தனது நவீன கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டில் இயங்கும் இந்த போன் தோற்றத்தில் கேலக்ஸி எஸ்4 போலவே இருக்கும். 5.1 இன் சூப்பர் அமோலெட் திரை கொண்டது. 2.5 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் தண்ணீர் எதிர்ப்புதிறன் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். 16 ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்புக்கான இடவசதி கொண்டதாக இருக்கும்.
மேலும், மைக்ரோ மெமரி கார்டு மூலம் 64 ஜிபி வரை சேமிப்புக்கான இடவசதியை நீட்டித்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆப்பிள் நிறுவனத்தின் 5எஸ் மாடலுக்குப் போட்டியாக இது கருதப்படு கிறது. இதற்கேற்ப, உடல்நலத்துடன் தொடர்புடைய ஹெல்த் 3.0 மற்றும் பயோமெட்ரிக் சென்சார் பட்டன் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கேலக்ஸி எஸ்5-ல் சேர்க்கப்பட்டுள்ளன.

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்த வேர்ல்டு மொபைல் காங்கிரஸில் இந்த கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. போட்டிகள் அதிகம் இருப்பதால் தனது எஸ்4 மாடலுக்கு மாற்றாக விரைவில் புதிய மாடலைக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக முன்னதாகவே வெளியிட்டிருக்கிறது. இதன் டிஸ்பிளே 5.1 இன்ச் அளவுகொண்டது. ஆன்லைன் வர்த்தகத்தில் இதன் விலை 45,500 ரூபாய்.

சென்ற 2013 ஏப்ரல் மாதம் வெளியான, சாம்சங் கேலக்ஸி எஸ்4, இதுவரை வெளியான ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் அதிகம் விற்பனையான போன் என்ற பெயரை எடுத்துள்ளது. அறிமுகமாகி இரண்டு மாதங்களிலேயே இரண்டு கோடி போன்கள் விற்பனையாயின. வேகமாக விற்பனையான போன் எனவும் பெயர் எடுத்தது. இதுவரை மொத்தம்4 கோடி போன்கள் விற்பனையாகியுள்ளன. சாம்சங் எஸ்4-ன் சாதனையைத் தற்போது வெளியாகியுள்ள எஸ்5 ஸ்மார்ட் போன் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 must things to think to take housing loan

இன்றைக்குச் சொத்து வாங்குபவர்களில் பெரும்பாலானோர், வீட்டுக் கடன் மூலமாகவே வாங்குகிறார்கள். வீட்டுக் கடனுக்குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். இல்லையெனில் சொந்த வீட்டில் சோகமாக வசிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். வீட்டுக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம் .

1. மார்ஜின் மணி! 

தனி வீடோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்போ, எதை வாங்குவதாக இருந்தாலும் மொத்த தொகைக்கும் கடன் தரமாட்டார்கள். சுமார் 20 சதவிகித தொகையை வீடு வாங்குபவர் தன் கையில் இருந்துதான் போடவேண்டி இருக்கும். சிலர் இந்த மார்ஜின் தொகைக்கு பெர்சனல் லோன் வாங்குகிறார்கள். இதனால்,  வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ, பெர்சனல் லோன் இஎம்ஐ என அதிகத் தொகை சம்பளத்திலிருந்து போகும். அந்த வகையில் பணச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

இதைத் தவிர்க்க இந்த மார்ஜின் தொகையை முன்னரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் அல்லது கடன் தொகையைக் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். மனை வாங்கி வீடு கட்டினால் இப்போது சிறிய வீடாகக் கட்டிக்கொண்டு, பிற்பாடு அந்த வீட்டை விரிவாக்கம் செய்யலாம். வீட்டுக் கடன் மாத தவணை கைக்குக் கிடைக்கும் சம்பளத்தில் 40-45 சதவிகிதத்தைத் தாண்டாதவாறு இருத்தல் அவசியம்.

2. கடன் வாங்கும் வங்கி / நிறுவனம் தேர்வு! 

இன்றைக்குப் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள், தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் எனப்  பல வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குகிறது.  

அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் வாங்க, நீங்கள் அவர்களைத் தேடி போகவேண்டி இருக்கும். தனியார் என்றால் உங்களின் வீடு தேடி வந்து கடனுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிடுவார்கள்.பொதுவாக, தனியார் வங்கிகள் / தனியார் வீட்டு வசதி நிறுவனங்களை விடப் பொதுத்துறை வங்கிகள் / பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங் களில் கடனுக்கான வட்டி சுமார் 1% குறைவாக இருக்கும்.

வீட்டுக் கடன் என்பது ஒரு முறை செய்யப்படும் விஷயம் என்பதால் வங்கி அமைந்திருக்கும் இடத்துக்கான தொலைவை பார்க்க வேண்டியதில்லை. வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிதான் நம் வீடு அல்லது அலுவலகத்தின் அருகில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு இது தேவை இல்லை.இ.சி.எஸ், முன்தேதியிட்ட காசோலைகளைத் தருவதன் மூலம் தூரம் ஒரு சுமையாக இருக்காது. வசதி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்துத் தூரமாக இருக்கும் வங்கி / நிறுவனத்தையும் தேர்வு செய்து வீட்டுக் கடன் வாங்கலாம்.

3. வீட்டுக் கடனுக்கான ஒப்புதல்! 

வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளையா அல்லது அதன் மத்திய பரிசீலனை மையமா (சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) என்பதைக் கவனிப்பது முக்கியம். கிளை அலுவலகமே கடன் வழங்கிவிடும் என்றால் விரைவாகக் கடன் கிடைத்துவிடும்.வங்கிகளின் மத்திய பரிசீலனை மையத்தில் வீட்டுக் 
கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்தக்
கூட்டத்தில் உங்களுக்குக் கடன் கிடைக்க அதிகநாள் ஆகக்கூடும். எனவே, வங்கிக் கிளைகளே கடனுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து கடன் வாங்குவது நல்லது.

4. கட்டணங்கள் முக்கியம்! 

வீட்டுக் கடன் வாங்கும்போது பரிசீலனைக் கட்டணம், ஆவணக் கட்டணம் என வங்கிகள்/வீட்டு வசதி நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவிகிதக் கட்டணத்தை வசூலிக்கும். இவை தவிர, பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீனியன் எனத் தனியாகக் கட்டணம் வாங்கும் வங்கிகளும் இருக்கின்றன. சில வங்கிகளில், முதலில் வாங்கப்படும் பரிசீலனைக் கட்டணத்திலே இந்த வேலையும் அடங்கிவிடும். அந்த வகையில், மொத்தமாகக் கட்டணங்கள் எல்லாவற்றையும் கூட்டி, எந்த வங்கியில் குறைவாக இருக்கிறதோ, அதில் கடன் வாங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

5. கான்ட்ராக்டரின் தரம்! 

நீங்கள் வீடு வாங்கப்போகும் புரமோட்டர்/ பிளான்/ கான்ட்ராக்டரின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை அறிந்து அதன்பிறகு தேர்வு செய்வது நல்லது. இல்லை எனில் சொன்ன நேரத்தில் உங்களுக்கு வீட்டை முடித்துச் சாவியைத் தருவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் வீடு வாங்கப்போகும் புரமோட்டர் அல்லது உங்களுக்கு வீடு கட்டித் தரப்போகிற பில்டரை பற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.

6. கடனுக்கான காசோலை!
மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, வீட்டுக் கடனுக்கான கடன் காசோலையை புரமோட்டர்/பில்டர்/கான்ட்ராக்டருக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் தரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுதான் தரவேண்டும் என்பதை ஆரம்பத்திலே தெரிவித்துவிட வேண்டும். இல்லையெனில் பில்டரோ / கான்ட்ராக்டரோ வீட்டு வேலையைச் சரிவர முடிக்காமல் உங்களுக்குத் தெரியாமலேயே பணத்தை வாங்கிச் சென்றுவிடுவார். எனவே, ஜாக்கிரதை!

7. வட்டி விகிதம்! 

வீட்டுக் கடனை பொறுத்தவரை யில், நிலையான (ஃபிக்ஸட்) வட்டி, மாறுபடும் (ஃப்ளோட்) வட்டி என இருவிதமாக வட்டி விகிதம் இருக்கின்றது. நிலையான வட்டி என்பது முதலில்வரும் 3 - 5 வருடங் களுக்கு மட்டும்தான். அதன்பிறகு அப்போதுள்ள நிலையான வட்டி அல்லது ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது கடன் சந்தை வட்டி விகித மாற்றத்துக்கு ஏற்ப ஏறும், இறங்கும்.  நிலையான மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையே சுமார் 1.52% வித்தியாசம் இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். பொதுவாக, கடனுக்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நிலை நிலவினால், ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

மேலும், நீங்கள் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக இருந்தால், சிபில் ரேட்டிங்கில் அதிக ஸ்கோர்கள் இருந்தால் வட்டியில் பேரம் பேசி குறைக்க முடியும். வட்டியை கவனிக்கும் அதே நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு இஎம்ஐ என்பதையும் கவனியுங்கள். கடனுக்கான வட்டியை, கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறை, ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறை என இரண்டுமுறை இருக்கின்றன. கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறையில் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். அந்த வகையில் எந்த வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இஎம்ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள்.

8. கடனைத் திரும்பக் கட்டும் காலம்! 

வாங்கிய கடனை குறைந்த ஆண்டு களில் 5 - 10 ஆண்டுகளில் கட்டினால், மாத தவணை அதிகமாக இருக்கும். இதுவே அதிக ஆண்டுகளில் 15-20 ஆண்டுகளில் கட்டினால் மாத தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆண்டுகளில் கட்டினால் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்கு போகும் தொகை அதிகமாக இருக்கும். இவற்றை அலசி ஆராய்ந்து உங்களால் கட்டக்கூடிய தொகையை இஎம்ஐ-ஆகக் கேட்டுப் பெறுங்கள். பிற்பாடு சம்பளம் உயர்ந்தபிறகு அதிகத்  தொகையைக் கட்டுவதன் மூலம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.

9. கடன் தொகை வழங்கும் நிலை..
 வீடு கட்டுவது என்றால் அஸ்திவாரம், பிளிந்த், நிலை, ரூப் எனப் பலவாறாகப் பிரித்து வீட்டைக் கட்ட கடன் தொகையை  வழங்கும். சில வங்கிகளில் வங்கி மேலாளர்களே வீட்டைப் பார்த்து கடன் தொகையை வழங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையில் வீட்டு வேலை தடைபடாது.சில வங்கிகளில் இன்ஜினீயர்கள் வந்து பார்த்து சர்ட்டிஃபிகேட் தந்தால் தான் அடுத்தநிலைக் கடனைத் தருவார்கள். அப்போது காலதாமதம் ஏற்படக்கூடும். இதுபோன்ற வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தை வங்கி மேலாளரிடம் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

0. மாரடோரியம் பீரியடு! 
 
வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவது எனில் கட்டுமானம் முடிய எப்படியும் 18 மாதம் ஆகிவிடும். இந்தக் காலகட்டத்தில் மொத்த வீட்டுக் கடன், 3 அல்லது 4 பிரிவாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி சேர்ந்திருக்கும். இதனை 'ப்ரீ இஎம்ஐ’ என்பார்கள். இந்த வட்டியை மாதாமாதம் கட்டி வருவது நல்லது.இல்லையெனில் இந்த வட்டியையும் வீட்டுக் கடனாக மாற்றிவிடுவார்கள். நீங்கள் கூடுதல் இஎம்ஐ கட்ட வேண்டிவரும்''.

வீட்டுக் கடன் வாங்கப் போகிறவர்கள் இந்த 10 விஷயங் களையும் கவனிக்கலாமே!

- பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் உதவிப் பொதுமேலாளரும் வீட்டுக் கடன் ஆலோசகருமான ஆர்.கணேசன்.

இன்ஷூரன்ஸ்:புதிய விதிமுறைகள் யாருக்கு பயன்?

இன்ஷூரன்ஸ்:புதிய விதிமுறைகள் யாருக்கு பயன்?
இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ தெரிவித் திருந்தது. இதன் விளைவாக இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப்பிறகு வெளியான புதிய விதிமுறைகளுடன்  ஏறக்குறைய 500 புதிய பாலிசிகள் சந்தைக்கு வந்துள்ளது.

கூடுதல் கவரேஜ்!
''டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை எந்தப் புதிய மாற்றமும் செய்யப்படவில்லை. லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்தான் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது ஐ.ஆர்.டி.ஏ. இதிலும் குறிப்பாக, எண்டோவ்மென்ட் பாலிசிகளில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. இதன்படி, ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு வெளியான பாலிசிகளில் இன்ஷூரன்ஸ் எடுத்த பாலிசி தாரருக்கு அதிக அளவிலான கவரேஜ் இருக்கும். அதேநேரத்தில், முதலீட்டுப் பகுதி குறைவாக இருக்கும். இன்ஷூரன்ஸ் என்பதே பாதுகாப்புக்காகத்தான் என்பதால், கவரேஜ் அதிகமாக இருக்குமாறு பாலிசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


மேலும், ரெகுலர் பிரீமியம் செலுத்தும் பாலிசிகளில் 45 வயதுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஆண்டு பிரீமியத் தொகையில் 10 மடங்கு கவரேஜ் கிடைக்கும் வகையிலும், 45 வயதுக்கு அதிகமானவர்களுக்கு 7 மடங்கு கவரேஜ் தொகை கிடைக்கும் வகையிலும் பாலிசிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

சரண்டர் மதிப்பு உயர்வு!

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மறுசீரமைப்பு செய்தபிறகு வெளியான பாலிசிகளில் சரண்டர் மதிப்பு அதிகமாக இருக்கும். அதாவது, சரண்டர் செய்யும் காலத்தைப் பொறுத்துச் செலுத்திய பிரீமியத்தில் குறைந்தபட்சம் 30-லிருந்து அதிகபட்சம் 90% வரை சரண்டர் மதிப்பு கிடைக்கும்.

10 வருட பாலிசிகளை  மூன்று வருடம் பிரீமியம் செலுத்தினால்தான் சரண்டர் செய்ய முடியும் என்பதைத் தற்போது 2 வருடமாகக் குறைத்துள்ளார்கள். அதேசமயம் 10 வருடங்களுக்குமேல் உள்ள பாலிசிகளை 3 வருடம் பிரீமியம் கட்டியிருந்தால் மட்டுமே சரண்டர் செய்ய முடியும். மேலும், சரண்டர் மதிப்பில் முதல் பிரீமியம் கழிக்கப்பட மாட்டாது.  பாலிசி எடுத்து 4-7 ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்யப் பட்டால் செலுத்திய பிரீமியத்தில் 50 சதவிகிதமும், கடைசி 1-2 ஆண்டு களுக்குள்  சரண்டர் செய்தால் 90% வரையிலும் பணம் திரும்பக் கிடைக்கும்.

இறப்பு பலன் அதிகம்!
புதிய விதிமுறைகளின்படி, பாலிசி முதிர்வடைவதற்கு முன்பே பாலிசிதாரர் இறக்க நேரிட்டால் கிடைக்கும் கவரேஜ் தொகையின் அளவையும் ஐ.ஆர்.டி.ஏ அதிகரித் துள்ளது. அதாவது, சிங்கிள் பிரீமியம் செலுத்தும் பாலிசியில் பாலிசிதாரர் 45 வயதுக்குக் கீழ் இருந்தால் செலுத்திய பிரீமியத்தில் 125 சதவிகிதமும், 45 வயதுக்கு மேல் இருந்தால் 110 சதவிகிதமும் குறைந்தபட்ச கவரேஜ் தொகையாகக் கிடைக்கும்.

வகைபடுத்தப்பட்ட பாலிசிகள்!
இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் பாலிசிகள் வகைபடுத்தப்பட்டுள்ளன. அதாவது, நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் பாலிசிகளை நான்லிங்க்டு வேரியபிள் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் (Nonlinked Variable Insurance Products) என்றும், வருமானம் மாறிக்கொண்டே இருக்கும் பாலிசிகளை வேரியபிள் லிங்க்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகள் (Variable Linked Insurance Products) என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.



இறப்பு விகித அட்டவணை!

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர் களுக்கான பிரீமியம் என்பது இறப்பு விகித அட்டவணையின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப் படும். இப்போது மருத்துவ வளர்ச்சி யின் விளைவாக, சராசரி இறப்பு வயது அதிகரித்துள்ளது. ஆனால், எல்.ஐ.சி மிகவும் பழைய இறப்பு விகித அட்டவணையைப் பயன்படுத்தி வந்தது. இதனால் அந்த பாலிசியின் பிரீமியமும் அதிகமாக இருந்தது. தற்போது புதிய இறப்பு விகித அட்டவணையை எல்.ஐ.சி பின்பற்ற தொடங்கியுள்ளதால், எல்.ஐ.சி நிறுவனம் வழங்கும் பாலிசிகளின் பிரீமியம் குறைய வாய்ப்புள்ளது''.


சரியான வருமானம்!

பாலிசி மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை 6-10 சதவிகிதமாக இருக்கும் என இன்ஷூரன்ஸ் பாலிசி விளம்பரங் களில் சொல்லப்படுகின்றன. இந்த வருமானம் நிச்சயம் கிடைக்குமா என்றால் அது சந்தேகம்தான். எனவே, வருமானம் பற்றிச் சொல்லப்படும் அனுமானங்கள் சரியாக இருக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ சொல்லியுள்ளது. பாலிசிகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 4-8 சத விகிதத்தில் கிடைக்கும் வருமான அட்டவணைகளை மட்டுமே விளம்பரங்களில், பாலிசி விளக்க ரசீதுகளில் பிரசுரிக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ வலியுறுத்தியுள்ளது.

குறுகிய கால பாலிசிகள்!

இதுவரை குறைந்தபட்சம் 10 ஆண்டு களுக்கான எண்டோவ்மென்ட் பாலிசிகளே நடைமுறையில் இருந்தன. இப்போது 5 ஆண்டுகளுக்கான எண்டோவ்மென்ட் பாலிசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.  

சேவை வரி!

பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரீமியத்துக்கான சேவை வரியை 2013 வரை எல்.ஐ.சி.யே செலுத்தி வந்தது. பாலிசியில் கிடைக்கும் போனஸ் தொகையில் அந்தச் சேவை வரி கழித்துக்கொள்ளப்பட்டது. இனிமேல் சேவை வரி பாலிசிதாரர்தான் செலுத்தவேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ தெரிவித்துள்ளது. இதனால் பாலிசியின் பிரீமியம் அதிகரிக்கும். அதேநேரத்தில் போனஸ் தொகை அதிகமாக கிடைக்கும். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே சேவை வரியை பாலிசிதாரர்களிடம்தான் வசூலித்து வந்தது. பாலிசி எடுத்த முதல் வருடம் 3.09 சதவிகிதமும், அடுத்த வருடங்களில் 1.545 சதவிகிதமும் சேவை வரி இருக்கும்.

ஏஜென்ட் கமிஷன்..!

ஐந்து ஆண்டு பாலிசிக்கு முதல் வருடம் பிரீமியம் செலுத்தும்போது ஏஜென்டுக்கு 15 %கமிஷன் கிடைக்கும். அதேநேரத்தில் 10 வருடகால பாலிசி களுக்கு அதிகபட்சமாக 30 சத விகிதமும், 12 வருடத்துக்கு மேற்பட்ட பாலிசிகளுக்கு 35 சதவிகிதமும் கமிஷன் கிடைக்கும். இதுவே 2, 3-வது வருடங்களுக்கு 7.5 சதவிகிதமும், அதற்குப்பின் 5 சதவிகிதமும் கமிஷன் கிடைக்கும்.  இதனால் பாலிசி கட்டணங்கள் குறையும்''
 

Monday, March 17, 2014

பைக் பராமரிப்பு easy way to bike maintenance



பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கும் பைக்கை முறையாகப் பராமரிக்காவிட்டால், பாக்கெட்டில் இருக்கும் பணத்துக்குப் பங்கம் வந்துவிடும். வாரத்தில், மாதத்தில் சில மணிநேரங்களை ஒதுக்கினாலே பைக் எந்தப் பிரச்னையும் கொடுக்காது. செலவும் வைக்காது.

வாரம் ஒருமுறை சுத்தம்...

வாரம் ஒருமுறையாவது பைக்கைச் சுத்தம் செய்வது அவசியம். சர்வீஸ் ஸ்டேஷன் சென்றுதான் வாட்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லாதது. பைக்கில் சேறு படிந்திருந்தால், வீட்டிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் போன்றவற்றில் ஆயில் லீக் இருக்கிறதா என்பதைக் கவனிக்க முடியும். பேட்டரியில் டிஸ்டில்ட் வாட்டர் அளவு சரியாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இரண்டு வீல்களிலும் காற்று சரியான அளவு இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும்.

 செல்ஃப் ஸ்டார்ட் இருக்கிறதா?

காலையில் முதல்தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, கிக் ஸ்டார்ட் செய்வதுதான் சிறந்தது. ஏனெனில், இரவு முழுதும் சும்மா நின்றிருந்த இன்ஜின் குளிர்ந்திருக்கும். அப்போது செல்ஃப் ஸ்டார்ட் செய்தால், உடனே ஸ்டார்ட் ஆகாது. அதனால், சிலமுறை கிக் செய்துவிட்டு செல்ஃப் பயன்படுத்தலாம் அல்லது கிக் ஸ்டார்ட்டையே பயன்படுத்தலாம். இதனால், பேட்டரி, செல்ஃப் மோட்டார் ஆயுள் நீடிக்கும். மேலும், செல்ஃப் ஸ்டார்ட்டரை ஒருமுறை பயன்படுத்தும்போது, பேட்டரியின் பெருமளவு சக்தி செலவாகிறது. அது மீண்டும் சார்ஜ் ஆவதற்கு, குறைந்தது 20 கி.மீ தூரமாவது பயணிக்க வேண்டும். அதனால், குறைவான தூரம் பயணிப்பவர்கள் அடிக்கடி செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்துவதில் கவனம் கொள்வது நல்லது.


அதேபோல், காலையில் ஸ்டார்ட் செய்த பிறகு, ஒருசில நிமிடங்களாவது ஆயில் இன்ஜின் முழுவதும் பரவ ஐடிலிங்கில் ஓட அனுமதியுங்கள். ஆக்ஸிலரேட்டரை முறுக்காதீர்கள். அப்படிச் செய்தால், இன்ஜின் பாதிக்கப்படும். கிக் ஸ்டார்ட் இல்லாத பைக்குகளில், சக்திவாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும்.

 இன்ஜின் ஆயில்


ஆயிலின் மசகு(Viscosity)தன்மைதான் இன்ஜினை அதிகம் சூடாக்காமலும் உராய்வில் தேய்ந்துபோகாமலும் காக்கிறது. எனவே, வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கி.மீ தூரம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (எது முந்துகிறதோ அதன்படி) இன்ஜின் ஆயில் மாற்றுவது இன்ஜினின் ஆயுளை நீட்டிக்கும். பரிந்துரைத்த கிரேடு ஆயில் பயன்படுத்துவது முக்கியம். ஆயில் குறைந்துவிட்டது என்பதால், வேறு ஏதாவது ஆயிலை ஊற்றுவது தவறு.

    டயர்

பொதுவாக, இரு சக்கர வாகனங்களின் டயர்கள் 35,000 - 40,000 கி.மீ தூரம் வரை மட்டுமே உழைக்கும். சில பைக்குகளில் 20,000 கி.மீயிலேயே மாற்ற வேண்டிவரும். அடிக்கடி பஞ்சர் ஆவதுதான் டயர் பலவீனமடைந்துவிட்டது என்பதற்கான அறிகுறி. டயர்களின்  பட்டன்கள் தேய்ந்து சமதளமாக டயர் மாறும்வரை ஓட்டுவது ஆபத்து. பட்டன்களின் ஆழம் குறைந்ததுமே மாற்றிவிடுவதுதான் பாதுகாப்பு. ஏனெனில், வளைவுகளில், மணற்பாங்கான சாலைகளில், வழுக்கும் தண்மைகொண்ட இடங்களில் தேய்ந்துபோன டயர் வாகனத்தை ஸ்கிட் ஆக்கிவிடும். மேலும், பிரேக்கைப் பிடிக்கும்போது ஸ்கிட் ஆவதுடன், பைக் தாறுமாறாக வளைந்து நெளிந்து சுழல்வதும் நடக்கும். அதேபோல், குறிப்பிட்ட தூரத்தில் பைக் நிற்காது. எனவே, டயர் விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 கிளட்ச்

கிளட்ச் லீவரை கியர் மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது கிளட்ச் லீவரைத் தொடுவதால்கூட இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தி முழுமையாக வீலுக்குச் செல்லாமல் விரயமாகும். அதனால், மைலேஜ் பெருமளவு குறையும். கிளட்ச் பிளேட்டின் தேய்மானத்துக்கு ஏற்ப லீவர் கேபிள் அட்ஜஸ்ட் செய்யப்பட வேண்டியது அவசியம். இதை மாதம் ஒருமுறை செக் செய்வது நல்லது. தேய்ந்துபோன கிளட்ச்சைத் தொடர்ந்து பயன்படுத்துவது பெட்ரோல் விரயத்துக்கு வழி வகுப்பதுடன், கியர்பாக்ஸைப் பாதித்து செலவை எகிறவைத்துவிடும். மேலும், டிராஃபிக் சமயங்களில் நம்மைத் தள்ளாட வைத்துவிடும்.

 செயின் ஸ்பிராக்கெட்


இன்ஜினையும் விலையும் இணைக்கும் செயின் ஸ்பிராக்கெட், மிக முக்கியமான பாகம். இதன் செயின் அதிக இறுக்கமாகவோ அல்லது மிகத் தளர்வாகவோ இருக்கக் கூடாது. ஓட ஓடத் தேயும் செயினை மாதம் ஒருமுறை சோதித்து அட்ஜஸ்ட் செய்வது அவசியம். செயினில் தூசு இருந்தால் சுத்தம் செய்வது, ஆயில் விட்டுப் பராமரிப்பது நீண்ட நாள் உழைக்க வழிவகுக்கும். நேக்கட் பைக் சிலவற்றில் செயின் வெளியே தெரியும்படி இருக்கும். இதில், ஆயிலுக்குப் பதில் ஸ்ப்ரே பயன்படுத்தவேண்டும். மேலும், ஸ்பிராக்கெட்டில் இருக்கும் பற்கள் தேய்ந்துபோகாமல் இருக்கிறதா எனக் கவனிப்பதும் அவசியம். அட்ஜஸ்ட் செய்ய முடியாத அளவுக்குத் தேய்ந்திருந்தால் செயின் ஸ்பிராக்கெட்டை மாற்றி விடுவது நல்லது. பொதுவாக, செயின் ஸ்பிராக்கெட் 30,000 - 35,000 கி.மீ வரை உழைக்கும்.

 ஸ்பார்க் ப்ளக்

இன்ஜின் இயங்க மிக முக்கியமான பாகம் ஸ்பார்க் ப்ளக். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யும்போது தவறாமல் இதையும் மெக்கானிக் சோதித்துப் பார்ப்பார் என்றாலும், அதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. சரியாக தீப்பொறி வராத ஸ்பார்க் ப்ளக்கால் பைக்கின் பெர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படுவதுடன், பெட்ரோலும் வீணாகும். மேலும், எப்போதும் ஒரு ஸ்பேர் ஸ்பார்க் ப்ளக் உங்கள் பைக்கிலேயே வைத்திருங்கள். 50 ரூபாய் முதல் 100 ரூபாய் விலை கொண்ட இது பழுதடைந்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும். இரீடியம் ஸ்பார்க் ப்ளக் எனும் வகை ஒன்று உண்டு. இது விலை அதிகம் என்றாலும், நீண்டநாள் உழைப்பதுடன் சீராக இயங்கி நல்ல பெர்ஃபாமென்ஸை அளிக்கும்.

சஸ்பென்ஷன்


வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடையேற்றினால், முதலில் பாதிக்கப்படுவது சஸ்பென்ஷன்தான். சஸ்பென்ஷன் பழுதடைந்தால், பைக்கின் பெர்ஃபாமென்ஸ், பிரேக், செயல்பாடு, மைலேஜ் என அனைத்துமே பாதிக்கும். மேலும் சஸ்பென்ஷன் சரியாக இயங்கவில்லை என்றால் கழுத்து வலி, முதுகு வலி, கை வலி வர வாய்ப்பு உண்டு. எனவே, சஸ்பென்ஷன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. ஷாக் அப்ஸார்பரைப் பொறுத்தவரை ரீ-கண்டிஷன் செய்து பொருத்துவது கூடாவே கூடாது. புதிதாக மாற்றுவதே நல்லது. முன்பக்க ஃபோர்க் சஸ்பென்ஷன் பழுதடைந்து ஆயில் கசிந்தால் உடனே சரிசெய்வதுதான் நல்லது. ஏனெனில், அதில் உள்ள ஆயில் முழுவதும் வெளியேறி ஆயில் இல்லாத நிலையில் இயங்கினால், ஃபோர்க் வளைந்துவிடும். ஃபோர்க்கைச் சரிசெய்வது என்பது நன்றாக இருந்த கையை உடைத்து மாவுக்கட்டு போடுவது போன்றதுதான்.

 வீல்

சரியான காற்றழுத்தத்தை எப்போதும் கடைப்பிடித்தால், வீல் பெண்ட் ஆகாமல் இருக்கும். வீல் பஞ்சர் ஆனது தெரியாமல் பைக்கை ஓட்டும்போதுதான் பெரும்பாலும் வீல் பெண்ட் ஆகிறது. அலாய் வீல் சுலபத்தில் பெண்ட் ஆகாது என்றாலும், பெண்ட் ஆனால் சரிசெய்ய முடியாது. ஸ்போக் வீலைச் சரி செய்யலாம் என்றாலும், கவனமாக இருப்பது நல்லது. பெண்ட் ஆன வீலுடன் வாகனத்தை ஓட்டினால், செயின் ஸ்பிராக்கெட் பாதிக்கப்படும். டயர் ஏறுக்கு மாறாகத் தேயும். பைக்கின் பெர்ஃபாமென்ஸ், செயல்பாடு என ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும்.

 எலெக்ட்ரிகல்

முடிந்தவரை மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் பைக்கைப் பாதுகாத்தால் எலெக்ட்ரிகல், பெயின்ட் போன்றவற்றில் பிரச்னைகள் வராது. ஹெட்லைட் பல்பை அதிக வெளிச்சம் தருவது போல மாற்றுவதாக இருந்தால் அல்லது அதிகச் சத்தம் தரும் ஹாரன் பொருத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட வாட்ஸ் அளவுள்ளதுதான் பொருத்த வேண்டும். மாற்றிப் பொருத்தினால், எலெக்ட்ரிகல் பாகங்கள் பாதிப்பதுடன் எலெக்ட்ரிக் ரெகுலேட்டரும் சேதமாகும். எனவே, எலெக்ட்ரிகல் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருங்கள்.

பிரேக்

பிரேக்கில் கால் வைத்துக்கொண்டே அல்லது பிரேக் லீவரைப் பிடித்தவாறு பைக் ஓட்டுவது தவறு. அப்படி ஓட்டினால், பிரேக் பேட் விரைவில் தேய்ந்துபோகும். மேலும், பிரேக்கை அழுத்தியவாறு ஓட்டுவதால், அதிக வெப்பம் உருவாகும். இதனால், பிரேக் ட்ரம் தேய்ந்துவிடுவதுடன் மைலேஜும் கணிசமாகக் குறையும். எனவே. தேவை ஏற்படும்போது மட்டுமே பிரேக் பெடலில் கால் வைப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

மேலும், இன்ஜினும் ஒரு பிரேக்தான் என்பது பலருக்குப் புரிவது இல்லை. அவசரமாக பிரேக் பயன்படுத்தும்போது, கிளட்ச்சையும் பயன்படுத்துவது தவறு. கிளட்ச் பிடிக்கவில்லை என்றால், இன்ஜின் ஆஃப் ஆகி விடாதா எனக் கேள்வி எழும். கிளட்ச்சையும் சேர்த்துப் பிடிக்கும்போது, பைக் ஸ்டெபிளிட்டி பாதிக்கப்படும். மேலும், பைக் நிற்கும் தூரமும் அதிகரிக்கும்.

கிளட்ச் பிடிக்கவில்லை என்றால், இன்ஜினும் வீலும் நேராக இணைந்திருக்கும். ஆக்ஸிலரேட்டர் குறைவதும் பிரேக் பெடல் அழுத்தப்படுவதும் ஒரே சமயத்தில் நிகழும்போது, நீங்கள் திட்டமிட்ட தூரத்துக்கு முன்பாகவே பைக் நின்றுவிடும். அதேபோல், முன்-பின் இரு பிரேக்குகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்துவதும் அவசியம். டிஸ்க் பிரேக்கைப் பொறுத்தவரை அதில் நாமாகச் செய்ய எதுவும் இல்லை. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், பிரேக் ஃப்ளூயிட் லெவல் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். அளவு குறைந்தால், உடனே சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசெல்வது நல்லது. அதேபோல், பிரேக் டிஸ்க்கில் சேறு படியாமல் சுத்தமாகப் பராமரித்து வரவேண்டியது அவசியம்.

 ஏர் ஃபில்ட்டர்

ஏர் ஃபில்ட்டர் அவசியம் கவனிக்க வேண்டிய முக்கியமான பாகம். இன்ஜினுக்குள் செல்லும் காற்றைச் சுத்தமாக்கி அனுப்பும் வேலையைச் செய்யும் இது சேதம் அடைந்திருந்தாலோ அல்லது நீண்டநாள் பயன்படுத்தியதால் தூசு அதிகம் சேர்ந்திருந்தாலோ பிரச்னைதான். காற்றில் உள்ள தூசு இன்ஜினுக்குள் சென்றால், சிலிண்டரில் ஸ்க்ராட்ச் ஏற்படும். இதனால், இன்ஜின் விரைவாகத் தேயும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏர்ஃபில்ட்டரைச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏர் ஃபில்ட்ட்ரையே மாற்றுவதும் அவசியம்.

 கார்புரேட்டர்

காற்றும் பெட்ரோலும் கலக்கும் இடம் கார்புரேட்டர். இதில், பல ஸ்க்ரூ-க்கள் இருக்கும். சில சமயங்களில் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், இதில் இருக்கும் ஏதாவது ஒரு ஸ்க்ரூவைத் திருக்குவது சிலருக்குப் பழக்கமாக இருக்கிறது. அப்படிச் செய்யவே கூடாது. ஏனெனில், காற்றும் பெட்ரோலும் என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த ஸ்க்ரூ-க்கள் அட்ஜஸ்ட் செய்யப்பட்டிருக்கும். இதில் ஏதாவது ஒன்றைத் திருகினால், ஏறுக்குமாறாக மாறிவிடும். இதில் கைவைக்காமல் சுத்தமாகப் பராமரிப்பது மட்டுமே சிறந்தது. இதில் உள்ள 'சோக்’-கை அதிகாலை நேரத்தில் ஸ்டார்ட் செய்யும்போது அல்லது ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற சமயத்தில் சோக் ஆன் ஆகி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஓட்டுவது நல்லது. ஏனெனில், சோக் அமைப்பு அதிக பெட்ரோல், குறைவான காற்று இன்ஜினுக்குச் செல்வதுபோல வடிவமைக்கப்பட்டது. கவனிக்காமல் ஓட்டினால், டேங்க்கில் இருக்கும் பெட்ரோல் காலியாகிவிடும்.

 அவசியம் இல்லாத ஆக்சஸரீஸ்

புதிதாக பைக் வாங்கிய உடனே பல்வேறு ஆக்சஸரீஸ் வாங்கி அழகுபடுத்துவார்கள். அது தவறு இல்லை. ஆனால், இதில் ஹேண்ட் கிரிப், சீட் கவர், இன்ஜின் கார்டு போன்றவை அவசியமற்றவை என்பதுடன் பைக்குக்கு பாதுகாப்பானதும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், பைக்கில் ஏற்கெனவே இருக்கும் ஹேண்ட் கிரிப் மனித கைகளின் அளவுக்கு ஏற்ப திட்டமிட்டு டிஸைன் செய்தவை. அதன் மீது வேறு க்ரிப் பொருத்தும்போது, அளவு மாறுபடும். அளவு மாறினால், வாகனத்தின் செயல்பாடும் மாறுபடும். அதேபோல், பைக்கில் இருக்கும் ஒரிஜினல் சீட் கவர் கிரிப்புடன் இருக்கும் வகையில் டிஸைன் செய்யப்பட்டது. அதாவது, பைக் ஓட்டுபவர் திடீரென பிரேக் பிடிக்கும்போது சீட்டில் இருந்து நழுவாமல் இருக்க வேண்டும். அதன் மீது வழுக்கும் தன்மைகொண்ட கவரைப் போட்டால், அதன் நோக்கம் நிறைவேறாது.

Thursday, March 6, 2014

பெண்களுக்குப் பொதுத்துறை வங்கிகளில் தொழில் கடன் கிடைக்கும் !

இது பெண்களுக்கான காலம். மத்திய, மாநில அரசாங்கங்களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்களின் முன்னேற்றத்தை மனதில்கொண்டு தொழில் கடன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிறவரை பலவிதமான சலுகைகளையும் முன்னுரிமைகளையும் நிறையவே வழங்கி வருகின்றன. ஆனால், என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது பல பெண்களுக்குத் தெரிவதில்லை.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டு நிறுவனம்  (எம்.எஸ்.எம்.இ), சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களைச் செய்ய விரும்பும் பெண்களுக்குப் பொதுத்துறை வங்கிகளில் தொழில் கடன் வாங்க உதவுகிறது. அப்படி வாங்கும்போது பெண்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் !

புதிய தொழில் முனைவோர்களுக்கு..?

''புதிதாகத் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு புதிய தொழில்முனைவோர் அபிவிருத்தித் திட்டம் மிக உகந்ததாக இருக்கும். இந்தத் திட்டத்தில் கடன் பெற ஆண்களுக்கு 21 - 35 வயது எனில், பெண்கள் 21 - 45 வயது வரம்பில் கடன் பெறலாம். இந்தத் திட்டத்தில் 50 சதவிகிதம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடன் தொகையாக ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை வழங்கப்படுகிறது. தொழில் தொடங்குபவர்கள் தங்கள் பங்காக (மார்ஜின் தொகை) 5 சதவிகித பணத்தைத் தரவேண்டும். 

வேலையில்லாதவர்களுக்கு..!
வேலையில்லா இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி சார்ந்த வாய்ப்புகளுக்கு ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த வாய்ப்புகளுக்கு ரூ.3 லட்சமும் கடன் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்களுக்கு வயது வரம்பு 18 - 35 வயது எனில்,  பெண்களுக்கான வயது வரம்பு 18 - 45 ஆகும். தொழில் தொடங்குபவர்கள் தங்கள் பங்காக (மார்ஜின் தொகை) 5 சதவிகித பணத்தைத் தரவேண்டும்.  

 

சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்! 

பாரதப் பிரதமர் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.5,000 முதல் 25 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. இதுவே சேவைத் துறைக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. இந்த சுயவேலை வாய்ப்புத் திட்டத்துக்கு 18 வயதுக்கு மேல் இருக்கவேண்டும். தொழில் தொடங்கும் பெண்கள் தங்கள் பங்காக 5 சதவிகித தொகையைச் செலுத்த வேண்டும்'.

பெண்களுக்கான கடன் திட்டங்கள்!  

 

இரண்டாவதாக, சமையலறையை நவீனமாக்க வழங்கப்படும் பி.எம்.பி கிச்சன் மார்டனைசேஷன் லோன், நிரந்தரச் சம்பளம் வாங்கும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், தொழில் செய்யும் பெண்களுக்குத் தரப்படுகிறது (ஆண்டு நிகர வருமானம் 3 லட்சத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும்). குறைந்தபட்ச வயது 21, அதிகபட்சம் வரம்பு, சம்பளம் வாங்கும் பெண்களுக்கு 60 வயது. மற்றவர்களுக்கு 55 வயது. மார்ஜின் தொகை 15% முதல் 20%. குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ.50,000மும் அதிக பட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் 12.25%

மூன்றாவதாக, காப்பகங்களை விரிவுபடுத்தவும் கடன் வழங்கப் படுகிறது. இந்தக் கடன்பெற பட்டதாரியாக இருக்கவேண்டும். வயது வரம்பு 21-55. குறைந்தபட்ச கடன் தொகை ரூ.50,000. கிராமம் மற்றும் சிறு நகரங்களுக்கு ரூ.2.50 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலும், நகரம் மற்றும் மெட்ரோ நகரங்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. மார்ஜின் தொகை ரூ.1 லட்சத்துக்கு 15 சதவிகிதமும், ரூ.1 லட்சத்துக்குமேல் வழங்கப்படும் தொகைக்கு 23 சதவிகிதமுமாக உள்ளது.  வட்டி 12.25%.

நான்காவது திட்டமாக, பியூட்டி பார்லர்கள், சலூன்கள் அமைக்க கடன் வழங்கப்படுகிறது. இதற்கு வயது வரம்பு 20-60 வயது. குறைந்தபட்ச கடன் தொகை ரூ.50,000. அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10 லட்சம் வரையில் வழங்கப்படும். அதேசமயம் கிராமம் மற்றும் சிறிய நகரங்களுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மார்ஜின் தொகையாக ரூ.2 லட்சம் வரையிலான கடனுக்கு 15 சதவிகிதமும், ரூ.2 லட்சத்துக்கு மேலான கடன் தொகைக்கு 25 சதவிகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 12.25 சதவிகிதமாகும்.