Saturday, August 23, 2014

Cadget - goTenna A breif

வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில் சமீபத்தில் ‘கோடென்னா’ (goTenna) என்ற கருவி வெளியாகியுள்ளது.

சிற்றலை (Low frequency) மூலம் இயங்கும் இந்தக் கருவி எந்த செல்போன் நெட்வொர்க்கின் உதவியும் இல்லாமல் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பவல்லது. அதாவது, இந்த ‘கோடென்னா’ கருவியை இரண்டு நபர்கள் வைத்திருந்தால், அவர்கள் இருவரும் செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்திகளை பரிமாறலாம். மௌத்-ஆர்கன் போலத் தோற்ற மளிக்கும் இந்தக் கருவியின் மேல்புறத்தை ஆன்டெனா போல இழுத்துவிடலாம்.

 

நீண்ட தூரத்திலும் பயன்படுத்தும் வகையில் 151-154 MHz அலைவரிசையை இந்தக் கருவி பயன்படுத்துகிறது. 147mm உயரமும் 56.7 கிராம் எடையும் கொண்ட இந்தக் கருவி தண்ணீர் மற்றும் தூசிகள் உள்ளே செல்ல முடியாதபடி  அமைக்கப் பட்டுள்ளது.ஒரு இண்டிகேட்டர் லைட் மற்றும் ஃப்ளாஷ் மெமரியைக் கொண்டுள்ளது ‘கோடென்னா’. இந்த ஃப்ளாஷ் மெமரி பல்லாயிரக்கணக்கான மெசேஜ்களை சேமித்துக்கொள்ளும் தன்மையுடையது. லித்தியம்-ஐயான் (Lithiyum-ion) பேட்டரியைக் கொண்டுள்ள இந்தக் கருவியை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.இந்தக் கருவியை இரண்டு வெவ்வேறு இடத்தில் வைத்திருக்கும் நபர்கள் அவர்களது ஸ்மார்ட்போனில் ‘கோடென்னா’வை கட்டாயமாக இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். தற்சமயம் இந்தக் கருவி ஆப்பிளின் ‘ios’ மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களில் மட்டும்தான் கிடைக்கிறது. பரபரப்பான நகரத்தில் 2.5 கி.மீ தூரத்திலும்,  பாலைவனத்தில் 10 கி.மீ, வரையில் இந்தக் கருவியைக் கச்சிதமாகப் பயன்படுத்தலாம்.

அமெரிக்கச் சந்தையில் இரண்டு ‘கோடென்னா’ கருவிகள் $149.99 என்ற விலையில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் செல்போன் உலகத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Race Between mobile companies

செல்போன்கள் நம் நாட்டில் நுழைந்த காலத்தில், நோக்கியா நிறுவனம் தயாரித்த செல்போன்கள்தான் முதலிடத்தில் இருந்தது. அதிக எடையுள்ள கீ-பேடு உள்ள செல்போன் பயன்படுத்திய திலிருந்து மாறி, இன்று ஸ்லிம்-டச் ஸ்கிரீன் செல்போன்களுக்கு நம் வாடிக்கையாளர்கள் மாறிவிட்டார்கள்.

டிசைன், சைஸ், துல்லியமான கேமரா, டபுள் சிம்/டிரிபிள் சிம் என பல்வேறு வசதிகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு தருவதால், புதிய செல்போன் நிறுவனங்கள் பழைய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பந்தயத்தில் முன்னணியில் நிற்கின்றன. நோக்கியா, சாம்சங், மைக்ரோமேக்ஸ் என போட்டியில் மல்லுக்கட்டி நிற்கும் இந்த நிறுவனங்கள் எப்படி தங்களை நம் நாட்டில் நிலைப்படுத்திக் கொண்டன, எப்படி மாறி முதலிடத்தைப் பிடித்தன?
 
‘இன்று செல்போன் என்பது அனைவருக்கும் அத்தியாவசியம் தேவைப்படும் பொருட்களில் ஒன்றாகி விட்டது. அதிலும் நாம் எந்தத் தொழில் நுட்பம் உள்ள செல்போன் வைத்திருக் கிறோம் என்ற அளவுக்கு மாறிவிட்டது இன்றைய தொழில்நுட்ப செல்போன் உலகம். செல்போன் உலகில் முதலிடம் என்பது நிரந்தரமற்றது. புதுமைகளும், வித்தியாசங்களும் அதிவேகமாக மாறிவரும் துறை என்பதால் இதில் முதலிடம் என்பது கைமாறிக் கொண்டேதான் இருக்கும்.
 
 
இந்திய செல்போன் மார்க்கெட்  அதிகம் நம்பியிருப்பது நடுத்தர வருமானம் கொண்ட நபர்களைத்தான். அதிக விலை கொடுத்து வாங்கும் ஆப்பிள் போன்களை மிகச் சிலர்தான் விரும்புகிறார்கள். 

இந்தியர்கள் செல்போன் பயன் பாட்டைத் துவங்கிய காலத்திலிருந்து நீண்ட காலத்துக்கு விற்பனையில் முன்னணி வகித்த நிறுவனம் நோக்கியாதான். காரணம், அறிமுகத்தில் நல்ல தரத்திலும் மக்களுக்குப் புரியும்படியான யூசர் ஃப்ரெண்ட்லி செல்போன்களை அறிமுகப்படுத்தியது நோக்கியாதான். ஏறக்குறைய அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்திய செல்போன் நிறுவனம் என்றே சொல்லலாம். கேமரா, மியூசிக் என அனைத்து வசதிகளோடும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய முதல் செல்போனாகவும் நோக்கியா இருந்தது.ஆனால், தொழில்நுட்பம் என்கிற விஷயத்தில் நோக்கியா நிறுவனம் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இதேசமயத்தில் தான் மற்ற செல்போன் நிறுவனங்களும் இந்திய செல்போன் மார்க்கெட்டை நோக்கி படையெடுக்கத் துவங்கின. வெளிநாடுகளில் மட்டுமே இருந்த தொழில்நுட்பமாகக் கருதப்பட்ட தொடுதிரை செல்போன்கள் எனப்படும் டச் ஸ்கிரீன் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகத் தொடங்கின. ஏற்கெனவே சிறிய அளவில் சாதாரணக் கீ-பேடு போன்களை விற்பனை செய்துவரும் பிரிவில் இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனை கொண்டு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.
டச் ஸ்கிரீன் செல்போனிலும், இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனிலும் கால்பதிக் காமல் இருந்தது நோக்கியா. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சாம்சங் இந்தப் பிரிவுகளில் தன்னை நிலைபடுத்திக் கொண்டது. புதிய தொழில்நுட்பம், புதிய செயல்பாட்டு அமைப்பு என்ற அடிப்படையில் இந்தியர்களின் ஸ்மார்ட்போன் மனநிலையைப் புரிந்துகொண்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டது சாம்சங். நோக்கியா தொழில்நுட்பத்தில் தவறவிட்ட இடத்தைப் புதிய தொழில்நுட்பத்தால் பிடித்தது சாம்சங்!

 

பழைய சிம்பியான் (SYMBIAN) ஓஎஸ்களைப் பயன்படுத்தி வந்தவர் களுக்குத் தெரிந்திருந்த அடுத்தத் தொழில்நுட்பமாக ஐஓஎஸ் (iOS) தான் இருந்தது. அது அனைவராலும் பயன்படுத்த முடியாத விலை அதிகமுள்ள ஆப்பிள் போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்ட்ராய்டு ஓஏஸ்களுடன் சாம்சங் டச் ஸ்கிரீன் மொபைலை அறிமுகப்படுத்தி விற்பனையில் நோக்கியாவை முந்தியது.சாம்சங் நல்ல தொழில்நுட்பத்தை வழங்கினாலும் சற்று விலை அதிகமுள்ள செல்போனாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நேரத்தில்தான் சீனாவின் செல்போன் நிறுவனங்களும், இந்திய செல்போன் நிறுவனங்களும் வரத் தொடங்கின. குறைந்த விலையில் செல்போன்களை வழங்கத் துவங்கின. வருமானம் குறைவாக உள்ளவர்களாலும் செல்போன்களை வாங்க முடியும் என்ற நிலை ஆரம்பிக்கத் துவங்கியது ஆனால், சரியான தரத்தை இந்த நிறுவனங்களால் வழங்க முடியவில்லை.அப்போது குறைந்த விலையில் ஓரளவுக்கு நல்ல தரத்தில் ஒரு நிறுவனம் வந்தால் அதனால் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறமுடியும் என்ற நிலை இருந்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது மைக்ரோமேக்ஸ்.சாம்சங் தரும் அதே தொழில்நுட்பம் நோக்கியாவை போன்ற யூசர் ஃப்ரெண்ட்லி அமைப்பு, குறைந்த விலை என வாடிக்கையாளரை முழுமையாகத் திருப்திப்படுத்தும் விதத்தில் அமைந்தது மைக்ரோமேக்ஸ். அதிகமாக செல்போன் விற்பனையாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவரும் நிலையில் இந்தியர்களின் மனநிலைக்கு ஏற்ற செல்போனை விற்கும் இந்திய நிறுவனம் ஒன்று விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது ஆச்சர்யம்தான்!

அழைப்புகளுக்காவும், குறுஞ்செய்தி களுக்காவும் மட்டும் இருந்துவந்த செல்போன்கள், இன்று எங்கு செல்வது எனக் காட்டும் மேப் வசதி, இன்டர்நெட் வசதி என பல்வேறு வசதிகளை வழங்கும் ஆப்ஸ்கள் என செல்போன் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாறிவிட்ட நிலையில், இந்தப் போட்டி கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான களத்தை உருவாக்கி யுள்ளது. இதில் இந்தியர்களின் மனநிலையைப் புரிந்த நிறுவனங்கள் முதலிடத்தை நோக்கிய போட்டியில் எப்போதும் முன்னணியில் ஓடிகொண்டு தான் இருக்கும்.

சைபர்சிம்மன்

எபோலோ என்றால் என்ன?

இன்று உலகை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்! இந்தக் கொலைகார வைரஸின் தாக்குதலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 932. 'உலகின் அனைத்து நாடுகளும் எபோலா தாக்குதல் குறித்து அதீத முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்! 

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா... என எத்தனையோ வியாதிகள் வருகின்றன. ஆனால், அவற்றைவிட எபோலா வுக்கு உலகம் கூடுதலாக அலறுகிறதே... ஏன்? ஏனெனில், எபோலா வந்தால் மரணம் நிச்சயம். அதற்கான தடுப்பு மருந்துகளோ, குணமாக்கும் மருந்துகளோ இன்னும் கண்டறியப் படவில்லை. திடீர் காய்ச்சல், கடும் அசதி, தசை வலி... எனத் தொடங்கி, கடும் வயிற்றுப்போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசிவது வரை சென்று இறுதியில் மரணம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நான்கு நாடுகளில்தான் இப்போது எபோலாவின் தாக்குதல் அதிகம். ஆகஸ்ட் முதல் வார நிலவரப்படி இந்த நாடுகளில் மொத்தம் 1,603 பேர் எபோலா பாதிப்புக்கு உள்ளாகி, அதில் 932 பேர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். 'எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை மிக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது இதுவே முதல்முறை’ என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். 1976-ம் ஆண்டு காங்கோ குடியரசு நாட்டில் எபோலா வைரஸ் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உகாண்டா, சூடான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போதைய எபோலா தாக்குதல் முழுக்க, முழுக்க உள்ளடங்கிய கிராமப்புறங்களில் நிகழ்கிறது. மருத்துவ வசதிகள் உடனுக்குடன் சென்று சேர முடியாத அந்தப் பகுதிகளில், நோயின் தீவிரமும் பரவுதலும் மிக வேகம்!

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான், 'நமது கட்டுப்பாட்டு வரம்புக்கு அப்பாற்பட்டு எபோலா பரவிக்கொண்டிருக்கிறது’ என்று பதறுகிறார். எபோலா தாக்குதலுக்குள்ளான நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 44,700 இந்தியர்கள் வசிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் மூலம் எபோலா இந்தியாவுக்குள் வரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மற்றொரு கோணத்தில், திடீரென எபோலா பயம் பரவ என்ன காரணம் என்ற ரீதியிலும் விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன. எபோலா மருந்துக்கான மார்க்கெட்டை உண்டாக்கும் முயற்சி, எபோலா வைரஸ்களை 'உயிரியல் ஆயுதமாக’ நிலைநிறுத்தும் முயற்சி என்றெல்லாம் ஏக பரபரப்புகள்.


இந்தப் பிரச்னையில் தென்னிந்தியா, அதிலும் குறிப்பாக சென்னை மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சென்னை, 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டினர் சிகிச்சைக்காக இங்கு வந்துசெல்கின்றனர். இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலா வருபவர்களில் 45 சதவிகிதம் பேர் சென்னைக்குத்தான் வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 150 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். இவர்கள் மூலமாக எபோலா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம். இரண்டாவது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான நர்ஸ்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள். அதில் ஆப்பிரிக்க நாடுகளும் உண்டு. இவர்கள் திருவனந்தபுரம் அல்லது சென்னை விமான நிலையத்தின் வழியேதான் ஊர் திரும்ப வேண்டும். இவர்கள் மூலமாகவும் எபோலா வரலாம். தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் நிறைய ஆப்பிரிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்பும்போது எபோலாவைச் சுமந்து வரக்கூடும். இவற்றையும், இன்னும் மற்ற சாத்தியங்களையும் யூகித்து, முன் தடுப்பு நடவடிக்கைகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டாக வேண்டும்.
நகர்மயமாதலில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கும் சென்னையில் மக்கள் நெருக்கடி மிக அதிகம். ஆக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!

எபோலா... அறிகுறிகள் என்ன?

எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது.
1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்... அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து... போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.

2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.

3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா தாக்கும்.

எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.

எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு... போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.  

எபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.  

சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர் களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்!

எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469
 

unbreakable baloon...


நெருப்புப் பட்டாலோ, கூர்மையான பொருள்பட்டாலோ உடைந்துவிடக்கூடியது பலூன். நெருப்பில் பட்டாலும் பலூன் உடையாமலோ, உருகாமலோ இருக்கும். எப்படி? செய்து பார்க்கலாம் வாருங்கள்.

என்ன தேவை?

பலூன்கள் - 2
மெழுகுவர்த்தி -1
தீப்பெட்டி - 1
தண்ணீர் - 1/2 கப்


எப்படிச் செய்வது?

ஒரு பலூனை ஊதி நன்றாகக் கட்டிக்கொள்ளுங்கள்.

இன்னொரு பலூனில் 1/4 கப் தண்ணீரை ஊற்றி, ஊதி, இருக்கமாகக் கட்டுங்கள்.
மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.

நீர் ஊற்றாத பலூனை மெழுகுவர்த்தி ஜுவாலைக்கு அருகில் கொண்டு செல்லுங்கள்.

இப்போது பலூன் உடைந்துவிடுகிறது.

அடுத்து, தண்ணீர் ஊற்றிய பலூனை எடுத்துக்கொள்ளுங்கள்.

மெழுகுவர்த்தியின் ஜுவாலையில் காட்டுங்கள்.

என்ன நிகழ்கிறது? பலூன் உடையவில்லை. தொடர்ந்து சிறிது நேரம் நெருப்பில் காட்டினாலும் பலூன் உடையவில்லை. ஏன்?

சாதாரண பலூனை நெருப்பில் காட்டும்போது நேரடியாக வெப்பம் பலூனைத் தாக்குவதால் பலூன் உடைந்துவிடுகிறது. அதே நேரம், தண்ணீர் இருக்கும் பலூனில் வெப்பம் நேரடியாக பலூனைத் தாக்கவில்லை. வெப்பம் தண்ணீருக்குக் கடத்தப்படுகிறது. இதனால் பலூன் உடையவில்லை. இதே போல பால் பாக்கெட்டில் தண்ணீர் விட்டும் செய்து பாருங்கள்!

ஒரு பூமி., ஒரே கடல் ...


கடற்கரைக்குப் போவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும். தமிழ்நாட்டின் கிழக்குக் கரை ஓரமாக உள்ள எந்த ஊராக இருந்தாலும் கடற்கரைக்குப் போய் நாம் காண்பது வங்கக் கடலே. உண்மையில் இதன் பெயர் வங்காள விரிகுடா.

இந்தியாவின் மேற்குக் கரையோரமாக உள்ளது அரபுக் கடல். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்குத் தெற்கே இந்துமாக் கடல் அமைந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இந்துமாக் கடல், பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல், வட துருவப் பகுதியில் அமைந்த ஆர்டிக் கடல், தென் துருவப் பகுதியில் அண்டார்டிக் கண்டத்தை ஒட்டி அமைந்த தென் கடல் ஆகிய ஐந்து பெரிய கடல்கள் (சமுத்திரங்கள்) அமைந்துள்ளன. இவற்றைப் பெருங்கடல்கள் என்றும் சொல்வதுண்டு.

இவற்றைத் தவிர வங்கக் கடல், அரபுக் கடல், செங்கடல், பாரசீக வளைகுடா, பால்டிக் கடல், மத்திய தரைக்கடல் என நூற்றுக்கும் மேற்பட்ட கடல்கள் உள்ளன. இவை மேலே கூறப்பட்ட ஐந்து பெருங்கடல்களின் ஓரங்களில் அல்லது நடுவில் நிலப் பகுதியை ஒட்டி அமைந்தவை. தவிர, இவை சமுத்திரங்களை விடவும் சிறியவை.

சொல்லப் போனால் உலகம் முழுமைக்குமாக ஒரே கடல்தான் உள்ளது. உலகில் ஏதாவது ஒரு மூலையிலிருந்து கப்பலில் கிளம்பினால் பூமியை ஒரு தடவை சுற்றி வந்துவிட முடியும். அதாவது ஐந்து பெருங்கடல்களும் மற்றுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கடல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே.

கன்னியாகுமரியிலிருந்து கிளம்பினால் ஸ்ரீநகர் வரை நம்மால் காரில் செல்ல முடியும். அது மாதிரிதான் இதுவும். கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீநகர் வரை தொடர்ச்சியாக உள்ள நிலப்பகுதியை நாம் பல்வேறு மாநிலங்களாகப் பிரித்து வெவ்வேறு பெயர்களை வைத்துள்ளோம். அந்தந்த மாநிலங்களுக்குள்ளாக பல மாவட்டங்களும் தாலுகாக்களும் உள்ளன. உலகில் கடல்களையும் நாமாக இவ்விதம் பிரித்து தனித்தனிப் பெயர்களை வைத்துள்ளோம்.

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்தால் பூமியானது பெரிய உருண்டையாகத் தெரியும். உலகின் கடல்கள் எல்லாம் சேர்ந்து நீல நிறத்தில் காட்சி தரும். கடல்கள் இடையே எல்லை என்பதே இல்லை என்பது நன்கு புலப்படும்.

உலகின் நிலப் பகுதியில் மேடு பள்ளம் உண்டு. மலைகள் உண்டு. பள்ளத்தாக்கு உண்டு. ஆனால் கடலின் மேற்பரப்பில் மேடான பகுதி, பள்ளமான பகுதி என்பது கிடையாது. ஆகவேதான் கடல் மட்டம் என்ற அளவு முறையைப் பயன்படுத்துகிறோம்.

இமயமலையில் அமைந்த எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர் உயரம் என்று சொல்கிறோம். அதாவது அது கடல் மட்டத்திலிருந்து அவ்வளவு உயரம் என்று அர்த்தம். நிலப் பகுதியில் உள்ள எல்லா இடங்களும் இவ்விதம் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்று கணக்கிடப்பட்டு அவ்விதமே குறிப்பிடப்படுகின்றன.

உங்கள் ஊரில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தால் பிளாட்பாரத்தின் கோடியில் பெயர்ப் பலகை இருக்கும். அதில் அந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்பது மீட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் இதைக் காணலாம்.

நீங்கள் ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டினால் ஒரு பக்கம் மேடாகவும் ஒரு பக்கம் தாழ்வாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றினால் ஒரே அளவாக இருக்கும். தண்ணீரின் மேற்பரப்பில் மேடு பள்ளம் இருக்காது. இதை நீர் மட்டம் (Water Level) என்பார்கள். வீடு கட்டும் கொத்தனார்கள் கட்டுமானப் பணியின்போது ஒரே அளவாக இருக்கிறதா என்று சோதிக்க நீர் மட்டம் பார்ப்பார்கள். இதற்கென கருவி வைத்திருப்பார்கள். 
நியாயமாகப் பார்த்தால் ஏரிகளில் காணப்படுவது போல கடல்களில் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் எப்போதும் ஒரே அளவில் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பது இல்லை. கடல்களில் காற்று காரணமாக அலைகள் வீசுகின்றன. புயல்கள் காரணமாக பெரிய அலைகள் தோன்றுகின்றன. இவை அல்லாமல் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஓரளவு ஈர்ப்பு காரணமாக கடல் நீர் பொங்கும். பின்னர் உள்வாங்கும். பூமி தனது அச்சில் சுழல்வதால் எல்லாக் கடல்களிலும் இது நிகழும். இதை வேலை ஏற்றம் என்றும் வேலை இறக்கம் என்றும் கூறுவர். (வேலை என்றால் கடல் என்று பொருள்).

இதன் விளைவாக உலகில் துறைமுகங்களில் ஒரு சமயம், அதாவது வேலையேற்றத்தின்போது கடல் நீர் வெள்ளம் போல உள்ளே பாயும். வேறு சில சமயங்களில் வேலை இறக்கத்தின்போது துறைமுகத்திலிருந்து கடல் நீர் இதேபோல வெளியே பாயும். கடல் நீர் துறைமுகத்துக்குள்ளே பாயும்போது கப்பல்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழையும். துறைமுகத்திலிருந்து கடல் நீர் வெளியே பாயும்போது அதை அனுசரித்து கப்பல்கள் துறைமுகத்திலிருந்து வெளியே செல்லும்.

வேலை ஏற்றமும் வேலை இறக்கமும் ஏற்படும் நேரங்கள் எல்லா இடங்களிலும் தினமும் மாறிக்கொண்டே இருக்கும். இதை முன்கூட்டிக் கணித்து அது பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுகள் வெளியிடப்படுகின்றன. துறைமுக நிர்வாகிகளுக்கும் கப்பல் கேப்டன்களுக்கும் இந்தக் கையேடுகள் மிக உதவியாக உள்ளன.கடல் மட்ட மாறுபாடு பற்றிக் குறிப்பிட்டோம். உலகின் கடல்களில் அபூர்வமாக ஒரு சில இடங்களில் கடல் ஒரு பக்கம் மேடாகவும் மறுபக்கம் தாழ்வாகவும் இருக்கத்தான் செய்கிறது. தென் அமெரிக்கக் கண்டமும் வடஅமெரிக்கக் கண்டமும் சேரும் இடத்தில் பனாமா என்ற நாடு உள்ளது. இங்கு மேற்குப் புறத்தில் பசிபிக் கடல் உள்ளது. கிழக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடல் உள்ளது. இந்த இடத்தில் பசிபிக் கடல் பகுதியின் நீர் மட்டமானது அட்லாண்டிக் கடலின் நீர் மட்டத்தைவிட 20 செண்டிமீட்டர் உயரமாக உள்ளது. இதற்கு பசிபிக் பகுதியில் உள்ள நீரோட்டமே காரணம்.உலகில் உள்ள பெருங்கடல்கள் பற்றி ஆரம்பத்தில் கவனித்தோம். இவற்றில் பசிபிக் கடல்தான் பரப்பளவில் மிகப் பெரியது. அட்லாண்டிக் இரண்டாவது இடத்தையும் இந்துமாக்கடல் மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.இந்தக் கடல்களின் பரப்பளவு மாறாமல் என்றுமே இந்த அளவில் நீடிக்குமா என்று கேட்கலாம். ஆனால் அது அப்படி இல்லை. அட்லாண்டிக் கடலின் பரப்பளவு ஆண்டு தோறும் மெல்ல அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பசிபிக் கடலின் பரப்பளவு மெல்லக் குறைந்து வருகிறது.

என்.ராமதுரை 

சாப்பிடாதீங்க....


இன்றைய மாணவர்கள் வகுப்பு இடைவேளைகளிலும் சரி, பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதும் சரி, சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களைக் குடிப்பதற்காகச் சாலையோரக் கடைகளை மொய்க்கின்றனர். இந்தப் பழக்கம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து தருகிறது என்று எச்சரித்துள்ளது, உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் அதிக அளவுக்கு டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு, காலரா, வாந்தி பேதி, சீதபேதி போன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சுத்தமும் சுகாதாரமும் குறைந்துள்ள சாலையோர உணவகங்களில் மக்கள் சாப்பிடுவதுதான் முக்கியக் காரணம் என்று அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.  

தள்ளு வண்டிகளில் உணவு வியாபாரம் செய்வோர் சமைத்த உணவுகளை மூடிப் பாதுகாப்பதில்லை; நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில்தான் உணவுகளை வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக மீன், இறைச்சி போன்றவற்றைப் பல துண்டுகளாக்கி, அவற்றில் மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை நிறமூட்டியைப் பூசி, எண்ணெயில் வறுப்பதற்குத் தயாராக வைத்திருப்பார்கள். அப்போதுதான் அவர்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். அதேநேரத்தில் சாலைகளில் கிளம்பும் புழுதியும், வாகனங்கள் கக்கும் புகையும், மாசு நிறைந்த காற்றும் இந்த உணவுகளில் பட்டுப் புதைந்து, நச்சுக்கிருமிகளைத் தந்துவிடும். இவற்றில் ஈக்கள் மொய்க்கும். இது தொற்றுநோய்களுக்கு வழிவிடும்.

அடுத்து இந்த உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தரம் குறைந்தவை; கலப்படம் மிகுந்தவை. உதாரணமாக, இவர்கள் சமையலுக்கு ஆகும் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, தேங்காய் எண்ணெயையும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் கலந்து இறைச்சியை வறுக்கவும் பொரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். நெய்க்குப் பதிலாக டால்டாவையும், நல்லெண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் ‘எல்.டி.எல்.’ எனும் கெட்ட கொழுப்பு அதிகம். இதன் காரணமாக சாலையோர உணவகங்களில் அடிக்கடி சாப்பிடுவோருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் இளம் வயதிலேயே ஏற்படுகிற வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது என்று ‘இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்’ ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது.

இன்னொன்று, இம்மாதிரி உணவகங்களில் சமையல் எண்ணெயைச் சிக்கனப்படுத்துவதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைத்து உணவு தயாரிப்பார்கள்; பலகாரம் சுடுவார்கள். இதில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைக்கும்போது ‘டிரான்ஸ் கொழுப்பு அமிலம்’ உற்பத்தியாகிறது. இது தான் இருக்கிற கொழுப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை நேரடியாகவும் விரைவாகவும் அடைத்து, மாரடைப்பை உடனடியாக வரவழைக்கும் ஆபத்து நிறைந்தது.  

மேலும், இனிப்புப் பண்டங்களின் சுவையைக் கூட்டவும், அவற்றைக் கவர்ச்சிகரமாகக் காட்டவும் ‘தேசிய உணவு மற்றும் மருந்துத் தரக்கட்டுப்பாட்டுத் துறை’ அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகளையும், தரமில்லாத எசன்ஸ், அஜினோமோட்டோ போன்றவற்றையும் கலப்பதுண்டு. இந்த வேதிப் பொருள்கள் கலந்த உணவைச் சாப்பிடும்போது அஜீரணம், வயிற்றுப்போக்கில் தொடங்கி, இரைப்பை, குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் உண்டு.

ஆகவே, வீட்டில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் சிற்றுண்டிகளையும் பள்ளிக்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Micromax

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவில் அதிகம் மொபைல் போன்களை விற்பனை செய்த நிறுவனமாக, இந்திய நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில், பன்னாட்டளவில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தை இது முந்தியுள்ளது. CounterPoint Research அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த மொபைல் போன் விற்பனை ஆண்டுக்கு 2% உயர்ந்து வருகிறது. ஆனால், ஸ்மார்ட் போன் விற்பனை 68% உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் விற்பனைப் பிரிவில், மோட்டாரோலா, நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி, நான்காவது இடத்திற்கு வந்துள்ளது. இந்த பிரிவில், சாம்சங் 25.3% பங்குடன் முதல் இடத்தைத் தொடர்ந்து கொண்டுள்ளது. அடுத்த இரண்டாவது இடத்தில் மைக்ரோமேக்ஸ் 19.1% பங்குடன் உள்ளது. கார்பன், மோட்டாராலோ மற்றும் நோக்கியா அடுத்தடுத்த இடங்களைக் கொண்டுள்ளன. இந்த வகையில் மோட்டாராலோவின் விற்பனை இங்கு குறிப்பிடத்தக்கது. மோட்டோ வரிசையில் இந்நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட் போன்களின் விற்பனை பெரும் அளவில் இருந்தது.
இரண்டாவது காலாண்டில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சாதாரண வசதிகள் கொண்ட போன்கள் விற்பனையில், பத்தாவது பெரிய நிறுவனமாக இடம் பெற்றது. இந்த காலத்தில் தான், முதல் முதலாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், விற்பனையில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது.