Monday, February 24, 2014

Top 5 indians

டாப் 5 இந்தியர்கள்!

எந்த நாட்டுக்காரன் என்று பார்க்காதே... திறமைசாலியைத் தலைவனாக்கு!’  இதுதான் இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் சக்சஸ் மந்திரம்! அந்த ஃபார்முலாபடி உலகின் முதன்மையான சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு  இந்தியரான சத்யா நாதெள்ளா, சி.இ.ஓ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சமீபமாக, உலகின் டாப் நிறுவனங்கள் பலவற்றின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியர்களே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். பெப்ஸி நிறுவனத்தை இந்தியாவின் இந்திரா நூயி திறம்பட நடத்துவது முதல், இணையத்தின் திசையைத் தீர்மானிக்கும் முடிவுகளை எடுப்பது வரை, பல கட்டங்களில் இந்தியர்களின் ஆற்றலே உலக இயக்கத்தைத் தீர்மானிக்கிறது. அப்படி உயர்நிலை அதிகாரத்தில் இருக்கும் டாப்5 இந்தியர்கள் பற்றிய மினி பயோடேட்டா இங்கே...

சத்யா நாதெள்ளா   சி.இ.ஓ., மைக்ரோசாஃப்ட்

'''சத்யாவைத் தவிர வேறு ஒருவர் மைக்ரோசாஃப்டை திறம்பட நடத்த முடியாது!’ என அந்த நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸே பாராட்டுப் பத்திரம் வாசிக்கும், சத்யா நாதெள் ளாவுக்கு 46 வயது. ஹைதராபாத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மகனாகப் பிறந்தவர், அமெரிக் காவில் எம்.எஸ். படித்து முடித்துவிட்டு 1992-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 22 வருடங்கள் அங்கேயே பணி. பில் கேட்ஸ் தலைமையில் வெளியான 'விண்டோஸ் விஸ்டா’ பெரும் தோல்வி. ஸ்டீவ் பாமர் தலைமையில் அணி வெளியிட்ட சர்ஃபேஸ் டேப்லெட் சாதனம் மிகப்பெரும் தோல்வி. மேகக்கணினிய பாதையில் நிறுவனத்தை நடத்த முடிகிறவருக்கே அடுத்த தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பல வருடங்களாக மைக்ரோசாஃப்டின் கணினியப் பிரிவுக்குத் தலைமையேற்றுசிறப்பாக நடத்திக்கொண்டிருந்ததால் சத்யாவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகரான சத்யா, ''டீம் ஸ்பிரிட்டையும் லீடர்ஷிப்பையும் கிரிக்கெட்டில் இருந்துதான் கற்றுக்கொண்டேன்'' என்கிறார்!

 சுந்தர் பிச்சை
துணைத் தலைவர், கூகுள். தலைவர்  ஆண்ட்ராய்ட், க்ரோம், கூகுள் ஆப்ஸ் பிரிவு

சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்த சுந்தர் பிச்சைதான் கூகுள் நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட், கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்குத் தலைவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த சுந்தர், புதியதை உருவாக்குவதில் வல்லவர். 'இன்னொரு பிரவுஸர் தேவையா?’ என்று கேள்விகளுக்கு மத்தியில், கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி வியக்கவைத்தவர். இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில் இருக்கிறது க்ரோம். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை. மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக முயற்சிக்கும்  ஒவ்வொரு முறையும், 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத் தக்கவைத்துவருகிறது கூகுள்!  

சாந்தனு நாராயணன்

தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி, அடோப் சிஸ்டம்ஸ்.
சுமார் மூஞ்சி குமார்களுக்கு அல்ட்ரா டச் கொடுக்கும் போட்டோஷாப்பை உருவாக்கியது அடோப் சிஸ்டம்ஸ். அந்த நிறுவனத்தின் தலைவர் சாந்தனு நாராயணன், ஆந்திராவைச் சேர்ந்த உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதலில் ஆப்பிள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய சாந்தனு, டிஜிட்டல் போட்டோ ஷேரிங் இணையதளமான 'பிக்ட்ரா’வை உருவாக்கியவர். 2007-ம் ஆண்டு முதல் அடோப் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சாந்தனு, அடோப் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்க கடுமையாகப் போராடிவரும் நிலையில், அடோப்பில் புதுப் புது தொழில்நுட்பங்களுடன்கூடிய சாஃப்ட்வேர்களை உருவாக்கி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்!  

சஞ்சய் மெஹ்ரோத்ரா
நிறுவனர், தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, சான்டிஸ்க்.

மெமரி கார்டு மற்றும் ஃப்ளாஷ் டிரைவ் தயாரிப்பில் உலகின் முன்னனி நிறுவனமான சான்டிஸ்கை உருவாக்கியவர்களில் ஒருவர் சஞ்சய் மெஹ்ரோத்ரா. டிஜிட்டல் உலகில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சஞ்சய் செம ஸ்மார்ட். கடந்த வருடத்துக்கான 'அமெரிக்காவின் சிறந்த சி.இ.ஒ.’ விருது வென்றிருப்பவர். ''சாஃப்ட்வேர் துறையில் அப்டேட் இல்லையென்றால் அவுட்டேட் ஆகிவிடுவோம். அதே சமயம் அது சும்மா பப்ளிசிட்டி அப்டேட்டாக இல்லாமல், வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள அப்டேட் ஆக இருக்கவேண்டும்!'' என்கிறார்.

தாமஸ் குரியன்
நிர்வாகத் துணைத் தலைவர், ஆரக்கிள்.

மைக்ரோசாஃப்டுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஆரக்கிளைச் செலுத்துவதில், தாமஸ் குரியனுக்கு பெரும் பங்குண்டு. அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பட்டியலில் தொடர்ந்து 20 இடங் களுக்குள் இருந்து வருகிறார் தாமஸ் குரியன். இவர் விரைவில் ஆரக்கிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கின்றன ஹேஷ்யங்கள். ''வளர்ச்சி என்பது சீரான வளர்ச்சியாக இருக்கவேண்டும். இது நிறுவனம், ஊழியர்கள்... இரு தரப்புக்குமே பொருந்தும். இன்றைய ஐ.டி. இளைஞர்கள் சாஃப்ட்வேர் துறையின் உச்சகட்ட வளர்ச்சியை உடனடியாக எட்டத் துடிக்கிறார்கள். அதற்கு வேலையின் மீது பேரார்வமும், காரியம் சாதிக்கும் வியூகங்களும் வேண்டும்!'' என்பது இவரது பிரபல வாசகம்.

இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்!

இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்!

இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிவேகமாகப் பிரபலமாகி வருகிறது 'வாட்ஸ்ஆப்’ (WhatsApp) என்கிற 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ என்கிற ஆப்ஸ்... உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 30 கோடி பேர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்களாம். கொஞ்சம்கூட மிரட்டாத, எளிமையான தோற்றத்தில் இருக்கும் இந்த ஆப்ஸ் மூலம் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் என அனைத்தையும் அசால்ட்டாக அனுப்பலாம். இந்த 'வாட்ஸ்ஆப்’ மாதிரியான வேறு சில 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ ஆப்ஸ்களை இப்போது பார்ப்போம்.
 
 வைபர் (Viber) 

என்னதான் வாட்ஸ்ஆப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதில் வாய்ஸ்கால்கள் இல்லை. வைபரின் முக்கிய அம்சமே வாய்ஸ்கால்கள்தான். மிகக் குறைவான செலவில் இன்டர்நெட்டை பயன்படுத்தி பேசிக்கொள்வதற்கு இந்த 'வைபர்’ உதவி செய்கிறது. தவிர, மெசேஜ், ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் போன்றவற்றையும் தாராளமாக அனுப்பலாம்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.

பிபிஎம் (BlackBerry Messenger)

பிபிஎம் ஆப்ஸ்-ன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்புதான். பிபிஎம் ஆப்ஸை மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு 'பிபிஎம் பின்’ வழங்கப்படும். இதுபோல மற்றவர்களின் 'பிபிஎம் பின்’ இருந்தால் தான் அவர்களுக்கு மெசேஜ்களை அனுப்ப முடியும். இது பாதுகாப்பான அம்சமாக இருந்தாலும், இதன் வடிவமைப்பு பயன்படுத்துபவர்களை கவரும்படி இல்லை.

ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 1-5 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.


 
லைன் சாட் (Line Chat)

'லைன் சாட்’தான் தற்போதைய மார்க்கெட்டின் ஹாட் செல்லிங் ஆப்ஸ். பார்க்கக் கவர்ச்சியாகவும், பயன்படுத்த எளிதாகவும் அமைந்திருக்கும் இந்த ஆப்ஸின் மூலம் மெசேஜ், போட்டோ, வீடியோ, வாய்ஸ் மெசேஜ் என அனைத்தையும் அனுப்பலாம். மேலும், வீடியோ சாட்கள் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸிங் இந்த ஆப்ஸில் மிகச் சுலபம்.

ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.

குரூப் மீ (Group Me) 
 
குரூப் சாட்களுக்கான பிரத்யேகமான ஆப்ஸ் 'குரூப் மீ’. தோற்றத்திலும், பயன்பாட்டிலும் எளிமையாகவும் விரைவாகவும் இயங்கக்கூடிய 'குரூப் மீ’ ஆப்ஸ் மூலம் வெவ்வேறு இடத்தில் இருக்கும் நண்பர்கள், வியாபார ரீதியாக வீடியோ கான்ஃபரன்ஸ் என அனைவரும் ஒன்றாக குரூப் சாட் செய்ய முடியும். இதன் மூலமும் மெசேஜ், லொக்கேஷன் (பயனாளர் இருப்பிடம் குறித்த விவரங்கள், ரூட் மேப் போன்றவை), ஆடியோ, வீடியோ மற்றும் கான்டக்ட்களை அனுப்பலாம்.

ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 லட்சம் பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.

மேலே சொன்ன ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதுவும், இதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது என்பதுவும் கூடுதல் சிறப்பு.

தண்ணீர்..தண்ணீர்...

'ஊர்ல நம்ம வீட்டுலயும் 'வாட்டர் ப்யூரிஃபையர்' போட்டாச்சுல. நம்ம ஊர்ல வீட்டுக்கு வீடு இப்ப இந்த மெஷினுங்கதான் ஓடிட்டிருக்கு. உங்க 'மினரல் வாட்டர்' எல்லாம் தோத்துடும். சும்மா கல்கண்டு மாதிரி இருக்கும்ல....'' 
 
''என்னது, அந்த வரப்பட்டிக்காட்டுல வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்தறீங்களா?''

''பின்ன என்னப்பா... பத்து, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன வாய்க்கா தண்ணியைக்கூட அள்ளி அள்ளி குடிச்சுட்டு இருந்தவங்கதான். ஆனா, இப்ப தண்ணி சரியா இல்ல. நிலத்தடிநீர் கெட்டுப் போச்சு. போர் போட்டு எடுக்கற தண்ணியைகூட அப்படியே வாயில வெக்க முடியல. சுத்தமான தண்ணியா குடிக்கணும்ல...''

-நகரங்களில் மட்டுமல்ல... இன்று தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் கூட மினரல் வாட்டர் பாட்டில்கள் பளபளக்கின்றன. வீட்டுக்கு வீடு டிஷ் ஆண்டெனா வைத்திருப்பது போல... 'தண்ணீர் சுத்திகரிக்கும்' இயந்திரங்களையும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

நியாயம்தான்... சுத்தமான குடிநீர் அவசியம்தான். ஆனால், ஒட்டுமொத்த தண்ணீரின் சுத்தத்தைப் பாதுகாப்பது பற்றி கவலைப்படாமல், நாம் குடிக்கும் தண்ணீர் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்கிற நிலைப்பாடு... எந்த அளவுக்கு சரி?

நீர் நிலைகளைப் பாதுகாத்து காலாகாலத்துக்கும் ஜீவராசிகளுக்கான நீர்த் தேவையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கம்தான். ஆனால், 'தனியார் 20 ரூபாய்க்கு மினரல் வாட்டர் பாட்டில் விக்கறாங்க... உங்கள் அன்புச் சகோதரியான நான் 10 ரூபாய்க்குக் கொடுக்கிறேனே...!' என்று முதல்வரே பெருமை அடித்துக் கொண்டிருக்கும்போது... வேறென்ன சொல்ல!

இது, இன்றைக்குச் சரியாக இருக்கலாம். நாளைக்கு...?

ஆம், உடனடித் தேவைக்கு சரி. ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தால், 'கடல்நீரைச் சுத்திகரித்து குடிநீராக்குகிறோம்...', 'வீட்டுக்கு வீடுதண்ணீரைச் சுத்திகரிக்கிறோம்' என்கிற பெயரில், இருக்கின்ற நீரையெல்லாம் சுத்திகரிக்க ஆரம்பித்தால், அதன் எச்சமாக தேங்கும் கழிவுநீர், திரும்பத் திரும்ப பூமிக்குள் அனுப்பப்பட்டு, ஒரு கட்டத்தில்... ''இந்தத் தண்ணியில தொடர்ந்து கழிவு நீர் சேர்ந்ததால... 10 ஆயிரம் டிடிஎஸ் இருக்கு. இதை சுத்தப்படுத்தவே முடியாது. வேணும்னா... செவ்வாய் கிரகத்துல தண்ணியிருக்காம். ஒரு கிரவுண்ட் 500 கோடி ரூபாய்தான். பேசாம அங்க போயிட்டா... தண்ணி என்ன, பைப் போட்டு தேவலோக அமிர்தத்தையேகூட எடுத்துக்கலாம். நானெல்லாம் ஏற்கெனவே ஏழு கிரவுண்ட் வாங்கிப் போட்டுட்டேன். என்ன... நீங்க நாலு கிரவுண்ட் புக் பண்றீங்களா...?'' என்று நம்ம 'டெல்லி' கணேஷ் உள்ளிட்ட பெரியதிரை, சின்னத்திரை நட்சத்திரப் பட்டாளங்கள் டிவி-யில் தோன்றி உங்களிடம் வீட்டுமனை விற்கவேண்டிய நிலை வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை!

காற்று, தண்ணீர் இந்த இரண்டும் இயற்கை அளித்த இலவசங்கள்... ஆனால், காலஓட்டத்தில் குடும்ப பட்ஜெட்டின் செலவுப் பட்டியலில் அவையும்கூட இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டன! இயற்கையின் அருட்கொடைகளை முறையாகப் பயன்படுத்தாதன் விளைவு... இலவசமாகக் கிடைத்து வந்த தண்ணீர் இன்று விலைக்கு வாங்க வேண்டிய பொருளாக மாறியிருக்கிறது. ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை, 'காசை தண்ணியா செலவு செய்றான் பாரு’ என உவமையாகச் சொல்வார்கள். ஆனால், இன்று தண்ணீருக்காக காசு செலவு செய்யும் நெருக்கடியான நிலை!

குடிநீருக்கே இந்த நிலை என்றால்....
விவசாயத் தேவைக்கு?

வேரில் வெந்நீர் ஊற்றிவிட்டு, பழங்களை எதிர்பார்த்து அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீராதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, நீரை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? மலைகளில் இருந்து மரங்களை அழித்தோம்... பிறகெப்படி மேகம் சூழ்கொள்ளும்?



மலைகளில் உருவாகி ஆறாக மாறி, குளம், குட்டைகளைக் குளிர்வித்து, ஏரி நிறைத்து, குடிநீர் கொடுத்து, கடலில் கலக்கும் தண்ணீர், அதன் பாதையில் பயணித்த வரையில் பிரச்னை இருக்கவில்லை. ஆனால், வயல்காடு, ஆறு, குளம், குட்டை, ஏரி, கண்மாய் என்று அனைத்து நீராதாரங்களையும் ஆக்கிரமித்து பெரும்பெரும் பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஏர்போர்ட், நீதிமன்றங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், தொழிற்சாலைகள் என்று அமைக்க ஆரம்பித்த பிறகுதான், பொறுமை இழந்து, தன் பாதையை மாற்றிக் கொண்டுவிட்டாள் தண்ணீர் தாய்! கடைசியில், அவள் தனது பயணத்தை நிறுத்தியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

விளைவு, பாசனம் இல்லாமல் கருகிக் கிடக்கின்றன பயிர்கள். முடங்கிக் கிடக்கிறது விவசாயம். தை மாதத்திலேயே தலைவிரித்தாடும் பஞ்சம், கொளுத்தும் கோடையில் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது நெஞ்சம்.

கோடையைச் சமாளிக்க, என்ன செய்யலாம்..? என்பதற்கான ஆய்வுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்கியிருக்கிறது, தமிழக அரசு. அப்படி ஆய்வுக்காகச் சென்ற அதிகாரிகள், பிரச்னையின் விஸ்வரூபத்தை கண்ட அதிர்ச்சியில் ஆடிப்போய் கிடக்கிறார்கள்.

'நீரை நிலத்துல தேடாதே... வானத்துல தேடு’!

யாரால் நிகழ்ந்தது இந்தப் பேராபத்து..? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா..’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மனதில் நிறுத்தினால், இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியது, நாம் ஒவ்வொருவரும்தான்.

'நீரை நிலத்துல தேடாதே... வானத்துல தேடு’ என்பார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அதாவது, மழை பொழிய என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள் என்பதுதான் அதன் உட் பொருள். இனியாகிலும், நெருங்கி வரும் பேராபத்தைத் தடுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டாமா? தும்பை விட்டு வாலைப் பிடித்திருந்த நாம், தற்போது வாலையும் அல்லவா கைவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

'எஞ்சியிருக்கும் தண்ணீரையாவது காப்பாற்றினால்தான்... இனி எதிர்காலம் என்கிற எச்சரிக்கை உணர்வு, நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊற வேண்டும். அது பெருவெள்ளமாகப் பாய்ந்து ஆட்சிப் பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு, சூழலைப் பற்றியும்... எதிர்கால சந்ததி பற்றியும்... இயற்கைச் சுரண்டல்கள் பற்றியும் கண்டுகொள்ளாமல், பொதுச்சொத்துக்களைச் சுருட்டுவதை மட்டுமே குறிக்கோளாக மேற்கொண்டிருப்போரை சுருட்டிக் கொண்டு போகவேண்டும்...'

இப்படியெல்லாம் வீராவேசம் கொண்டு சாபம் விடலாம்தான். ஆனால், அதைவிட முக்கியம்... நிஜத்தில், நாம் ஒவ்வொருவருமே களத்தில் இறங்க வேண்டும் என்பதுதான்!

இருக்கும் நிலத்தடி நீரை, கிடைக்கும் மழை நீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதை அறிந்துக் கொண்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட நுட்பங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தவே... 'தண்ணீர்... தண்ணீர்...’ எனும் இந்தப் புதிய தொடர் இங்கே பாய்ந்து வருகிறது. நீர் மேலாண்மை வல்லுநர்கள், பொறியாளர்கள், விவசாயிகள்... என பலதரப்பட்டவர்களும் மிரட்டும் வறட்சியை விரட்டும் தொழில்நுட்பங்களை உங்களிடம் பகிரப் போகிறார்கள்.

நிலங்களைக் குளிர வைக்கும் குளங்கள்!

இதைச் சொன்னதுமே... 'என்ன பேசி என்ன பயன்... சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறையில இதெல்லாம் சாத்தியமா?' என்கிற சந்தேகக் கேள்விகள் இந்நேரம் அனைவரிடமுமே மையம் கொண்டிருக்கும். அதில் தவறில்லை. ஆனால், அனைத்தும் நடைமுறை சாத்தியம்தான் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ஆம்... மகாராஷ்டிர மாநிலத்தின், ராலேகண்சித்தி எனும் வறண்ட கிராமத்தை, இன்றைக்கு வளமான விவசாய பூமியாக அண்ணா ஹஜாரே மாற்றியிருக்கிறாரே! அதே மாநிலத்தில் புனே அருகில் இருக்கும் ஹிவ்ரே பஜார் எனும் வறண்ட கிராமம், அந்த ஊர் நல்ல உள்ளங்கள் சிலரின் முயற்சியால் இன்றைக்கு சோலைவனமாக மாறியிருக்கிறதே! எல்லாமே, நீர் மேலாண்மை எனும் மந்திரத்தால் விளைந்த உண்மையே!

இவையெல்லாம் தொலை தூர நிஜங்கள். இங்கே உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே, நேரடி சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன பத்துக்கும் மேற்பட்ட குளங்கள்!

நம் முன்னோர்கள், குளங்களை முறையாக தூர்வாரி, வண்டலை நிலங்களில் போட்டனர். நீரும் நிறைந்தது, நிலமும் விளைந்தது. அந்த முறையைக் கைவிட்டதன் விளைவு, குளமும் காய்ந்து, நிலமும் வறண்டு கிடக்கிறது. குளங்கள் விவசாயத்தின் அடிப்படை ஆதாரங்கள். அவற்றை முறையாகப் பராமரித்தாலே... பாதி பிரச்னை தீர்ந்துவிடும். ஒரு குளம் நிறைந்து, அடுத்த குளம்... அது நிறைந்தவுடன் அடுத்த குளம்... என வரிசையாகக் குளங்களை நிறைத்துக் கொண்டே ஏரிகளை அடையும் வகையில் பாசன வாய்க்கால்களை அமைத்திருந்தனர், நம்முன்னோர். அவையெல்லாம் பராமரிப்பில்லாமல் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும்... குளங்கள் வறண்டு போக ஒரு காரணம்.

இதைச் சரியாக புரிந்துகொண்டு, கடந்த 2010-ம் ஆண்டு, குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள அத்தனைக் குளங்களையும் இணைத்தார், அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் வள்ளலார் (தற்போது தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்). கிட்டத்தட்ட 14 குளங்கள் இணைக்கப்பட்டதன் பலன், பல ஆண்டுகளுக்கு பிறகு, அங்கிருந்த தரிசுகளில் அரங்கேறியது, உழவுத் தொழில். 'இனி இந்த மண்ணில் விவசாயமே இல்லை’ என நினைத்து, வேலை தேடி வெளியூர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்பிய அதிசயம் அரங்கேறியது! நம்பிக்கை விதை விதைக்கப்பட்டிருக்கிறது!

துணைவேந்தர்கள் இல்லாமல் பரிதவிக்கும் மாணவர்கள்!

Add caption

கட்சி என்றால் தலைவர் இருக்க வேண்டும். நிறுவனம் என்றால் நிர்வாகி இருக்க வேண்டும். கல்லூரி என்றால் முதல்வர் இருக்க வேண்டும். அதுபோல பல்கலைக்கழகம் என்றால் துணைவேந்தர் இருக்க வேண்டும். அப்போது தான் அதன் ஒட்டுமொத்த நிர்வாகமும் சிக்கலின்றி இயங்கும். ஆனால் தமிழகத்தில் நான்கு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதனால் படித்து முடித்த மாணவர்கள் பரிதவிக்கிறார்கள்.

தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், பெரியார், அண்ணாமலை, அழகப்பா, அன்னை தெரசா, தமிழ்ப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என முக்கிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. 

இந்தப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான கல்லூரிகள் செயல்படுகின்றன. அதில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள். கல்லூரிகளின் செயல்பாடுகளைக் கவனிக்கவும், கண்காணிக்கவும், மாணவர்கள் நலனைப் பாதுகாக்கவும் பல்கலைக்கழகத்துக்குத் தலைமை தேவை. அதாவது துணைவேந்தர் தேவை. ஆனால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடம் கடந்த ஜூலை முதல் காலியாக உள்ளது. தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி அக்டோபரில் இருந்து காலியாக உள்ளது. சேலம் பெரியார் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளும் செப்டெம்பர் முதல் காலியாக உள்ளன.

இந்தப் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான குழுக்கள் அமைக்கப் பட்டன. இந்தக் குழுக்களும் விவாதித்தன. ஆனால் துணைவேந்தரை நியமனம் செய்வதில்தான் அநியாய காலதாமதம். இந்த நிலையில் ‘தகுதியானவர்களைத் தான் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்’ என பேராசிரியர் கிருஷ்ணசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். 2013 டிசம்பர் 9ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு பிப்ரவரி 27ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்குதான் துணைவேந்தர் நியமனம் காலதாமதமாவதற்குக் காரணமாக உள்ளது என்ற பேச்சு உள்ளது.

அரசியல் செல்வாக்கு, சாதி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே கடந்த பத்தாண்டுகளாகத் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. துணைவேந்தராக ஒருவர் நியமிக்கப்பட என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) 2009-ம் ஆண்டு விதிமுறைகளை வகுத்தது. அதில் முக்கியமான தகுதி, ‘துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்’ என்பது தான். ஆனால் இதைக்கூட புறந்தள்ளிவிட்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இப்போது தமிழகத்திலுள்ள சில துணைவேந்தர்கள் இந்தத் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த சம்பள விகிதத்தைப் பெற்றுக் கொள்ளும் துணைவேந்தருக்கு அந்தக்குழு (யு.ஜி.சி) நிர்ணயித்த கல்வித் தகுதி இருக்க வேண்டும்’ என அரசு கருதாதது வெட்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக பியூனுக்குக்கூட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில் பல்கலைக்கழகத்தையே நிர்வகிக்கும் துணைவேந்தருக்குத் தகுதியைப் பின்பற்றவில்லையென்றால் என்ன அர்த்தம்?

7 Overs Cricket rules


 
டெஸ்ட், 50 ஓவர், டி20க்கு அடுத்ததாக கிரிக்கெட்டுக்கு ஏழு ஓவர் மேட்ச் என்ற புதிய போட்டி அறிமுகமாகவுள்ளது. 7பிஎல் என்றழைக்கப்படும் இந்தப் போட்டி துபாயில் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, அஜ்மன், துபை, ஃபுஜைரா, ஷார்ஜா, ரஸ் அல்-கைமா, உம் அல்-கைவைன் ஆகிய ஏழு அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ஐபில் போல எல்லா நாட்டு வீரர்களும் பங்கேற்று ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்-லில் தேர்வாகாத வீரர்களுக்கு 7பிஎல் நல்ல வாய்ப்பாக அமையும். ஏற்கெனவே டி20யில் சிக்ஸர்களும் ஃபோர்களுமாகப் பறக்கின்றன. ஏழு ஓவர் கிரிக்கெட்டில் கேட்கவே வேண்டாம். ஏழு ஓவர் கிரிக்கெட்டால் ஒரே பலன், மேட்ச் ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடும்.
 
2015 உலகக் கோப்பையில் தோனிதான் கேப்டனாக இருப்பார் என்று ஒருவர் சொல்லியிருகிறார். வேறு யார், தோனியேதான்! ‘அடுத்த ஒரு ஆண்டுக்குள் உலகக் கோப்பை போட்டி தொடங்கவுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக புதிதாக ஒருவர் தலைமை ஏற்க இது சரியான நேரம் அல்ல. உலகக் கோப்பைத் தொடருக்கு முன் 70 முதல் 90 ஆட்டங்களில் தலைமையேற்ற அனுபவம் இருந்தால்தான் கோப்பையை வெல்ல முடியும். மற்றவர்களை விட ஒரு கேப்டன் அனுபவம் நிறைந்தவராக இருக்க வேண்டும். ஓராண்டு இடைவெளிக்குள், புதிதாக ஒருவரை கேப்டனாக நியமித்து, அவர் தலையில் பொறுப்பைச் சுமத்துவது நியாயமற்றது’ என்று கூறியிருக்கிறார் தோனி. இதன்படி பார்த்தால் உலகக் கோப்பையில் தோனிதான் இந்திய கேப்டனாக இருக்கமுடியும்!ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி வெல்லும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் ஐந்து டெஸ்ட் மேட்சுகளிலும் ஜெயிப்பார்கள் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? இதற்கு முந்தைய ஆஷஸ் தொடரை இழந்த ஆஸ்திரேலியா இந்தமுறை சொந்த மண்ணில் இங்கிலாந்தைப் பழிக்குப் பழி வாங்கிவிட்டது. இந்தத் தொடரில் 37 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜான்சன், தொடர் நாயகன் விருதை வென்றார். பலம் வாய்ந்த அணியான இங்கிலாந்துக்கு இது மிகப் பெரிய நெருக்கடி.

ஆழ்கடல் அதிசயங்கள்! secrets of underworld

 
1960. ஜனவரி 23. அன்றைய தினம்தான் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் ஜாக்கஸ் பிக்கார்ட், அமெரிக்கக் கடற்படை அதிகாரி டான் வால்ஷ் ஆகிய இருவரும் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினர். இந்த இருவரும் உலகின் கடல்களிலேயே மிக ஆழமான இடத்துக்குச் சென்று திரும்பினர். பசிபிக் கடலில் மரியானா டிரெஞ்ச் என்னும் பெரிய அகழி உள்ளது. அந்த அகழியில் சேலஞ்சர் மடு எனப்படும் இடத்தின் ஆழம் 10,994 மீட்டர். அதாவது சுமார் 11 கிலோ மீட்டர்.பிக்கார்ட், வால்ஷ் இருவரும் டிரியெஸ்டி எனப்படும் ஆழ் மூழ்கு கலம் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்ட ஓர் இரும்புக் கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவுக்குள் இறங்கினர். உள்ளிருந்தபடி சிறிய ஜன்னல் வழியே உற்றுப் பார்த்தனர். கடலில் அவ்வளவு ஆழத்தில் சுற்றிலும் கும்மிருட்டு. கோளத்துடன் இணைந்த மின்விளக்கு வெளிச்சத்தில் சிறு மீன்கள் அங்குமிங்கும் செல்வது தெரிந்தது.அவர்களால் அந்தக் கோளத்திலிருந்து வெளியே வந்திருக்க முடியாது. அதற்கான வழியும் கிடையாது. அப்படி வெளியே வர முடிந்திருந்தால் நொடியில் டூத் பேஸ்ட் டியூப் போல பசக் என்று நசுங்கி மடிந்திருப்பர்.அவர்கள் இருவரும் ஒண்டிக் கொண்டிருந்த கோளத்தைச் சுற்றிலுமுள்ள கடல் நீரானது எல்லாப் புறங்களிலிருந்தும் சதுர செண்டிமீட்டருக்கு 1.25 மெட்ரிக் டன் வீதம் அழுத்திக் கொண்டிருந்தது.கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது அழுத்தம் பயங்கரமாக அதிகரிக்கும். ஆகவே தான் ஆழ்கடல் யாரும் எளிதில் செல்ல முடியாத இடமாக இருந்து வருகிறது.ஆழ்கடல் அழுத்தம் பற்றி மேலும் கூறுவதற்கு முன்னர் காற்றழுத்தம் பற்றிக் கவனிப்போம். நம் தலைக்கு மேலே மிக உயரம் வரை காற்று மண்டலம் உள்ளது. காற்றுக்கும் எடை உண்டு. 
 
நாம் வீட்டுக்குள் இருந்தாலும் சரி, திறந்தவெளியில் இருந்தாலும் சரி, நம் தலைக்கு மேல் உள்ள காற்று அனைத்தும் சேர்ந்து நம்மை அழுத்திக் கொண்டிருக்கிறது. இது (கடல் மட்டத்தில் உள்ள இடங்களில்) ஒரு சதுர செண்டிமீட்டருக்குச் சுமார் ஒரு கிலோ வீதம் உள்ளது. முன்புறம், பின்புறம் என நம் உடலை எல்லாப் பக்கங்களிலும் காற்று மண்டலம் அழுத்திக் கொண்டிருக்கிறது. பழகிப் போனதால் இது நமக்குத் தெரிவதில்லை.
 
(காற்றழுத்தம் இடத்துக்கு இடம் சற்றே மாறுபடுகிறது. ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருந்தால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகும். அப்போது பிற இடங்களிலிருந்து அந்த இடத்தை நோக்கிக் காற்று வீசும். மழை மேகங்கள் இருந்தால் அவையும் அந்த இடத்தை நோக்கி நகரும்.)  காற்றுக்கு எடை உண்டு என்பது போல தண்ணீருக்கும் எடை உண்டு. தலையில் தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிறவர்களிடம் கேட்டுப் பாருங்கள், சொல்வார்கள். ஆகவே கடலுக்குள் இறங்கினால் நீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும்.நீருக்குள் சுமார் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் கடல் மட்டத்தில் உள்ளதை விட அழுத்தம் இரண்டு மடங்காகி விடும். 20 மீட்டர் ஆழத்தில் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தம் நான்கு மடங்காகி விடும். கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும்போது அழுத்தம் இதே விகிதத்தில் அதிகரித்துச் செல்லும். மிகமிக ஆழத்தில் உள்ள அழுத்தத்தை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு டன் என்று கூற வேண்டியிருக்கும்.ஆகவே மனிதன் கடலுக்குள் இஷ்டம் போல ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் ஆழத்துக்கு ஒரு போதும் இறங்க முடியாது. அப்படி இறங்க முயன்றால் கடும் அழுத்தம் காரணமாக அவர் சட்னி ஆகி விடுவார்.டிவியில் டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியோகிரபிக் சேனல் போன்றவற்றில் பலர் சுவாசக் கருவியை அணிந்து கடலுக்குள் இஷ்டம் போல வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கலாம். இவையெல்லாம் 10 மீட்டர் ஆழம் வரைதான்.ஸ்குபா எனப்படும் சுவாசக் கருவி உள்ளது. இதை அணிபவர் காற்றுக் கலவை அடங்கிய சிலிண்டரை முதுகில் கட்டிக் கொண்டிருப்பார். கால்களில் துடுப்புகள் இருக்கும். உடலை ஒட்டிய விசேஷ ஆடையை அணிந்திருப்பார். நீருக்குள் இறங்குவதற்கென எடையை உடலோடு சேர்த்துக் கட்டிக் கொண்டிருப்பார்.இப்படியான சுவாசக் கருவியை அணிந்து கொண்டு கடலுக்குள் இறங்குவதற்கும் நிபுணரின் மேற்பார்வையிலான பயிற்சி தேவை. குறிப்பிட்ட உடல் தகுதியும் வேண்டும். குறிப்பிட்ட ஆழத்துக்கு இறங்கினால் அங்கு எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறை உள்ளது. சுவாசக் கருவி அணிந்து கடலில் இறங்குவதில் நிபுணரான ஒருவர் சென்ற அதிகபட்ச ஆழம் வெறும் 318 மீட்டர். 
 
ஆகவே பிக்கார்டும் வால்ஷும் ஒரு கோளத்துக்குள் அமர்ந்து சேலஞ்சர் மடுவுக்குள் இறங்கியதில் வியப்பில்லை. கடல் அடியில் நிலவும் கடும் அழுத்தத்தைத் தாங்கி நிற்க, அந்தக் கோளம் சுமார் 12 செண்டிமீட்டர் தடிமன் கொண்ட உருக்கினால் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் எடை மட்டும் 13 டன்.இவ்வளவு எடை கொண்ட கோளம் உள்ளே இறங்கினால் அது பின்னர் மேலே வரவேண்டுமே? ஆகவே அந்தக் கோளம் சுமார் 15 மீட்டர் நீளமுள்ள தொட்டிக்கு அடியில் இணைக்கப்பட்டிருந்தது. தொட்டியில் பல ஆயிரம் லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது. தவிர, அந்தத் தொட்டியின் இரு புறங்களிலும் இருந்த துணைத் தொட்டிகளில் தண்ணீர். இந்தத் தொட்டி நீருக்குள் இறங்கியாக வேண்டும். ஆகவே இன்னும் கூடுதலாக எடை சேர்த்தால்தான் தொட்டியும் அத்துடன் கோளமும் பாதாளத்துக்கு இறங்கும். ஆகவே கோளத்துடன் கெட்டியாக மூடப்பட்ட இரு ‘அண்டாக்கள்’ இணைக்கப்பட்டிருந்தன. இரு அண்டாக்களிலும் ஏராளமான இரும்புக் குண்டுகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 9 டன்.பிக்கார்டும் வால்ஷும் சேலஞ்சர் மடுவில் தங்கள் பணியை முடித்துக்கொண்ட பின்னர் பொத்தானை அழுத்தினர். அண்டாக்களிலிருந்து இரும்புக் குண்டுகள் அனைத்தும் கொஞ்சங் கொஞ்சமாக ஒரு திறப்பு வழியே வெளிப்பட்டு கடலில் விழ ஆரம்பித்தன. எடை குறையக் குறைய டிரியெஸ்டி கலம் மேலே வர ஆரம்பித்தது. பெட்ரோல் அடங்கிய தொட்டி என்பதால் அது கடைசியில் மேலே வந்து மிதந்தது. பிக்கார்டும் வால்ஷும் கோளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
 
இவர்கள் சாதனை நிகழ்த்திய 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல ஹாலிவுட் டைரக்டரும் கடல் ஆராய்ச்சி ஆர்வலருமான ஜேம்ஸ் கேமரான் 2012, மார்ச் 26 அன்று நவீன நீர் மூழ்கு கலம் ஒன்றின் மூலம் அதே சேலஞ்சர் மடுவில் இறங்கினார். அவர் இறங்கிய இடத்தின் ஆழம் 10,898 மீட்டர்.
 
பூமிக்கு மேலே சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற விண்கலங்களிலிருந்து எண்ணற்றவர்கள் காப்பு உடையுடன் வெளியே வந்து, அந்தரத்தில் மிதந்து பணியாற்றி சாதனை படைத்துள்ளனர். ஆனால் கடலில் மிக ஆழமான இடத்துக்குச் சென்று சாதனை புரிந்தவர்கள் இதுவரை மூவர் மட்டுமே. ஆழ்கடல் என்றுமே மனிதன் எளிதில் அண்ட முடியாத இடமாகவே இருந்து வரும்.

எடிசன்

எடிசன் பிறந்து 4 ஆண்டுகள் வரை பேச்சே வரவில்லை. அவருடைய தலை மற்றவர்களை விடச் சற்றுப் பெரிதாக இருந்தது. எடிசனின் அம்மாவுக்குத் தன் குழந்தையை நினைத்து கவலை. அதே நேரம் எடிசனை மிகவும் கனிவோடும் அக்கறையோடும் கவனித்துக் கொண்டார். 
 
ஒருநாள் எடிசன் வாத்து முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாத்துக் கொண்டிருந்தார்! அதைப் பார்த்த அம்மா, ‘என் மகன் பெரிய விஞ்ஞானியாவான்’ என்று எடிசனை அணைத்துக் கொண்டார்.  பேச்சு வந்ததிலிருந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் எடிசன். அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எல்லோரும் ஓடினார்கள். ஏழு வயதில் எடிசனைப் பள்ளியில் சேர்த்தனர். அவருடய தலையைப் பார்த்து ஆசிரியர் கேள்வி கேட்டார். அருகில் இருந்த மாணவர்கள் சிரித்தனர். வகுப்பில் எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த எடிசனை அந்த ஆசிரியருக்குப் பிடிக்காமல் போனது. ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது எடிசன் படம் வரைந்து கொண்டிருந்தார். இதைக் கண்ட ஆசிரியர், ‘மூளை வளர்ச்சியடையாதவன், முட்டாள்’ என்று திட்டினார். விஷயத்தைக் கேள்விப்பட்ட அம்மா, அவருக்கு வீட்டிலேயே படிப்புச் சொல்லித் தந்தார். படிப்பதில் தீராத ஆர்வம் ஏற்பட்டது. 11 வயதுக்குள் இலக்கியம், வரலாறு, அறிவியல் எல்லாம் படித்துவிட்டார். குறிப்பாக ரசாயனப் புத்தகங்கள் மீது கூடுதல் ஆர்வம். பரிசோதனைக் கூடத்தை வீட்டில் அமைத்துக்கொண்டு, அறிவியல் சோதனைகளைச் செய்ய ஆரம்பித்தார். 
 
அன்று தொடங்கிய அவரது கண்டுபிடிப்பு முயற்சிகள் அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தன. தன் வாழ்நாளில் சுமார் 1,500 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, 1,368 பொருள்களுக்குக் காப்புரிமைகளைப் பெற்றார்! உலகின் மிக உன்னதமான விஞ்ஞானிகளில் ஒருவராக ஜொலிக்கிறார்!
 
வெற்றிக்கான எடிசன் சொன்ன மூன்று மந்திரங்கள்: முயற்சி, முயற்சி, முயற்சி!
 

 

பால் ஏர்டிஷ்

20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித மேதையாகத் திகழ்ந்தவர், பால் ஏர்டிஷ் Paul Erdős).ஹங்கேரி நாட்டில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தனது சிறப்பான கணித ஆற்றலை வெளிப்படுத்தினார். தனது மூன்றாவது வயதிலேயே, ஒரு நபரின் வயதைவைத்து, அவர் பிறந்து எத்தனை வினாடிகள் ஆகியிருக்கின்றன என்பதை உடனடியாகக் கணக்கிட்டுக் கூறி, திகைக்கவைப்பார்.
 
21 வயதில் முனைவர் பட்டம் பெற்ற ஏர்டிஷ்,  கணித உண்மைகளை எளிய முறையில் வழங்குவதில் திறமைபெற்றவர். வாழ்நாளில், தனக்கென எதையும் சேர்த்து வைக்காதவர். திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் பெயரில் வங்கிக் கணக்குகூட இல்லை. கணித ஆய்வுக்காகவும் வளர்ச்சிக்காகவுமே பாடுபட்டார்.

இன்று வரை மிக அதிக அளவில் கணித ஆய்வுக் கட்டுரைகளை ஏற்படுத்திய கணிதவியலாளர்களில் ஏர்டிஷ் முதல் இடம் வகிக்கிறார். மற்ற கணிதவியலாளர்களின் துணையுடன் 1,500 கணிதக் கட்டுரைகளுக்கு மேல் வழங்கியுள்ளார். மற்றவர்களுடன் சேர்ந்து கணிதம் பயில்வதைத் தன் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார். திறமை வாய்ந்த கணித வல்லுநர்களைச் சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவினார். மேலும், தனக்கு விடை காண இயலாத கணிதப் புதிர்களை உருவாக்கு பவர்களுக்கு, சிறு சிறு பரிசுத் தொகைகள் வழங்குவார். கணிதப் படைப்புகளுக்காக, Wolf Prize, Cole Prize என்ற இரு முக்கியக் கணித விருதுகளைப்  பெற்றுள்ளார்.

இவரது கணித ஆற்றலையும் புகழையும் பறைசாற்ற, 'ஏர்டிஷ் எண்’ என்ற கருத்து உருவாக்கப்பட்டது. இதன்படி, ஏர்டிஷின் எண் பூஜ்ஜியம். இவருடன் நேரடியாகக் கணித ஆய்வுக் கட்டுரையை உருவாக்கிய கணிதவியலாளரின் ஏர்டிஷ் எண், ஒன்று. அந்த நபருடன் மற்றொருவர் கணித ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தால், அவருக்கு ஏர்டிஷ் எண் இரண்டு. இப்படி சங்கிலித் தொடராக அந்த எண், ஏழு வரை இருக்கும். எனவே, ஒருவரது கணிதப் புலமைக்கு அடையாளமாக 'ஏர்டிஷ் எண்’ விளங்குகிறது.

1996 செப்டம்பர் 20-ல், போலந்து நாட்டின் வார்சா நகரில் நடந்த கணிதக் கருத்தரங்கு வளாகத்திலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்டு, உயிர் நீத்தார். இவரது கணித ஆய்வும் அனைவரிடமும் அன்பு செலுத்தும் பண்பும் என்றும் பேசப்படும். ஏர்டிஷ் வாழ்க்கைச் செய்திகளை மேலும் தெரிந்துகொள்ள The man who loved only numbers’ என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.


Avg Anti virus for smart phones

ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட்போனுக்குள் இருக்கும் புகைப்படங்கள், மொபைல் எண்கள் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய வைரஸ்களிலிருந்து பாதுகாக்க சில  அப்ளிகேஷன்ஸ் உள்ளன. இவற்றில் தன் வேலையை மிகத் துரிதமாகச் செய்யக்கூடியதுதான் இந்த ஏவிஜி ஆன்டிவைரஸ் செக்யூரிட்டி என்னும் ஆப்ஸ்.

ஒரு ஆப்ஸ் அல்லது ஃபைலை பதிவிறக்கம் செய்து, அதை ஸ்மார்ட்போனுக்குள் உள்ளே நுழைக்கும்போதும், அது பாதுகாப்பானதுதானா என்பதைப் பரிசோதித்துவிட்டுதான் உள்ளே நுழைக்க இது உதவுகிறது. ஸ்மார்ட்போனில் இணையத்தைப் பயன்படுத்தித் தகவல்களைத் தேடும்போதோ அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போதோகூட ஸ்மார்ட்போன் வைரஸ்களால் பாதிக்கப்படலாம். அந்தச் சமயத்தில்,  நம் ஸ்மார்ட்போனில் இந்த ஆன்டிவைரஸ்  இருந்தால் போனுக்கு எந்தப் பாதிப்பும் வராது.  


ஹைலைட்: இந்த ஆப்ஸை உலகம் முழுக்க 10 கோடிபேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.  

கிளீன் மாஸ்டர்

இந்த ஆப்ஸ், ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தேவையில்லாத ஜங்க் ஃபைல்களைச் சுத்தம் செய்யப் பயன்படுகிறது. தேவையில்லாத ஃபைல்களை நீக்குவதன் மூலம் மெம்மரி பூஸ்டராகவும் செயல்படுகிறது.

பொதுவாக, அதிகமான ஃபைல்கள் ஸ்மார்ட்போன்களில் நிறைந்திருந்தாலே ஸ்மார்ட்போன்களின் வேகம் குறையும். வேகம் குறைவதைத் தடுக்க இதை பயன்படுத்தி மெமரியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதேசமயம், பாதுகாத்து வைத்திருக்கும் ஃபைல்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இந்த ஆப்ஸினால் உண்டாகாது.

ஹைலைட்:

இந்த ஆப்ஸை உலகம் முழுக்க 5 கோடி பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். 30 மொழிகளில் இந்த ஆப்ஸ் சப்போர்ட் செய்கிறது.
 

மொபைல் இன்ஷூரன்ஸ் mobile insurance


இன்றைய மாடர்ன் உலகில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் வந்துவிட்டது.  மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள்கூட இஎம்ஐ-யில் 20 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்குகிறார்கள். இப்படி அதிக விலை தந்து வாங்கும் போன் தொலைந்துபோனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய. இந்தப் பாதிப்பிலிருந்து தப்பிக்க இன்ஷூரன்ஸ் நமக்குக் கைதரும் என்றாலும், எந்தச் சூழ்நிலையில் நமக்கு கிளைம் கிடைக்கும், செல்போன் இன்ஷூரன்ஸ் பிரீமியம் எவ்வளவு, கிளைம் செய்யத் தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றி பார்போம்.

புதிதாக வாங்கும் செல்போன்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். ஒரு செல்போனுக்கு அதிகபட்சம் மூன்று வருடங்கள் வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும். அதற்குமேல் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கும்போது இன்ஷூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் வரும்.செல்போனின் மதிப்பில் 2-லிருந்து 3 சதவிகிதம்தான் பிரீமியம் இருக்கும். ஆனால், இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சில விஷயங்களை பாலிசிதாரர்கள் கட்டாயம் கவனிக்கவேண்டும்.செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாலிசியின் நிபந்தனைகளைத் தெளிவாகப் படித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், இந்த இன்ஷூரன்ஸில் நிபந்தனைகள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். சில நிறுவனங்களில் செல்போன் தண்ணீரில் விழுந்தால் கிளைம் தரமாட்டோம் என்ற நிபந்தனை இருக்கும். இன்ஷூரன்ஸ் எடுத்த ஒரு வருடத்தில் செல்போன் தொலைந்து போனால் இத்தனை சதவிகிதம்தான் கிளைம் கிடைக்கும் என்றும் நிபந்தனை விதித்திருப்பார்கள்.மேலும், செல்போன் தொலைந்து விட்டது அல்லது திருடு போய்விட்டது என்ற காரணங்களுக்காக கிளைம் கேட்டு விண்ணப்பிக்கும்போது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை கட்டாயம் தேவை.  சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் செல்போன் காணாமல்போன சம்பவத்தைக் காவல் துறை முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யவில்லை என்றாலும், காவல் துறையின் சமுதாயப் பதிவேட்டு ரசீது இருந்தால் போதும் எனக் கூறுகின்றன. எனவே, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன்பே எதற்கெல்லாம் கிளைம் கிடைக்கும், எதற்குக் கிடைக்காது என்பதை பாலிசியைப் படித்துப் பார்த்து தெரிந்துகொள்வது நல்லது.
 
பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செல்போன் இன்ஷூரன்ஸ் வழங்குவதையே தவிர்த்து வருகின்றன. ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் வருடத்துக்கு ஒருமுறை புது செல்போன் வாங்கும் பழக்கத்தைப் பலரும் வைத்துள்ளனர். எனவே, வேண்டுமென்றே போனை தொலைத்திருக்கலாம் என இன்ஷூரன்ஸ் நிறுவனம் சந்தேகப்படுவதுதான் இதற்கு காரணம்.
 
மேலும், செல்போன் தொலைந்து போனால், காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் கடினமான காரியம். அதேபோல, முதல் வருடத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும் அதில் அதிகபட்சம் மூன்று வருடம் வரை மட்டுமே அந்த இன்ஷூரன்ஸைத் தொடர முடியும்.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, உங்கள் செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.


வரிச் சேமிக்கும் வழிகள்! Tax Saving

வருமான வரியை எப்படியாவது மிச்சப்படுத்திவிட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், தேவையான முறையில் வரியை மிச்சப்படுத்தி இருக்கிறோமா என்றால், இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும்.

அண்மையில் 35 வயதான நண்பர் ஒருவர் சாலை விபத்தில் திடீரென இறந்துவிட்டார். அவர் வருமான வரியை மிச்சப்படுத்த பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துவைத்திருந்தார்; ஆண்டுக்கு சுமார் 12,000 ரூபாய்க்குமேல் பிரீமியம் கட்டி வந்திருக்கிறார். ஆனால், அவரது குடும்பத்துக்கு இழப்பீடாகக் கிடைத்த தொகை வெறும் 4 லட்சம் ரூபாய்க்குள்தான். இவர் எடுத்திருந்தது, முதலீடு மற்றும் காப்பீடு கலந்த எண்டோவ்மென்ட் பாலிசிகள். இதற்குப் பதிலாக, அதே ஆண்டு பிரீமியமான 12,000 ரூபாயைச் செலுத்தி, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தால், அவரது குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கிடைத்திருக்கும்.

அந்தவகையில் வரிச் சேமிப்புக்காகச் செலவு மற்றும் முதலீடு செய்யும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால் வரியைச் சேமிக்கிறேன் பேர்வழி என்று பணத்தைத் தேவையில்லாமல் இழக்கவேண்டியிருக்கும். நாம் செய்யும் செலவிலும், சேமிப்பிலும் வரியைச் சேமிக்கும் வழிகள் பற்றி தெரிந்துகொண்டால், நம்முடைய பணத்தை வீணாக்காமல், எதிர்காலத்தில் நல்ல லாபத்தையும் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

 

செலவுகள் மூலம் வரிச் சேமிப்பு!

முதலில் எந்தெந்தச் செலவுகளுக்கு வருமான வரிச் சலுகைக் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

80சி பிரிவின்கீழ் ஆயுள் காப்பீடு பிரீமியம், பிள்ளைகளின் கல்விக் கட்டணம், வீட்டுக் கடன் அசல் போன்றவற்றுக்கு வரிச் சலுகை கிடைக்கிறது.

லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம்!

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியைச் செலவு என்று நினைப்பதைவிட, நம்மை நம்பியிருக்கும் குடும்பத்துக்கான கவசம் என்றுதான் கருதவேண்டும். லைஃப் இன்ஷூரன்ஸ் என்கிறபோது, இதில் டேர்ம் இன்ஷூரன்ஸ், பணப் பலன் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த பாலிசிகள் இருக்கின்றன.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும். இடையில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் மட்டுமே கிளைம் கிடைக்கும். முதிர்வுத் தொகை எதுவும் கிடையாது.

எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் பாலிசிகளில் கட்டும் பிரீமியம் மற்றும் முதிர்வு ஆதாயத்துக்கு வரி இல்லை. எண்டோவ்மென்ட் பாலிசியில் பிரீமியத்தின் ஒருபகுதி, இன்ஷூரன்ஸ் கவரேஜுக்கும் எடுத்துக்கொள்ளப்படுவதால் மொத்தத்தில் சுமார் 6% வருமானம் கிடைக்கக்கூடும்.

அண்மையில் ஐஆர்டிஏ அனைத்து ஆயுள் காப்பீட்டு பாலிசிகளிலும் மாற்றங்களைச் செய்திருக்கிறது. குறிப்பாக, இன்ஷூரன்ஸ் கவரேஜை அதிகரித்து, முதலீட்டுக்கான பகுதியைக் குறைத்திருக்கிறது. இருந்தாலும் டேர்ம் பிளான்தான், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிப்பதாக இருக்கிறது. பொதுவாக, ஒருவரின் ஆண்டுச் சம்பளத்தைப்போல் 10 முதல் 12 மடங்கு தொகைக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது.

பிள்ளைகளின் கல்விக் கட்டணம்..!

பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வரிச் சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டும்தான் வரிச் சலுகை. தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கும்போது, இரண்டு பிள்ளைகள் என்றால் ஒருவருக்குத் தாயும், இன்னொருவருக்குத் தந்தையும் வரிச் சலுகை பெறுவதன்மூலம் அதிக வரியை மிச்சப்படுத்த முடியும்.

                                             ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் (80டி).

அடுத்த முக்கியமான செலவு, ஹெல்த் இன்ஷூரன்ஸ். இதற்கான பிரீமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. ஒரு நிதி ஆண்டில் வரிதாரர் மற்றும் அவரின் குடும்பத்துக்குக் கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் 15,000 ரூபாய்க்கு வரிச் சலுகை உண்டு. மூத்த குடிமக்களாக இருந்தால் 20,000 ரூபாய் வரையிலான பிரீமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. வரிதாரர் தனது பெற்றோருக்கு எடுக்கும் மெடிக்ளைம் பாலிசி பிரீமியத்துக்கு அதிகப்படியாக ரூ.20,000 வரை வரிச் சலுகை பெற முடியும்.

மருத்துவச் செலவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும், கிராமங்களைவிட நகரங்களில் செலவு அதிகமாக இருக்கிறது. இவற்றை மனதில்வைத்து கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் குடும்பத்துக்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் அளிக்கும் பாலிசியை எடுத்துக்கொள்வது அவசியம். இதற்கு ஆண்டு பிரீமியம் தோராயமாக 5,000 ரூபாய்க்குமேல் இருக்கும்.

ஏதாவது நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்யும் செலவுகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.5000 வரிச் சலுகை கிடைக்கும். இது தற்போது அளிக்கப்பட்டுவரும் 15,000 ரூபாய் பிரீமியத் தொகைக்கான வரிச் சலுகைக்குள் அடங்கும்.

வீட்டுக் கடன் அசல்!

சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதை வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை உண்டு. வீட்டுக் கடனை திரும்பக் கட்டுவது ஒரு செலவாக இருந்தாலும், அது நீண்டகாலத்தில் செல்வம் சேர்க்க ஒருவருக்கு உதவுவதாக உள்ளது.

வீட்டுக் கடனுக்கான வட்டி  24பி!

வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவதில், வட்டியையும் ஒரு செலவாக எடுத்துக்கொண்டால், அந்த வீட்டில் குடியிருக்கும்பட்சத்தில் ஒரு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம்வரை வரிச் சலுகை உண்டு. அதுவே, அந்த வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையை வருமானமாகக் காட்டியிருந்தால் செலுத்தும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை உண்டு. இதில், வருமான வரியை அதிகமாக மிச்சப்படுத்த, கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும்பட்சத்தில் கூட்டாகக் கடன் வாங்கலாம். அப்போது இருவரும் தனித்தனியே அசல் தொகைக்கு 80சி பிரிவிலும் மற்றும் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் ரூபாய் வரிச் சலுகை பெற முடியும்.

வீட்டு வாடகை படி 10 (13ஏ)!

குடியிருக்கும் வீட்டுக்குத் தரப்படும் வாடகைக்கு வரிவிலக்குச் சலுகை உண்டு. (வீட்டு வாடகைப் படி கணக்கீட்டு முறையை விரிவாகத் தெரிந்துகொள்ள: http://nanayam.vikatan.com/index.php?aid=4911) இதற்கு மொத்தச் சம்பளத்தில் 10%-க்குமேல் வாடகையாகத் தந்திருக்கவேண்டும். மேலும், குடியிருக்கும் நகரம், பணியாளர் பெறும் வீட்டு வாடகைப் படி ஆகியவற்றைப் பொறுத்துக் கழிவு இருக்கிறது.  வாடகை ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மேல் சென்றால், உரிமையாளரின் பான் நம்பரை, ரசீதில் குறிப்பிடுவது அவசியம்.

சிறப்புச் சலுகை!

வங்கி அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்று முதல் முறையாக வீடு வாங்கு வோருக்குக் கூடுதலாக ரூ.1 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வீட்டை 2013 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2014 மார்ச் 31-ம் தேதிக்குள் வாங்கியிருக்க வேண்டும். மேலும், வீட்டுக் கடன் ரூ.25 லட்சத்துக்குள்ளும், வீட்டின் விலை ரூ.40 லட்சத்துக்குள்ளும் இருக்கவேண்டும். அவர் செலுத்தும் வட்டிக்கு ரூ.1 லட்சம்வரை கூடுதலாக வரிக் கழிவைப் பெறலாம். மேலே கூறப்பட்ட காலகட்டத்தில் வரிச் சலுகையை முழுமையாகப் பெற முடியாமல்போனால், மீதி வரிச் சலுகையை 2015-2016ம் ஆண்டில் பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கெனவே அளிக்கப்பட்டுவரும் ரூ.1.5 லட்சம் வட்டிக் கழிவுடன் கூடுதலாக இந்த ரூ.1 லட்சம் கழிவு அளிக்கப்படுகிறது.

கல்விக் கடன் 80இ!

வரிக் கட்டுபவர் தன் உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. கடனைக் கட்டத் தொடங்கி, 8 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த வரிச் சலுகைக் கிடைக்கும். அசலுக்கு வரிச் சலுகை இல்லை.

உடல் ஊனமுற்ற வரிதாரர் 80யூ!

வரிக் கட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ.50,000 (தீவிரமான உடல் ஊனம் ரூ. 1,00,000 ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது.

மருத்துவச் சிகிச்சைக்கான செலவு 80 டி.டி!

வரிக் கட்டுபவரைச் சார்ந்திருக்கும் செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1,00,000) வரை வருமான வரிவிலக்கு இருக்கிறது.

தீவிர நோய்களுக்கான சிகிச்சை   80 டி.டி.பி!

புற்றுநோய், எய்ட்ஸ், நரம்பு மண்டல பிரச்னை உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் ரூ.40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000) வரிவிலக்கு உள்ளது.

நன்கொடை 80ஜி!

நீங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50% முதல் 100% வரை வரிச் சலுகை இருக்கிறது.

இதுவரை சொன்னவற்றுள் அவசியமானவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதில்தான் நீங்கள் வருமான வரியை மிச்சப்படுத்துவது இருக்கிறது.

முதலீட்டின் மூலம் வரிச் சேமிப்பு!

அடுத்து, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வரிச் சேமிப்பு பற்றி பார்ப்போம்.

முதலீடு மூலம் வருமான வரியை மிச்சப்படுத்தும் பல வழிகள் 80சி பிரிவின்கீழ் வருகின்றன. இபிஎஃப், பிபிஎஃப், ஃபிக்ஸட் டெபாசிட், தேசிய சேமிப்புப் பத்திரம், தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள், இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டு போன்றவை இவற்றில் முக்கிய முதலீடுகளாக உள்ளன.





எம்ப்ளாயி பிராவிடன்ட் ஃபண்டு (இபிஎஃப்)!

தனியார் நிறுவனங் களில் பணியாளரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% சம்பளத்தில் பிஎஃப்-ஆகப் பிடிக்கப்படுகிறது. இந்தத் தொகை மற்றும் அதன்மூலமான வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. தற்போதைய நிலையில் 8.75% வட்டி ஆண்டுக்குக் கிடைக்கிறது. ஏறக்குறைய வங்கி எஃப்டி அளவுக்கு வட்டிக் கிடைப்பதால், விருப்பத் திட்டத்தின் (விபிஎஃப்) கீழ் கூடுதலாக 12% முதலீட்டையும் இந்தக் கணக்கிலே மேற்கொள்வது நல்லது.


இது முற்றிலும் பாதுகாப்பான முதலீடு. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களுக்கு ஏற்றது. இதில் எந்த அளவுக்கு அதிகம் சேர்க்க முடியுமோ, அந்த அளவுக்குச் சேர்க்கலாம்.

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்டு (பிபிஎஃப்)!

சம்பளத்தில் பிஎஃப் பிடிக்கப்படாத பணியாளர்கள், சுய தொழில் செய்பவர்கள் என யார் வேண்டு மானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து வரிச் சலுகைப் பெறலாம். ஆண்டுக்குக் குறைந்தது ரூ.500கூட முதலீடு செய்யலாம்.  ஓராண்டில் அதிகபட்சம் ரூ.1,00,000 வரையிலான முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைக்கும். இதுவும் இபிஎஃப்போல், முழுக்கப் பாதுகாப்பான முதலீடு. முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள்;  வட்டிக்கு வரி இல்லை.  ஆண்டுக்கு வட்டி 8.7% கிடைக்கும்.

வங்கி 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்!


அடுத்து, வங்கி ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் இருக்கிறது. இதில் முதலீட்டுத் தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ1,000. வட்டி 8.5 முதல் 9%. மூத்த குடிமக்களுக்கு 0.25 முதல் 0.5% கூடுதல் வட்டி உண்டு. இதில் வருமானத்துக்கு வரிக் கட்டவேண்டும் என்பது பாதக அம்சம். மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இந்த முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கலாம்.

தேசிய சேமிப்புப் பத்திரம்!

மத்திய அரசின் தேசிய சேமிப்புப் பத்திரத்தில் (என்எஸ்சி) செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. வட்டி ஆண்டுக்கு 8.5% வழங்கப்படுகிறது. இது ஆறு ஆண்டுத் திட்டம். இது பாதுகாப்பான முதலீடு என்றாலும் வட்டிக்கு வரி உள்ளது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கும், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும் ஏற்றது இந்தத் திட்டம்.

தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள்!

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், (9.2%, 5 ஆண்டுத் திட்டம்), தபால் அலுவலக டைம் டெபாசிட் (8.5%, 5 ஆண்டு) போன்றவற்றுக்கும் வரிச் சலுகை உண்டு.

இஎல்எஸ்எஸ்!

மூன்றாண்டுகால லாக் இன் பீரியடு கொண்ட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுக்கு வரிவிலக்கு இருக்கிறது. மாதந்தோறும் குறைந்தது 500 ரூபாய்கூட இதில் முதலீடு செய்யலாம். இதில் வருமானமானது பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்துள்ளது. டிவிடெண்ட் மற்றும் வருமானத்துக்கு வரி இல்லை. ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஏற்றது இந்தத் திட்டம்.

ஓய்வூதியத் திட்டங்கள்!

ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் (80 சிசிசி) மற்றும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் (80 சிசிடி) கொண்டுள்ள பென்ஷன் திட்டங்களின் முதலீட்டுக்கும் வரிச் சலுகை இருக்கிறது. மத்திய அரசின் புதிய நேஷனல் பென்ஷன் ஸ்கீமில் (80 சிசிஇ) செய்யப்படும் முதலீட்டுக்கு இந்த வரிச் சலுகை இருக்கிறது. பென்ஷன் தொகைக்கு வரி உண்டு என்பது பாதகமான அம்சம். இந்த பென்ஷன் திட்டங்கள் அனைத்திலுமான மொத்த முதலீடு, 80 சி பிரிவின்கீழ் கொண்டுவரப்பட்டு, நிபந்தனைக்கு உட்பட்டு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரையில் வரிச் சலுகை அளிக்கப்படும்.

பிஎஃப் திட்டத்தில் சேரும் வசதி இல்லாத சுயதொழில் செய்பவர்கள் மற்றும் கூடுதல் பென்ஷன் தேவை என்று திட்ட மிடுபவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் 80சிசிஜி!

பங்குச் சந்தையில் புதிய முதலீட்டை ஊக்குவிக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பங்குச் சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு) முதன்முறையாக முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரையில் (50% சலுகை) வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அதாவது, முதலீடு செய்யும் தொகையில் 50 சதவிகிதத்தை ஆண்டு வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். வரிச் சலுகை பெற ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கவேண்டும். பங்குகளில் முதல்முறையாக முதலீடு செய்பவராக இருக்கவேண்டும். இந்தத் திட்டத்துக்கான லாக் இன் பீரியடு மூன்று ஆண்டுகள். ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு மட்டும் ஏற்றது. 

எதற்கு முன்னுரிமை?

வருமான வரிச் சேமிப்புக்கான முதலீடு என்கிறபோது முதலில் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப்-க்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அதன்பிறகு லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அடுத்து, பிள்ளைகளின் கல்விச் செலவை கணக்கில்கொள்ள வேண்டும். வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், அதற்கான அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதையும் தாண்டி வரிக் கட்டவேண்டியிருந்தால் மட்டுமே இதர முதலீட்டு வாய்ப்புகளைக் கவனிக்க வேண்டும்.

How to find and control bank's annual charges and credit card charges

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பல வாடிக்கை யாளர்கள், ஆண்டுப் பராமரிப்புத் தொகை மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அந்த வங்கிகள், அவ்வப்போது விதிக்கும் பலவகையான இடைநிகழ்வுக் கட்டணங்களைப் பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இந்தக் கட்டணங்களில் பலவற்றைத் தவிர்க்க வழி இருக்கிறது. இதன்மூலம் பணத்தை மிச்சப்படுத்தவும் வழி இருக்கிறது.

'வங்கிகள் பலவகையான சேவை களுக்கு விதிக்கும் கட்டணங்களை, வங்கியின் இணையதளம் மற்றும் கணக்கு ஆரம்பிப்பதற்காக நிரப்பப்படும் படிவத்தில் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார்கள். இதைப் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கூர்ந்துக் கவனிப்பதில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் களின்படியே வங்கிகள், இந்தக் கட்டணங்களை வசூலிக்கின்றன என்பதால் அவற்றைச் சொல்லிக் குற்றமில்லை.

மினிமம் பேலன்ஸ்!

வங்கிக் கணக்கில் உள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகைக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையெனில், வாடிக்கையாளர் அபராதம் செலுத்தவேண்டும். இந்த அபராத தொகை வங்கிக்கு வங்கி வேறுபடும். பொதுவாக, பொதுத்துறை வங்கிகள் காலாண்டுக்கு ஒருமுறை குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையைக் கணக்கிடுகின்றன. அவ்வாறு அந்தத் தொகை இல்லாதபட்சத்தில் காலாண்டுக்கு ஒருமுறை அபராத கட்டணம் விதிக்கின்றன. சில தனியார் வங்கிகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் அபராத கட்டணம் விதிக்கின்றன.

கணக்கை மூட!
வாடிக்கையாளர் வங்கிக் கணக்கை குறிப்பிட்டக் காலத்துக்கு முன்பே  மூட விரும்பினால், அவர் ரூ.150 - 300 வரை கட்ட வேண்டும். உதாரணமாக, சில தனியார் வங்கிகள் வங்கிக் கணக்கை, ஆரம்பித்த 6 மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் மூடினால் 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. இதே 6 மாத காலத்துக்குள் மூடினால் 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

வங்கிக் கணக்கை மாற்ற!

வங்கிக் கணக்கை ஒரு கிளை யிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்றுவதற்குக் கட்டணம் இருக்கிறது. இது ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை. எனினும், சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்துக்குப்பின், கட்டணம் ஏதும் வாங்காமல் வங்கிக் கணக்கை வேறு கிளைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன. உதாரணமாக எனது நண்பர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரது வங்கிக் கணக்கும் சென்னையில் இருந்தது. 
 
பாஸ்புக்!

பொதுவாக வங்கிகள் பாஸ்புக் வழங்குவதற்கும், பரிமாற்றப் பதிவு செய்வதற்கும் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால், வேறு நகரத்திலோ அல்லது ஒரே நகரிலுள்ள வேறொரு கிளையிலோ புது பாஸ்புக் வாங்கும்பட்சத்தில், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் வங்கிக் கணக்குத் துவங்கி ஒரு வருடம் ஆகியிருந்தால் ஒரு கட்டணமும், ஒரு வருடத்துக்கு மேல் ஆகும்பட்சத்தில் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் சுமார் 50 முதல் 100 ரூபாய் வரை இருக்கலாம். சில பொதுத்துறை வங்கிகள் இதற்கென கட்டணம் ஏதும் விதிப்பதில்லை. இரண்டாவது முறை பாஸ்புக் வழங்குவதற்கும், பரிமாற்றப் பதிவு செய்வதற்கும் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுகிறது.

செக்புக்!

பழைய காசோலைகளுக்குப்  பதிலாக அதிகப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட சிடிஎஸ் காசோலைகளாக மாற்றித்தருவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது. அதன்பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் சுமார் 2 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
செக் பவுன்ஸ்!

பற்றாக்குறையான இருப்பு நிதியினால் செக் பவுன்ஸ் ஆகும்பட்சத்தில் சுமார் 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படுகிறது. சில தனியார் வங்கிகளில் காலாண்டில் முதன்முறையாக ஒரு காசோலை பவுன்ஸ் ஆனால் கட்டணம் 350 ரூபாயும், அதே காலாண்டில் அடுத்தடுத்த காசோலைகள் பவுன்ஸ் ஆகும்போது சுமார் 750 ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
டெபிட் கார்டு!

வங்கிகள் தங்கள் டெபிட் கார்டு சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுக் கட்டணமாக விதிக்கின்றன. இந்தத் தொகை ரூபாய் 50-லிருந்து 200 ரூபாய் வரை வேறுபடலாம். ஐந்து தடவைக்குமேல், பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் பணத்தை எடுத்தால் அதற்கும் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். ஒரு மாதத்தில் ஐந்து தடவைக்குமேல் பிற வங்கி ஏடிஎம்களில் பரிமாற்றம் செய்தால் கட்டணமாக சுமார் 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
 இன்டர்நெட் பேங்கிங்!

எலெக்ட்ரானிக் பில் பேமென்ட்கள், நிதிப் பரிமாற்றம் ஆகியவற்றுக்குக் கட்டணங்கள் உள்ளன. உதாரணமாக, ரயில் டிக்கெட் பதிவு செய்ய ஒரு பதிவுக்கு ரூபாய் 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது.

நிதிப் பரிமாற்றத்துக்கு!

சில தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏடிஎம்-கள், இன்டர்நெட் பேங்கிங், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கும் படி வற்புறுத்துவதன் மூலம் தங்கள் கிளைகளின் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க முயற்சிக்கின்றன. அதனால் ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் கிளைகளில் செய்யப்படும் பரிமாற்றங் களுக்கு, வங்கிகள், கட்டணங்கள் விதிக்கின்றன.

செயல்படாதக் கணக்கு!

வங்கிகளில் தொடங்கப்படும் கணக்குகளில், சிலசமயம் வருடம் முழுவதும் எந்தப் பரிமாற்றமும் செய்யாமல் இருக்கும்பட்சத்தில், அதற்காகச் செயல்படாத கட்டணம் வசூலிக்கப்படும்.

கட்டணங்களைத் தவிர்க்க!

தற்போது பலரும் ஆன்லைனில் ரயில் டிக்கெட், பேருந்து டிக்கெட் போன்றவற்றைப் பதிவு செய்கின்றனர். இதைத் தவிர்த்து நேரடியாகச் சென்று டிக்கெட் வாங்கும்பட்சத்தில் இந்தக் கட்டணங்களைத் தவிர்க்க முடியும்.

சிலர் தங்களது வங்கிக் கணக்கில் பண இருப்பைத் தெரிந்துகொள்ள ஏடிஎம் சென்று அடிக்கடி தனது பண இருப்பைச் சரிபார்க்கின்றனர். அவ்வாறு பார்ப்பதைத் தவிர்த்தால், இந்தக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். மேலும், சிலர் ஏடிஎம்மில் நாளன்றுக்கு நூறு ரூபாய் விதம் ஒரு மாதத்துக்குப் பலமுறை பணம் எடுக்கிறார்கள். இதைத் தவிர்த்து தேவையான அளவுக்குப் பணத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்தக் கட்டணங்களாவது குறையும்.

வங்கிகளில் நேரடியாகச் சென்று பணப் பரிவர்த்தனைச் செய்யும்போது விதிக்கப்படும் கட்டணங்களைவிட ஆன்லைன் பரிமாற்றத்துக்கு மிகக் குறைவான கட்டணங்களே விதிக்கப்படுகின்றன. இதன்மூலம் சில கட்டணங்களைக் குறைக்க முடியும். கிரெடிட் கார்டு பில்லைச் செலுத்தும்போது, ரூ.25,000க்கு மேல் ரொக்கமாகச் செலுத்தினால் கேஷ் ஹேண்ட்லிங் சார்ஜ் விதிக்கப்படும். மேலும், காசோலையாகத் தரும்பட்சத்தில், அது சரியான நேரத்தில் போய்ச் சேரவில்லை எனில், அபராத கட்டணம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டு மூலம் பணத்தை ரொக்கமாக எடுத்தால், சில நூறு ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்தவேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.