Friday, July 19, 2013

புகையிலை பொருள் தடை: நோட்டீஸ் ஒட்டி போலீஸ் பிரசாரம்

கோவை:தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களின் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் பொது இடங்க
ளில் நோட்டீஸ் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை விற்பனை செய்யும் நபர்கள் மீது, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், பல இடங்களில் பதுக்கி வைத்து, இரட்டிப்பு விலையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
புகையிலை பொருட்களுக்கு விதித்துள்ள தடையை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில், ஆர்.எஸ்.புரம் போலீசார் தங்களின் எல்லைக்குட்பட்ட இடங்களில் நோட்டீஸ் ஒட்டி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட நோட்டீசில், "பொது இடத்தில் புகைப்பிடித்தல் மற்றும் துப்புதல், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும், பொது இடத்தில் துப்புவதும் குற்றம். தவறினால், தமிழ்நாடு புகைப்பிடித்தல் தடை செய்யும் சட்டப்பிரிவு 9ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
நோட்டீஸ் குறித்து ஆர்.எஸ்.புரம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் கூறுகையில், "" தமிழக அரசு சார்பில், விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள புகையிலை பொருட்களை முற்றிலும் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
""மறைத்து வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
""பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது குறித்தும் நோட்டீஸ் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரை தூய்மையாக வைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment