Friday, January 24, 2014

கங்கையில் மூழ்கினால் பாவம் தொலையுமா?


காசி யாத்திரைக்குப் புறப்பட்ட ஒருவன் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து ஆசி பெற வந்தான். கங்கை அங்கிருந்து இங்கு வந்திருக்கிறாளே, நீ ஏன் இங்கேயே ஸ்நானம் செய்யக் கூடாது?" என்று கேட்டார் பரமஹம்சர்.

அதற்கு அவன், சுவாமி! கங்கையில் விசேஷ சக்திகள் உள்ளனவாம். எப்படிப்பட்ட பாவியானாலும் ஒருமுறை கங்கையில் முழுகினாலே பாவங்கள் அனைத்தும் தொலைந்து அவனுக்கு ஸ்வர்க்கவாசம் கிட்டுமாம்" என்றான்.ஸ்ரீராமகிருஷ்ணர், நீ இதற்கு முன்பு காசிக்குப் போயிருக்கிறாயா? கங்கைக் கரையிலுள்ள பெரிய பெரிய மரங்களைப் பார்த்திருப்பாயே?" என்று கேட்டார். சிறு வயதில் என் தந்தையுடன் போயிருக்கிறேன். அப்பொழுது மரங்களைப் பார்த்த ஞாபகம் இலேசாக இருக்கிறது" என்றான் யாத்திரிகன்.ஸ்ரீராமகிருஷ்ணர் இப்போது வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தார் அந்த மரங்களில்தான் ரகசியம் அடங்கி இருக்கிறது! கங்கையில் ஸ்நானம் செய்பவர்கள் முதலில் தம் சட்டைகளைக் கழற்றி வைக்கின்றனர். அப்பொழுது அவர்களுக்குள் இருக்கும் பாவங்களுக்கு கங்கையின் ஸ்பரிசத்தினால் நாம் நாசமடைவோம் என்கிற பயம் உண்டாகிறது. அவை பறந்து சென்று மரங்களின் மேல் அமர்ந்து கொள்கின்றன. அங்கு தம் எஜமானவர்கள் திரும்பி வருவதை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அவர்கள் ஸ்நானம் செய்து மேலே வந்த உடனே மரத்தில் காத்திருந்த பாவங்கள் அவர்களைப் பிடித்துக் கொள்கின்றன. இந்த விஷயத்தை யாரும் சொன்னதில்லை; சொல்லவும் போவதில்லை. ஏனெனில் அப்போது காசி பண்டிதர்களின் வருமானம் குறைந்துவிடுமே. அதனால் நீ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!" என்றார்.யாத்திரிகனுக்குப் பயம் ஒரு பக்கம், தான் வெகுவாகக் கௌரவிக்கும் துறவி பொய் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை ஒரு பக்கம். காசிக்குப் போயும் பாவம் தொலையாவிட்டால் இவ்வளவு கஷ்டமான யாத்திரையை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்கிற பகுத்தறிவு ஒரு பக்கம்.அவனுக்கு இன்னொரு யோசனை வந்தது. சுவாமி! தாங்கள் சொல்வது சரியென்றே வைத்துக் கொள்ளலாம். காசியில் இறந்தால் அல்லது அங்கு அந்திம சம்ஸ்காரம் நடந்தால் அந்த ஆத்மா ஸ்வர்க்கத்திற்குப் போவதாகச் சொல்லப்படுகிறதே. அவர்கள் செய்த பாவங்கள் எங்கு போகின்றன?" என்று பணிவாகக் கேட்டான்.இந்தப் பாவங்களும் அதேபோல் தான். இறந்தவனுடைய உடலை, கங்கைக் கரைக்குக் கொண்டு வந்ததுமே அவனது பாவங்கள் மரத்தில் ஏறிவிடுகின்றன. ஆனால், அவற்றிற்குத் திரும்பி வருவதற்கு உடல் அங்கு இருப்பதில்லை. வேறு வழியின்றி அவை வேறு உடல் தேடி அம்மரங்களிலேயே காத்துக் கொண்டிருக்கின்றன.தினமும் உன்னைப் போன்ற பல ஆயிரம் மக்கள் கங்கையில் ஸ்நானம் செய்ய வருவார்களல்லவா? அவர்களில் யாரையாவது தேர்ந்தெடுத்து. அவனுக்குள் புகுந்து விடுகின்றன. அவனுக்குத் தன்னுடைய பாவங்களுடன் அதிகப் படியாகப் பாவங்கள் சேருகின்றன. இதொன்றையும் அறியாமல் அவன் காசி யாத்திரை செய்த திருப்தி, மகிழ்ச்சியுடன் தன்னையறியாமல் இந்தப் பாவங்களையும் சுமந்து கொண்டு திரும்புகிறான்" என்று விளக்கினார்.

அப்படியானால் என் பாவங்களைப் போக்குவது எப்படி?" என்று கேட்டான். பரமஹம்சர் சாந்தமாக, எல்லாவற்றையும் பவதாரிணிக்கு அர்ப்பித்துவிடு. ‘இனி பாவம் செய்யாமல் காப்பாற்று. முந்தைய பாவங்களின் பலனைத் திடமனதுடன் துக்கப்படாமல் அனுபவிக்கும் மனநிலையை எனக்குக் கொடு’ என்று கேள். அவளே காசி, அவளே கங்கை" என்று உணர்ச்சிப் பெருக்குடன் உபதேசித்தார்.யாத்திரிகன் தெளிந்த மனத்துடன் திரும்பினான்.

Wednesday, January 22, 2014

Caution CFL Bulb

 
'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
 
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.
 
அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
 
வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

Mediclaim FAQ in Tamil


'நான் ஏன் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கணும்? தேவை இல்லாமல் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரனுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கணும்?' என்ற நண்பர் ஒருவர், அலுவலகத்தின் கட்டாயம் காரணமாக மெடிக்ளைம் பாலிசியை எடுத்தார். இன்சூரன்ஸ் எடுத்த ஒன்றரை மாதத்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிருக்கு ஆபத்து இல்லை. இருப்பினும், மிகப் பெரிய காயங்கள் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவக் காப்பீடு இருந்ததால், மருத்துவச் செலவின்றி அவர் வீடு திரும்பினார்.

'ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும், அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவும் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில், மருத்துவக் காப்பீடு என்பது தவிர்க்க முடியாதது. மருத்துவச் செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால்தான் மக்களும் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.'- ஃபார்ச்சூன் பிளானர் நிறுவனரும், நிதி ஆலோசகருமான பி.பத்மநாபன்.

ஏன் எடுக்க வேண்டும் காப்பீடு?

எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். ஒருவேளை, எதிர்பாராத நேரத்தில் திடீர் விபத்துகள் ஏற்பட்டால், நோய்கள் தாக்கினால், அதை எப்படி எதிர்கொள்வது? அதற்குத் தீர்வாக இருப்பதுதான் மருத்துவக் காப்பீடு. எளிதாகச் சொல்லப்போனால், நமக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நோய்கள் வரலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்று நினைத்தால், குறைந்த அளவு பிரீமியத்தைக் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி, அதனால் ஏற்படும் செலவுகளை, காப்பீட்டு நிறுவனம் மூலம் பெறக்கூடிய திட்டமே மருத்துவக் காப்பீடு. 

தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசி!

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், 'நான் ஏன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று நினைக்கலாம். ஆனால், ஃபேமிலி ஃப்ளோட்டர் என்ற பாலிசித் திட்டம் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பீட்டுப் பயன்பாட்டுக்குள் கொண்டுவரலாம். தனிநபர் பாலிசியும் உள்ளது. இது அவ்வளவு பிரபலம் இல்லை. ஒருவர் திருமணம் ஆவதற்கு முன்பு, தனிநபர் பாலிசி எடுக்கலாம். பின்பு திருமணம் ஆன பின்பு மனைவி மற்றும் குழந்தைகளையும் அதில் இணைத்துக்கொள்ள முடியும். தனித்தனியாக எடுப்பதைவிட, ஃப்ளோட்டர் பாலிசி பிரீமியம் குறைவு. 

நம்மைப் பற்றிய விவரங்கள்!  

க்ளைம் எளிதாக இருக்க வேண்டுமானால், நாம் நம்முடைய உடல் சம்பந்தப்பட்டவற்றை ஒன்றும் மறைக்காமல் சொல்ல வேண்டும். முகவரிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, ஏதாவது வியாதி இருக்கிறதா, இல்லையா என்று முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்து, அதனை விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவுசெய்திருக்க வேண்டியது அவசியம்.


காப்பீட்டைக்  கண்டறிவோம்!  

மிகப் பெரிய சவால்... 'எந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு எடுப்பது, மேலும் எந்த நிறுவனத்தில் எடுப்பது, நமக்கு எது தேவை’ என்பதை நாம் அறிய வேண்டும், பிறகு சில கேள்விகளை இரண்டு, மூன்று நிறுவனங்களில் கேட்பதன் மூலம் நமக்கு ஓரளவு தெளிவு கிடைக்கும். இன்று இணையதளங்களில் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு விடைகிடைக்கும். அதிலும் ஒருமுறை நாம் தேர்வுசெய்தது சரியாக உள்ளதா என்று பார்க்க முடியும். 'காசுக்கேத்த தோசை’ என்பார்கள், அதுபோல பிரீமியத்தை மட்டும் பார்க்காமல், அதில் என்னென்ன கவர் செய்கிறார்கள்... அதில் ஏதாவது கண்டிஷன் இருக்கிறதா... என்று பார்த்தால், நம்மால் நல்ல ஒரு காப்பீட்டைக் கண்டுபிடிக்க முடியும். 

பொதுவான தவறு!  

இன்று நிறையப் பேர், 'எனக்கு அலுவலகத்தில் காப்பீடு உள்ளது... அதனால் எனக்கு தனியாகத் தேவைப்படாது’ என எண்ணுகிறார்கள். அது மிகவும் தவறு. இன்று எல்லோரும் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் சூழல். மேலும் வெகு காலம் யாரும் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்வதில்லை, அப்படி இருக்கும்போது, ஒரு வேலையைவிட்டு மறு வேலையில் சேரும்போதுகூட, நமக்கு ஏதாவது நோய் வரலாம். மேலும், பாலிசி எடுத்துச் சில ஆண்டுகள் கழித்துதான் சிலவகையான நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும். அதனால் தனியாக எடுத்துக்கொள்வது நல்லது. இன்று புதிய வகையான பாலிசிகள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று நம்முடைய வரம்பு போக, உயிர்க்கொல்லி நோய்கள் எதுவும் கண்டெடுக்கப்பட்டால், நம்முடைய பாலிசி தொகைபோல இருமடங்கு கொடுக்கிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

மருத்துவமனையில் அனுமதிக்கும்  முன்பும் பின்பும்!  

சில நோய்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு சில டெஸ்ட் எடுக்க நேரிடும், சில மாத்திரைகள் சாப்பிடவும் செய்யலாம். இவை வழக்கமான மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் முடிவுசெய்யப்படும். 30 முதல் 60 நாட்களுக்கு முன்பு வரை ஆகும் செலவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையே இதன் வரம்புக்குள் கொண்டுவரப்படும். அதேமாதிரி நாம் மருத்துவமனையைவிட்டு வந்தவுடன் நோய் உடனடியாகக் குணமாகாது. அதன்பிறகும் ஆகும் செலவுகளையும் இதில் சேர்க்க முடியும். சிகிச்சைத் திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோய்கள், அதிக மருத்துவச் செலவை ஏற்படுத்தும் நோய்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. 

நிதிப் பற்றாக்குறை! 

மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, நாம் உடல்ரீதியாக மட்டும் பாதிப்புக்குள்ளாவது இல்லை. மாறாக நம்மால் வேலைக்குச் செல்ல முடியாது. அதனால் நம்முடைய சம்பளத்தில் துண்டு விழும். நிதிச் சுமைகளை யார் கவனிப்பது என்பதுபோன்ற கேள்விகள் மனதைப் பிசையும். நாம் எடுக்கும் பாலிசிக்கு ஏற்ப நமக்கும், நம்மைப் பார்த்துக்கொள்பவருக்கும், சில பாலிசிகளில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை தருகிறார்கள்.

மருத்துவப் பரிசோதனை செய்பவர்கள், காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும்தான். எனவே, உங்கள் தரப்பு வாதம்தான் வெற்றிபெறும்.

Amazing 7

இயற்கையில், ஆண்டவனின் படைப்புகள் பொதுவாக ஏழு ஏழாக இருப்பதையே கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த 'சப்தம’ என்று சொல்லப்படும் ஏழு என்ற எண் உரு தெய்வாம்சம் பொருந்தியதாகக் கருதப்படுகிறது.

முதல் படைப்புகளான ஏழு கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை தங்கள் நீள்வட்டப் பாதையில் மிகவும் துல்லியமாக ஒரு நொடிகூடத் தவறாமல் காலம் காலமாக சுற்றிச் சுழல்கின்றன.உலகின் எல்லா நாடுகளிலும், இந்த ஏழு கிரகங்களை ஒட்டியே வாரத்துக்கு 7 நாட்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று முறையாக வகுக்கப்பட்டிருக்கின்றன.இயற்கைப் பிறப்புகள் தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரம் என ஏழாக அமைந்துள்ளன.இயற்கை வண்ணங்கள் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு. வானவில்லில் காட்சி தருகிற ஏழு நிறங்கள் இவை.இசையில், ச-ரி-க-ம-ப-த-நி என சப்த ஸ்வரங்கள் அமைந்துள்ளன.



அது மட்டுமா... அயோத்தி, காசி, மாயா, உஜ்ஜயினி (அவந்தி), துவாரகா, மதுரா, காஞ்சி ஆகிய ஏழு நகரங்களில் வசிப்பதும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய ஏழு நதிகளில் நீராடுவதும் புண்ணியம் நிறைந்தவை எனப் போற்றப்படுகின்றன.

சப்தரிஷிகள் என அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரஸர்  ஆகியோரைக் கொண்டாடுகிறார்கள். சப்த சிரஞ்ஜீவிகளாக அஸ்வத்தாமர், மகாபலி, ஆஞ்சநேயர், வியாசர், விபீஷணர், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு பேரையும் அவர்களுக்கு உரிய நாளில், வணங்கி வழிபடுகிறோம்.

Sunday, January 19, 2014

39 பெண்களை மணந்து 160 பேருடன் ஒரே வீட்டில் வசிக்கும் அதிசய மனிதர்



அய்ஸ்வால் : மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.
முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.
நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.
காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.
வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்
.

கம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள் (RAM CHIP)

புதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன. இப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.
புதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும். இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும். 
வழக்கமான DRAM மெமரி சிப்கள், தன் ஒவ்வொரு மெமரி செல்லிலும் எலக்ட்ரிகல் சார்ஜ் பயன்படுத்தி பிட்களை (ones and zeros) ஸ்டோர் செய்திடும். ஆனால், Magnetoresistive RAM (MRAM) காந்த சக்தியைப் பயன்படுத்துகிறது. magnetic charge மூலம், பிட்கள் ஸ்டோர் செய்யப்படும். Resistive RAM (RRAM) இரண்டு லேயர் அடுக்குகளில் தயாரானதாக இருக்கும். இரண்டு அடுக்குகளும், ஒன்றுக்கொன்று வித்தியாசமான செயல்பாட்டினைக் கொண்டிருக்கும்.
இந்தப் புதிய தொழில் நுட்பத்திற்குப் பல சிப் தயாரிப்பாளர்கள் மாறிக் கொண்டுள்ளனர். பல நிறுவனங்களும், ஆய்வு மையங்களும் இவற்றை எளிதாகக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற் கான உரிமையைப் பெற இருப்பதாக Crossbar நிறுவனம் அறிவித்துள்ளது. 
ஆனால், தற்போதைய DRAM சிப்களின் இடத்தில் இவற்றைப் பயன்படுத்த, இன்னும் பல நிலைப் பணி இந்த இரண்டு ராம் மெமரி சிப்கள் வடிவமைப்பில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவை வெற்றிகரமாக முடியும் தருவாயில், கம்ப்யூட்டர் கட்டமைப்பில், அதன் ஸ்டோரேஜ் மற்றும் மெமரியில் பெரிய மாற்றங்கள் வரும். இப்போதைய பெர்சனல் கம்ப்யூட்டர்கள் DRAM சிப்களைப் பயன்படுத்தி புரோகிராம்களை இயக்குகின்றன. புரோகிராம் இயங்கத்தேவையான டேட்டாவினை ஸ்டோரேஜ் செய்திடவும் பயன்படுத்துகின்றன. இந்த சிப்களுக்கான எலக்ட்ரிகல் பவர் நிறுத்தப்படுகையில், இவற்றில் உள்ள டேட்டா நமக்குக் கிடைக்காது. ஆனால், புதிய வகை மெமரி சிப்கள் செயல்பாட்டுக்கு வருகையில், நமக்கு டேட்டா திரும்ப கிடைக்கும்.
தற்போது டேப்ளட் பி.சி.க்களில் பயன்படுத்தப்படும் Flash memory தொடர்ந்த மெமரியை வழங்குகின்றது. மின்சக்தி நீக்கிய பின்னரும், ஸ்டோரேஜ் தக்க வைக்கிறது. புதியதாக வர இருக்கும் மெமரி சிப்கள், இந்த வகையில் இவற்றையும் மிஞ்சிவிடும் எனத் தெரிகிறது.
RRAM சிப்கள், தற்போது பயன்படுத்தப்படும் மின் சக்தியில் 20 மடங்கு குறைவாகவே பயன்படுத்தும். டேட்டா எழுதும் வேகம் 20 மடங்கு அதிகமாக இருக்கும். NAND flash memory ஐக் காட்டிலும் ஸ்டோரேஜ் திறன் கூடுதலாக இருக்கும். உறுதியாகத் தொடர்ந்து இயங்கும் மெமரி இனி கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால், இப்போது போல பதட்டப் படாமல், மெமரியிலிருந்து மீளலாம்.

இந்திய நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்.


அமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பேஸ்புக் சமூக இணைய தள நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது. மொபைல் தொழில் நுட்பத்துறையில் இயங்கும், பெங்களூருவினைச் சேர்ந்த Little Eye Labs என்னும் நிறுவனத்தை அண்மையில் பெற்றுள்ளது. இந்த நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் திறனை அதிகப்படுத்தும் தொழில் நுட்பத்தினை வடிவமைத்து வருகிறது. இந்த தொழில் நுட்பத்திற்கு பேஸ்புக் முன்னுரிமை கொடுத்து வந்தது. தன் வர்த்தகத்திற்கு இதன் கட்டமைப்பு தேவையாய் இருந்தது. எனவே, தற்போது இந்த நிறுவனத்தையே வாங்கி உள்ளது. முதல் முறையாக, ஓர் இந்திய நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன விலை இதற்கெனக் கொடுக்கப்பட்டது என இரண்டு பக்கம் இருந்தும் தகவல் இல்லை. லிட்டில் ஐ நிறுவன வல்லுநர்கள் மற்றும் ஊழியர்கள் மொத்தம் 10 பேர்கள் தான். இருப்பினும், இந்த நிறுவனம் 1.5 கோடி டாலர் விலை போயிருக்கலாம் என சாப்ட்வேர் நிறுவனங்கள் பேசிக் கொள்கின்றன.
பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தியே அணுகுகின்றனர் என்பதாலேயே, பேஸ்புக்கிற்கு இந்த தொழில் நுட்பம் தேவையாய் உள்ளது. பயனுள்ள மொபைல் அப்ளிகேஷன்களை பேஸ்புக் தன் பயனாளர்களுக்குத் தரத் திட்டமிடுகிறது. அந்த வகையில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் பக்க பலமாக இருக்கும் என பேஸ்புக் நிறுவன பொறியியல் மேலாளர் சுப்பு சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பிரிவுகளைத் தொடங்கி தங்களுக்கு வேண்டிய தொழில் நுட்பத்தினைத் தயாரித்து வரும் வேளையில், பேஸ்புக் இந்திய தகவல் தொழில் நுட்ப திறமையின் மதிப்புணர்ந்து, நிறுவனத்தையே வாங்கியுள்ளது, நம் திறமைக்குச் சான்றாகும்.
நூறு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தும் பேஸ்புக் இணைய தளப் பயனாளர்களுக்கு இந்த தொழில் நுட்பம் மூலம் பல புதிய வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். லிட்டில் ஐ லேப்ஸ் என்ற இந்த தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கி ஓராண்டு தான் ஆகியுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். இந்நிறுவனத் தின் அனைத்து பொறியியல் வல்லுநர்களும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடமான மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்குச் செல்ல இருக்கின்றனர். அங்கு கிடைக்கும் உலகத் தரத்திலான தொழில் நுட்பக் கட்டமைப்பு, இன்னும் சிறப்பாகச் செயல்பட வழி வகுக்கும் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

precious water... save it...

Photo Gallery

Satta panjayathu iyakkam...

Photo Gallery

Say No to plastic

Photo Gallery

Excel Tips

பேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற் கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

எக்ஸெல் தரும் இரட்டைக் கோடுகள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டுகளில் பெயர் அல்லது வேறு வகையான டேட்டாவின் கீழாக இரண்டு கோடுகளில் அடிக்கோடிடலாம். இதற்கு முதலில் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்த வேண்டும். அடிக்கோடு இரு கோடுகளாக போடப்படும். இன்னும் பலவிதமான அடிக்கோடுகள் எக்ஸெல் தொகுப்பில் உள்ளன. அவற்றைப் பெற Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்துங்கள். அங்கு பலவிதமான அடிகோடுகளை Underline என்னும் பகுதியில் காணலாம்.

செல்களைக் கட்டமிட: எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + & அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + _ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா!

செல்லில் ##### காட்டப்பட்டால்: குறிப்பிட்ட அளவில் செல்களை அமைத்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தகவல்களை இடுகிறீர்கள். சில வேளைகளில் செல் கொள்ளாத அளவிற்குத் தகவல்கள் அமைக்கப்படுகின்றன. அப்போது செல் நம் தகவல்களுக்காக நீட்டிக் கொடுக்காது. ##### என்ற அடையாளத்தினைக் காட்டும். அல்லது நாம் அவ்வப்போது அந்த குறிப்பிட்ட செல்லின் நீளத்தினை அதிகப்படுத்த வேண்டும். 
இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு வழி உள்ளது. எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைத் தானே தகவல்களுக்கேற்ற வகையில் நீட்டித்துக் கொள்ள செட் செய்திடலாம். எக்ஸெல் தானாகவே செல் நீள, அகலத்தினை பார்மட் செய்து கொள்ளும். இந்த வசதியினை "shrink to fit” என எக்ஸெல் பெயரிட்டுள்ளது. இடப்படும் தகவல்களின் பாண்ட் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்கிறது. ஆனால், மிக நீளமாக இருக்கும் பட்சத்தில், வழக்கம் போல செல் அமைப்பை மாற்றிக் கொள்கிறது. நீங்களாக அந்த செல்லின் அகலத்தைச் சரி செய்திடுகையில், மீண்டும் தகவலுக்கான பாண்ட் அளவை மாற்றிக் கொள்கிறது.
இதற்கு எந்த செல் அல்லது செல்கள் உள்ள வரிசையை மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அது செல், நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையாக இருக்கலாம். இனி, Format Cells திறக்கப்பட வேண்டும். இதற்கு, ரிப்பன் கிளிக் செய்து, Home டேப் கிளிக் செய்திடவும். இங்குள்ள Font groupனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலது கீழாக உள்ள dialog box launcher ஐ கிளிக் செய்திடவும். 
அடுத்து ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு ஹைலைட் செய்யப்பட்ட செல் அல்லது வரிசையில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Format Cells தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தில் பார்மட் செல்ஸ் டயலாக் பாக்ஸில், Alignment tab என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி உங்கள் தகவல்கள் செல்களுக்கேற்ற வகையில் சுருங்கச் செய்வதற்கு ஒரு டூல் தயார் ஆகிவிட்டது.

windows 8.1 tips விண்டோஸ் 8.1 - புதிய குறிப்புகள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் மெதுவாக பயனாளர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து பலர், விண்டோஸ் 8.1க்கு மாறலாமா? வேண்டாமா? என்ற கேள்வி யுடன் இன்னும் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால், கூடுதல் பயன் இருக்குமா? அல்லது திக்கு தெரியாமல் மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா எனத் தங்களுக்குள்ளாகவே கேட்டு வருகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைப் பழைய சிஸ்டத்தின் இடத்தில் அறிமுகப்படுத்துகையில் நிச்சயமாக, புதிய பல வசதிகளை இணைத்தே தரும். விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலும் புதிய வகையில், தொடுதிரை உணர்வு இயக்கத்துடன் வெளிவந்தது. அதன் செயல்பாடுகள் குறித்த பின்னூட்டங்களுடன், பின்னர், விண்டோஸ் 8.1 வெளிவந்துள்ளது. விண் 8 கொடுத்த வசதிகளுடன் ஐக்கியமாக பயனாளர்கள் மேற்கொண்ட தயக்கம், விண் 8.1 க்கு மாறிக் கொள்வதிலும் தொடர்கிறது. இருப்பினும், பல முக்கிய மாற்றங்களும் வசதிகளும் விண் 8.1 ல் கிடைக்கின்றன என்பதே உண்மை.
இந்தக் கட்டுரையில், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தரும் பயன்கள் சார்ந்து சில கூடுதல் குறிப்புகள் தரப்படுகின்றன.


1. டெஸ்க்டாப்பில் அதிக பயன்பாடு: இது என்ன ரகசிய மெனுவா? என்று கேட்கும் அளவிற்குப் புதிய பயன்பாடுகள், இந்த விண் 8.1 அப்டேட்டில் கிடைக்கிறது. விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாடு இதில் முதல் இடத்தில் உள்ளது. விண்டோஸ் டெஸ்க்டாப் திரையில், வலது மூலையில் ரைட் கிளிக் செய்தால், விண்டோஸ் இயக்கத்தின் பல பயனுள்ள ஆப்ஷன்களுக்கான ஷார்ட்கட் வழிகளை மெனுவாகப் பெறலாம். விண்டோஸ் 8 எப்படி ஷட் டவுண் செய்வது என குழப்பமாக உணர்ந்த பயனாளர்கள், இந்த மெனுவினைப் பார்த்து, அப்பாடா தலைவலி விட்டது என்று எண்ணுவார்கள். பவர் ஆப் செய்வதற்கும், ரீ ஸ்டார்ட் செய்வதற்கும், சிஸ்டம் முடித்து வைக்கவும் பல வழிகளை இது காட்டுகிறது.

2. டெஸ்க்டாப்பிற்கு கம்ப்யூட்டரை பூட் செய்திட:
 நீங்கள் விண் 8/ 8.1 சிஸ்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட ஸ்டார்ட் ஸ்கிரீன் தேவை இல்லை என எண்ணி, எளிமையான பழைய ஸ்கிரீன் தோற்றமும் செயல்பாடும் போதும் என எண்ணுகிறீர்களா? உங்க ளுடைய விருப்பத்தினை மைக்ரோசாப்ட் வல்லுநர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். டெஸ்க்டாப்பில், உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் 'Properties' தேர்ந்தெடுக்கவும். நேவிகேஷன் டேப்பினைத் தேர்ந்தெடுத்து 'Go to the desktop' என்ற ஆப்ஷனில் டிக் செய்திடவும். பின்னர், விண்டோஸ் உங்கள் டெஸ்க்டாப்பில் பூட் செய்திடும்.

3. ஸ்டார்ட் ஸ்கிரீன் ஒழுங்குபடுத்து: உங்களிடம் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்ட திரைக் காட்சிகளுடன் ஒரு ஸ்மார்ட் போன் உங்கள் பயன்பாட்டில் இருந்தால், அதே போன்ற ஒழுங்குமுறையினை, உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் ஸ்கிரீனிலும் எதிர்பார்ப்பீர்கள் தானே? இது கம்ப்யூட்டரிலும் விண் 8.1 சிஸ்டத்தில் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய அப்ளிகேஷன் குரூப்பினை வேறு பெயருக்கு மாற்றுவதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம். ஸ்டார்ட் ஸ்கிரீனில் ரைட் கிளிக் செய்து, 'Customise' என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் திரையில் தோன்றும் புரோகிராம் டைல்ஸ்களை ஒருங்கிணைக்கவும், பெயர் சூட்டவும் முடியும்.

4. எக்ஸ்பாக்ஸ் மியூசிக் பிளே லிஸ்ட்: சர்ச் எனப்படும் தேடல் செயல்பாடுகள், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், மீண்டும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. பல பின்னூட்டங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் சில விஷயங்கள் சீரமைக்க வேண்டியுள்ளது. எனவே, மிக விரைவான தேடலை மேற்கொள்ள, சிஸ்டத்துடன் கிடைக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரினைத் திறந்து (உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து), Bing பயன்படுத்தவும். இங்கு இசைக் கலைஞர்களைக் குறிப்பிட்டுத் தேடலாம். பின்னர் Share Charm என்பதில் மவுஸைக் கொண்டு சென்று அதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் 'Music' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் இசைக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து பட்டியல் அமைத்திடலாம். இந்த வகையில் தேடல் தெளிவும் விரைவும் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.

5. நிரந்தர வால் பேப்பர்: ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆகிய இரண்டும் வெவ்வேறு என நீங்கள் உணர்ந்தால், எப்படி ஒரே வால் பேப்பரை இரண்டுக்குமாக அமைக்க முடியும்? ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து Settings Charm திறக்கவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில் 'Personalise' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குப் பிடித்தமான வால் பேப்பரைத் தேர்ந்தெடுத்து, இரண்டுக்குமாக அமைக்கலாம்.

6. ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட: கம்ப்யூட்டரில் இருக்கும் ஸ்டோரேஜ் உங்களுக்குப் போதாது; கூடுதலாக இன்னும் ஹார்ட் டிஸ்க் இடம் தேவை, அதுவும் இலவசமாகக் கிடைக்குமா என்று பார்க்கிறீர்களா? கவலையே வேண்டாம். விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், மிக அருமையான ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதி தரப்படுகிறது. மைக்ரோசாப்ட் தன் ஸ்கை ட்ரைவினை, விண் 8 .1 பயன்படுத்தும் பயனாளர்களை இணைத்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், Settings Charm செல்லவும்; 'Change PC settings' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இதிலிருந்து 'SkyDrive' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தில், நீங்கள் உங்கள் டாகுமெண்ட் மற்றும் பைல்கள் அனைத்தையும், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட விருப்பமா என்ற ஆப்ஷன் தரப்படும். மாறா நிலையில், அனைத்து பைல்களையும் ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட அமைத்துவிட்டால், இணைய இணைப்பில் இருக்கும்போது, அனைத்து பைல்களும் ஸ்கை ட்ரைவிற்குக் கொண்டு செல்லப்படும். இதனால், நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், எந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும், உங்கள் பைல்களை அணுக இயலும்.

7. அனைத்து அப்ளிகேஷன்களும் எளிதான தோற்றத்தில்: ஸ்டார்ட் ஸ்கிரீனில், நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் அவற்றிற்கான டைல்ஸ்களுடன், வானவில் வண்ணக் கலவையில் தோற்றமளிக்கும். ஆனால், இவற்றத் தேடிக் கண்டறிய, நாம் ஒவ்வொரு திரையாகச் செல்ல வேண்டியதிருக்கும். அனைத்தையும் மொத்தமாகப் பார்க்க வேண்டுமானால், அதற்கு விண் 8.1 வழி செய்கிறது. டைல்ஸ் கீழாக அம்புக்குறி ஐகானைக் கிளிக் செய்தால், இந்த வியூ கிடைக்கும். இங்கிருந்து, அனைத்து அப்ளிகேஷன்களையும் நீங்கள் விரும்பியபடி அமைக்கலாம். அவற்றை இன்ஸ்டால் செய்த நாட்களின் அடிப்படையில், அவற்றின் அளவின் அடிப்படையில், அகரவரிசைப்படி என நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொண்டு தேடிப் பெறலாம்.

8. எழுப்பும் அலாரம்: ஆம், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தைப் பயன்படுத்தி, நாள், வாரம், மாதம் அடிப்படையில் நேரத்தை செட் செய்து அலாரம் அமைக்கலாம். இது விண்டோஸ் போன் சிஸ்டத்தில் உள்ள அப்ளிகேஷன் போலத் தெரிகிறதா? ஆம். அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நினைவூட்டல்களும், அதற்கான தனி ஒலிகளும் அமைத்து இயக்கலாம். அப்ளிகேஷன் பட்டியலில் இந்த அலாரம் செட் செய்திடும் அப்ளிகேஷனும் கிடைக்கிறது.

9. அப்ளிகேஷன்களை அருகருகே இயக்க: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் போது, ஒரு நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை மட்டுமே இயக்க முடியும். ஆனால், விண் 8.1ல் இரண்டு அப்ளிகேஷனை ஒரே நேரத்தில் இயக்கலாம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த அப்ளி கேஷன்கள் இயங்கும் இடத்தினைச் சரியாகச் சரி பாதி இடத்தில் இயக்க வேண்டியதில்லை. ஒன்றைச் சிறிய இடத்திலும், இன்னொன்றைச் சற்றுப் பெரிய இடத்திலும் நம் தேவைப்படி அமைத்து இயக்கலாம்.

10. பைல்களின் நகல்களைத் தக்க வைக்க: உங்களுடைய முக்கியமான பைல்களின் பேக் அப் நகல்களை எப்படி எங்கு வைப்பீர்கள்? நம் பைல்கள் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக நாம் எண்ணினாலும், அவை கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றின் நகல்களைப் பாதுகாப்பாக வைத்திட விண்டோஸ் 8.1 வசதி தருகிறது. இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு 'System and Security' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதே நேரத்தில் 'file history' என்று அமைத்துத் தேடலில் ஈடுபடவும். அப்போது யு.எஸ்.பி. ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றை பேக் அப் பைல்களுக்காக இணைக்க வேண்டியதிருக்கும். இதில் பேக் அப் பைல்கள் பதியப்படும்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் புதிய மொபைல் போன்கள் இரண்டினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Micromax Bolt A59 மற்றும் Micromax Bolt A59 28 என இவை அழைக்கப்படுகின்றன. போல்ட் 59, ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 சிஸ்டத்திலும், போல்ட் 28 ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்திலும் இயங்குகின்றன. ஏ59 போனில், 2 மெகா பிக்ஸெல் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் உடன் தரப்பட்டுள்ளது. இன்னொரு கேமராவும் முன்புறம் கிடைக்கிறது. இதன் மற்ற அம்சங்கள்:

3.5 அங்குல திரை, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் வேக இயக்கம் கொண்ட ப்ராசசர், இரண்டு சிம் பயன்பாடு, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை-பி, புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. கார்ட் ஸ்லாட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 256 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். போனின் தடிமன் 10 மிமீ ஆகும். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.

போல்ட் ஏ28 மேலே சொல்லப்பட்ட திரை, ப்ராசசர் கொண்டுள்ளது. இதன் இரண்டு கேமராக்களும் 0.3 எம்.பி. திறன் கொண்டவையாக உள்ளன. இதன் தடிமன் 12.5 மிமீ. எடை 89 கிராம். மேலே சொல்லப்பட்ட மெமரி சிப்கள் தரப்பட்டாலும், இதன் ஸ்டோரேஜ் மெமரியை 32 ஜிபி வரை மட்டுமே அதிகப்படுத்த முடியும். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.
மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 59 கிரே கலரில் வருகிறது.இதன் அதிக பட்ச விலை ரூ.4,542. போல்ட் ஏ 28 கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,674.
Click Here

சாம்சங் கேலக்ஸி எஸ்5 வெளிவருகிறது

வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் Mobile World Congress (MWC) ல் சாம்சங் காலக்ஸி எஸ்5 வெளிவர இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், அடுத்த காலக்ஸி வரிசை வெளியாகும். Mobile World Congress அங்கு பிப்ரவரி 24-27 நடை பெற இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவின் துணைத் தலைவர், அண்மையில் கொரியாவின் சீயோல் நகரில் ஒரு பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். காலக்ஸி எஸ் 5 வடிவமைப்பில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம், போன் டிஸ்பிளே வளையும் தன்மை கொண்டதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காலக்ஸி எஸ் 5 இரண்டு மாடல்களில் வரும். ஒன்று முழுவதுமாக மெட்டல் அமைப்பிலும், இன்னொன்று பிளாஸ்டிக் அமைப்பிலும் வரும். இவற்றின் விலையிலும் வேறுபாடு இருக்கும். மெட்டல் அமைப்பில் உருவாகும் போன் காலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படலாம்.
சென்ற 2013 ஏப்ரல் மாதம் வெளியான, சாம்சங் காலக்ஸி எஸ்4, இதுவரை வெளியான ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் அதிகம் விற்பனையான போன் என்ற பெயரை எடுத்துள்ளது. அறிமுகமாகி இரண்டு மாதங்களிலேயே, 2 கோடி போன்கள் விற்பனையாயின. வேகமாக விற்பனையான போன் எனவும் பெயர் எடுத்தது. இதுவரை மொத்தம் 4 கோடி போன்கள் விற்பனையாகியுள்ளன.

New Sony 20.7 MP camera mobile

சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா இஸட்1 மொபைல் போனை, 20.7 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், ஏற்கனவே வெளியான Z1 போனைப் போன்றே வடிவமைக்கப்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் Triluminos என்ற டிஸ்பிளேயுடன் இயங்கும். 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 800 ப்ராசசர் இணைக்கப்படும்.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன். ஒரே அலுமினிய வார்ப்பில் இதன் வெளிப்பாகம் அமைக்கப்படும். இதன் கேமரா Exmos RS sensor என்ற சென்சார் கொண்டு, 20.7 எம்.பி. திறன் கொண்டதாக இருக்கும். இன்னொரு கேமரா முன்புறமாக 2.2 எம்.பி. திறன் கொண்டிருக்கும். போனின் தடிமன் 9.4 மிமீ; எடை 140 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், 2 ஜிபி ராம் மெமரி, 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் 16 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,300 mAh திறன் கொண்டதாக இருக்கிறது. இது முந்தைய போனில் இருந்த 3,000 mAh திறன் கொண்டது இல்லை என்பது சற்று வியப்பினைத் தருகிறது. இந்த போன் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

It's interesting...

(ஜி.எம். உணவுகள்) உங்கள் தட்டில் உணவா... விஷமா?

இத்தனை அத்தியாயங்களாக நான் சொல்லி வந்த அத்தனை விஷயங்களையும் நீங்கள் தொடர்ந்து உள்வாங்கியவர் என்றால், 'நாம் உண்ணுவதெல்லாம் உணவல்ல, விஷம்' என்பதை ஓரளவுக்கு உணர்ந்திருக்க முடியும். இப்போது, ஒரேயடியாக அதை உணர்த்தும் வகையில் வந்து கொண்டிருப்பவைதான்... மரபணு மாற்றப்பட்ட உணவுகள் (ஜி.எம். உணவுகள்). மனித இனத்தின் எதிர்காலத்தையே பெரும் கேள்விக்குறியாக்கும் புதிய பூதாகார பிரச்னை இது என்றால், பொய்யில்லை!
 
மேலோட்டமாக பார்க்கும்போது... 'மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அறிவியலின் புதிய கண்டுபிடிப்பு. இது நல்ல விஷயம்தானே.. இதற்கு ஏன் எதிர்ப்பு?' என்று கேட்கத் தோன்றும்.

இதற்கு விடை மிகவும் சுலபம். ஒவ்வொரு விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அணுசக்தியால் மின்சாரமும் தயாரிக்கலாம், அணுகுண்டும் தயாரிக்கலாம். மரபணு மாற்றமும் அப்படியே. 'இந்த விஞ்ஞான யுக்தியை தாவரங்களுக்குப் பயன்படுத்தினால்... உணவு உற்பத்தியை பல மடங்கு பெருக்கலாம், புது வகையான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யலாம், பூச்சிகள் தாக்குதல் இல்லாமல் அமோக வளர்ச்சி, கெட்டுப்போகாத - அழுகிப்போகாத தன்மை, நல்ல நிறம், நல்ல சைஸ் போன்ற குணங்களோடு உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்யலாம்' என்கிற கற்பனையில் மரபணு விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்றார்கள். அவர்கள் நினைத்தபடியே இது நடந்திருந்தால், இது ஒன்றும் அப்படி கெட்ட விஷயமாக இருந்திருக்காது. ஆனால், 'பிள்ளையார் பிடிக்க, குரங்காக முடிந்த கதை' என்பது போல அது மாறியிருப்பதுதான் சோகம்.
மண்ணில் இருக்கும் 'பேசில்லஸ்துரிஞ்ஜியான்ஸிஸ்’ எனும் நுண்கிருமியின் மரபணுவை, செடியின் விதைகளில் செலுத்தினார்கள். இந்த மரபணு செடியில் புகுந்து ஒருவகை கிருமிநாசினியை உற்பத்தி செய்தது. இதனால் செடிகளைத் தாக்கும் பூச்சிகள், தானாகவே விரட்டப்பட்டன. இந்த தொழில்நுட்பத்தால் முதலில் விளைந்த பருத்தி, 'பி.டி. பருத்தி' என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் ஆரம்பித்தது பிரச்னை.

'இந்தப் பருத்திச் செடியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் இறக்கின்றன; பருத்திக் காடுகளில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு உடலில் அரிப்பு, தும்மல், இருமல், ஆஸ்துமா ஏற்படுகிறது...' என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கிளம்பின.

இந்தச் சலசலப்பு வேகமாகப் பரவவே... 'மரபணு மாற்று தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?' என்று ஆராய்ச்சி செய்து அறிக்கை தரும்படி 1996-ல் ஒரு குழுவை அமைத்தது இங்கிலாந்து அரசு! உலகின் தலைசிறந்த மரபணு விஞ்ஞானி புஜ்டாய், இதன் தலைமை ஏற்றார். ஆராய்ச்சியின் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தன.

மரபணு மாற்ற முறையில் விளைந்த உருளைக்கிழங்கு, எலிகளுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. 90 நாட்களில் எலிகளின் உடலில் பல மாறுதல்கள் தோன்றின. முக்கியமாக குடலில் உள்ள செல்கள் நீண்டும், மெலிந்தும் வளர்ந்தன. இது புற்றுநோயின் முதல் கட்டம். இதே போன்ற மாற்றங்கள் மூளை, ஈரல், சிறுநீரகம், ஆண் விந்துப்பை, பெண் சினை முட்டைப்பை போன்ற உறுப்புகளிலும் ஏற்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் லண்டனின் புகழ்பெற்ற 'லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. உலகமே ஸ்தம்பித்தது.

மரபணு மாற்ற விதைகளை உற்பத்தி செய்து, உலகெங்கும் விற்று கோடிகளில் புரளலாம் என்று கற்பனை செய்திருந்த கம்பெனிக்கு இது பேரிடியாக விழுந்தது. அடுத்தடுத்து என்ன நடந்ததோ... அடுத்த வாரமே 'லான்செட்’ இதழ், தன் கட்டுரையை வாபஸ் பெற்றது. 'ரோவட்’ நிறுவனம், தன்னிடம் 36 வருடம் ஆராய்ச்சி பணிபுரிந்த விஞ்ஞானி புஜ்டாயை டிஸ்மிஸ் செய்தது. அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கம்போல, 'மரபணு மாற்றப்பட்ட உணவு மிகவும் பாதுகாப்பான அற்புத உணவு' என்று 'ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட ஆறு 'விஞ்ஞானிகள்’ புறப்பட்டு வந்தனர்.

விளைவு..?

மரபணு மாற்றப்பட்ட அரிசி, கோதுமை, சோயா, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்திரிக்காய், வாழைப்பழம், எண்ணெய் வித்துக்கள் என்று ஏகமாக உலகெங்கும் வியாபித்துவிட்டன. இப்போது, சராசரி அமெரிக்கனின் உணவில் 75% உணவுகள், மரபணு மாற்றப்பட்ட உணவுதான் என்கிறது ஒரு கணக்கீடு. அமெரிக்கர்கள் பெரிய கொடைவள்ளல் போல ஜி.எம். உணவுகளை, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்தார்கள். ஆனால்... ஸாம்பியா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் போன்ற நாடுகள், 'செத்தாலும் பரவாயில்லை - எங்களுக்கு வேண்டவே வேண்டாம்!’ என்று மறுத்துவிட்டன.

ஒவ்வொரு நாட்டிலும் மந்திரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கோடி கோடியாகப் பணம் இறைக்கப்பட்டது. நம் நாடு? பல்வேறு தரப்பிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு அலையால், மரபணு மாற்ற உணவுப் பயிர்களுக்கு தடை விதித்தது. ஆனால், வெறும் கண்துடைப்புதான். இப்போது பழங்கள், சோளம் என்று மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் பலவும் இந்திய கடைகளிலேயே தாராளமாகக் கிடைக்கின்றன.

ஆக, திருட்டுத்தனமாக கொல்லைப்புற வழியாக மரபணு மாற்ற உணவுகளும் பயிர்களும் நம் நாட்டில் நுழைந்துவிட்டன என்பதுதான் உண்மை.

ஜி.எம். உணவுகளால் என்னென்ன கெடுதல்கள் வரலாம்? ஒரு குறிப்பிட்ட பூச்சியைக் கொல்வதற்காகத் தயாரிக்கப்பட்ட ஜி.எம். விதைகள், பல புதிய பூச்சிகளை / கிருமிகளை / வைரஸ்களை உருவாக்கலாம். புதிய டி.என்.ஏ உருவாவதால்... அலர்ஜி சம்பந்தமான பாதிப்புகள் வரலாம். குடல், ஈரல், மற்ற உறுப்புகளில் எல்லாம் புற்றுநோய் வரலாம். உடலின் நோய் எதிர்ப்புசக்தி அழிக்கப்படலாம்.

'ஒரு புதிய மருந்து கண்டுபிடித்தால், அதை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, விலங்குகளுக்குக் கொடுத்து ஆராய்ந்து, பிறகு மனிதர்களின் 'புரிந்துணர்வு ஒப்புதலோடு’ பரிசோதனை மேற்கொண்ட பிறகே... சந்தைப்படுத்தப்படும். ஆனால், நம் யாருடைய சம்மதமும் பெறாமலேயே, நம்மை லேபரேட்டரி எலிகளைப்போல் பாவித்து இந்த ஜி.எம். உணவுகளை உண்ணச் செய்வது என்ன நியாயம்..?

'மரபணு விஞ்ஞானம் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. இதைப் பற்றிய ஏராளமான விஷயங்கள் நமக்கு இன்னும் புரியவில்லை’ என்கிறார்கள் மனித இனத்தில் அக்கறையுள்ள விஞ்ஞானிகள். ஆனால், இந்த எச்சரிக்கைகள் யார் காதிலும் விழவில்லை.

மனித ஆரோக்கியம் தவிர, வேறு பல பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்னைகளும் ஏற்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பூச்சிகளைக் கொல்லும் இந்த விதைகள், சகட்டுமேனிக்கு நன்மை பயக்கும் உயிரினங்கள் அத்தனையையும் அழித்துவிடும். வளமான விளைநிலங்கள் மலடாக்கப்பட்டுவிடும் என்றும் கவலைப்படுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் மான்சான்டோ கம்பெனியிடம் கையேந்தி விதை வாங்கும் அவலம் உண்டாகும். இந்தியா வெகு விரைவில் விவசாயத்தில் அமெரிக்காவுக்கு அடிமை நாடாக மாறும் என்பதெல்லாம் நிஜம்தான். அதுசரி, பூனைக்கு மணி கட்டுவது யார்? விஞ்ஞானிகள், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் எல்லோரும் சேர்ந்து சமுதாய விழிப்பு உணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்.

இம்மாதிரி போராட்டங்களை வாழ்நாள் முழுவதும் தலைமை ஏற்று நடத்திய இயற்கை விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் (என்னை இந்தத் துறையில் ஆர்வம்கொள்ள வைத்தவர்!), சில நாட்களுக்கு முன் இயற்கை எய்தியது, நாட்டுக்கே பேரிழப்பு. ஆனாலும், அவரின் பணியை தொடர்வதற்கு, பலர் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்கு நிம்மதி.

What is App Lock? ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள்!


ஆப் லாக் அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆண்ட்ராய்டு தொழில் நுட்பம்கொண்ட ஸ்மார்ட் போன்களை சிறப்பாகப் பயன்படுத்த பல ஆப்ஸ்கள் உள்ளன. இணையதளத்தில் உலாவ, கோப்புகளைச் சேகரித்து வைக்க, புகைப்படம் எடுக்க என பலவிதமான செயல்பாடுகளுக்கும் ஆப்ஸ்கள் நிறைய உதவுகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆப்ஸை இப்போது  பார்ப்போம்.

ஆப் லாக்! (App Lock) 

இந்த அப்ளிகேஷன் மொபைல் போன்களில் உள்ள எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி), கான்டக்ட்ஸ் (மொபைல் எண்கள்), ஜீ-மெயில், ஃபேஸ்புக், கேலரி (புகைப்படக் கோப்பு), மெயில்கள் (தனிப்பட்டவை மற்றும் அலுவலகம் சார்ந்தவையாககூட இருக்கலாம்!) போன்ற ஸ்மார்ட்போன் உரிமையாளரின் தனிப்பட்ட விஷயங்களை மற்ற யாரும் தெரிந்துகொள்ளாதபடி பாதுகாக்கப் பயன்படுகிறது.

இந்த அப்ளிகேஷன் மூலம் ஒருவர் மொபைல் போனில் தனக்கு மட்டுமே தெரியவேண்டும் என்கிற விஷயங்களை பாஸ்வேர்டு போட்டு பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். தங்களுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டு மற்றவர்களுக்குத் தெரியாதபட்சத்தில் மொபைல் போனில் இருக்கும் தகவல்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது. இதனால் நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று பயப்படத் தேவையில்லை.

அதுபோல, வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை எடுத்து விளையாடும்போது செட்டிங்ஸ்களை மாற்றிவிடுவார்களோ என்கிற பயமும் வேண்டாம். இந்த அப்ளிகேஷன்கள் பல பெயர்களில் கிடைக்கின்றன. அவற்றில் சில, ஃபாஸ்ட் ஆப் லாக் (Fast App lock), ஆப் லாக் மாஸ்டர் (Applock Master).

ஹைலைட்:

இந்த அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

24 மொழிகளில் இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.

ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம்... New ATM Transaction Carges

ஏடிஎம் குறித்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால், டெக்னாலஜி வந்தும் அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாத நிலை உருவாகும். 

இனிமேல் நீங்கள் நினைத்த நேரத்திலெல்லாம் ஏடிஎம்-க்குப் போய்ப் பணத்தை எடுக்க முடியாது. ஒரு மாதத்தில் ஐந்து முறைக்குமேல் நீங்கள் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால், அதற்குத் தனியாகப் பணம் கட்டவேண்டும். இப்படிச் செய்தால்தான் வங்கிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன இந்தியா முழுக்க உள்ள பல வங்கிகள்.

தற்போது எல்லா வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தனது ஏடிஎம் மூலம் எத்தனைமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கு ஐந்துமுறை மட்டும் இலவசமான பணப் பரிவர்த்தனை (பணம் எடுப்பதல்லாத செயல்பாடுகள் உள்பட) செய்யலாம் என்றும், அதற்குமேல் செய்தால் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தையும் வசூலித்து வந்தன. பணம் எடுக்க சுமார் 17 ரூபாயும் (வங்கிக்கு வங்கி இந்தக் கட்டணம் வித்தியாசப்படும்), பேலன்ஸ் தொகையைச் சோதித்தறிய சுமார் 6 ரூபாயும் கட்டணம் வசூலித்தன வங்கிகள்.

இந்த நடைமுறையை மாற்றி, இனி எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் அவர் ஐந்துமுறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். ஆறாவது முறை பணப் பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் சுமார் 18 ரூபாய் கட்டணம்  வசூலிக்க வேண்டும் என்கிற புதிய நடைமுறையைக் கொண்டுவருவதில் எல்லா வங்கிகளும் தீவிரமாக இருக்கின்றன.


நஷ்டத்தில் இயங்குகின்றன! 

//''ஏடிஎம் இயந்திரங்களைப் பாதுகாக்க, பராமரிக்க அதிகம் செலவாகிறது. பெங்களூரு ஏடிஎம்-ல் பெண் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இன்னும் கூடுதல் கவனத்தை ஏடிஎம் மையங்களின் மீது வங்கிகள் செலுத்தவேண்டி இருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள ஒரு லட்சம் ஏடிஎம் மையங்களைப் பராமரிக்க நான்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் சில ஏடிஎம்-கள் மூலம் நாள் ஒன்றுக்கு ஐந்து பணப் பரிவர்த்தனைகள் நடப்பதே அரிதாக இருக்கிறது. இதனால் வங்கிகள் பெரிய அளவில் நஷ்டப்படுகின்றன''//

Monday, January 13, 2014

மார்டின் லூதர் கிங் - சுவாமி விவேகானந்தர் -மொஸார்ட், martin Luther king, Vivekanandar, Mozart


அமெரிக்காவில் அடிமை முறை மற்றும் நிறவெறிக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். அவரைப் போலவே நிற வெறிக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்தவர் மார்டின் லூதர் கிங். தாங்கள் கடைப்பிடித்த கொள்கைகளுக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டனர் இருவரும். 

1929 ஜனவரி 15. அமெரிக்காவில் பிறந்த மார்டின் லூதர் கிங் சமூக உரிமைப் போராளி, ஆப்பிரிக்க- அமெரிக்க மனித உரிமைத் தலைவர் என்று பன்முகம் கொண்டவர். அவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவின் தென் மாகாணங்களில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க இன மக்கள் தெருக்களில் நடக்கக்கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பேருந்துகளிலும் ரயில்களிலும் ஒதுக்கப்பட்ட தனி இடத்தில்தான் பயணிக்க வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை இல்லை. தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். 

1955ல் அலபாமா மாகாணம் மாண்ட்கோமரி என்ற ஊரில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த ரோசா பார்க்ஸை, அமெரிக்கர்களுக்கு இடம் அளிக்கும்படி கேட்டனர். தான் பயணச் சீட்டு வாங்கியிருப்பதாகச் சொல்லி, ரோசா பார்க்ஸ் இருக்கையை விட்டு எழ மறுத்தார். உடனே அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்தக் கொடுமைக்கு எதிராக கறுப்பின மக்களை ஒன்று திரட்டிய மார்டின் லூதர் கிங், ‘பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டத்தை’ வெற்றிகரமாக நடத்தினார். அரசு வேறு வழியின்றிப் பேருந்தில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்களுக்குத் தனி இருக்கை என்ற சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. 

மகாத்மா காந்தியின் வன்முறையற்ற போராட்டம் மார்டின் லூதர் கிங்கைப் பெரிதும் ஈர்க்கவே, அவரும் அதே அறவழியைப் பின்பற்றினார். அமெரிக்கர் மீது பகைமை பாராட்டாமல் அதே நேரம் ஆப்பிரிக்கர்களின் உரிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் என அமைதியாகப் போராடினார். ‘கறுப்பின மக்களின் காந்தி’ என்று உலகம் முழுவதும் மார்டின் லூதர் கிங் புகழ் பெற்றார். 

‘எனக்கொரு கனவு உண்டு’ என்ற தலைப்பில் மார்டின் லூதர் கிங் 1963 ஆகஸ்ட் 27ம் தேதி வாஷிங் டனில் நிகழ்த்திய உரை வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அதே ஆண்டு ‘வேலையும் சுதந்தரமும் வேண்டி வாஷிங்டனுக்குப் பேரணி’ என்ற மிகப்பெரிய பேரணிக்குத் தலைமை தாங்கினார். சமாதானத்துக்கான இவரது மகத்தான பணியைப் பாராட்டி, 1964ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தவரை, 1968 ஏப்ரல் 4 அன்று ஜேம்ஸ் ஏர்ல் ரே என்ற நிறவெறியன் சுட்டுக் கொன்றான்.

சுவாமி விவேகானந்தர்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமைச் சீடரான சுவாமி விவேகானந்தர் வேதாந்த தத்துவத்தின் செல்வாக்கு மிக்க ஆன்மிகத் தலைவர்களுள் ஒருவர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவரும் இவரே. 1863 ஜனவரி 12 அன்று விஸ்வநாத் தத்தா - புவனேஸ்வரி தேவி ஆகியோருக்கு மகனாக, கொல்கத்தாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. துறவியானதைத் தொடர்ந்து தனது பெயரை சுவாமி விவேகானந்தர் என்று மாற்றிக் கொண்டார்.  

குழந்தைப் பருவம் முதற்கொண்டே படிப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். இசை, தியானம் ஆகியவற்றில் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார். சமூகத்தில் நிலவிய சாதி, மத வேறுபாடுகளை எதிர்த்ததுடன், மூடப்பழக்க வழக்கங்களையும் கடுமையாகச் சாடினார். 1879ல் கொல்கத்தாவிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார். பின்னர் தத்துவம் பயின்றார். ‘பிரம்ம சமாஜத்தில்’ இணைந்தார். ஆனாலும் தனது தேடல்களுக்கான பதில்கள் கிடைக்கவில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து, ‘கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘ஆம், உன்னைப் பார்ப்பது போலவே தெளிவாகப் பார்த்தேன்’ என்ற பதிலிலிருந்த நேர்மையும் உண்மையும் அவரையே தனது குருவாக ஏற்றுக்கொள்ள வைத்தன. 1886ல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் காலமான பிறகு, அவரது வாரிசாகப் பரிந்துரைக்கப்பட்டார். நாடு முழுவதும் நீண்ட பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொண்டார். மன்னர்களின் அரண்மனைகளிலும் ஏழைகளின் குடிசைகளிலும் தங்கி அவர்களுடன் நெருங்கிப் பழகினார். 1892 டிசம்பர் 24ல் கன்னியாகுமரியை அடைந்தார். ஒரு பாறையின் மீதமர்ந்து தொடர்ந்து 3 நாள்கள் தியானம் செய்தார். அவர் அமர்ந்து தியானம் செய்த பாறையே இன்றைக்கு ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயருடன் புகழ் பெற்றிருக்கிறது.  

1893ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு, ‘அமெரிக்கச் சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்த சிறப்பு மிக்க வார்த்தைகள் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. இந்திய வரலாறு, சமூகம், பண்பாடு, நாகரிகம், இலக்கியம், ஆன்மிகம், தத்துவம் ஆகியவை குறித்து பல்வேறு நாடுகளில் ஆற்றிய சொற்பொழிவுகள் அற்புதமானவை!  1897ல் இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் இந்தியர்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைக்க எண்ணினார். சமூக சேவை மூலமே இது சாத்தியப்படும் என்பதை உணர்ந்து ‘ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன்’ மற்றும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்’ ஆகியவற்றை நிறுவினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருண்டு கிடந்த இந்தியாவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர், 1902 ஜூலை 4 அன்று மறைந்தார்.

மொஸார்ட்


உலகப் புகழ் பெற்ற மாபெரும் இசை மேதையான மொஸார்ட், 1756 ஜனவரி 27 அன்று அன்னமரியா- லியோபோல்ட் மொஸார்ட் தம்பதிக்கு மகனாக ஆஸ்திரியாவில் பிறந்தார். 3 வயதில் இசைக் கருவியை மீட்டுதல், 4 வயதில் இசை நூல்களைக் கற்றல், 5 வயதில் பாடல்களை இயற்றுதல் என்று குழந்தை மேதையாகத் திகழ்ந்தார் மொஸார்ட்!தனது பத்து வயதுக்குள் அனைத்து இசைக் கருவிகளையும் மீட்டும் திறன் பெற்றிருந்தார். ஐரோப்பாவில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறாத நாடே இல்லை என்னும் அளவில் புகழ் பெற்றார். போப்பாண்டவர் முன்னிலையில் நடத்திய இசை நிகழ்ச்சி இவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தது. உலகையே இசையால் மயங்க வைத்த மொஸார்ட்டின் சொந்த வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. ஆய்வுப் பணி, இசை நிகழ்ச்சி, புதிய இசை வடிவங்களைக் கண்டுபிடித்தல் என ஓய்வில்லாமல் உழைத்தார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். 1791 டிசம்பர் 5. உலகையே மகிழ்வித்துக் கொண்டிருந்த நாதம் அடங்கியது. மொஸார்டின் இசையைக் கேட்டால் அகநிலை மாறுதல், கற்பனைத் திறன் மேம்படுதல், மூளையின் பல பகுதிகள் தூண்டப்படுதல் எனப்பல கோணங்களில் ‘மொசார்ட் விளைவு’ ஆய்வுகள் நடைபெற்று வருவதே இவர் பெருமைக்குச் சான்று. 35 வயதுக்குள் 41 சிம்ஃபனிகள், 27 பியானோ நிகழ்ச்சிகள், 23 ஸ்ட்ரிங் க்வார்டெட், 7 ஓபெரா என யாராலும் கற்பனை கூட செய்ய முடியாத இசைச் சாதனைகளை நிகழ்த்தி முடித்துள்ளார் மொஸார்ட்! 

About Water in tamil

உலகில் பெரும்பகுதி தண்ணீர்தான் இருக்கிறது. நம் உடலுக்குள்ளும் பெரும்பகுதி தண்ணீர்தான். தண்ணீர் சேர்க்காமல் எதையும் சமைக்க முடியாது, சாப்பிட முடியாது. ஒருவேளை சாப்பாட்டை மறந்தாலும், தண்ணீர் குடிக்காமல் மனிதர்களால் உயிர்வாழவும் முடியாது.

மனிதர்கள் மட்டுமல்ல, செடி, கொடி, மரத்தில் ஆரம்பித்து நுண்ணுயிரிகள், விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றுக்கும் தண்ணீர் தேவை. எந்த அளவு தேவை என்ற கணக்கு மாறுமே தவிர, தண்ணீர் இன்றி வாழும் தாவரம், உயிரினம் எதுவுமே கிடையாது. உலகின் ஜீவாதாரம் என்று பார்த்தால், அது தண்ணீர்தான்!வேதியியல் பாடத்தில், தண்ணீரின் ரசாயனக் குறியீடு H2Oˆ என்று படித்திருக்கிறோம். அதாவது, இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன் இணைந்து கிடைப்பது தண்ணீர்.ஆனால், மற்ற ரசாயனங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம், தண்ணீர் இப்படித்தான் கிடைக்கும் என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது. பூமியிலும் மற்ற சில கிரகங்களிலும் திடப்பொருள், திரவப் பொருள், வாயு என்று மூன்று வடிவங்களிலும் தண்ணீர் கிடைக்கிறது.திடப் பொருள், அதாவது பனிக்கட்டி. ரெஃப்ரிஜிரேட்டரில் நாம் உறைய வைக்கிற ஐஸ் கட்டியில் தொடங்கி, கடலுக்குள் தென்படும் பெரிய பனிப்பாறைகள் வரை, தண்ணீரின் திட வடிவம்.திரவ வடிவம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். குழாயில் பிடித்துக் குடிக்கும் தண்ணீரில் ஆரம்பித்து ஆறு, கடல், அருவி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.வாயு வடிவம் என்பது நீராவி. தண்ணீரைப் பாத்திரத்தில் வைத்துக் கொதிக்க வைத்தால், ஒரு கட்டத்துக்கு மேல் அது வாயு வடிவத்தில் வெளியேறத் தொடங்கிவிடும்.இப்படிப் பல விதங்களில் நம்மைச் சுற்றித் தண்ணீரின் மூன்று வடிவங்களும் இருக்கின்றன. ஒன்றை இன்னொன்றாக மாற்றுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மூன்று நிலைகளிலும் தண்ணீர் சமையலுக்குப் பயன்படுகிறது. பனிக்கட்டியை வைத்துப் பழரசங்களைக் குளிர்விக்கிறோம், திரவத்தை வைத்துக் காய்கறிகளை வேக வைக்கிறோம், வாயு வடிவத்தில் இட்லி, புட்டு போன்றவற்றை வேகச் செய்கிறோம்!‘தண்ணீர்’ என்ற தமிழ்ச் சொல்லே மிக அழகானது. தண்மை + நீர் என்று அதைப் பிரிக்க வேண்டும். அதாவது, குளிர்ச்சியான நீர்.இந்தப் பூமியில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு தண்ணீர்தான். ஓர் உலக வரைபடத்தை எடுத்துப் பாருங்கள், எங்கு பார்த்தாலும் நீலக் கடல் தெரியும். கடல் தவிர ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி என்று பல இயற்கை வழிகளிலும் கிணறு, அணைக்கட்டு, நகராட்சித் தொட்டிகள் எனக் குறுகி, நம் தெருமுனையிலும் வீட்டிலும் உள்ள குழாய்கள் வரை நீரைப் பெறலாம், போதாக்குறைக்கு மழையாக வானத்திலிருந்தும் கொட்டும்.உலகில் உள்ள தண்ணீரில் 97% கடலில் உள்ளது. அதை நாம் அப்படியே குடிக்க முடியாது. சுத்திகரித்துக் குடிப்பதற்கும் இப்போதைய தொழில் நுட்பத்தில் ஏகப்பட்ட செலவாகும்.அடுத்து, 2% தண்ணீர் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாக உறைந்திருக்கிறது. அவற்றையும் நாம் வரவழைத்துக் குடிப்பது சாத்தியமில்லை. மீதமுள்ள 1%, அதாவது ஒரே ஒரு சொட்டு, அந்தத் தண்ணீரைதான் நாம் குடித்துக் கொண்டிருக்கிறோம். அதை வைத்துதான் ஒட்டுமொத்த உலகமும் வாழ்ந்தாக வேண்டும்! இதனால்தான் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்குச் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை.

தண்ணீர் இருக்கிறது என்பதற்காக அதனை வீணடிப்போரும் உண்டு. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. பெரும்பாலானோர் தாங்கள் நீரை வீணடிக்கிறோம் என்று புரியாமலே அதனை வாரி இறைக்கிறார்கள்.உதாரணமாக, ஒருவர் தினமும் பாத் டப்பில் குளிக்க நூறு லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம், அதையே அவர் ஒரு வாளியில் பிடித்துக் குளித்தால் இருபத்தைந்து லிட்டர் போதும்.இன்னொருவர் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டபடி பல் துலக்குகிறார். இரண்டு நிமிடங்கள்தான். அதற்குள் அவர் வீணாக்கும் தண்ணீர் எவ்வளவு தெரியுமா? சுமார் 15 லிட்டர்கள். இப்படி உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொருவரும் தினசரி முப்பது முதல் ஐம்பது லிட்டர் வரை தண்ணீரைச் சேமித்தாலே போதும். நமக்கும் நல்லது, பூமிக்கும் நல்லது!கடலில் இருப்பதும் தண்ணீர்தான். நம் வீட்டில் குழாயில் வருவதும் தண்ணீர்தான். பாட்டிலில் விற்பனையாவதும் தண்ணீர்தான். ஆனால், கடல் நீர் உப்புக் கரிக்கிறது, நம் வீட்டுத் தண்ணீர் சாதாரணமாக இருக்கிறது, பாட்டில் தண்ணீர் சற்றே இனிப்பாக உள்ளது... உண்மையில் தண்ணீரின் சுவைதான் என்ன?தூய்மையான நீருக்கு நிறம் கிடையாது, சுவை கிடையாது, வாசனையும் கிடையாது! கடல் நீரில் உப்பு கலந்துள்ளது. ஆகவே, அதன் சுவையை அது பெற்றுவிடுகிறது. பாட்டில் தண்ணீரில் பல தாதுகள் சேர்ந்திருப்பதால், அதுவும் ஒரு சுவையைப் பெறுகிறது. கடல், ஆறு என நிலப்பரப்புக்கு மேலே கிடைப்பது போலவே, அதன் கீழேயும் தண்ணீர் உள்ளது. இதனைப் பெரிய கிணறு வெட்டியோ, ஆழ்துளைக் கிணறை அமைத்தோ நாம் மேலே கொண்டு வரலாம். அதன் தரத்தைப் பொறுத்துக் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தலாம்.

இந்த நிலத்தடி நீரை நாம் உறிஞ்சி எடுக்க எடுக்க, அது மேலும் கீழே சென்று கொண்டிருக்கும். இந்த நிலையை மேம்படுத்த மழை நீர் சேகரிப்புத் திட்டங்கள் உதவும்!விவசாயத்திற்கு மழை அவசியம். சரியான நேரத்தில், சரியான அளவில் மழை பெய்தால்தான் பயிர்கள் சிறப்பாக வளரும், அறுவடையும் நன்றாக இருக்கும். ஆகவே, விவசாயத்தை நம்பியிருந்த நம் முந்தைய தலைமுறை மக்கள் மழையைக் கொண்டாடினார்கள். பலவிதங்களில் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி பூமியை வளப்படுத்தினார்கள்.மனித உடலில் முழுக்கத் தண்ணீர் இருந்தாலும், அது இயங்குவதற்கு வெளியிலிருந்து தண்ணீர் ஒரு குறிப்பிட்ட அளவில் தினமும் தேவை. இதற்காக, ஒரு நாளைக்கு 8 தம்ளர் என்ற அளவு சிபாரிசு செய்யப்படுகிறது. ஆனால், இதை நாம் கண்டிப்பாக எண்ணிப் பின்பற்ற வேண்டியதில்லை. வெயில் அதிகமுள்ள நாள்களில் சற்றே கூடுதலாகவும், குளிர் நாள்களில் குறைவாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் ஆனால் தொடர்ந்து மிகக் குறைவாகவே தண்ணீரைத் குடிக்கிறவர்களின் உடலுக்குப் பின்னாளில் பல பிரச்னைகள் வரக்கூடும். ஆகவே, தினமும் மறக்காமல் நான்கு முதல் ஐந்து தம்ளர் தண்ணீரைக் குடித்துவிடுவது நல்லது!தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்குப் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது, தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பது.தண்ணீரை அருந்துவது, சமைப்பது ஒருபுறமிருக்க, அது இன்னும் பலவிதங்களில் நமக்குப் பயன்படுகிறது. நீரால் உடலைத் தூய்மைப்படுத்தலாம், பாத்திரங்களைத் தேய்க்கலாம், விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம், நெருப்பை அணைக்கலாம், இயந்திரங்கள் செயல்படும் போது உண்டாகும் சூட்டைக் குளிர்விக்கலாம்... அவ்வளவு ஏன், அதிலிருந்து மின்சாரம்கூட எடுக்கலாம்!நீர் மின்சாரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓடுகிற அல்லது கொட்டுகிற நீரின் ஆற்றலைப் பயன்படுத்தி இயந்திரங்களைச் சுழலவிட்டு, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
தண்ணீரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதும் உண்டு. கப்பல்கள், சிறு படகுகள் போன்றவற்றில் மனிதர்களோ பொருள்களோ பயணம் செய்யலாம்.

உங்கள் பணி என்ன? - சுவாமி விவேகானந்தர்

''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே!

உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும் சக்தியுடன் பாயும்.

என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்?

உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்!

'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’ என்று நீங்கள் நினைக்கவேண்டும். அப்போதுதான், நீங்கள் என்னிடம் வந்தது வீண்போகவில்லை என அறிந்துகொள்வேன்!''

 

'என்னை நீ விலக்கலாமா?’ 

'துறவியர்க்கு எல்லோரிடத்தும் எல்லாவற்றிலும் சம பாவம் இருக்கவேண்டும்’ என்று சுவாமிஜி உணர்ந்து கூறிய ஒரு நிகழ்ச்சி.

சுவாமிஜி அப்போது ஜெய்ப்பூரில், மன்னரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். ஒருநாள் மாலையில், மன்னருக்காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தரையும் அழைத்தார் மன்னர். ஆனால் சுவாமிஜியோ, நாட்டியப் பெண் ஒருத்தியின் கலை நிகழ்ச்சிக்கு சந்நியாசி ஆகிய தாம் வருவதற்கில்லை என மறுத்துவிட்டார். இந்தச் செய்தி அந்த நாட்டியப் பெண்ணுக்குத் தெரிந்துவிட்டது. அம்பு பட்ட வெண்புறா கதறுவதுபோல மிகவும் சோகத்துடன் பாடினாள் அவள். அந்தப் பாடலின் கருத்து...

'பரமனே! சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ, பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக்கலாமா? இரும்புத்துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது. பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கை வாளாக பாதகம் புரிகிறது. ஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாசற்ற பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!

சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ? காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே! பரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’

அவளது அந்த அற்புத கீதம் சுவாமிஜியின் காதில் விழுந்தது. உள்ளத்தைத் தொட்டது. சுவாமிஜியின் இதயம் இளகியது. 'மாசு நிறைந்தவள்’ என்று உலகத்தவர் யாவரும் கருதிய ஒரு பெண்தான் எவ்வளவு அழகாக தனக்கு உயர்ந்ததொரு தத்துவத்தை உணர்த்திவிட்டாள்! பாவமும் புண்ணியமும் இறைவனின் சந்நிதியில் ஏது? பரமனின் முன்பு யாவும் ஒன்றுதானே! மாயைக்கு உட்பட்ட உலக மக்களுக்கு பேதங்கள் இருப்பது இயல்பு. ஆனால், மாயையைக் கடந்து, பிரம்மத்தில் லயித்திருக்கும் சந்நியாசிக்கு சமபாவம்தானே இருக்கவேண்டும்?’

சுவாமிஜி உடனே நேராக நாட்டியம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். இயல்பிலேயே ஒளிவீசும் அவரது கண்கள் கண்ணீரால் பளபளக்க, பாடிய அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி, ''தாயே! நான் குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே... அதிர்ஷ்டவசமாக உன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!'' என்றார்.

 'வேதங்களால் என்ன பயன்?’ 

சுவாமிஜி, பிரேமானந்தருடன் உலாவச் சென்றார். அது 1902-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி, வெள்ளிக்கிழமை. அன்று மாலையில், பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற அவர், வேதத்தைப் பிரசாரம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்துச் சொன்னதுடன், வேதத்துக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளியிட்டார்.

''சுவாமிஜி, வேதத்தைப் படிப்பதால் என்ன விசேஷ பயன் கிடைக்கும்?'' என்று கேட்டார் பிரேமானந்தர்.

சுவாமிஜி பளிச்சென்று, ''மூடநம்பிக்கைகள் அழியும்'' என்றார்.

மடத்துக்குத் திரும்பிய சுவாமிஜி சாதுக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பற்பல நாடுகள் உன்னதமாக எழுந்ததையும், வீழ்ந்ததையும் பற்றிக் கூறினார். ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் பேசுகையில், ''இந்தியா அமரத்துவம் பெற்றது. ஆண்டவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால், இந்தியா என்றும் வாழும். மாறாக அரசியலையும், சமூக சச்சரவுகளையும் தேடிப் போனால், இந்தியா செத்துவிடும்'' என்றார்.

இதுவே அவரது இறுதியான போதனை.

எத்தனையோ விவேகானந்தர்கள் வருவார்கள்!

தாம் யார் என்று அறிந்து, அதுவாகவே சுவாமிஜி மாறப்போகும் அந்த இறுதியான நாளில், அதிகாலையில் எழுந்த சுவாமிஜி, சிறிது தேநீர் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்தார்.

வழக்கத்துக்கு மாறாக பூஜாகிருகத்தின் கதவுகளை எல்லாம் மூடிவிட்டு, ஏகாந்தமாக தியானம் செய்யலானார். தியானத்தைவிட தியாகம் பெரிது என்று வாழ்ந்திருந்த நாட்களெல்லாம் முடிந்துவிடப் போகும் தினம் அது என்பதாலோ என்னவோ, சுவாமிஜி வெகு நேரம் தியான சமாதியில் ஆழ்ந்திருந்தார்.

தியானம் முடிந்து பூஜாகிருகத்தின் படிகளில் இறங்கி வந்த சுவாமிஜி, தன்னையும் அறியாமல் அம்பிகையைப் பற்றிய கமலாகாந்தரின் அற்புதமான பாடலைத் தமது அமுதமான குரலில் பாடினார். பேலூர் மடத்தினர் அந்தத் தீஞ்சுவைக் குரலைக் கேட் டனர்- அதுதான் தாங்கள் கடைசியாகக் கேட்கும் குரல் என்று அறியாமலே!

தம்மையறியாமலே பாடியதுபோல், பாடல் முடிந்ததும் தம்மையறியாமலே பேசவும் செய்தார் சுவாமிஜி. ''காளியை மட்டும்தானா... இந்த விவேகானந்தனையும்கூட யார் புரிந்துகொண்டார்கள்? அவன் என்ன செய்தான் என்று யார் தெரிந்துகொண்டார்கள்? இன்னொரு விவேகானந்தன் இருந்தால், அவனால்தான் புரிந்துகொள்ள முடியும். இன்னும் ஒரு விவேகானந்தன் என்ன... கால வெள்ளத்தில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்..!''