Monday, February 24, 2014

எடிசன்

எடிசன் பிறந்து 4 ஆண்டுகள் வரை பேச்சே வரவில்லை. அவருடைய தலை மற்றவர்களை விடச் சற்றுப் பெரிதாக இருந்தது. எடிசனின் அம்மாவுக்குத் தன் குழந்தையை நினைத்து கவலை. அதே நேரம் எடிசனை மிகவும் கனிவோடும் அக்கறையோடும் கவனித்துக் கொண்டார். 
 
ஒருநாள் எடிசன் வாத்து முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாத்துக் கொண்டிருந்தார்! அதைப் பார்த்த அம்மா, ‘என் மகன் பெரிய விஞ்ஞானியாவான்’ என்று எடிசனை அணைத்துக் கொண்டார்.  பேச்சு வந்ததிலிருந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் எடிசன். அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எல்லோரும் ஓடினார்கள். ஏழு வயதில் எடிசனைப் பள்ளியில் சேர்த்தனர். அவருடய தலையைப் பார்த்து ஆசிரியர் கேள்வி கேட்டார். அருகில் இருந்த மாணவர்கள் சிரித்தனர். வகுப்பில் எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த எடிசனை அந்த ஆசிரியருக்குப் பிடிக்காமல் போனது. ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது எடிசன் படம் வரைந்து கொண்டிருந்தார். இதைக் கண்ட ஆசிரியர், ‘மூளை வளர்ச்சியடையாதவன், முட்டாள்’ என்று திட்டினார். விஷயத்தைக் கேள்விப்பட்ட அம்மா, அவருக்கு வீட்டிலேயே படிப்புச் சொல்லித் தந்தார். படிப்பதில் தீராத ஆர்வம் ஏற்பட்டது. 11 வயதுக்குள் இலக்கியம், வரலாறு, அறிவியல் எல்லாம் படித்துவிட்டார். குறிப்பாக ரசாயனப் புத்தகங்கள் மீது கூடுதல் ஆர்வம். பரிசோதனைக் கூடத்தை வீட்டில் அமைத்துக்கொண்டு, அறிவியல் சோதனைகளைச் செய்ய ஆரம்பித்தார். 
 
அன்று தொடங்கிய அவரது கண்டுபிடிப்பு முயற்சிகள் அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தன. தன் வாழ்நாளில் சுமார் 1,500 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, 1,368 பொருள்களுக்குக் காப்புரிமைகளைப் பெற்றார்! உலகின் மிக உன்னதமான விஞ்ஞானிகளில் ஒருவராக ஜொலிக்கிறார்!
 
வெற்றிக்கான எடிசன் சொன்ன மூன்று மந்திரங்கள்: முயற்சி, முயற்சி, முயற்சி!
 

 

No comments:

Post a Comment